Lekha Books

A+ A A-

முதல் காதல் - Page 3

muthal kathal-maxim gorky

முழுக்கையைக் கொண்ட வெள்ளை நிற சட்டையுடன் சிறிய பின்னல் வேலைகளைக் கொண்ட சற்று இறுக்கமாக இருந்த வெள்ளைப் பாவாடையை அவள் அணிந்திருந்தாள். ஆனால், குறிப்பாகச் சொல்லக்கூடிய அளவிற்கு இருந்த அவளின் தனித்துவம் என்னவென்றால் அவளுடைய அழகான கண்கள்தான். எப்படிப்பட்ட சந்தோஷத்தையும், கனிவையும், நட்பை வெளிப்படுத்தக்கூடிய உணர்வையும் அந்தக் கண்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன! இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது? ஒரு இருபது வயது உள்ள ஒரு இளைஞன். சொல்லப்போனால் வாழ்க்கையின் கடுமையான பல விஷயங்களைப் பார்த்து பாதிக்கப்பட்ட மனதைக் கொண்ட இளைஞன் விரும்பக்கூடிய விதத்தில் இருக்கும் ஒரு புன்சிரிப்பின் (அதைப் பற்றி எந்தவித சந்தேகமும் இல்லை) பிரகாசம் அந்தக் கண்களில் எப்போதுமிருந்தது.

"உடனே மழை பெய்றதுக்கு வாய்ப்பு இருக்கு". -தன் தாடிக்குள் சிறிது சிகரெட் புகையை ஊதியவாறு அவளுடைய கணவன் சொன்னான்.

நான் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். வானம் மிகவும் தெளிவாகவும் நட்சத்திரங்களுடனும் இருந்தது. நான் அந்த மனிதனின் உள் எண்ணத்தைப் புரிந்து கொண்டு வெளியேறினேன். ஆனால், பல நாட்களாக தேடிக்கொண்டிருந்த ஒரு பொருளைக் கண்டுபிடித்து விட்ட ஒரு ஆணின் சந்தோஷம் முழுமையாக என்னுடைய மனதில் இருந்தது.

அந்த நீல நிறக் கண்களைப் பற்றி மனதில் நினைத்துக்கொண்டே அவற்றைப் பற்றி சிந்தித்தவாறே அன்று இரவு முழுவதும் நான் அந்த வயல் வெளிகளில் அலைந்து திரிந்தேன். தாடியும், நல்ல தீனி கிடைத்த ஒரு பூனையின் திருப்தியும் கொண்ட- சிறிதும் தைரியமில்லாத அந்த ஜந்து அவளுக்குச் சிறிதும் பொருத்தமான கணவன் இல்லை என்று எனக்குத் தோன்றியது. உண்மையாகவே  அவள் மீது எனக்குப் பரிதாபம் உண்டானது. பாவம்! தாடி ரோமங்களுக்கு மத்தியில் ரொட்டித்துண்டுகளைத் திணிக்கும் ஒரு பூச்சியுடன் வாழ்க்கை நடத்துவது என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றுதான்.

அடுத்த நாள் ஆழமான ஓல்கா நதியின் பலவிதப்பட்ட நிறங்களைக் கொண்ட களிமண்ணின் ஓரத்திலிருந்து நாங்கள் அந்தப் படகுப் பயணத்தை ஆரம்பித்தோம். உலகம் தோன்றிய நாளிலிருந்து கணக்கெடுத்துப் பார்த்தால் மிகவும் இனிமையான நாள் எது என்றால் அன்றைய நாளைத்தான் நான் கூறுவேன். திருவிழாக் கோலம் பூண்டிருந்த அந்த வானத்தில் சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. பழுத்த நாவல் பழத்தின் வாசனை அந்த நதிக்கு மேலே காற்றில் பரவியிருந்தது. மனிதர்கள் நல்ல விஷயங்களைப் பற்றி மட்டும் நினைத்தார்கள். அவை என் மனதில் மகிழ்ச்சியையும் அவர்கள் மீது அன்பையும் உண்டாக்கின. நான் விரும்பும் பெண்ணின் கணவன் கூட நல்ல ஒரு மனிதனாக எனக்குத் தெரிந்தான். நான் செலுத்திக் கொண்டிருந்த படகில் அவனுடைய மனைவி ஏறிய பின்னாலும், அவன் ஏறவில்லை. அந்த நாள் முழுவதும் அவன் மரியாதையுடன் நடந்து கொண்டான். முதலில் அவன் எங்களிடம் க்ளாட்ஸ்டனைப் பற்றிய கதைகளைக் கூறினான். பிறகு ஒரு பெரிய பாத்திரம் நிறைய இருந்த பாலைக் குடித்துவிட்டு, ஒரு மர நிழலில் காலை நீட்டிப் படுத்தவாறு அன்று மாலை வரை ஒரு குழந்தையைப் போல அவன் உறங்கினான்.

திட்டமிட்டிருந்தபடி எங்களின் படகு அந்த சுற்றுலா இடத்தைப் போய் அடைந்தது. நான் அவளைக் கரைக்கு அழைத்துச் சென்றேன். "நீங்க எந்த அளவுக்கு ரொம்பவும் அக்கறையா இருக்கீங்க?"- அவள் என்னைப் பார்த்துச் சொன்னாள்.

மிகவும் நெடுங்குத்தாக இருக்கும் உயரமான இடத்திற்குக் கூட அவளைத் தோளில் ஏற்றிக்கொண்டு ஏறமுடியும் என்று எனக்குத் தோன்றியது. நகரம் வரை அவளைச் சுமந்து கொண்டு போக எந்தவொரு கஷ்டமும் இல்லை என்று (இங்கிருந்து நகரம் ஏழு மைல் தூரத்தில் இருக்கிறது) நான் அவளிடம் சொன்னேன். உண்மையாகச் சொல்லப்போனால் என்னால் அப்படி நடக்க முடியுமா என்று உறுதியான குரலில் என்னால் கூற முடியவில்லை. அவள் மிகவும் செல்லமாக என்னைப் பார்த்துச் சிரித்தாள். தன்னுடைய பார்வையால் என்னை அவள் சந்தோஷம் கொள்ளச் செய்தாள். அன்று முழுவதும் அந்தக் கண்களின் பிரகாசம் என் மனம் முழுக்க நிறைந்திருந்தது. உண்மையாகச் சொல்லப்போனால் எனக்காக மட்டுமே அந்தக் கண்கள் அப்படி ஒளிர்ந்தன என்று உறுதியாக என்னால் கூறமுடியும்.

அந்த இளம்பெண் இப்படிப்பட்ட ஒரு பிறவியை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்பதையும்; அந்த உயிர் அவளை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையையும் உணரும்போது நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் ஒவ்வொரு விஷயங்களும் நடந்து கொண்டிருந்தன.

பார்ப்பதற்கு அவள் ஒரு இளம்பெண்ணைப்போல தோன்றினாலும் என்னை விட அவளுக்குப் பத்து வயது அதிகம் என்பதை வெகு சீக்கிரமே நான் தெரிந்து கொண்டேன். பெலோஸ்டாக்கில் இருந்த ஒரு பெண்கள் பள்ளிக்கூடத்தில்தான் அவள் பட்டம் பெற்றிருக்கிறாள். பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கும் குளிர்கால அரண்மனையில் பணியாற்றும் ராணுவ வீரர் ஒருவருக்கு அவளை நிச்சயம் செய்திருக்கிறார்கள். அவள் பாரீஸில் வசித்திருக்கிறாள். ஓவியக் கலையையும், நோயாளிகளைப் பராமரிக்கும் வேலையையும் அங்கு கற்றிருக்கிறாள். அவளுடைய தாய் ஒரு நர்ஸாக இருந்தவளென்றும்; என்னை இந்த உலகத்திற்குக் கொண்டு வந்தது அவள்தான் என்பதும் எனக்கே பின்னால்தான் தெரியவந்தது. நான் இந்த விஷயத்தை ஒரு நல்ல அடையாளமாக எடுத்துக்கொண்டு அதை மனதில் நினைத்து சந்தோஷப்படவும் செய்தேன்.

சமூக சேவகர்களுடனும், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுடனும் அவளுக்கு உள்ள தொடர்பும், சாதாரண மக்களுடன் அவளுக்கு இருந்த நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கமும், பாரீஸிலும், வியன்னாவிலும், பீட்டர்ஸ்பர்க்கிலும் உள்ள தெருக்களிலும் வீடுகளிலும் அரை வயிற்று உணவுடன் வாழ்ந்த அவளுடைய பழைய நாட்களும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு தனித்துவம் மிக்க பெண்ணாக அவளை உருவாக்கின. ஒரு பூனைக்குட்டியைப் போல குறும்புத்தனங்கள் நிறைந்த அவள் ஒரு திறமையான பள்ளிக்கூட சிறுமியைப் போல் வாழ்க்கையைக் கையாண்டாள். ஃப்ரெஞ்ச் பாடல்களை உணர்ச்சி பொங்க பாடி மிடுக்காக சிகரெட் புகைத்து திறமை வெளிப்படும் வகையில் ஓவியம் வரைந்து... ஒரு நடிகையின் பலவித ஆற்றல்களையும் அவள் வெளிப்படுத்தினாள். தொப்பிகளும், ஆடைகளும் உண்டாக்குவதில் அவள் திறமைசாலியாக இருந்தாள். நர்ஸிங் மட்டும்தான் அவள் பார்க்காத வேலையாக இருந்தது.

"என் வாழ்க்கையில் நான் நான்கு நோயாளிகளைக் கவனித்தேன். அவங்கள்ல மூணு பேர் செத்துப்போயிட்டாங்க." - அவள் சொன்னாள்.

மக்கள் பெருக்கத்திற்கு உதவக்கூடிய அந்தத் தொழிலில் அவளுக்கு ஆர்வம் இல்லாமற் போனதற்கு இந்த ஒரு விஷயம் போதுமே!

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel