Lekha Books

A+ A A-

ஓர் இரவு

ஓர் இரவு
தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழில்: சுரா

ரு சரியான வழியைக் கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடித்தே ஆக வேண்டும். அன்றே மருந்து வாங்கியாக வேண்டும். அதற்கும் மேலாக, மறுநாள் குழந்தைக்கான கல்விக் கட்டணத்தையும் கொடுக்க வேண்டும். அபராதத்தையும் சேர்த்து கட்ட வேண்டிய இறுதி நாள் அது. அந்த நகரத்திற்கு நான் இடம் மாற்றி வந்து, பதினைந்து நாட்களே ஆகியிருந்தன. தெரிந்தவர்கள் யாருமில்லை. மாதத்தின் மத்திய பகுதி. அதிகமாக எதுவும் வேண்டாம். இருபது ரூபாய் போதும்.

எதையாவது அடகு வைக்கலாம் என்று பார்த்தால், இருந்த நகையை முன்பு இருந்த இடத்தில் அடகு வைத்தாகி விட்டது. நான் அதைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன். எங்கு சென்று, யாரிடம், எப்படி வாங்கலாம் என்பது தெரியாமல் நான் நடந்து திரிந்தேன். எனினும், எனக்கு ஒரு தன்னம்பிக்கை இருந்தது. எங்கிருந்தாவது அடைந்து விடலாம் என்பதுதான். அதற்கு காரணமெதுவுமில்லை. ஒரு நம்பிக்கை! பணத்தைக் கொண்டு வருகிறேன் என்று மனைவியிடம் உறுதியான குரலில் கூறி விட்டுத்தான் வெளியே வந்தேன்.

நான் அப்படி நடந்து திரிந்தபோது, ஒரு பெரிய கார் எனக்கு முன்னால் வந்து திடீரென்று நின்றது. உடனடியாக நான் திகைப்படைந்து விட்டேன். ஒரு ஆள் காரிலிருந்து வெளியே வந்து என் கையைப் பிடித்து நெறித்தவாறு என் முகத்தையே பார்த்தான். அவன் கேட்டான்:

‘உனக்கு என்னை அடையாளம் தெரியலையா?’

உண்மையிலேயே எனக்கு புரியவில்லை. அந்த அளவிற்கு சுதந்திரமாக ‘உனக்கு’ என்று கூறிய ஆளை உண்மையிலேயே நான் தெரிந்திருக்க வேண்டும். மிகவும் நெருக்கமான மனிதனாக இருக்க வேண்டும். ஒரு நிமிடம் நான் தயங்கிக் கொண்டே நின்றிருந்தேன். திடீரென்று என்னையே அறியாமல் என் நாக்கிலிருந்து ஒரு சத்தம் வெளியே வந்தது.

‘ஜோணிக்குட்டி...’
‘அப்படியென்றால்... நீ என்னை மறக்கல.’

‘ஜோணிக்குட்டி, நான் உன்னை மறப்பேனா? ஆனால், சந்தித்தது சிறிதும் எதிர்பார்க்காததுதான்...’

நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். இருபது வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரே அறைக்குள் மூன்று வருடங்கள் இருந்தவர்கள் நாங்கள். நினைவுகள் அடுத்தடுத்து வந்தன. என் ஜோணிக்குட்டியைப் பற்றி சில வேளைகளில் நான் நினைத்திருக்கிறேன். ஒருவேளை... அவன் என்னைப் பற்றியும் நினைத்திருக்கலாம். அதனால்தானே என்னைப் பார்த்தவுடனே அடையாளம் கண்டு பிடித்து வண்டியை நிறுத்தினான்! உடனடியாக அடையாளம் கண்டு பிடிக்க என்னால் முடியாமற் போனது.... அது ஒரு தவறாக எனக்கு தோன்றியது. ஆனால், அன்றைய நாள் என் மனதிற்குள் ஏராளமான குழப்பங்கள் இருந்தன. அந்த குழப்பங்களின் திரைச்சீலை நீங்கினால்தானே, ஆனந்தம் நிறைந்த கடந்து சென்ற சம்பவங்களைப் பார்க்க முடியும்! அந்த ஒரு நிமிடம் அப்படி கடந்து விட்டது.

நான் எதற்காக வெளியே வந்தேன் என்பதை மறந்து விட்டேன். காருக்குள் ஏறும்படி ஜோணிக்குட்டி என்னிடம் கூறினான். நான் ஏறினேன். அந்த காருக்குள் மேலும் இரண்டு பேர் இருந்தார்கள். கார் நகர்ந்ததும், ஜோணிக்குட்டி நண்பர்களிடம் கூறினான்:

‘கோபி என்னுடைய குருநாதன். ஒரு அப்பாவியான பேசத் தெரியாத பிராணியாக நான் கல்லூரிக்குச் சென்றேன். அன்று கோபியுடன் சேர்ந்தேன். கல்லூரியை விட்டு வெளியே வந்தபோது....’

காரிலிருந்த ஒரு நண்பன் அந்த வாக்கியத்தை முழுமை செய்தான்.

‘கல்லூரியை விட்டு வெளியே வந்த ஆளை எங்களுக்கு தெரியும்.’

அது உண்மைதான். ஜோணிக்குட்டி ஒரு அப்பாவியாக இருந்தான். நான் சேட்டைகள் செய்து கல்லூரியில் பிரபலமானவனாக இருந்தேன். அவன் கல்லூரியை விட்டு வெளியே வந்த போது, குறும்புத் தனங்களில் என்னைப் போலவே ஆகி விட்டிருந்தான்.
ஜோணிக்குட்டி கூறினான்:

‘என்னை மது அருந்த கற்றுக் கொடுத்தவன் கோபிதான்.’

திடீரென்று அந்தச் சம்பவம் என் ஞாபத்தில் வந்தது. அன்று பிரபலமாக இருந்த சேவியர்ஸ் ரெஸ்ட்டாரெண்டிற்கு ஜோணிக்குட்டியை அழைத்துச் சென்ற கதை!

நண்பர்களில் இன்னொருவன் தமாஷாக கூறினான்:

‘எது எப்படி இருந்தாலும் குருநாதர் நல்ல நேரத்தில்தான் ஆரம்பித்து வைத்திருக்கிறார். இன்று வரை தடையெதுவும் உண்டாகவேயில்லை.’

அவன் தொடர்ந்து கேட்டான்:

‘குருநாதன் ஆரம்பித்து வைத்தது அது மட்டும்தானா?’

அதற்கும் ஜோணிக்குட்டி பதில் கூறினான்:

‘இல்லை... தொடர்ந்து உள்ளவற்றையும் ஆரம்பித்து வைத்தவன் கோபிதான்.’

அதற்குப் பிறகு ஜோணிக்குட்டி என்னிடம் கேட்டான்:

‘நம்முடைய லாட்ஜுக்குப் பின்னாலிருந்த அந்த பெண்ணை அதற்குப் பிறகு நீ பார்த்தாயா?’

என் ஞாபக மண்டலத்தில் கடந்த கால வாழ்க்கையுடன் தொடர்பு உள்ள ஒவ்வொரு மனிதர்களும், சம்பவங்களும் தோன்றிக் கொண்டிருந்தன. ஏதோ ஒரு அலுவலகத்தில் ப்யூனாக பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு மனிதனின் மகளான அவள் ஒரு ஏழை இளம் பெண்! நாங்கள் அவளைப் பார்த்தோம். அவளும் பார்த்தாள். நாங்கள் சிரித்தோம். அவளும் சிரித்தாள். அப்படிச் சென்ற அந்த ஏமாற்றுதல் நிறைந்த கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் நான் நினைத்துப் பார்த்தேன். உண்மையிலேயே அந்த ஏழை பெண்ணை நாங்கள் நாசமாக்கினோம்.

ஜோணிக்குட்டி கேட்டான்:

‘நாம் அங்கிருந்து வெளியே வந்தபோது, அவள் கர்ப்பிணியாக இருந்தாள். இல்லையா?’

எந்தவொரு உணர்ச்சியும் இல்லாமல், ஒரு சாதாரண விஷயத்தைக் கூறுவதைப் போல ஜோணிக்குட்டி கேட்டான். உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் —— அதற்குப் பிறகு நான் அந்தக் கதையை நினைத்து மனதில் வேதனைப்பட்டிருக்கிறேன்.

ஜோணிக்குட்டி தொடர்ந்து கூறினான்:

‘வாசலைப் பெருக்குவதற்கும், நீர் பிடித்து தருவதற்கும் வந்திருந்த அந்த கிழவி பார்க்க நன்றாக இருந்தாள்.’

வெறுப்பை உண்டாக்கும் இன்னொரு நினைவை ஜோணிக்குட்டி வெளியிட்டான். காரில் இருந்த நண்பர்களில் ஒருவன் கேட்டான்:

‘நண்பர்கள் அனைவரும் சேர்ந்து என்னென்னவோ பண்ணியிருக்கிறீர்கள்!’

ஜோணிக்குட்டி உரத்த குரலில் தொடர்ந்து கூறினான்:

‘சரிதான்... நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து திருடியிருக்கிறோம்.’

தொடர்ந்து அவன் ஒவ்வொன்றாக அந்த வாழ்க்கையின் ஒவ்வொரு கருத்த பக்கங்களையும் புரட்ட ஆரம்பித்தான்.

நான் மறந்து போனவை. நினைத்துப் பார்ப்பதற்கு எந்தச் சமயத்திலும் விரும்பாத விஷயங்கள். நான் வருத்தப்படவும் செய்திருக்கிறேன். அந்த பெரிய ஓவியத்தை இருபது வருடங்களுக்குப் பிறகு எனக்கு முன்னால் ஒவ்வொன்றாக புரட்டி பார்க்கிறேன். உண்மையிலேயே நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். செய்யக் கூடாத எதையெதையெல்லாம் நான் செய்திருக்கிறேன்!

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel