Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

அனுபவம் பலவிதம் - Page 3

rasikkathane azhagu-anupavam-palavitham

திருமணமான ஒரு பெண், கர்ப்பமாகி இருக்கும் பொழுது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆண் குழந்தையாக அல்லது பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், கனவு காண்பதும் பெண்மையின் பூர்ணத்துவமான தாய்மை அனுபவம். தன் மனதில் எண்ணியபடி பெண் குழந்தை பிறக்காமல் ஆண் குழந்தையாக பிறந்துவிட்டால் ஏற்படுவது ஏமாற்றமான அனுபவம். எதிர்பார்த்தபடியே அவளுக்கு விருப்பமான குழந்தை பிறக்கும் பொழுது அடையும் இன்பம், பேரின்பமான அனுபவம்.

பொது இடங்களில் வழி தவறி போய்விட்ட குழந்தையைக் காணாமல் தாய் தவிக்கும் அனுபவம். குழந்தை கிடைத்துவிட்டால் அவனை உச்சி முகர்ந்து, வாரி அணைக்கும் வாஞ்சையான அனுபவம். சில தாய் அல்லது தகப்பன், குழந்தை கிடைத்த பிறகு 'எங்கேடா போய்த் தொலைஞ்சே... என் கையை பிடிச்சுக்கோன்னு எத்தனை தடவை சொன்னேன்?' என்று குழந்தையை முதுகில் மொத்து மொத்தென்னு மொத்தும் கோபமான அனுபவமும் ஏற்படும்.

குடும்பத்தில் யாருக்கேனும் குழந்தை பிறந்தால், குதூகலிக்கும் அனுபவம்! துரதிஷ்டவசமாக குழந்தை இறந்துவிட்டால், கதறி அழும் அனுபவம்.

மாமியார் மெச்சும் மருமகளாக பெயர் எடுக்கும் பொழுது மகிழ்ச்சியான அனுபவம். மாமியாரின் ஏச்சுக்களாலும், ஏடாகூட மான பேச்சுக்களாலும், துன்புறுத்தும் நடவடிக்கைகளாலும் உள்ளம் நொறுங்கும்பொழுது ஏற்படுவது வேதனையான அனுபவம்.

ஒரு கண்ணில் வெண்ணைய்யையும் மறு கண்ணில் சுண்ணாம்பையும் வைப்பது போன்று, தாங்கள் பெற்று வளர்த்த பிள்ளைகளிடத்திலேயே ஒரு பிள்ளைக்கு சிறப்பாகவும், இன்னொரு பிள்ளைக்கு சுமாராகவும் எல்லா விஷயங்களையும் செய்யும் பொழுது பாதிக்கப்படும் பிள்ளைக்கு ஏக்கமான அனுபவம். பெற்றோர்கள் மட்டுமின்றி, மாமியார் - மாமனார் தங்கள் வீட்டில் வாழ வந்துள்ள மருமகள்களிடையே பாரபட்சம் காட்டுவது மிக மிக சங்கடமான அனுபவம்.

விமானமோ, ரயிலோ... பயணத்தின்போது, குறிப்பிட்ட நேரத்திற்கு ஊர் போய் சேரவில்லை எனில் வெறுப்பான அனுபவம். பிரயாணத்தின் நடுவழியில் சாப்பிடுவதற்கும். படுத்துக் கொள்வதற்கும் இடமில்லாமல் தவித்து. அதன்பின் ஊர் வந்து சேர்ந்து 'ஐயோ கடவுளே... இந்த மாதிரி அனுபவம் இனி என்னிக்குமே கிடைக்கக் கூடாது' என்று புலம்பும் அனுபவம்.

கடுமையான வெய்யில் அடிக்கும்பொழுது, அந்த உஷ்ணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் வியர்வையில் நனைந்து துன்பப்படும் அனுபவம். பலத்த மழை பெய்தால்... வெளியில் போக இயலாமல், அலுவல்கள் தடைபடும் பொழுது 'இந்த மழை நின்னு தொலையக் கூடாதா' என்று மழைக்கு சாபமிடும் அனுபவம்.

பேனா, க்ரெடிட் கார்ட், ரேஷன் கார்ட்... இது போன்ற முக்கியமான பொருட்களை எங்காவது வைத்து விட்டு, அதைத் தேடும் பொழுது தவியாய் தவிக்கும் அனுபவம். அப்பொருட்கள் கையில் கிடைத்துவிட்டால் 'அப்பாடா... கிடைச்சுடுச்சு' என்கிற நிம்மதியான அனுபவம்.

பத்திரிகைகளுக்காக கதை எழுதி அனுப்பி, அது பிரசுரமாகும் போது பரபரப்பான சந்தோஷம் தரும் அனுபவம். பிரசுரத்திற்கு தகுதி இல்லை என்று கதைகள் திரும்பி வரும்பொழுது ஏமாற்றத்தை அளிக்கும் அனுபவம்.

இது போலவே... திரைப்படத்தில் கதாசிரியராக, வசனகர்த்தா வாக, இயக்குநராக, நடிகர், நடிகையராக வருவதற்கு முயற்சி செய்யும் பொழுது, ஏற்றுக் கொள்ளப்பட்டால் குதியாட்டம் போடும் கொண்டாட்டமான அனுபவம். நிராகரிக்கப்பட்டுவிட்டால் ஆசை, நிராசையாகிப் போன அனுபவம்.

திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்கள் ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் பொழுது ஏகப்பட்ட நம்பிக்கைகளோடு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். 'தங்கள் படம் நிச்சயம் வெற்றி அடையும், நூறு நாள் ஓடும், வசூலில் சாதனை படைக்கும்' என்ற நம்பிக்கையோடு மிகுந்த சிரமப்பட்டு படத்தை வெளியிடுவார்கள். எதிர்பார்த்தபடி படம் வெற்றி பெற்றால் ஜெயித்துவிட்ட அனுபவம். ஆனால் படம் தோல்வி அடைந்து நஷ்டத்தைத் தழுவினால்... மனம் துவண்டு விடும் அனுபவம்.

நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் 'இந்தப் படம் எனக்கு ஒரு 'ப்ரேக் கொடுக்கும், மறுவாழ்வு அளிக்கும் என்ற மனக் கோட்டையில் காத்திருப்பது நம்பிக்கை நிறைந்த அனுபவம். அந்த மனக்கோட்டை, மண்கோட்டையாக சரிந்து போக நேரிடும்போழுது  'இனி என்ன செய்வது' என்ற தவிப்பில் மனம் கலங்கி, மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றால் அவதிப்படும் அனுபவம்.

'அனுபவம் புதுமை... அவனிடம் கண்டேன்...' காதலனை நினைத்து, காதல் கீதம் பாடும் கதாநாயகி, அந்த ஏக்கமான அனுபவத்தை என்னமாய், திரைப்படத்தில் பிரதிபலிக்கிறார்?!

'அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனசிலே அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவி... அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவி...  நாம் காணும் உலகம் கையில் வராத வாலிபம் எதற்காக?.. ' என்று அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் ஒரு திரைப்படத்தில் பாடி இருந்தார். இந்த 'அனுபவம்' எனும் வார்த்தையையும் உணர்வையும் திரைப்பட பிரிவினர் கூட விட்டு வைக்கவில்லை. அந்தப் பாடல் வரிகளைப் போல் உலகிலுள்ள அழகை அனுபவித்து, மனசிலுள்ள ஆசைகளை அனுபவித்து வாழும் மனிதர்கள் உள்ளனர். இவர்கள் 'எப்படி வேண்டுமானாலும் வாழலாம்' என்று மனம் போன போக்கில் வாழும் ரகத்தை சேர்ந்தவர்கள். அளவுடன் ரஸித்து, நெறிமுறை தவறாமல் அடக்கமான மனதுடன் அழகை அனுபவிப்பவர்களும் உள்ளனர். இவர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நேர்மையான கொள்கை உடையவர்கள்.

பிரபல நடிகரான ஒருவர், ஒரு நடிகையுடன் காதல் புரிந்து, அவளை திருமணம் செய்து கொள்வதாக கண்டபடி வாக்குறுதி களை அள்ளி வீசுவார். ஆனால் அவர் திடீரென 'அந்தர் பல்ட்டி அடித்து, 'நட்பு ரீதியாக மட்டுமே பழகினேன் என்று 'ரீல் விடும் பொழுது அந்த நடிகைக்கு 'கிளிசரின் போடமலே வரும் அழுகை ஓர் அவலமான அனுபவம். பொழுது போக்கிற்காக (டைம் பாஸ்) மட்டுமே தன்னுடன் காதல் என்ற பெயரில் ஊர் சுற்றினார் என்ற உண்மையை அறிந்து கொள்ளும் பொழுது ஏற்படுவது கசப்பான அனுபவம்.

உண்மையாகவே காதலித்து, அந்த நடிகையையே ஊரறிய திருமணம் செய்து, அதன் பின்னரும் மனம் மாறாமல் ஒன்றுபட்டு வாழும் திரை உலக தம்பதிகளின் அனுபவம் திகட்டாத தேன் போன்ற இனிமையான அனுபவம்.

புதிதாக ஒரு தொழிலை துவங்கும் பொழுது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் அத்தொழிலைத் தொடங்குபவர், அது தொடர்பான விரிவான விஷயங்களைக் கேட்டு அறிவது ஆர்வம் நிறைந்த அனுபவம்.

'என்னுடைய இந்தத் தொழில் ஜெயிக்கும். எனது நிறுவனம் தயாரிக்கும் இந்தப் பொருள், மக்களிடையே நல்லதொரு இடத்தைப் பிடிக்கும்' என்று உறுதி பூண்டு செயல்படுவது நம்பிக்கை அளிக்கும் அனுபவம். நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு எதிர்பாராதவை நடைபெறும் பொழுது, கிடைக்கும் அனுபவம், சோர்வு மிகுந்த அனுபவமாகும்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version