Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

மகாசக்தி!

rasikkathane azhagu-mahasakthi

பெண் மென்மையானவள். அவள் தன் அன்பை மிக  மென்மையான வழிகளில் வெளிப்படுத்துவாள். சாந்தமாகப் பேசுபவள் பெண். எந்த விஷயத்தையும் எடுத்த எடுப்பிலேயே கண்டிப்பாக பேசாமல், தன்மையாகப் பேசும் பழக்கமும், இயல்பும் உடையவள் பெண். இந்தக் காரணங்களால் அவள் வலிமை யற்றவள், பலம் குறைந்தவள் என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த மதிப்பீடு சரியல்ல.  தனக்கு ஒரு பிரச்சனை, கஷ்டம், தேவை என்று வரும்போது அவற்றை எதிர்கொள்வதற்கு அவள் விஸ்வரூபம் எடுக்கிறாள். விண்ணை எட்டும் வெற்றியையும் அடைகிறாள்.

சட்டென்று  மனம் உடைந்து, மடை திறந்த வெள்ளம் போல் அழுதுவிடும் குணம் கொண்டவள் பெண். ஆனால் அதே பெண், தன் கண்ணீரை சுண்டி எறிந்து விட்டு எழுந்தாள் என்றால் அவளுக்குள் பிறக்கும் வீரமும், தைர்யமும் கணக்கிலடங்காதவை!

கண்ணீர் சிந்துபவளும் பெண்! தன்நிலை சிந்தித்து செயல்படுபவளும் பெண். பெற்ற மகள் கூட, தன் தகப்பனின் முதுமைப் பருவத்தில் அவனுக்குத் தாயுமானவளாகி அவனைத் தாங்கிக் கொள்கிறாள். "என்னைப் பெத்த அம்மா" என்று தன் மகளை தாயாகப் போற்றும் தகப்பன்கள் இருக்கிறார்கள். பெண்கள், முதலில் உணர்வு பூர்வமாக சிந்திப்பவர்கள். அதன் பின்னரே அறிவு பூர்வமாக சிந்திப்பார்கள். அதனால்தான் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு விடுகின்றனர்.

அன்பால் மட்டுமே  தன் குடும்பத்தையும், உறவுகளையும், நட்பையும் ஆள நினைப்பவள் பெண். வம்புகளையும், வழக்குகளையும் மிக தூரத்தில் தள்ளி வைத்து சுமுகத்தையும், சுபிட்சத்தையும் வரவேற்பவள் பெண். விதிவசத்தால் கயவனான கணவன் அமைந்து விட்டால், அவனைத் திருத்துவதற்காக அன்பான வழிகளைப் பின்பற்றி, பொறுமை எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துவாள். அறிவுரைகள் கூறுவாள். அவனை நல்லவனாக்குவதில் அவள் வல்லவளாகத் திகழ்வாள்.

அப்பாவின் கண்டிப்பும், கடுமையான மொழிகளும் ஒரு தவறான பாதையில் செல்லும் மகனைத் திருத்துவதை விட, அம்மாவின் மென்மையான பேச்சும், கெஞ்சிப் பேசும் தன்மையும் விரைவில் திருத்தும். சொல் அம்புகளை விட செல்லமான அன்பு மொழிகளை நம்புபவள் பெண்.

முன் ஒரு கால கட்டத்தில், குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொண்டு, குடும்பமே தன் உயிராக, உலகமாக மதித்து, அந்தக் கோட்டையில் பாசம் எனும் செங்கோலால் செம்மையாக குடும்பம் நடத்தி வந்தாள் பெண். அதைத் தவிர அவளுக்கு வேறு உலகமே தெரியாது. தன் கணவன் கொண்டு வரும் பணத்தில் கட்டும், செட்டுமாய் கெட்டிக்காரியாக குடும்ப செலவுகளை பார்த்துக் கொள்வாள். தன்னுடைய உழைப்பையும், புத்திசாலித்தனத்தையும் தன் கணவன் மற்றும் குழந்தைகளுக்காகப் பயன்படுத்தி குடும்பத்தை மேம்படுத்துவாள். உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. எனவே அதிக எடை போட்டுவிடாமல் அளவான எடையுடன் ஆரோக்கியமாக இருந்தாள்.

கூட்டுக் குடும்பம் நடத்தும் சூழ்நிலையில், கணவனை சேர்ந்தவர்களுக்கும் சேவை செய்து, உதவி செய்து வந்தாள். வீட்டை மட்டுமே கவனிக்க வேண்டியதால் அன்றைய பெண்மணிக்கு அளவான வேலைகள், தேவைப்பட்ட ஒய்வு, மன அமைதி அனைத்தும் கிடைத்தன. கணவன், அலுவலகத்திலிருந்து திரும்பி வரும் முன்பு அவனுக்குப் பிடித்ததை சமைத்து வைத்து, குழந்தைகளுக்குத் தேவையானதையும் செய்து வைத்து தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு, கணவனுக்காகக் காத்திருப்பாள். அந்த காத்திருத்தலே ஒரு சுகமாக உணர்ந்து அகமும், முகமும் மலர காத்திருப்பாள். கூட்டுக் குடித்தனமோ தனிக் குடித்தனமோ பெண்களின் அன்றைய நிலைமையில் அனைத்து விஷயங்களுமே திறம்பட இருந்தன.

ஆனால், அன்றைய நிலைமை மாறி, இன்றைய நிலைமையில்? பெண்தான் எத்தனை பாடு பட வேண்டியுள்ளது? பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகு அவர்களின் வாழ்நிலையே முற்றிலும் மாறிவிட்ட சூழ்நிலை ஆகிவிட்டதே!

காலையில் எழுந்து காலை உணவு சமைத்து, மதிய உணவை தனக்கும், தன் கணவன், பிள்ளைகளுக்கும் சமைத்து டப்பாவில் அடைத்து வைக்க வேண்டிய பணியை முடிப்பதற்குள் எத்தனை சிரமம்? ஒரு நாளாவது காலை காபியை நிதானமாக ரஸித்து, ருசித்து குடித்திருப்பாளா?

ஒரு பிள்ளை யூனிஃபார்ம் கேட்டு குரல் கொடுக்கும். இன்னொரு பிள்ளை ஸாக்ஸ் கேட்டு குரல் கொடுக்கும்.... கணவனோ அது எங்கே? இது எங்கே என்று கேட்டு குரல் கொடுப்பான். சமையலில் ஈடுபட்டிருந்தாலும் இதையெல்லாம் தனி ஒரு ஆளாய் சமாளிப்பாள். அவள் அந்த வேலை, இந்த வேலை என்று பறந்து பறந்து செய்ய, நேரமோ அவளை விட வேகமாய் இறக்கை கட்டிப் பறக்கும்.

அனைவரையும் அனுப்பிவிட்டு அவள் தனது அலுவலகம் புறப்படும் பொழுதுதான் அவளுக்கு காலை உணவு எதுவும் சாப்பிடாமல் கிளம்பிவிட்ட விஷயம் நினைவிற்கு வரும். 'இரண்டு இட்லியை அவசரமாய் விழுங்கலாமா' என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே வாசலில் 'பைக்'கை கிளப்பியபடியே கணவன் கத்துவான், 'என்ன வர்றியா.... ஆட்டோல போய்க் கிறியா?' என்று.

'ஐய்யோ... ஆட்டோவா? ஆட்டோக்காரரிடம் பேசி முடித்து நான் கிளம்பி ஆபிஸ் போவதற்குள் ஆபிசுக்கு லேட் ஆயிடுமே' என்ற எண்ணத்தில் காலை உணவை சாப்பிடாமலே வாடிய வயிறுடன் ஒடிச் சென்று கணவனின் 'பைக்'கில் ஏறிக் கொள்வாள்.

ஆபிஸிலோ? அந்த வேலை... இந்த... வேலை... என்று ஏகப்பட்ட வேலைகள்! உடல் உழைப்பிற்கு அதிக வாய்ப்புகள் இல்லை எனினும் மூளைக்கு அதிக வேலை. வீட்டில் விட்டு விட்டு வந்த வேலைகள், பிள்ளைகளின்  படிப்பு என்ற நினைவுகளோடு ஆபீஸில் முழு கவனம் செலுத்த வேண்டிய நிலை... இவை எல்லாம் சேர்ந்து மனச்சோர்வு ஏற்பட்டு விடும். மேலதிகாரிகளின் கண்டிப்பும் சேர்ந்து கொள்ள, அலைபாயும் மனத்தோடு அவ்வப்போது நிலை குலைந்து போவாள்.

கவனம் தவறாமல் அலுவலக அலுவல்களை செய்வதற்காக மிகுந்த சிரமப்படுவாள். அத்தனை சிரமங்களுக்கும் சிகரம் வைத்தாற் போன்ற இன்னொரு பெரிய பிரச்சனை, பாலியல் பிரச்சனை! திருமணமான பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள் என்கின்ற பாகுபாடு இல்லாமல் நடைபெறும் இந்த பாலியல் பிரச்சனைகளையும் சமாளித்து அனுதினமும் அணு, அணுவாய் வதை பட்டு வீடு வந்து சேர்வதற்குள் அவள் படும் அவஸ்தை அளவில் அடங்காதவை.

'மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும்' என்று பாடினார் பாரதிதாசன். ஒரு தாரமாக, ஒரு தாயாக மட்டுமே தன்னை உணர்ந்து வாழ வேண்டிய பெண், பொருளாதார பிரச்சனைக்காகவும், பொருள் ஈட்டவேண்டிய நிர்ப்பந்தத்திற்காக வும், தன் வாழ்க்கைக்கே ஒரு பொருள் இல்லாமல், இயந்திர கதியாய் வாழ நேரிடும் அவலம் உள்ள இன்றைய நிலைமையில் 'மங்கையராய் பிறந்திட மகாபாவம் செய்திருக்க வேண்டும்', என்றுதான் தோன்றுகிறது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version