Lekha Books

A+ A A-

அனுபவம் பலவிதம் - Page 5

rasikkathane azhagu-anupavam-palavitham

'ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தால் முதுமை காலத்தில் மேலும் உடல் நலிவுறுவார்கள். எல்லா பிள்ளைகளும் இவ்விதம் நடந்து கொள்வது இல்லை. தங்களது இன்றைய உயர்ந்த நிலைக்கு பெற்றோரின் அன்பும், அயராத உழைப்பும், அக்கறையும் மட்டுமே காரணம் என்று உணரக் கூடிய பிள்ளைகளும் உள்ளனர்.

'என் அப்பாவிடமிருந்து நான் இதைக் கற்றுக் கொண்டேன். அவர் வழி காட்டிய பாதையில் சென்றபடியால்தான் நான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன்..., 'என் அம்மாவிடமிருந்து எனக்குக் கிடைத்த பாடங்கள் மூலமாகத்தான் நான் பல்வேறு துறையிலும் திறமை மிக்கவளாக உருவாகியுள்ளேன் என்று அம்மா... அப்பா புகழ் பாடுவது மட்டுமல்ல... அவர்களின் முதுமைக் காலத்தில் அவர்களை பேணிக் காப்பது, அவர்கள் விரும்பியவற்றை அளிப்பது போன்ற சேவைகளை செய்து வரும் பிள்ளைகளும் ஏராளமாக உள்ளனர். பெற்றோருக்கு, 'பிள்ளைகள் தங்களை கவனித்துக் கொள்கின்றனர். தங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர்' என்ற சந்தோஷம் தரும் அனுபவம் அதி அற்புதமானது.

'சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி...' பெற்று வளர்த்த பிள்ளைகள் தன்னை விலக்கி வைக்கும்பொழுது தள்ளாத வயதிலுள்ள தகப்பனுக்கு  தாங்கொணாத் துயரமளிக்கும் அனுபவம்.  அதே தகப்பன், தன் நிலை தடுமாறாமல் 'யாரை நம்பி நான் பிறந்தேன்? போங்கடா போங்க' என்று தைரியமாக வாழும் அனுபவம், வைராக்கியமான அனுபவமாகும்.

தேசத்தின் பாதுகாப்பிற்காக தன் உயிரை நீத்தான் மகன் என்ற செய்தி கேட்ட தாய், அவனது உயிர்த் தியாகத்தால் உவகை கொள்கிறாள். தன் வயிற்றில் தோன்றிய மகன், 'பாரதத் தாயின் பாதுகாப்பிற்காக உயிர் உள்ள வரை உழைத்தான் என்கிற எண்ணம் தரும் அனுபவம் பெருமிதமானது. மகனை இழந்துவிட்ட துயரம் இதயத்தில் வியாபித்திருந்தாலும் அவனது தியாகம் அவளுள் ஒரு தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் புனிதமான அனுபவமாகும்.

கோயில் திருப்பணிக்கு அல்லது சேவா ஆஸ்ரமங்கள் அமைத்து நடத்துவதற்காக நன்கொடை கேட்பதற்காக பலரிடம் போகிறார்கள் நல்ல மனம் படைத்தவர்கள். நன்கொடை கேட்பவர்களுக்கு எல்லா இடங்களிலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் மரியாதை கிடைப்ப தில்லை.

'நன்கொடை' என்ற பெயரில் பணத்தை வாங்கி இவன் அல்லது இவள் என்ன செய்கிறாறோ' என்று சந்தேகப்பட்டு அவமரியாதை யாகப் பேசி திருப்பி அனுப்பப்படும் பொழுது ஏற்படும் அவமான உணர்வு, தனி ஒரு மனிதப் பிறவியின் தன்மானத்தை சுண்டி இழுக்கும் அவஸ்தையான அனுபவமாகும்.

அந்த அவமானத்தைக் கூட வெகுமானமாகக் கருதி, வேற்றிடம் நாடி பலரிடம் நன்கொடை கேட்டு சேவை செய்யும் பொழுது கிடைக்கும் சேவை மனப்பான்மை அடங்கிய அனுபவம் அலாதியானது.

'தாழ்ந்தாலும் ஏசும், வாழ்ந்தாலும் ஏசும்... வையகம் இதுதானடா என்று கவிஞர் பாடினார். வாழ்வையும், தாழ்வையும் சமநோக்குப் பார்வை பார்க்கும் மனிதர்கள் மிக சொற்பமே. ஆனால் வாழ்வை பெரிதாக நினைக்கும் இயல்பு உடையவர்கள், தாழ்வை ஒரு பொருட்டாக கருதாமல் நல்வழியில் வாழ்வின் பயணத்தை மேற்கொள்ளும் பொழுது அந்த அனுபவம், நிலவு போன்ற குளுமையை அளிக்கும் இனிமையான அனுபவம்.

இளகிய மனம் கொண்டவர்களை புரிந்த கொள்ளாமல் அவர்களை இளிச்சவாயர்களாக நினைத்து உதாசீனம் செய்யும் துர்க்குணம் கொண்டவர்களின் தீய குணத்தினால் புண்படும் அனுபவம் பரிதாபத்திற்குரியது. அதே சமயம், கல்நெஞ்சம் கொண்ட சிலரது உள்நோக்கை அறியாமல் அவர்களது செயற்கையான பேச்சை உண்மை என நம்பி ஏமாந்து போவது கண்ணை மூடிக் கொண்டு கிணற்றில் விழும் அனுபவத்தைப் போன்றது.

கூடவே இருந்து குழி பறிக்கும் உறவினர்கள், நண்பர்களாய் நடிக்கும் மனிதர்கள் ஆகியோரால் நாம் சேதம் அடையும் பொழுது 'யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்... பூமியில் யாவும் வஞ்சம்... என்று பாடத் தோன்றுவது வாழ்வில் சலிப்படைய செய்யும் அனுபவம்.

எதுவுமே தெரியாத போதும், எல்லாம் தெரிந்தது போல் பேசி, சுய பெருமையை சதாசர்வமும் பறை சாற்றிக் கொண்டிருப்பவர் களின் மனப்பான்மை, அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பரிகாசமாய் சிரிக்க வைக்கும் அனுபவமாகும்.

உண்மையிலேயே எதுவும் தெரியாதவர்கள், நம்மிடம் வந்து வெளிப்படையாக அதை ஒப்புக் கொண்டு நம்மிடம் கேட்கும் பொழுது அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோமே, அப்போது நம் மனதிற்கு கிடைக்கும் அனுபவம் உள்ளத்திற்கு நிறைவு அளிக்கும் அனுபவம்.

உறவினர்களானாலும் சரி, சிநேகிதர்கள், சிநேகதிகள் ஆனாலும் சரி, அண்ணன் தம்பி, அக்கா தங்கை என்றாலும் சரி, கணவன், மனைவி உறவு என்றாலும் சரி... ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில் ஏற்படும் அமைதியான அனுபவம் போல வேறு எதுவும் கிடையாது.

'இது எனக்குத்தான்... இதை நான் தரமாட்டேன், இந்த வாய்ப்பை நான் உனக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று விடாப்பிடியாக முரண்டு பிடிக்கும் பொழுது, அங்கே மனித நேயம் சிதிலம் அடைகிறது. இது குறித்த அனுபவம் உள்ளத்தில் உறுத்தும் அனுபவமாக மட்டுமல்ல... உறவுகளே அற்றுப் போகும் நிலைமையை உருவாக்கி அந்த நிலைமையில் நாம் அவதிப்படும் அனுபவமும் நேரிடுகிறது.

தேவையற்ற முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படுத்தும் கஷ்டமான அனுபவங்கள் இதயத்தில் இன்னலை உருவாக்கும் அனுபவங்கள். பொறாமை, புறங்கூறுதல், பிறரது முகத்திற்கு முன் ஒன்று பேசுவது, முதுகுகிற்கு பின் வேறு பேசுவது, கடுமையான வார்த்தைகளைக் கொட்டுவது, இழிவாக பேசுவது, நிந்தனை செய்வது, தவறாக புரிந்து கொண்டு வீணாக வாதாடுவது போன்ற தீய செயல்கள், மனிதர்களின் மனதை நோகடிக்கும் அனுபவங்களை அள்ளித் தருகிறது.

நல்ல புத்தகங்களைப் படிக்கும் பழக்கம், பற்பல உயர்ந்த விஷயங்களை புரிந்து கொள்ளும் அனுபவத்தை அளிக்கிறது.

நல்லவர்களையும், நல்ல விஷயங்களையும் பாராட்டும் பெருந்தன்மையான பண்பு, பாராட்டு பெறுபவர்களுக்கு மேலும் மேலும் ஊக்கத்தை அளிக்கும். இது அவர்களுக்கு வளர்ச்சியை நோக்கி நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும். அப்போது அவர்கள் அடையும் அனுபவம், மிகுந்த ஆனந்தத்தை அளிக்கக் கூடிய அனுபவமாகும்.

பிறருக்கு உதவி செய்யும் பொழுது ஏற்படும் அனுபவம் தன்நிறைவை அளிக்கிறது. 'நீ என்ன எனக்கு உதவுவது... நான் கேட்டேனா?...  என்று ஆணவமாக பேசி, நம் உதவிகள் நிராகரிக்கப்படும் பொழுது அத்தகைய அனுபவம், உள்மனதை ஊடுருவித் தாக்கும் அனுபவமாகும்.

நினைப்பதெல்லாம் நிறைவேறி, நிம்மதியான வாழ்வு கிடைத்தால் மகிழ்ச்சியான அனுபவம். நினைத்ததற்கு நேர்மாறக, அனைத்துமே நடந்தால் 'போதுமடா சாமி' என்று அலுத்துக் கொள்ளும் அனுபவம்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel