கோலங்ஙள் - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 5426
அந்த கிராமத்தில் ஒரு சிறிய தேநீர் கடை. வேலையற்ற பலரும் அங்கு ‘வெட்டியாக’ உட்கார்ந்து ஊர்க் கதைகளை அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள். அந்த கடையின் சொந்தக்காரர் ஸ்ரீனிவாசன். அந்த பயனற்ற கும்பலின் பிரயோஜனமற்ற உரையாடல்களைக் கேட்டு சீனிவாசனுக்கு எரிச்சல்… எரிச்சலாக வரும். ஆனால், அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். எனினும், அவ்வப்போது தான் மனதில் நினைப்பதை அவர் வெளிப்படையாக கூறவும் செய்வார்.
அந்த கிராமத்தில் எந்தவொரு வேலையுமில்லாமல் ஒவ்வொரு வீட்டின் பின் புறங்களிலும் லுங்கியுடன் அலைந்து கொண்டிருப்பவர் நெடுமுடி வேணு. குடிசைகளின், வீடுகளின் பின்னால் இருக்கும் குளிக்கும் இடங்களில் பெண்கள் யாராவது குளித்துக் கொண்டிருந்தால், அதை ‘தட்டி’யின் ஓட்டை வழியாக பார்த்து ரசிப்பதே அவரின் வேலை. அதனால், அவர் அந்த கிராமத்தின் பல பெண்களிடமும் பிரம்படியும், ‘விளக்குமாற்று’ அடியும் வாங்கியிருக்கிறார். எனினும், சிறிது கூட அவர் திருந்துவதாக இல்லை. யாருக்கும் தெரியாமல், திருட்டுத்தனமாக ஓட்டைகளின் வழியே, குளிக்கும் பெண்களின் உடலைப் பார்த்து குதூகலிக்கும் அவரின் செயல் ஒரு தொடர் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அவர் ஓட்டை வழியாக பெண்களின் உடலைப் பார்க்க, அந்தப் பெண்களுக்கு திருமணம் நிச்சயம் ஆக, அவளின் உடலில் இந்த இடத்தில் மச்சம்… அந்த இடத்தில் மச்சம் என்றெல்லாம் அவர் கூற, திருமணம் செய்ய வந்த ஆண் அவர் கூறியது உண்மைதான் என்பது தெரிந்தவுடன், திருமணமே வேண்டாம் என்று மறுத்து ஓட… இப்படி எத்தனை பெண்களின் திருமணங்கள் நின்று போனதற்கு காரணகர்த்தாவாக இருந்திருக்கிறார் நெடுமுடி வேணு!
கள்ளு வர்க்கி… இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் திலகன். இருபத்து நான்கு மணி நேரமும் கள்ளு கடையில் அமர்ந்து கொண்டு கள்ளு குடித்துக் கொண்டிருப்பவர். எனினும், வசதி இருக்கிறது. அவருக்கு மேனகாவின் மீது ஒரு கண். மேனகா புட்டி பாலுடன் நடந்து செல்லும்போது, அவரையே வாயில் எச்சில் ஒழுக பார்த்துக் கொண்டிருப்பார் திலகன். மனைவியை இழந்து விட்ட திலகன், தன்னுடைய இரண்டாம் தாரமாக ‘சின்ன பொண்ணான’ மேனகாவை அடைந்தே ஆவது என்பதில் வெறியாக இருக்கிறார்.
மேனகாவைப் பெண் கேட்டு அவளின் பெற்றோருக்கு தூது அனுப்புகிறார். அவர்களுக்கு சில கடன் பிரச்னைகள் இருக்கின்றன. அதை முழுமையாக தீர்த்து வைப்பதாக கூறுகிறார் திலகன். கல்லும் கனிய ஆரம்பிக்கிறது. மேனாவின் தாய் ‘திலகனுக்கு மனைவியாக ஆகும்படி தன் மகளை’ கேட்டுக் கொள்கிறாள். ஆனால், தான் மணம் செய்ய விரும்புவது ரிப்பன் வியாபாரியைத்தான் என்று மகள் சொல்ல, கோபத்தின் எல்லைக்கே சென்று விடுகிறாள் தாய். ‘இந்த திருமணத்திற்கு நீ சம்மதிக்கவில்லையென்றால், நான் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து விடுவேன்’ என்று வேகமாக தாய் ஓட, அவளுக்குப் பின்னால் மகள் ஓடுகிறாள். தன் தாயின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, தன் வாழ்க்கையை அவள் பலியிடுகிறாள்.
இந்த விஷயம் தெரிந்து, இடிந்து போன ரிப்பன், பலூன் வியாபாரி வேணு நாகவள்ளி தன்னுடைய குடிசையை நெருப்பிற்கு இரையாக்கிவிட்டு, அந்த ஊரை விட்டே வெளியேறுகிறார்.
கிராமத்து மனிதர்களின் அட்டகாசங்களைக் கேள்வி கேட்ட தேநீர் கடை ஸ்ரீனிவாசனின் தேநீர் கடை, நெடுமுடி வேணுவின் ஆட்களால் அடித்து நொறுக்கப்படுகிறது. அவரும் வேறு வழியே இல்லாமல், வெறும் கையுடன் அந்த கிராமத்தை விட்டு வெளியேறி ஓடுகிறார்.
திலகனுக்கும் மேனகாவிற்கும் திருமணம் நடக்கிறது.
அந்த கிழவன் தன் மென்கரங்களை காமவெறியுடன் பற்றி இருக்க, வெறுப்புடன் அதைச் சகித்துக் கொண்டிருக்கிறாள் மேனகா.
கிழவன் திலகனும் – அரும்பு நிலையில் இருக்கும் மேனகாவும் கணவன்- மனைவி கோலத்தில் படகில் ஏறி அமர, அதை ‘ஒரு காலத்தில்’ மேனகாவை தன் மனதிற்குள் காதலித்த படகோட்டி ஓட்டுகிறான் – வெறுப்புடனும், கசப்புடனும்.
படகில் செல்லும்போது ‘கள்ளு வர்க்கி’ புட்டியிலிருந்த கள்ளைக் குடிக்கிறார். புரை ஏற, சிரிக்கிறார் திலகன். அப்போது அவர் வாயிலிருந்து கள்ளு சிதறி தெறிக்கிறது.
அதை வெறுப்புடன் பார்க்கிறான் படகோட்டி.
படகு அக்கரையை அடைகிறது. ‘கள்ளு’வர்க்கி, தன் இளம் மனைவி மேனகாவுடன் நடந்து செல்ல, வாழ்க்கையின் வினோதத்தையும் விளையாட்டையும், அவலத்தையும் தன் மனதில் நினைத்துக் கொண்டே அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் படகோட்டி.
அத்துடன் படம் முடிவடைகிறது.
ஒரு கிராமத்தையும், அந்த கிராமத்து மனிதர்களையும், பெண்களையும் உயிர்ப்புடன் தன் படத்தில் சித்தரித்திருக்கும் கே.ஜி.ஜார்ஜை மனம் திறந்து பாராட்டலாம்.
படத்தின் இசையமைப்பாளர்: எம்.பி.ஸ்ரீனிவாசன்.
ஒளிப்பதிவு : ராமச்சந்திரபாபு.
மேனகாவின் தாயாக நடித்த ராஜம் கே.நாயருக்கு சிறந்த துணை நடிகைக்கான கேரள அரசாங்கத்தின் விருது கிடைத்தது.
நான் இந்தப் படத்தை திரைக்கு வருவதற்கு முன்பே கே.ஜி.ஜார்ஜ் சென்னையில் ஏற்பாடு செய்திருந்த ‘ஒரு முன் திரையீடு’ நிகழ்ச்சியில் பார்த்து விட்டேன். அந்நிகழ்ச்சிக்கு கே.ஜி.ஜார்ஜ், நடிகர் ஸ்ரீனிவாசன் இருவரும் வந்திருந்தனர்.
இதில் சந்தோஷப்படக் கூடிய விஷயம் - ‘கோலங்ஙள்’ படத்தில் நடித்த கலைஞர்கள் அனைவரும் பின்னர் பிரபலமானவர்களாக ஆகி விட்டார்கள்.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,