Lekha Books

A+ A A-

ஓர் இரவு - Page 2

அந்த கெட்ட செயல்களிலிருந்து நான் தப்பித்தது —— என்னுடைய அப்பிராணி மனைவியை நான் திருமணம் செய்து கொண்ட பிறகுதான். நீண்ட நான்கைந்து வருட காலம் பழகிப் போய் விட்டிருந்த ஒரு செயலிலிருந்து நான் எப்படி தப்பித்தேன் என்று கேட்டால், எப்படி என்று என்னால் உறுதியாக கூற முடியாது. உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் —— அவளுக்கு அழகு இல்லை. கணவனை தன்னுடன் சேர்த்து நிறுத்தி வைக்கக் கூடிய புத்திசாலித்தனம் இல்லை. அவள் அப்பிராணி. சாதுர்யம் இல்லாதவள். கணவனை வசீகரிப்பதற்கான ஆற்றல் அவளுக்கு இல்லை. அதிகாரம் செய்யவும் தெரியாது. என்னுடைய கெட்ட பழக்க வழக்கங்களைப் பற்றி எந்தவொரு அறிவும் அவளுக்கு கிடையாது. எனினும், நான் தப்பித்துக் கொண்டேன். அவள் என் குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டு நடந்தபோது, அந்த வயிற்றில் நான் ஓராயிரம் முத்தங்களைக் கொடுத்திருப்பேன். அந்த வகையில் அந்த பழைய காலத்திலிருந்து நான் முழுமையாக விலகி விட்டேன். இன்று அவர்களுக்காக இருபது ரூபாய் வேண்டுமென்று தேடி வெளியே வந்திருக்கிறேன். ஜோணிக்குட்டி பழைய காலத்தின் அழுக்குகளை, சேற்றில் கிடந்து விளையாடி துள்ளிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் அள்ளி நான்கு பக்கங்களிலும் எறிந்து கொண்டிருக்கிறான்.

ஜோணிக்குட்டிக்கு திருப்தி உண்டாகவில்லை. எனக்கு வெட்கமாக இருந்தது. அந்த வகையில் நகரத்தைத் தாண்டினோம். சில கிராம பகுதிகளையும் தாண்டி கார் காட்டுப் பகுதியிலிருந்த சாலையின் வழியாக ஓடிக் கொண்டிருந்தது. நான் திடீரென்று சுய உணர்விற்கு வந்தேன். நான் வீட்டை விட்டு என்ன காரணத்திற்கு வெளியே வந்தேனோ, அதைப் பற்றிய ஞாபகங்கள் உயர்ந்து வந்தன. சற்று பதைபதைப்புடன் நான் கேட்டேன்.

‘நாம் எங்கே போகிறோம்?’

ஜோணிக்குட்டி இளைஞனுக்குரிய உற்சாகத்துடன் கூறினான்:

‘உன்னைக் கொண்டு போய் கொல்வதற்கு...’

எல்லோரும் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்கள்.

நகரத்திலிருந்து நீண்ட தூரம் தாண்டிச் சென்றிருந்தோம்.

‘நான் வீட்டிற்குத் திரும்பிச் செல்லணும்.’

ஜோணிக்குட்டி கிண்டல் பண்ண ஆரம்பித்தான்.

‘நான் என் அப்பாவைப் பார்க்கணும்... அம்மாவைப் பார்க்கணும்...’

அதற்கும் குலுங்கல் சிரிப்பு.

நான் உறுதியான குரலில் கூறினேன்:

‘இல்லை... நான் வீட்டிற்குப் போகணும். நான் சொல்லிட்டு வரல.’

காரில் இருந்த நண்பர்களில் ஒருவன் கேட்டான்:

‘அப்படியென்றால் கேட்டு, அனுமதி கிடைச்ச பிறகுதான் வெளியேறி வருவீங்களா?’

‘இல்ல.... அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.’

ஜோணிக்குட்டிக்கு எப்போதும் இருக்கக் கூடிய ஒரு வகையான மிடுக்கு உண்டு. அதை வைத்துக் கொண்டு அவன் கூறினான்:

‘ஓ... உன் மனைவி மட்டும்தான் காத்திருப்பாளா? எல்லா பெண்களும் அப்படித்தான்.’

இருபது வருடங்களுக்குப் பிறகு நான் ஜோணிக்குட்டியின் அந்த மிடுக்கான போக்கைப் பார்த்தேன். அதைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் எனக்கு ஆர்வம் இருந்தது. தொடர்ந்து ஜோணிக்குட்டி கூறினான்:

‘நாம பார்த்து எவ்வளவு நாட்களாச்சு! இப்படி பிடிவாதம் பிடித்தால் எப்படி...?’

காட்டுப் பகுதியின் வழியாக அந்த கார் வேகமாக போய்க் கொண்டிருந்தது. அந்த நண்பர்கள் ஒரு பாட்டைப் பாட ஆரம்பித்தார்கள். அது அந்த அளவிற்கு இனிமையான பாடலாக இல்லாமலிருந்தது. எனினும், ஜோணிக்குட்டி முன்பு பாடி, கேட்ட பாடல்தான் அது. நான் மனமே அறியாமல் அந்த பழைய காலத்திற்குள் கரைந்து போனேன். என் இதயம் பாட்டுடன் கலந்து தாளம் போட்டுக் கொண்டிருந்தது.

கார் பெரிய மலைகளின் பள்ளத்தாக்குகளின் வழியாக வளைந்தும் திரும்பியும் நேராக ஏறியும் இறங்கியும் பாய்ந்து போய்க் கொண்டிருந்தது. இந்த பயணம் எங்கு நோக்கி செல்கிறது? நேரமும் மாலை மயங்கி விட்டிருந்தது. என் மனம் மீண்டும் என் வீட்டை நோக்கி பயணித்தது. நல்ல உடல் நலமில்லாத என் மனைவி என்னை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள். நான் மருந்திற்கான பணத்தைத் தேடிப் பிடித்து கொண்டு வருவேன் என்று நினைத்துக் கொண்டு.... நாங்கள் ஒரு தேயிலை தோட்டத்தை அடைந்தோம். தோட்டத்தின் மத்தியில் ஒரு அருமையான பங்களா இருந்தது. அதன் வாசலில் கார் சென்று நின்றது. ஒரு பணியாள் பங்களாவிலிருந்து வெளியே வந்தான். நாங்களும் காரிலிருந்து இறங்கினோம்.

வெளிநாட்டு பாணியில் உருவாக்கப்பட்டிருந்த ஒரு பங்களா அது. அங்கு பெண்களும், குழந்தைகளும் இருப்பதாக தோன்றவில்லை. நாங்கள் வரவேற்பறையில் போய் அமர்ந்தோம். ஜோணிக்குட்டி மிகவும் மிடுக்கு நிறைந்த குரலில் கேட்டான்:

‘உனக்கு என்ன வேணும், கோபி? விஸ்கி வேணுமா? இல்லாவிட்டால் ப்ராண்டியா?’

நான் சொன்னேன்:

‘எனக்கு எதுவும் வேண்டாம். நான் அவற்றையெல்லாம் எவ்வளவோ நாட்களுக்கு முன்பே நிறுத்தி விட்டேன்.’

ஒரு நண்பன் கூறினான்:

‘மிகவும் நல்ல பையன்.’

நான் தொடர்ந்து கூறினேன்:

‘எவ்வளவோ நாட்களுக்கு முன்பே நான் நிறுத்தி விட்டேன்.’
ஜோணிக்குட்டி அசாதாராணமான ஒரு மிடுக்குத்தனத்தை வெளிப்படுத்தியவாறு சொன்னான்:

‘நீ இன்று குடிக்கிறாய். அதை நான் முடிவு செய்கிறேன்.’

நான் தர்ம சங்கடமான ஒரு நிலைக்கு ஆளாகி விட்டேன். எந்த வகையில் தப்பிப்பது? சண்டை போடுவதா? சண்டை போடுவதால், பயனில்லை. கீழே விழுந்து கெஞ்சி கேட்டுக் கொள்ள வேண்டுமா? அதுவும் பிரயோஜனமாக இருக்காது. அங்கிருந்து தப்பிப்பதற்கும் எந்தவொரு வழியுமில்லை. பொழுது இருட்டிக் கொண்டிருந்தது. என்னுடைய மனைவியும் குழந்தைகளும் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் கொஞ்சம் இருட்டி விட்டால், அவர்கள் கவலைப்பட ஆரம்பித்து விடுவார்கள். என் மகள் தன் தந்தையை நினைத்து அழுவாள். இந்த இரவு வேளை எப்படிப்பட்ட இரவாக இருக்கும் அவர்களுக்கு! அவர்கள் என்னவெல்லாம் நினைப்பார்கள்!

நான் ஜோணியிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டேன்:

‘என் மனைவி உடல் நலமில்லாமல் இருக்கிறாள். நான் போகணும்.’

அது உண்மையிலேயே பதைபதைப்பு நிறைந்த கெஞ்சலாக இருந்தது. நகரத்தில் எங்களுக்கு வேண்டிய அளவிற்கு அறிமுகமானவர்கள் கூட இல்லை.

ஜோணிக்குட்டி குலுங்கிக் குலுங்கி சிரித்தான். அந்த குலுங்கள் சிரிப்பை நான் இப்போது கூட கேட்கிறேன்.

அந்த குலுங்கல் சிரிப்பு பேய்த்தனமாக இருந்தது. அது நிற்கவில்லை. அதற்கு முன்பு ஒரு பெரிய கார் வாசலில் வந்து நின்றது. ஜோணிக்குட்டியும் நண்பர்களும் வாசலை நோக்கி ஓடினார்கள். ஏதோ புதிய விருந்தாளிகள், முக்கிய நபர்கள் வந்திருக்கலாம். நானும் அந்தப் பக்கம் பார்த்தேன். காரின் கதவைத் திறந்து, மூன்று பெண்கள் இறங்கினார்கள்.

உண்மையிலேயே அந்த பெண்களில் யாருமே ஜோணிக்குட்டியின், நண்பர்களின் மனைவிமார்கள் இல்லை. அது மட்டுமல்ல – அவர்கள் யாருடைய மனைவியுமல்ல. குடும்பப் பெண்களுமல்ல.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

மலை

மலை

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel