Lekha Books

A+ A A-

முதல் காதல் - Page 5

muthal kathal-maxim gorky

ஆனால், அவன் அதைப்பற்றியெல்லாம்  சிறிதும் கவலைப்படவில்லை. ஏதாவது அதற்கு எதிராகச் செயலாற்ற வேண்டும் என்று நினைப்பதற்கு முன்பே அவன் கண்களை மூடித் தூங்கியிருப்பான். சிறிது நேரம் அவனுடைய பட்டை போன்ற தாடி ரோமங்களைப் பிடித்து வளையாடிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையும் தூங்க ஆரம்பித்து விடும். நான் அந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல நண்பனாக இருந்தேன். பொலெஸ்லாவின் 'இரத்த தாகமெடுத்த நெப்போலியனும் அதிர்ஷ்டமில்லாத ஜோஸஃபைனும்' போன்ற கதைகளை விட அவள் என் கதைகளை மிகவும் விரும்பினாள். என்னுடைய வெற்றி பொலெஸ்ஸாவை ஒரு பொறாமை கொண்ட மனிதனாக மாற்றியது.

"பெஷ்கோவ், உங்களை நான் பலமா எதிர்க்கிறேன். ஒரு குழந்தை வாழ்க்கையுடன் தொடர்பு கொள்வதற்கு முன்னாடி, வாழ்க்கையின் அடிப்படையான தத்துவங்களைப் பற்றி அதுக்கு நாம சொல்லித் தரணும். உங்களுக்கு ஆங்கிலம் தெரியாததுனால 'மென்டல் ஹைஜீன் ஃபார் சிலட்ரன்' (குழந்தைகளின் மனநலம்) என்ற புத்தகத்தை உங்களால அதுக்குப் படிச்சு சொல்லித் தர முடியல..."

ஆங்கிலத்தில் ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் அந்த ஆளுக்குத் தெரியும் என்பதுதான் என் எண்ணம். அது 'குட் பை' என்ற வார்த்தைதான்.

அவனுக்கு என்னைவிட இரண்டு மடங்கு வயது. ஆனால், ஒரு சிறிய நாய்க்குட்டியைப் போல வினோதமான குணங்களைக் கொண்ட மனிதனாக அவன் இருந்தான். மற்றவர்களை வாய்க்கு வந்தபடி தூக்கியெறிந்து பேசுவதிலும் வெளிநாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியவற்றின் புரட்சி இயக்கங்களுடன் தொடர்பு கொண்ட வட்டங்களின் அனைத்து ரகசியங்களும் தனக்குத் தெரியும் என்பதைப் போன்ற கருத்தை உண்டாக்குவதிலும் அவனுக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. ஒருவேளை அவன் அதைப்போன்ற விஷயங்களைத் தெரிந்துகூட வைத்திருக்கலாம். யாரென்றே தெரியாத பலரும் அவனைப் பார்ப்பதற்காக வருவார்கள். அவனுடைய வீட்டில் வைத்துத்தான் சபுனயேவ் என்ற புரட்சிக்காரனை நான் சந்தித்தேன். போலீஸ்காரர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஓடி மறைந்து கொண்டிருந்த அந்த மனிதன், ஒரு சிவப்பு நிறத் தொப்பியையும் உடம்போடு மிகவும் இறுக்கமாக இருந்த ஒருவகை கோமாளித் தனமான ஆடையையும் அப்போது அணிந்திருந்தான்.

ஒரு நாள் நான் அங்கு சென்றபோது சிறிய தலையைக் கொண்ட, பார்த்தால் முடிவெட்டும் மனிதனைப்போல இருந்த, தனக்குத்தானே நடித்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பார்த்தேன். கோடுகள் போட்ட ட்ரவுசரும் சாம்பல் நிறத்தில் சட்டையும், ஓசை உண்டாக்குகிற காலணிகளும் அவன் அணிந்திருந்தான். என்னை சமையல் அறைக்குள் போகச்சொன்ன பொலெஸ்லாவ் மெதுவான குரலில் சொன்னான்:

"மிகவும் முக்கியமான ஒரு செய்தியுடன் பாரீஸ்ல இருந்து இவர் வந்திருக்காரு. இவர் கொரோலென்கோவைப் பார்க்கணும். தயவு செய்து அற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்க."

நான் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால், கொரோலென்கோ அந்த மனிதனை வழியில் பார்த்திருக்கிறார். திறந்த மனதுடன் அவர் சொன்னார்.

"வேண்டாம், நன்றி எனக்கும் அந்த முட்டாளுக்கும் எந்த உறவும் இல்லை..."

அந்தப் பாரீஸிலிருந்து வந்திருந்த மனிதனுக்கும், அமைப்பிற்கும் உண்டான ஒரு அவமானம் அதுவென்று பொலேஸ்லாவ் மனதில் எண்ணினான். அடுத்த இரண்டு நாட்களும் தன்னுடைய கோபத்தையும் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் மிகவும் கடுமையான வார்த்தைகளைக் கொண்ட ஒரு கடிதத்தை கொரோலென்கோவிற்கு எழுதும் முயற்சியில் அவன் இருந்தான். கடைசியில் தன்னுடைய கடுமையான முயற்சியை அவனே அடுப்பில் போட்டு எரித்து விட்டான். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மாஸ்கோவில் ஏராளமான பேர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டார்கள். நிஷ்னி நொவோகோரோத், மாஸ்கோவ்லாத்மீர் ஆகிய இடங்களில் பலரும் கைது செய்யப்பட்டார்கள். பொலோஸ்லாவின் வீட்டில் நான் பார்த்த அந்த கோடுகள் போட்ட ட்ரவுசர் அணிந்த மனிதன் லான்டேஸன் கார்ட்டிங் என்ற ரகசியப் போலீஸின் ஏஜென்ட் என்பது தெரிந்தது. ஆனால், என்னுடைய காதலியின் கணவன் உண்மையாகச் சொல்லப்போனால் நல்ல ஒரு மனிதனாக இருந்தான். 'விஞ்ஞான பூர்வமான சுமை'யின் எடையால் அவன் உணர்ச்சிவசப்பட்டு சில காரியங்களை அவ்வப்போது செய்து கொண்டிருந்தான். அவன் கூறுவான்:

"ஒரு திறமைசாலி வாழ்றதுக்கான முக்கியமான நோக்கமே விஞ்ஞானபூர்வமான அறிவைச் சம்பாதிக்குறதுதான். தனிப்பட்ட முறையில் எந்தவொரு லாபத்தையும் குறிக்கோளாக வைக்காமல் தான் பெறும் அறிவு எல்லாத்தையும் மக்களுக்கு வினியோகம் செய்றதுக்காகத்தான் அவன் வாழ்றதே."

அவளுடன் நான் கொண்டிருந்த உறவு மேலும் ஆழமானது. அது எனக்குப் பல நேரங்களில் மன உளைச்சலைத் தந்தது. எனக்குப் பிரியமான அவள் அந்த மேஜைக்கு அருகில் குனிந்து உட்கார்ந்து கொண்டு வேலை செய்வதைப் பார்க்கும்போது தூசு படிந்த பக்கத்து வீட்டுச் சாமான்கள் நிறைந்த இரட்டைக் கட்டிலும் குழந்தை படுத்துறங்கும் அந்தப் பழைய மெத்தையும், தூசு படிந்த புத்தகங்கள் மலையென குவிந்து கிடக்கும் மேஜையும்... அந்தப் பாழாய்ப்போன அறையை விட்டு அவளை என் கைகளில் தூக்கிக்கொண்டு போய் விடலாமா என்று நான் ஆசைப்பட்டேன். அவளை அந்த வாழ்க்கையிலிருந்து பிரித்துக்கொண்டால் என்ன என்று கூட நான் சிந்தித்தேன். அவளுடைய துயரங்கள் நிறைந்த சூழ்நிலையை நினைத்து என் மனம் கவலைப்பட்டது.

"உன்னைப்பற்றி கொஞ்சமாவது என்கிட்ட சொல்லு."- அவள் ஒருமுறை என்னைப் பார்த்துச் சொன்னாள்.

நான் அவளிடம் சொல்லத் தொடங்கினேன். ஆனால், சிறிது நேரம் சென்ற பிறகு அவள் என்னைத் தடுத்து நிறுத்தினாள்.

"இப்போ நீ பேசுறது உன்னைப் பற்றி இல்ல..."

என்னைப் பற்றி நான் பேசவில்லை என்பது எனக்கும் புரிந்தது. அப்படியென்றால் வேறு யாரைப் பற்றியோ நான் பேசிக்கொண்டிருந்தேன்.

என்னுடைய செயல்கள், எண்ணங்கள், ஒழுங்கு போன்றவற்றில் என்னுடைய தனித்துவத்தை இனிமேல்தான் நான் கண்டடைய வேண்டும். இதுவரை என்னால் அதைச் செய்ய முடியவில்லை. நான் யாராக இருந்தேன்? அதாவது, என்னவாக இருந்தேன்? இந்தக் கேள்வி என்னைக் குழப்பத்திற்குள்ளாக்கியது. வாழ்க்கையைப் பார்த்து எனக்குப் பயம் தோன்றியது. தற்கொலை முயற்சி என்ற அவமானமான நிலையை நோக்கி அது என்னைத் தள்ளிக்கொண்டே போனது. மனிதர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வாழ்க்கை என்பது அர்த்தமே இல்லாத, தரம் தாழ்ந்த, முட்டாள்தனமான ஒன்றாக எனக்குத் தோன்றியது. வாழ்க்கையின் ஆழத்தை நோக்கியும் நிலையற்ற தன்மையின் இருண்ட மூலைகளை நோக்கியும் கூர்ந்து பார்க்கும் முறையான ஆர்வம் என்னைச் சதா நேரமும் தூண்டிக்கொண்டேயிருந்தது. அந்த நிலையில் உள்ளுணர்வால் உந்தப்பட்டு மற்றும் ஒரு குற்றச் செயலைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.

 

+Novels

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

தாபம்

தாபம்

June 14, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel