Lekha Books

A+ A A-

மகாசக்தி! - Page 4

rasikkathane azhagu-mahasakthi

தெய்வங்களில் 'லஷ்மி'க்குள் எட்டு லஷ்மிகளும் அடங்கியுள்ள அம்சம் போல பெண்ணாய் பிறந்தவளுக்கும் அத்தனை சக்திகளும் அவள் பிறக்கும் பொழுதே அவள் கூடவே பிறந்து விடுகின்றன. அவளது அந்த சக்திகளையும், அந்த சக்திகள் அளிக்கும் ஆற்றலையும் தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதும், பின்னர் அவளை அவமதித்து, அவதூறாகப் பேசுவதும் மனித தர்மம் இல்லை.  பெண் என்பவள் அடங்கி இருந்தால் குளிர்நிலவு. பொங்கி எழுந்தால் எரிமலை. அவளை அன்பால் அடக்காமல் அனாவசியமான ஆளுமை நோக்கத்தால் அடக்கி ஆள நினைக்கக்கூடாது. அடக்கி ஆள்பவன் ஆண். அடங்கி வாழ்பவள் பெண் எனும் ஆணாதிக்க மனோபாவம் மாற வேண்டும். சமையலறை முதல் விண்வெளி வரை பெண்கள், வீரத்தின் விளிம்பிற்கு வந்து விட்டவர்கள் என்றாலும் இவர்களுக்குரிய மதிப்பும், மரியாதையும் போதுமானதாக இல்லை.  ஆண் என்பவன் 'தான் ஒரு ஆண்' என்ற மமதை கொள்ளக் கூடாது. பெண் என்பவள் 'தானும் சம்பாதிக்கிறோம்' என்ற சுயபிரதாபம் கொள்ளக்கூடாது.    ஆண்-பெண் இருவரும் சரிநிகர் சமம். உருவத்தால் மாறுபட்டிருக்கும் இருபாலரும் உள்ளத்தாலும், உணர்வாலும் ஒன்றுபட்டிருக்க வேண்டும். முன்னாளில், ஆணுக்கு பணம் சம்பாதித்து, குடும்பத்தைக் காப்பாற்றும் அதிகப்படியான கடமை இருந்தது. ஆனால் மாறிவிட்ட இன்னாளில் பெண்ணும் சேர்ந்து அந்தக் கடமைகளில் பங்கு கொள்கிறாள். பாடுபடுகிறாள்.

வாழ்க்கை நல ரீதியாக உள்ள பிரச்சனைகள் போக, உடல்ரீதியாக பெண்ணுக்கு ஆணை விட மிக அதிகமான பிரச்சனைகள். பதினோரு வயதில் இருந்து பதினாறு வயதிற்குள் பருவம் அடையும் உடல்ரீதியான மாறுதலை அனுபவிப்பவள் பெண். அதைத் தொடர்ந்து, மாதா மாதம் ஏற்படும் உபாதைகளும் அவளுக்கு. திருமணமானபின் கணவனுடன் வாழ்ந்த இல்லற வாழ்க்கைக்கு அடையாளமாய் குழந்தையைத் தன் கருப்பையில் சுமப்பதும் பெண். குழந்தை உண்டான நாளில் இருந்து அதைப் பெற்றெடுக்கும் வரை, பத்து மாதங்கள் அவள் படும் கஷ்டங்கள் சொல்லில் விவரிக்க முடியாதவை.

குழந்தையைப் பெற்றெடுப்பதற்குள் அனுபவிக்கும் பிரசவ வேதனையும் அவளுக்கு. குழந்தை வளர்ப்பின் பெரும் பங்கும் அவளுக்கு. ரத்தத்தைப் பாலாக்கிக் கொடுக்கும் அவள்தான் தன் குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் உயிர் மூச்சாய் உழைக்கிறாள். பிள்ளைகள் வளர்ந்து அவர்களுக்கென்று ஓர் குடும்பக்கூடு உருவாகிடும் காலக் கட்டத்தில் சொல்லாமல் கொள்ளாமல் எட்டிப் பார்க்கும் முதுமை! இச்சமயத்தில் ஏற்படும் Post Menopausal Syndrome எனப்படும் உடல்ரீதியான மாற்றம் அளிக்கும் தொந்தரவுகள் மிக அதிகம். இதை அனுபவிப்பவளும் பெண். அதாவது மாதவிலக்கு நிற்கும் சமயம் ஒரு பெண்ணுக்கு உடல்ரீதியாக மட்டுமல்லாமல் மனோரீதியாகவும் ஏகப்பட்ட பாதிப்புகள்.

இதை அவள் வெளிப்படையாக குடும்பத்தினரிடம் சொல்வ தில்லை. சொன்னாலும் அனைத்து குடும்பங்களிலும் புரிந்து கொள்வதும் இல்லை. ஒரு குழந்தைக்குப் பிறகு அல்லது இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு குழந்தை வேண்டாம் என்று கர்ப்பத்தடை ஆப்ரேஷன் செய்து கொள்வதும் பெரும்பாலும் பெண்கள்தான். இத்தனை சிரமங்களையும் சிரமமாக எண்ணாமல், சிறகுகளால் பாதுகாக்கும் பறவை இனம் போல் தன் குடும்ப நலன் ஒன்றே போதும் என எண்ணி வாழும் பெண் இனம் போற்றுதலுக் குரியவர்கள் மட்டுமல்ல வணக்குத்துக்குரியவர்கள்.

'உனக்கு நான் இதைச் செய்கிறேன்; செய்தேன். எனக்கென்ன நீ தருவாய்?' என்று எதிர்பார்ப்புகள் இல்லாத சேவை செய்பவள் பெண். கணவன் ஆசைப்பட்ட பொருள் அவருக்குக் கிடைத்து விட வேண்டும். மகன்/ மகள் வாய் திறந்து 'அது எனக்கு வேணும்' என்று எதையாவது கேட்டு விட்டால் அதை எப்பாடுபட்டாவது பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்ற துடிப்பு உள்ளவள் பெண். ஒரு குழந்தை பெற்று, தாய் ஆனால்தான் அவள் சக்தி கொண்டவள், தியாகம் செய்பவள் என்பது அல்ல. ஒரு பெண் என்ற நிலை போதும். அவள்  தாயாகாமலே, தான் பெறாத பிள்ளைகளுக்குக் கூட தாய் ஆக முடியும். தொப்புள் கொடி உறவு இல்லாமலே தாய்க்கு ஈடான அன்பை அள்ளித் தர முடியும். அதுதான் மகாசக்தி!

மரப்பாச்சி பொம்மை வைத்து விளையாடும் மூன்று வயது பெண் குழந்தைக்கு அந்த வயதிலேயே தாய்மை இயல்பு தோன்றி விடுவதைப் பார்க்கிறோம். பொம்மைக்கு பால் ஊட்டுவது, பழைய துணியில் தொட்டில் கட்டி தூங்க வைப்பது போன்ற செயல்கள் குழந்தைப் பருவத்தில் கூட அவளுக்குள் பொதிந்துள்ள தாய்மை உணர்வுகளாகும். 'எனக்கென்று எதற்காகவும் ஏங்கவில்லை; எல்லாமே உங்களுக்குத்தான்' என்று குடும்பத்திற்காக உருகுவது பெண். தன்நலம் நாடாமல், பிறர் நலம் நாடுபவள் பெண்.

அன்னை தெரஸா ஊர் மக்களுக்காக தொண்டு ஆற்றி, பெண்குலத்திற்கு முன்னுதாரணமாய் திகழ்ந்த தியாகச் சுடர். அன்னை சாரதாதேவி அன்பே உருவாய் வாழ்ந்து, அன்புதான் தெய்வம் என்று உலகிற்கு உணர்த்தியவர். பாண்டிச்சேரி அன்னை, தன் அன்பர்களுக்காக எத்தனையோ யோகங்களைக் கடை பிடித்தவர். பூச்செடிகளுக்கும், மரங்களுக்கும் கூட எவ்வித தீங்கும் செய்யக்கூடாது என்று போதித்தவர். இவர்கள் பெண் குலத்திற்கும், பெண்மைக்கும் பெருமை சேர்த்தவர்கள்.

ஈட்டி முனையால் சாதிக்க முடியாததைக்கூட, தனது மனதின் கனிவாலும், இனிய நேயத்தாலும், அன்பு மொழியாலும் சாதித்து விடுகிறாள் பெண். பெண் என்பவள் தன் குடும்ப நலன் கருதி ஒரு முடிவுக்கு வந்து விட்டால் இந்த உலகமே அவளை எதுவும் செய்ய முடியாது. மாற்ற முடியாது. தோல்விகளைத் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தி உள்ளவள் பெண். சோதனைகளையும், வேதனை களையும் சகித்துக் கொள்பவள் பெண். மேற்கூறிய இந்த இரு அருங்குணங்களில்தான் பெண்ணின் பெண்மை அடங்கியுள்ளது.

தானே முளைத்து, தானே தனக்குத் தேவையான தண்ணீரைப் பெற்று, தானே வளர்ந்து, தன்னையே வழங்கும் பனை மரம் போல, தன்னலம் அற்றவள் பெண். தன்னுடைய நல்வாழ்வை இழந்து தவிக்கும் பெண் கூட, இன்னொரு பெண் அதே நிலைமையில் கண்ணீர் வடிக்கும் பொழுது அந்தப் பெண்ணின் துக்கத்தில் பங்கு கொள்கிறாள். அவள் மீது பரிதாபப்படுகிறாள். பெண்ணின் மனது அத்தனை இளகியது. கணவனை சார்ந்து வாழும் பெண், அவனை இழக்க நேரிட்டாலும் சோர்ந்து போகாமல் தன் மனதிற்குள் வலிமையை வலிந்து உருவாக்கிக் கொள்கிறாள். தன் சோகங் களை, சுகமாக மாற்றிக் கொள்ள, கணவன் விட்டுச் சென்ற சுமைகளை மனம் உவந்து ஏற்றுக் கொள்கிறாள். எதற்கெடுத் தாலும் தன் கணவனையே கேட்டுச் செய்து, ஒவ்வொரு விஷயத்திற்கும் அவனது துணையை நாடி வாழ்ந்த அவளுக்கு, ஒரு யானை பலம் உருவாகிவிடுவது மிக விந்தைக்குரியது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel