
ஒரு பதினெட்டு வயதுப் பெண் வேண்டுமென்று இப்போது எப்படித் தோன்றியது? இளம் வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதால் லாபம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்குத்தான் என்றொரு பழமொழி இருக்கிறது. கேட்டிருக்கிறாய் அல்லவா? வெறுமனே தேவையற்ற வம்பை நீயே வரவழைத்துக்கொள்ள வேண்டுமா?''
சிறிது நேரம் அமீர் சிந்தனையில் மூழ்கினான். பிறகு இவ்வாறு கூறினான். “உம்மா கேட்டீர்களா? இருபது வயதுகளைத் தாண்டிய பெண்ணிடம் இரக்கம் வேண்டும் என்னும் ஒரு பழமொழி உண்டு. இருபது வயதுகளுக்கும் கீழே உள்ளவர்களை நான் தேடுவதற்கான காரணம் அதுதான். அது மட்டுமல்ல- அவள் களங்கப்பட்டிருக்க மாட்டாள் என்பதை உறுதியாகக் கூற முடியுமே! அதனால் இன்றே ஆடைகளை மாற்றிக்கொண்டுபோய் பெண் கேட்கணும்.''
அவள் அன்றே வேறு ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு அமீரையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு பெண்ணைப் பார்ப்பதற்காக வெளியேறினாள். பெண்ணின் வீட்டில் உள்ளவர்களைப் பார்த்து ‘சலாம்' சொன்னார்கள். இறுகக் கட்டிய ஆடையை அணிந்து, அடர்த்தியான காலுறை அணிந்து, அந்த இளம்பெண் விருந்தாளிகளுக்கான தேநீருடன் வந்தாள்.
அமீரின் உம்மாவிற்கு பெண்ணைப் பிடித்துவிட்டது. பெண்ணுக்கு உம்மாவை மிகவும் பிடித்து விட்டது. மணமகனின் உறவி னர்களுக்கு மணப்பெண்ணின் ஆட்களைப் பிடித்து விட்டது. மணமகளின் உறவி னர்களுக்கு மணமகனின் ஆட்களையும். அடுத்த புதன்கிழமையன்று திருமணத்தை நடத்துவது என்று முடிவு செய்தார்கள். காரணம்- பிறகு வரப்போவது புண்ணிய மாதம். காத்திருந்தால் விஷயம் தாமதமாகி விடும். ஆணுக்கு பதினைந்தாயிரம் துமான் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அமீர் கண்ணாடியையும் மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்டையும் கொண்டு வரவேண்டும். சடங்குகள் ஹாஜியின் வீட்டில் வைத்து நடக்கும். காரணம்- வசதியாகவும் சீராகவும் அங்குதான் இருக்கும்.
வீட்டுக்குத் திரும்பி வந்த உம்மாவும் மகனும் நடந்த சம்பவங்களை ஆலியாவிடம் விளக்கிக் கூறினார்கள். அவள் எல்லாவற்றையும் தலையை ஆட்டியவாறு சிரித்துக்கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாள். தனக்கு கிடைத்த நேரமாகப் பார்த்து ‘சாடோ'ரை எடுத்து அணிந்துகொண்டு, தகவலைக் கூறுவதற்காக நேராக ஃபாஇஸாவின் வீட்டுக்குச் சென்றாள். தகவலைக் கேள்விப்பட்டதும், ஃபாஇஸா தன் தலையை சுவரின்மீது வைத்து மோதினாள். பிறகு தன் கை முஷ்டியைச் சுருட்டி வைத்துக்கொண்டு சாளரத்தில் அடித்தாள். கண்ணாடி உடைந்து அவளுடைய கையில் காயம் உண்டானது. ஆலியாவின் ஆலோசனையின்படி இருவரும் ‘சாடோ'ரால் மூடப்பட்டு, ஷா அப்துல் அஸீஸின் நினைவிடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள். திருமணம் நின்றுவிட்டால், ஒரு ஆண் ஆட்டை அறுத்து பலி கொடுப்பதாக சத்தியம் செய்து கூறிவிட்டு, அங்கு பன்னிரண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தார்கள். தொடர்ந்து இருவரும் தர்வாஸஹாருக்கு, மீர்ஸா மனாகிபா அலைவியாவைப் பார்ப்பதற்காகச் சென்றார்கள். அங்கு அன்பை இல்லாமல் செய்யும் மந்திரித்து ஊதிய தாயத்து கிடைத்தது.
மந்திரித்து ஊதிய தாயத்துடன் அவர்கள் ஒரு கிராமப் பகுதியைத் தேடிச் சென்றார்கள். பாஜி உம்மாவைப் பார்ப்பதற்காக. பழைய நூல் ஒன்றை வைத்து எதிர்காலத்தைக் கூறும் பெரிய திறமையைக் கொண்ட ஒரு உம்மா அவள். பாஜி உம்மா ஃபாஇஸாவையே வெறித்துப் பார்த்தாள். பிறகு நூலைத் திறந்து வைத்து வாசிக்க ஆரம்பித்தாள். பலனைத் தெரிந்து கொள்ள வேண்டிய ஆள் அதிக உயரத்தைக் கொண்டவள் அல்ல... மிகவும் குள்ளமும் அல்ல... அதிக பருமன் கொண்டவள் இல்லை... மிகவும் மெலிந்தவளும் இல்லை. நல்ல பிரகாசமான நிறத்தைக் கொண்டவள். சதுர முகம், சிறிய கண்கள், மாணிக்கக் கல்லைப் போன்ற மார்பு ஆகியவற்றைக் கொண்டவள்.
எல்லா விஷயங்களும் எந்த அளவிற்கு மிகவும் சரியாக அந்த நூலில் எழுதப்பட்டிருக்கிறது! ஃபாஇஸா ஆச்சரியப்பட்டாள். பாஜி உம்மா எதிர்கால பலனைத் தொடர்ந்து கூறினாள். “நீ மிகுந்த கவலையில் இருக்கிறாய். மண வாழ்க்கை சம்பந்தமாக உண்டான கவலை. கடவுளின் துணை இருக்கும்.''
ஃபாஇஸா தலையை ஆட்டினாள். ஃபாஇஸாவிற்கு அந்த உம்மாவின்மீது தாயிடம் உண்டாகக் கூடிய பாசம் தோன்றியது. “காதல் இல்லாமல் செய்வதற்கு ஒரு வழி இருக்கிறது.' குள்ளமான அந்தக் கிழவி தொடர்ந்து சொன்னாள்: “கவலையில் இருப்பவள் மக்காவை நோக்கி ஏழு அடிகள் நடக்க வேண்டும். அது முடிந்தவுடன், பின்னோக்கி ஏழு அடிகள் வெறும் கால்களுடன்... தினமும் இரவு வேளையில் அதைச் செய்ய வேண்டும். இப்படியே ஏழு இரவுகள்... நடக்கும்போது இப்படிக் கூற வேண்டும்- ‘கடவுளே! பிசாசின் கெட்ட செயல்களிலிருந்தும் எண்ணங்களிலிருந்தும் என்னைக் காப்பாற்ற வேண்டும்!' அது முடிந்தவுடன், நீரில் கால்களைக் கழுவிவிட்டு, போர்வையில் படுத்துத் தூங்க வேண்டும்.''
அப்போது ஃபாஇஸா சொன்னாள்: “பாஜி உம்மா, எனக்கு ஒரு ஆள்மீது மிகுந்த விருப்பம் தோன்றுகிறது. அவருடைய மனதிற்குள் நுழைய வேண்டும். என்மீது அவருக்கு விருப்பம் உண்டாவது மாதிரி ஒரு தாயத்து எழுதித் தரவேண்டும்.''
பாஜி உம்மா மிகவும் வயதானவளாக இருந்தாள். அவள் சிரித்தாள். “தங்க மகளே, இந்த விஷயத்தைப் பறித்து வாங்கிவிட முடியாது. காதல் கிடைக்க வேண்டுமென்றால், போர் நடத்த வேண்டும். ஒரு பழமொழி இருக்கிறது. காதல் வருவதாக இருந்தால், இரண்டு தலைகளிலும் வரவேண்டும். ஒரு தலையில் மட்டும் வருவதாக இருந்தால், அதற்குப் பெயர் தலைவேதனை.''
தரையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் ஒரு நாணயத்தை வைத்துவிட்டு, ஃபாஇஸா அங்கிருந்து நகர்ந்தாள். அவள் அங்கிருந்து சென்றவுடன், பாஜி உம்மா சற்று சிரித்துக் கொண்டாள். அவள் அந்த நாணயத்தை எடுத்து, ஒரு உருண்ட மண் பாத்திரத்திற்குள் போட்டாள். தன்னுடைய பேத்திக்காக அதை அவள் சேர்த்து வைத்தாள்.
ஃபாஇஸா ஏழு இரவுகளிலும் ஏழு பகல்களிலும் அழுது கொண்டும், இப்படியும் அப்படியுமாக நடந்துகொண்டும் இருந்தாள். போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று அமீர், முனீஸை எப்படிக் கொன்றான் என்பதைக் கூறி விட்டாலென்ன என்று ஒரு நாள் அவள் நினைத்தாள். அவன் முனீஸைக் கொன்றதைப்போல அவனையும் கொன்றால் என்ன என்றும் மனதில் நினைத்தாள். இவ்வாறு ஆயிரத்தொரு விஷயங்களைப் பற்றி அவள் மனதில் நினைத்துக்கொண்டிருந்தாள். எதுவுமே அவளுடைய மனதிற்குப் பிடித்ததாக இல்லை. இறுதியில் திருமண இரவன்று முனீஸைப் புதைத்த இடத்தின் கால் பகுதியில் அந்தத் தாயத்தைப் புதைத்து வைக்க வேண்டுமென்று முடிவு செய்தாள்.
திருமணம் நடக்கும் நாளன்று இரவு வேளையில் ஃபாஇஸா அமீரின் வீட்டுக்குச் சென்றாள். இந்த விஷயத்தில் ஆலியா அவளுக்கு சில உதவிகளைச் செய்தாள். முனீஸ் கொல்லப்பட்டிருக்கிறாள் என்ற விஷயத்தில் சில சந்தேகங்கள் அவளுடைய மனதில் எழுந்திருப்பதே அதற்குக் காரணம். ஹாஜியின் வீட்டுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook