Lekha Books

A+ A A-

முதல் காதல் - Page 10

muthal kathal-maxim gorky

நான் ஒரு நம்பிக்கையற்ற மனிதன் என்பதைத் தெரிந்து கொண்டதால் உண்டான கோபத்தில் அவர் எனக்கு அறிவுரை கூறினார்.

"மகனே, நீ நடைமுறை அறிவுடன் வாழக்கையை நடத்தப்பாரு. பல லட்சக்கணக்கான நம்பிக்கையுள்ளவர்கள் நிறைந்திருக்குற இந்த உலகத்தில் ஒரு டஜன் அளவுக்கு வேணும்னா நம்பிக்கை இல்லாதவங்க இருக்கலாம். இப்படியொரு சூழ்நிலை ஏன் உண்டாகுது? தேவாலயமும் நம்பிக்கையும் இல்லாத ஆன்மா நீரில்லாத நிலத்தில் சிக்கிக் கொண்ட மீன் மாதிரின்னு சொல்றதுதான் சரி. புரியுதா? இந்த விஷயங்களை மனசுல நினைச்சுக்கிட்டு நாம கொஞ்சம் மது அருந்துவோம்!"

"நான் மது அருந்துவது இல்லை. அது என் காய்ச்சலை அதிகப்படுத்திடும்."

கையிலிருந்த முள்ளால் ஒரு மீன் துண்டைக் குத்தி எடுத்து தன் தலைக்கு மேலே சுழற்றிப் பயமுறுத்தும் வகையில் பாதிரியார் சொன்னார்:

"அதுக்குக் காரணம் வேறொண்ணும் இல்ல. உனக்குக் கடவுள் மேல நம்பிக்கை இல்லாததுதான்..."

நான் விரும்பும் பெண் அந்தப் பின்னாலிருக்கும் அறையில் இருக்க, மாமிசம் வாங்கவோ குழந்தைக்கு ஒரு பொம்மை வாங்கித்தரவோ முடியாமல் என்னுடைய நிலை இருந்ததை நினைத்தபோது பல நேரங்களில் எனக்கே அவமானமாக இருக்கும். எல்லாவற்றிற்கும் காரணம் பாழாய்ப்போன என் வறுமைதான் என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. வறுமையைப் பார்த்து நான் பெரிய அளவில் பதற்றமொன்றும் அடையவில்லை. ஆனால், அழகும் படிப்பும் கொண்ட இந்தப் பெண்ணும் அவளுடைய குழந்தையும் இந்தக் கஷ்டங்கள் முழுவதையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களே என்பதை நினைத்தபோது தான் எனக்கே என்னவோ போல் இருந்தது. இரவு நேரங்களில் சட்டம் சம்பந்தமான ஆதாரங்களின் பிரதிகளை எடுக்கும்போதும் கதைகளை எழுதும்போதும் நான் என்னுடைய காதலையும் விதியையும் மனதில் எண்ணியவாறு மனிதர்களைப் பொதுவாகச் சபித்துக்கொண்டு பற்களைக் கடிப்பது ஒரு நிரந்தர செயலாக இருந்தது. 

நான் விரும்பிய அந்தப் பெண் மிகப்பெரிய மனதிற்குச் சொந்தக்காரியாக இருந்தாள். தன்னுடைய துயரங்களைத் தன் குழந்தை தெரிந்து கொள்ளக்கூடாது என்று எண்ணக்கூடிய தாயாக அவள் இருந்தாள். ஒரு புகாராவது அவளுடைய உதடுகளில் இருந்து வெளிக்கிளம்பி வரவேண்டுமே! எங்களின் சூழ்நிலை எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், அவளுடைய சிரிப்பிற்கோ, குரலுக்கோ எந்தவொரு மாறுதலும உண்டாகவில்லை. பொழுது புலர்ந்தது முதல் மாலை வரும் வரை அவள் பாதிரியார்கள் மற்றும் அவர்களின் இறந்து போன மனைவிகளை ஓவியமாக வரைந்து கொண்டிருப்பாள். அந்த மாவட்டத்தின் பூகோளத்தைப் படமாக வரைவாள். ஒருமுறை ஒரு கண்காட்சியில் அந்தப் பூகோளப் படங்களுக்கு ஒரு தங்க மெடல் பரிசாகக் கிடைத்தது. ஓவியங்களுக்கு ஆர்டர்கள் கிடைக்காதபோது கம்பியும் பட்டுத்துணியும் வைக்கோலும் பயன்படுத்தி பாரீஸ் மாதிரியில் அவள் பெண்களுக்கான அழகான தொப்பிகளை உருவாக்க ஆரம்பித்தாள். ஆனால், அவளுடைய இந்த அழகான படைப்புகள் மிக மிக அழகாகத் தெரிந்தது - அவள் அந்தத் தொப்பியை அணிந்து கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு குலுங்கிக் குலுங்கிச்

சிரித்தபோதுதான். கர்வம் குடிகொள்ள வயிற்றைத் தள்ளிக்கொண்டு இந்தப் 'பறவைக்கூட்டை' தலையில் வைத்துக்கொண்டு தெருவில் நடந்து செல்லும் பெண்களைப் பார்ப்பது உண்மையிலேயே அசாதாரணமான ஒரு காட்சிதான்.

ஒரு வக்கீல் குமாஸ்தாவாகவும், அந்தப் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு பத்திரிகையில் சிறுகதைகள் எழுதியும் என் படைப்பு சம்பந்தமான செயல்களை நான் தொடர்ந்து கொண்டிருந்தேன். அப்படி எழுதுவதற்கு வரியொன்றுக்கு எனக்கு இரண்டு கோபெக்குகள் கிடைத்தன. மாலை நேரங்களில் தேநீர் பருக எங்களுக்கு விருந்தாளிகள் யாருமில்லையென்றால் என் மனைவி அவளுடைய பள்ளிக்கூட நாட்களில் நடந்த கதைகளைச் சொல்லி என்னை சந்தோஷப்படுத்துவாள்.

இரண்டாவது அலெக்ஸாண்டர் பெலோஸ்டாக்கில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு வழக்கமாகச் செல்வதுண்டு. அவர் அங்குள்ள பெண்களுக்கு இனிப்பு பலகாரங்களைத் தருவார் அதைச் சாப்பிடுபவர்கள்- ஆச்சரியம் என்றுதான் சொல்லவேண்டும்- கர்ப்பிணியாகி விடுவார்கள். பல நேரங்களில் அழகான ஒரு இளம்பெண் அவருடன் சேர்ந்து பெலோவஷ்காய் காட்டுப்பகுதிக்கு வேட்டைக்குப் போவதுண்டு. அதற்குப்பிறகு திருமணம் செய்து கொள்வதற்காக அவர்கள் பீட்டர்ஸ்பர்க்கிற்குச் சென்றார்கள். பாரீஸைப்பற்றி அவள் சுவாரசியமான பல கதைகளையும் கூறுவாள். படித்ததன் மூலம் பாரீஸைப் பற்றி நிறைய நான் தெரிந்து வைத்திருந்தேன். குறிப்பாக 'மாக்ஸியெ து காம்ப்' என்ற பெரிய நூலைப் படித்தது. மோண்ட் மார்த்ரெயில் இருக்கும் காஃபேயிலிருந்தும் லாட்டின் க்வார்ட்டரிலிருந்தும் மாறுபட்ட வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும் அவள் பாரீஸைப்பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாள். அவளுடைய கதைகளில் மதுவைவிட உணர்ச்சிகள்

அதிகமாக இருந்தன. உலகத்தின் ஒட்டுமொத்தமான அழகிற்கு ஆதாரமாக இருப்பது பெண்கள்தான் என்பதைப் புரிந்து கொண்டதன் அடிப்படையில் நான் பெண்களைப்பற்றி புகழ்ந்து பாடல்கள் எழுதினேன்.

நான் அதிகமாக ரசித்தது அவளுடைய சொந்த காதல் கதைகளைத்தான். மிகவும் ரசிக்கக்கூடிய விதத்தில் அவள் அந்தக் கதைகளை என்னிடம் கூறினாள். உணர்ச்சிவசப்படும் அளவிற்கு காரமும் புளிப்பும் சேர்க்க அவள் மறக்கவில்லை. சிரித்துக்கொண்டே பென்சிலால் மெல்லிய கோடுகள் போட்டு வரைவதைப் போல தன்னுடைய வார்த்தைகாளல் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த அந்த ஜெனரலைப் பற்றி அவள் சொன்னாள். ஒரு நாள் வேட்டைக்குப் போயிருந்தபோது ஜார் மன்னனுக்குத் துப்பாக்கியால் வெடிக்க வாய்ப்புத் தராமல் அந்த ஜெனரல் ஒரு மிருகத்தைச் சுட்டு விட்டு தொடர்ந்து அந்த மிருகத்தைப் பார்த்தவாறு ஜார் மன்னனிடம் மன்னிப்புக் கேட்கிற தொனியில் அவர் உரத்த குரலில் கத்தினார்:

"மன்னரே, என்னை மன்னிக்கணும்."

அவள் ரஷ்யாவின் அரசியல் அனாதைகளைப் பற்றி பேசினாள். அவ்வாறு பேசும்போது அவளுடைய உதடுகளில் பெரியது சிறியது என்று பார்க்காத புன்சிரிப்பு தவழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.

சில நேரங்களில் அவளிடமிருக்கும் உண்மைத் தன்மை அவளை வாழ்க்கையின் வீணான விஷயங்களை நோக்கி அழைத்துக் கொண்டு செல்கிறதோ என்று கூட எனக்குத் தோன்றியிருக்கிறது. ஒரு பூனைக்குட்டியைப் போல அவள் தன்னுடைய நாக்கு நுனியால் உதட்டில் உரசுவாள். அந்தச் சமயத்தில் அவளுடைய கண்களில் தனித்துவமான ஒரு ஒளி பிரகாசிப்பது வெளிப்படையாகத் தெரியும். சில நேரங்களில் அவள் பொறுமை இல்லாததைப்போல இருப்பாள்.

ஆனால், பெரும்பாலான நேரங்களில் பொம்மையுடன் விளையாடும் ஒரு சிறுமியைப் போலத்தான் அவள் இருப்பாள்.

ஒரு நாள் அவள் சொன்னாள்:

"காதல்ல ஈடுபடுறப்போ ரஷ்யாக்காரன் நிறைய பேசுறதுல ஆர்வம் உள்ளவனா மாறுவான். பேசிப்பேசியே நம்மைச் சோர்வடைய வச்சிடுவான். சில நேரங்கள்ல எதிர்த்துச் சொல்ற அளவுக்குத் தாங்க முடியாம இருக்கும் அவனோட பேச்சு.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel