Lekha Books

A+ A A-

முதல் காதல் - Page 7

muthal kathal-maxim gorky

ஒரு தாய் தன் குழந்தையிடம் கூறுகிற மாதிரி சொன்ன இந்த விருப்பப்படாத உண்மைகள் எனக்கு அவள் மீது இருந்த ஈடுபாட்டையும் காதலையும் மேலும் அதிகமாக்க மட்டுமே உதவின. அவளுடைய குரலையம் இனிமையான வார்த்தைகளையும் கவனித்துக் கேட்பது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அதே நேரத்தில் அது ஒரு இனிய அனுபவமாகவும் இருந்தது. இந்த வகையில் இதற்கு முன்பு ஒருமுறைகூட யாரும் என்னிடம் இப்படிப் பேசியதில்லை என்பதே உண்மை.

வயல்களில் பாய்ந்து கொண்டிருந்த நீரைப் பார்த்தவாறு நான் உட்கார்ந்திருந்தேன். காற்றில் ஆடிக்கொண்டிருந்த தாவரங்கள் பச்சை நிறமுள்ள ஒரு நதியைப்போல இப்படியும் அப்படியுமாக நெளிந்தன. என் இதயத்தின் அடித்தளத்தில் அவள் எனக்குத் தந்த அன்பை என் மனதிற்குள் பத்திரமாகப் பூட்டி வைத்துக் கொண்டு திரும்பக் கொடுக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.

"ஏதாவதொரு தீர்மானம் எடுக்குறதுக்கு முன்னாடி நாம நல்லா உட்கார்ந்து யோசிக்கணும்."- அவள் மெதுவான குரலில் சொன்னாள். பச்சை நிறமுள்ள முந்திரித் தோட்டங்களால் சூழப்பட்டிருந்த அந்த நகரத்தையே பார்த்துக் கொண்டிருந்த அவள் ஒரு சிறிய குச்சியை எடுத்துத் தன் முழங்காலை மெதுவாகத் தட்டிக் கொண்டிருந்தாள். "சொல்லப்போனா இந்த விஷயங்களையெல்லாம் நான் பொலெஸ்லாவ்கிட்ட பேசணும். அவருக்கு ஏதோ சந்தேகம் இருக்கு. அவர் மனசு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிறதை என்னால உணர முடியுது. எனக்கு நாடகத்தனமான காட்சிகள் உருவாக்குறதுல விருப்பம் இல்ல..."

அந்த உரையாடல் மிகவும் சோகம் நிறைந்ததாக இருந்தது. அதே நேரத்தில் அவள் பேசுவது, கேட்கக் கூடியதாகவும் இருந்தது. அந்தப் பேச்சில் விளையாட்டுத்தனம், ஆபாசம் எல்லாம் கலந்திருந்தது.

என் ட்ரவுசரின் இடுப்புப் பகுதி மிகவும் அகலமாக இருந்ததால் அந்த இடத்தில் அது நிறைய சுருக்கங்களைக் கொண்டிருந்தது. மூன்று அங்குலம் நீளத்தைக் கொண்ட ஒரு செம்பு ஊசியால் நான் அதைக் குத்தியிருந்தேன். (ஏழைப்பெண்களின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஊசிகளை இப்போது யாரும் தயாரிப்பதில்லை.) அந்த ஊசி பல சமயங்களில் என் உடம்பைக் குத்திக் கொண்டே இருந்தது. ஒருமுறை நான் என்னை மறந்து சற்று நகர்ந்தபோது அந்த ஊசியின் முனை என் உடம்புக்குள் நுழைந்து விட்டது. நான் அதை வெளியே பிடுங்கிவிட்டேன் என்றாலும் என்னை பயமுறுத்தும் வண்ணம் அந்தக் காயத்திலிருந்து ஏராளமான இரத்தம் வெளியே வந்த வண்ணம் இருந்தது. அது என்னுடைய ட்ரவுசரரை நனைத்தது. நான் உள்ளாடை எதுவும் அணியவில்லை. சமையல்காரனின் சட்டை இடுப்பிற்கு மேலே வரை மட்டுமே இருந்தது. என் காற்பகுதியில் இரத்தம்பட்டு நனைந்திருந்த ட்ரவுசருடன் நான் எப்படி எழுந்து நடக்க முடியும்?

அந்தச் சம்பவத்தின் கோமாளித்தனமான விஷயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. முழுமையான நகைச்சுவைக்கு இடமிருக்கக்கூடிய அந்தச் சம்பவத்தை நினைத்து எனக்குக் கோபம் தான் வந்தது. வந்த கோபத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இடையில் பேசவேண்டிய வரிகளை மறந்து போன ஒரு நடிகனின் நிலையைப் போல உணர்ச்சிவசப்பட்டு நான் பேசத் தொடங்கினேன்.

முதலில் மிகவும் கவனமாக, பிறகு சிறிது பதைபதைப்புடன் நான் சொன்ன ஒவ்வொன்றையும் அவள் கேட்டாள்.

"எவ்வளவு சத்தமா, ஜோடனை வார்த்தைகளெல்லாம் போட்டு நீ பேசுற?"- அவள் சொன்னாள்: "இந்த வார்த்தைகள் உன்னோடது இல்லைன்னு நான் நினைக்கிறேன்."

என் கஷ்டமான சூழ்நிலையின் மீது அவள் அடித்த இறுதியான அடியாக இருந்தது அது. ஒரு அப்பாவிப் பூனையைப் போல வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

"வீட்டுக்குப்போக நேரமாயிடுச்சு. மழை பெய்றதுக்கு வாய்ப்பு இருக்கு."

"நான் இங்கேதான் இருக்கப்போறேன்."

"என்ன?"

"வேற நான் என்ன சொல்றது?"

"நீ என் மேல கோபப்படுறியா?"- என் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டே அவள் கேட்டாள்.

"அப்படியெல்லாம் இல்ல. எனக்கு என் மேலதான் கோபம் கோபமா வருது."

"உன் மேல கோபப்படுறதுக்கு என்ன இருக்கு?"- எழுந்தவாறு அவள் சொன்னாள்.

என்னால் அசைய முடியவில்லை. அந்தச் சேறு நிறைந்த மண்ணில் இருந்தால் என் உடம்பிலிருந்து இரத்தம் வழிவதன் சத்தத்தை அவள் கேட்டு விடுவாள் என்றும்; உடனே அவள் அதைப் பற்றி விசாரிப்பாள் என்றும் நான் நினைத்தேன்.

"என்ன அது?"

"இங்கேயிருந்து நீ போறியா?"- மனப்பூர்வமாக நான் அவளைப் பார்த்துக் கெஞ்சினேன்.

அன்புடன் சில ஆறுதல் வார்த்தைகளைக் கூறிவிட்டு அந்த அருவியின் ஓரமாகத் தன்னுடைய அழகான உடலை அசைத்தவாறு அவள் நடந்து போனாள். பார்வையிலிருந்து மறையும் வரை அவளுடைய அந்த ஒல்லியான உருவத்தைப் பார்த்தவாறு நான் அதே இடத்தில் நின்றிருந்தேன். என்னுடைய முதல் காதல் சோகத்தில் முடிந்துவிடுமோ என்ற ஏமாற்றத்துடன் மனம் நொந்து போய் நான் தரையில் விழுந்தேன்.

நடந்தது இதுதான். அவளுடைய கணவன் கண்ணீர் சிந்தினான். பலவித உணர்ச்சிகரமான காட்சிகளை நடத்தினான். என்னை நோக்கி அந்த இனிமையான காதல்நதி வழியாக நீந்திக் கடக்கும் விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க அவளால் முடியவில்லை.

"அந்த ஆள் ரொம்பவும் கோழை. ஆனா, நீ ரொம்பவும் தைரியசாலியா இருக்கே!"- அதைச் சொன்னபோது அவளுடைய கண்களில் நீர் நிறைந்துவிட்டது. "நான் வீட்டுக்குப் போயிட்டா, சூரிய ஒளி கிடைக்காத ஒரு பூவைப்போல வாடிப்போவேன்னு அந்த ஆள்..."

அந்தப் பூவின் குள்ளமான கால்களையும், பெண்களிடமிருப்பது போன்ற பின் பாகத்தையும், பீசணிக்காய் வயிறையும் நினைத்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன். அவனுடைய தாடியில் எப்போதும் ஈக்கள் உட்கார்ந்திருக்கும். அந்த உயிரினங்களுக்கு அங்கு ஏதாவது தின்பதற்கு இருக்கும்.

அவள் சிரித்தாள்.

"அப்படியெல்லாம் சொல்றது கிண்டலான ஒண்ணுதான்!"-அவள் சொன்னாள்: "ஆனா, அந்த ஆளைப் பொறுத்தவரை நான் அப்படிப்பட்ட ஒரு தீர்மானம் எடுத்தா அது அவரை ரொம்பவும் பாதிக்கக் கூடியதா இருக்கும்."

"எனக்கும் கூட அப்படித்தான்."

"என்ன இருந்தாலும், நீ ஒரு இளைஞன்."

ஒரு பலவீனமான மனிதனின் எதிரியாக நான் இருக்கிறேன் என்ற உண்மையை வாழ்க்கையில் முதல்முறையாக அப்போதுதான் உணர்ந்தேன். பிறகு மிகவும் முக்கியமான பல இடங்களிலும் பலவீனமானவர்களுக்கு முன்னால் பலமுள்ளவர்கள் தோல்வியடைவதை நானே நேரடியாகப் பார்த்தேன். அழிந்து போவதற்காக மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண உயிர்களுக்காக எவ்வளவோ விலை மதிப்புள்ள சக்தி செலவழிக்கப்படுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel