
"அண்டர்வே'ரைக்கூட காட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். சகோதரியாக மட்டும் இவள் இருந்திருந்தால், இவளையும் நான் கொன்றிருப்பேன்!'
தொடர்ந்து அவன் வேறு மாதிரி சிந்தித்தான்: ‘என்ன இருந்தாலும், சகோதரி இல்லையே! அதனால் நான் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது மட்டுமல்ல- மிகப் பெரிய இக்கட்டானதொரு ஒரு சூழ்நிலையில் இவள் இங்கு வந்து சேர்ந்திருக்கிறாள்.' இறுதியில் நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டே அவன் கேட்டான்: “நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று நீ சொல்கிறாய்?''
“மிகவும் எளிய விஷயம்... ஆள் காணாமல் போய் ஒரு மாதமாகி விட்டது. சரிதானா?''
“ஆமாம்...''
“நாம் இவளைத் தோட்டத்தில் புதைத்து விடுவோம். எவனுக்கும் தெரியப் போவதில்லை. எவ்வளவு பேர் காணாமல் போகிறார்கள்! குற்றங்களை விசாரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. யாரும் இங்கே வந்து இவள் எங்கே போய்விட்டாள் என்று விசாரிக்கப் போவதில்லை.''
அப்படிக் கூறியதில் நியாயம் இருப்பதாக அமீருக்குத் தோன்றியது. அவன் வாசலில் இருந்த இருட்டை நோக்கி நடந்தான். தோட்டத்தில் கடப்பாறை, மண்வெட்டி ஆகியவற்றைக் கொண்டு மூன்றடி ஆழத்தில் ஒரு குழியைத் தோண்டினான். பிறகு மாடியை நோக்கி நடந்தான்.
வாப்பாவிற்கும் உம்மாவிற்கும் ஆலியாவிற்கும் அப்போதும் சுய உணர்வு வந்து சேரவில்லை. அமீரும் ஃபாஇஸாவும் சேர்ந்து முனீஸின் உடலைத் தூக்கி தோட்டத்திற்குக் கொண்டு சென்றார்கள். பிறகு, அதைக் குழிக்குள் வைத்தார்கள். மண்வெட்டியை எடுத்து குழிக்குள் மணலை வெட்டிப் போட்டான். அதற்குப் பிறகு திரும்பி நடந்து, ரத்தக் கறையை கழுவி நீக்குவதில் ஈடுபட்டான்.
கழுவி முடித்தபோது, அமீரின் வாப்பாவும் உம்மாவும் சுய உணர்வு திரும்ப வந்ததன் அடையாளத்தை வெளிப்படுத்தினார்கள். கடந்து சென்ற மூன்று மணி நேரங்களுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவங்கள்கூட சுய உணர்வு வந்து எழுந்தபோது, மறந்துபோய் விட்டிருந்தன. ஒரு இறந்த உடலைப் பார்த்த மெல்லிய நினைவு மட்டுமே ஆலியாவிற்குக்கூட இருந்தது. பாவம்... வெறும் ஒரு வேலைக்காரியாக இருந்த அவளுக்கு அதைக் கூறுவதற்கான தைரியம் இல்லை. குறிப்பாக- முனீஸைப் பற்றி. இரவில் மொட்டை மாடியின் ஓரத்தில் நடப்பது, தேவையில்லாமல் கொசுவலையை தூக்கி எட்டிப் பார்ப்பது... இப்படித் தொடங்கி அவளைப் பற்றி பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு மத்தியில் சில பேச்சுகள் உலாவிக்கொண்டிருந்த நிலையில், அவள் அமைதியாகவே இருந்தாள்.
ஃபாஇஸாவைப் பார்த்ததும், உம்மாவின் முகம் பிரகாசமானது. “மகளே... ஃபாஇஸா..., நீ நலமாக இருக்கிறாயா? உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டன!''
“வேண்டாம்... நான் எப்போதும் வந்து உங்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.''
“நீ என்ன சொல்றே? நீ என் மகள் மாதிரி ஆச்சே!''
“முனீஸைப் பற்றிய ஏதாவது தகவல்கள் இருக்கின்றனவா என்பதை விசாரித்துவிட்டுப் போகலாமென்று எண்ணித்தான் இங்கே வந்தேன். கிடைத்தாளா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாமே!''
உம்மா ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள். “அந்த அப்பிராணிப் பெண்ணைப் பற்றிய எந்தத்தகவல்களும் கிடைக்கவில்லை. அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருந்தால், கிடைக்காமல் இருக்கமாட்டாள்.''
“அப்படியென்றால், சரி... இனியும் சிரமப்படுத்த விரும்பவில்லை. கண்டுபிடித்தவுடன், தகவலைத் தெரிவிக்க வேண்டும்.''
“அப்படிச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று பார்த்தாயா? அது சிறிதும் நடக்காது. உணவு சாப்பிட்டுவிட்டுப் போனால் போதும். ஆலியா, சீக்கிரமா சமையலறைக்குள் போ.''
“வேண்டாம் உம்மா, இனியும் உங்களுக்குத் தொல்லை தருவது நல்லதல்ல.''
“அது சிறிதும் நடக்காது.''
ஃபாஇஸா அங்கு உணவிற்காக இருந்தாள். ஆலியா சமையலறையை நோக்கி நடந்தாள்.
சமையல் வேலைகளில் மூழ்கும்போது காதல் பாடல்களை முணுமுணுக்கும் பழக்கம் ஆலியாவிற்கு உண்டு. எழுதத் தெரிந்திருந் தால், மனதில் கூற நினைத்த விஷயங்களை ஒரு பேனாவை எடுத்து தாளில் எழுதி அனுப்பியிருப்பேனே என்று எங்கோ தூரத்திலிருக்கும் காதலியிடம் காதலன் நடத்தும் இதய உரையாடல்களாக இருக்கும் அப்படிப்பட்ட பாடல்கள்.
இறுதியில் அவர்கள் சாப்பிடுவதற்கு உட்கார்ந்தார்கள். சாப்பிட்டு முடித்த பிறகு, ஃபாஇஸாவைக் கொண்டுபோய் விடுவதற்காக அமீர் எழுந்தான். பயணம் முழுவதும் அவன் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான். அவன் மிகுந்த மனக் கவலையில் மூழ்கி விட்டிருந்தான். அவள் பயமே இல்லாமல் அவனுடைய கையை எடுத்து வருடிக்கொண்டிருந்தாள். இறுதியில் நான்கு பக்கங்களிலும் பார்த்துவிட்டு அவள் இப்படிச் சொன்னாள்: “நடக்க வேண்டியவை அனைத்தும் நடந்து விட்டன. இனி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அந்தச் சமயத்தில் ஆட்கள் முனீஸைப் பற்றிய விஷயங்களை மறந்து விடுவார்கள். உங்களுடைய காரியங்களைப் பார்த்துக்கொள்வதற்கு, எப்படிப் பார்த்தாலும், ஒருத்தி வேண்டுமல்லவா?''
“அது சரிதான்...''
சில நாட்கள் கழித்து அமீர் தன் உம்மாவிடம் வந்தான். “உம்மா...''
“என்ன மகனே?''
நாற்காலியின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த அமீர் நிலை குலைந்த நிலையில் இருந்தான். “இப்போது இந்த விஷயத்தைப் பற்றி பேசக்கூடாது என்பது எனக்குத் தெரியும். பிறகு... சிந்தித்துப் பார்த்த போது தோன்றியது- என்னைக் கவனித்து பார்த்துக் கொள்வதற்கும் மற்ற விஷயங்களுக்கும் ஒரு துணை, மனைவியின் தேவை இருக்கிறது என்று...''
“அப்படியா? எப்படிப் பார்த்தாலும், அது நல்ல விஷயம்தான். உன்னுடைய சகோதரி காணாமல் போய்விட்டாள் என்பது என்னவோ உண்மைதான். இந்த சந்தோஷ சூழ்நிலையில் அவளும் உடன் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்! என்ன செய்வது? ம்... அது இருக்கட்டும்... திருமணத்தை எப்போது நடத்த வேண்டும் என்று நீ மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறாய்? எங்கு வைத்து அதை நடத்துவது?''
அமீர் பரபரப்புடன் சற்று இருமினான்! “அதற்கு ஆளைப் பார்க்க வேண்டாமா?''
உம்மாவிற்கு ஆச்சரியம் உண்டானது. “அப்படியென்றால் நீ ஃபாஇஸாவை திருமணம் செய்து கொள்வதாக இல்லையா?''
“இல்லை, உம்மா. ஹாஜி முஹம்மது ஸொர்க்செ ஹராவின் மகளைத்தான் திருமணம் செய்துகொள்ள நினைத்திருக்கிறேன். பதினெட்டு வயது, மிகச் சிறந்த அழகி. அடக்கமும் பணிவும் நிறைந்தவள். நாணம், இரக்கம், சுறுசுறுப்பு, கடின உழைப்பு, அந்தஸ்து, சுத்தம், அன்பு, நல்ல உடல்நலம்- அனைத்தும் இருக்கின்றன. ‘சாடோர்' அணிந்து, தலையைக் குனிய வைத்துக் கொண்டு, வெட்கத்துடன் நடப்பாள். உம்மா, நீங்கள் போய் பெண் கேட்கணும்.''
“மகனே, அமீர்... உனக்கு உன் தங்கையைவிட இரண்டு வயது அதிகம். வயது நாற்பது ஆகிவிட்டது. அவளைக் கல்யாணம் முடித்து அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு காலமும் நீ திருமணமே செய்து கொள்ளாமல் இருந்தாய்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook