Lekha Books

A+ A A-

அனுபவம் பலவிதம் - Page 2

rasikkathane azhagu-anupavam-palavitham

ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆண் அல்லது பெண் இருவரும் தங்கள் மாணவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, கல்வியை அளிக்கும் பொழுது அவர்களின் சேவை உணர்வு ஒரு உன்னத அனுபவம். இதற்காக அவர்களுக்கு 'நல்லாசிரியர் விருது கிடைக்கும் பொழுது அதற்குரிய மகிழ்ச்சியை அனுபவிப்பது சந்தோஷமான அனுபவம்.

அதே சமயம், ஆசிரியர் பணியில் இருக்கும் சிலர், பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆசிரியர் பணிக்குரிய மகத்துவத்தை மறந்து மாணவர்களின் நலன் கருதாமல் சுய நலமாக இருப்பது, தேவையற்ற அனுபவம்.

கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர்க்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் அவமதிப்பதும், பின்னாளில் அதற்குரிய தண்டனையை அனுபவிப்பதும் மாணவர்களின் அனுபவம். காலம் கடந்து தவறை உணரும் அனுபவம்.

மகன் அல்லது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் பொழுது, தான் ஒருவரை அல்லது ஒருத்தியைக் காதலிப்பதாக ஒரு அதிர் வெடிச் செய்தியைக் கூறுவது பெற்றோருக்கு அச்செய்தி அளிக்கும் அதிர்ச்சியான அனுபவம்.

தங்கள் மகள் காதலிக்கும் நபர், சரியான நபர் இல்லை என்று தெரியவரும்பொழுது ஏற்படும் அனுபவம் ஏமாற்றத்திற்குரியது. அவனைப் பற்றிய தகவல்களை மகளிடம் சொல்லி, அவனைத் தவிர்க்கச் சொல்லி அறிவுரை கூறும் பொழுது, அதை அவள் ஏற்றுக் கொண்டு, மனம் மாறினாள் எனும்பொழுது ஏற்படுவது நிம்மதியான அனுபவம்.

அதற்கு மாறாக மகள், அவளது காதலனை கண்மூடித்தனமாக நம்பி 'அவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பொழுது பெற்றோர்க்கு ஏற்படுவது ஒரு கலக்கமான அனுபவம்.

காதலித்தவனையே  கணவனாக அடையும் பெண்ணுக்கு இந்த உலகையே தன் உள்ளங்கைக்குள் அடக்கி விட்ட எல்லையற்ற மகிழ்ச்சி கிடைக்கும் அனுபவம். இது ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படும் அனுபவம்.

காதல் கை கூடாத நிலை ஏற்பட்டுவிட்டால், உயிரைக் கொடுத்து காதலித்து வந்த காதலர்கள், 'உயிரை மாய்த்துக் கொண்டு உலகை விட்டே போய்விடலாமா?!' என்ற மனநிலைக்குத் தள்ளப்படுவது, எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கும் அனுபவம்.

காதலனோடு / காதலியோடு ஊர் சுற்றும்போது உல்லாஸமான அனுபவம். தெரிந்தவர்கள் யாராவது பார்த்து, வீட்டில் சொல்லிவிட்டால், மாட்டிக் கொண்ட அனுபவம்.

'அவளோட அழகை அனுபவிச்சே தீருவேன்' என்று முறையற்ற சபதம் போடுவார்கள் சிலர். 'அவள் அழகானவள், அடக்கமானவள், அன்பானவள்... அவளை முறைப்படி மனைவியாய் அடைய அவளது பெற்றோரிடம் பேசி அனுமதி பெறுவேன்' என்று சிலர் கண்ணியமாக பேசுவார்கள். இது கௌரவமான அணுகுமுறை அனுபவம்.

காதலில் ஓர் அனுபவம். அந்தக் காதல், கல்யாணத்தில் முடிந்தால் கலகலப்பான சந்தோஷ அனுபவம்! அந்தக் கல்யாணம் முறிந்துவிட்டால் கசப்பான அனுபவம். விவாகரத்து பெற்று, அதன் பின் வாழும் வாழ்க்கை கஷ்டமான அனுபவம். கணவனை இழந்த பெண்ணுக்கு துக்க அனுபவம். மறுமணம் புரிந்து கொண்டால்... அது ஒரு அனுபவம். மனைவியை இழந்த ஆணுக்கு, அவன் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், வேதனையான அனுபவம்.

'வரதட்சணை கேட்க மாட்டோம், உங்கள் மகளுக்கு நீங்கள் விருப்பப்பட்டதைக் கொடுங்கள்' என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்லும் பொழுது, பெண்ணைப் பெற்றோருக்கு பணம் புரட்டும் பாரம் இல்லை எனும் நிம்மதியான அனுபவம். ஆனால், அளவிற்கதிகமாக வரதட்சணை கேட்டு நெருக்கும்பொழுது 'ஐய்யோ... இத்தனை பணத்திற்கு என்ன செய்வது? எங்கே போவது?' என்று தூக்கத்தைக் கெடுக்கும் இரவுகளோடு போராடும் அனுபவம்!

தாங்கள் பார்த்து, நிச்சயம் செய்து மகளுக்கு மணம் முடித்தவன் நல்லவன் இல்லை, தப்பானவன் அல்லது ஏற்கனவே திருமணமாகி ஏமாற்றுபவன் எனும் உண்மையைத் தெரிந்துகொள்ளும் பொழுது பெற்றோருக்கு இதயத்தில் இடி இறங்குவது போன்ற அனுபவம்.

மனைவியாக வாழும்போது, பெண்ணுக்கு ஒரு அனுபவம். அவள் தாயான பின் ஏற்படுவது தாய்மை அனுபவம். மாணவனாக இருந்தவன், ஒருத்திக்கு மணவாளனான பின்னர் ஏற்படுவது மகிழ்ச்சியான அனுபவம்.

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வந்த புது மணப்பெண், அங்குள்ளோரை, குறிப்பாக மாமியாரைப் பற்றி ஒரு 'புரிந்துக் கொள்ளுதல்' ஏற்படும் வரை குழப்பமான மனநிலையில் இருக்கும் அனுபவம்.

அலுவலகம் போயிருக்கும் கணவன் திரும்பி வந்து, 'அவர் சாப்பிட்ட பிறகு சாப்பிடலாம்...' அல்லது 'அவருடன் சேர்ந்து சாப்பிடலாம்' என்று அவரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனைவிக்கு, கணவன் ஆபிஸிலிருந்து விரைவாக வந்துவிட்டான் என்றால் வெகு சந்தோஷமான அனுபவம்.

ஆனால், அலுவலகம் முடிந்த பின்னும் நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு கணவன், தாமதமாக வீடு திரும்பினால், காத்திருக்கும் மனைவிக்கு மிக எரிச்சலான அனுபவம்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமாக இன்றி, இறைவன் கெடுத்த வரமாக அமைந்து விட்டால் தன் விதியை நொந்து கொள்ளும் அனுபவம்.

தங்கள் மகன் அல்லது மகள் பெற்றோர் நினைத்தபடி டாக்டருக்கோ வக்கீலுக்கோ படித்தாக வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது பிள்ளைகளுக்கு ஒரு கசப்பான அனுபவம்.

'நான் டாக்டர். ஆகவே நீயும் டாக்டராகத்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி, பிள்ளைகளின் மனதை காயப்படுத்துவது ஓர் ஆதிக்க அனுபவம்.

பிள்ளைகளுடன் மனம் விட்டு பேசி, 'உனக்கு எந்த துறையில் ஈடுபட விருப்பம்? அதற்காக நீ எந்தக் கல்வியை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறாய்? என்று தெளிவாகக் கேட்டு, அவர்களின் ஆசைப்படி அவர்களுக்கு வழிகாட்டியாய் உதவிக்கரம் நீட்டும் பொழுது, பிள்ளைகளுக்கு நம்பிக்கை கிடைக்கும் அனுபவம்.

எனக்குத் தெரிந்த ஒரு பிரபல மருத்துவரின் மகள். ஓவியம் தீட்டுவதில் நிபுணத்துவம் பெற்றவள். மிக்க திறமை கொண்டவள். மகள், ஓவியம் வரைவதில் அதிக ஈடுபாடு கொள்வதைக் கண்ட அந்த மருத்துவர், அவளது மனதை மாற்றி, அவளை மருத்துவத்துறை படிப்பில் ஈடுபடுத்தி, ஓவியம் வரையும் கலையையும், அது குறித்த திறமையையும் அறவே மறக்க வைத்தார். மருத்துவக் கல்வி, அது தொடர்பான உயர் கல்வி, மேலை நாட்டுக் கல்வி... என்று தொடர் சங்கிலியாய் பல வருடங்கள் மருத்துவப்படிப்பை படித்து முடித்த அந்தப் பெண், இப்போது அமெரிக்காவில் மருத்துவராக பணிபுரிந்து, பெருமளவில் சம்பாதித்து வருகிறாள். பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றுவிட்டாலும் ஆத்மார்த்தமான திருப்தி இல்லாமல் இயந்திர கதியான வாழ்முறைக்கு... தான் தள்ளப்பட்டுவிட்டதை நினைத்துப் பார்க்காமல் இருப்பாளா?

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

தங்கம்

தங்கம்

June 14, 2012

அக்கா

அக்கா

November 10, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel