Lekha Books

A+ A A-

நீலத்தாமரை - Page 4

neela-thaamarai

ஆர்வத்துடன் அவள் பசுவை அவிழ்த்து விடுகிறாள். பசு ஒன்றுமே பண்ணாமல், சாதுவாக நிற்கிறது. தொழுவத்திற்குப் பின்னால் பசுவை அவள் நடத்திக் கொண்டு போகும்போதே பசுவிடம்-

‘ஆளுங்க உன்னைப் பத்தி சும்மாவா சொல்றாங்க! பிடிக்காதவங்க வந்தா, உன்னோட வேலையைக் காட்டுவே, இல்ல! அப்படித்தான் இருக்கணும்!’

பசுவைத் தோட்டத்தில் கட்டுகிறாள்.

8

கோவில் குளம்.

கல்லால் ஆன படியில் நின்றவாறு கோவணம் கட்டியிருக்கும் இரண்டு மூன்று சிறுவர்கள் தண்ணீரில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

குளித்துக் கொண்டிருக்கும்

ஒரு கிழவி:     டே பசங்களா, இப்படித்தான் தண்ணியைக் கலக்கி விடுறதா? இங்கே பாருங்க... ஒரே சேறா இருக்கு...

கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். குளித்து முடித்து ஈரத்துணியுடன் அம்மிணி குளக்கரையை விட்டு மேலே வருகிறாள். தோளில் ஈரத்துணிகள். கையில் ஒரு பழைய சோப் டப்பா.

வெளியே நின்றவாறு குஞ்ஞிமாளு தொழுது நிற்கிறாள். திரும்பி நடக்க ஆரம்பிக்கும்போது, உள்ளே கடவுளைத் தொழுதுவிட்டு வரும் அம்மிணி அவளை வியப்புடன் பார்க்கிறாள்.

            “பிரசாதம் வேணுமா?”

அவள் வேண்டுமென்றும் சொல்லவில்லை. வேண்டாம் என்றும் சொல்லவில்லை. பதிலுக்கு இலேசாக புன்னகைக்கிறாள்.

அம்மிணி கையில் இருந்த இலையால் ஆன பொட்டலத்தை அவளிடம் நீட்டுகிறாள். குஞ்ஞிமாளு அதில் இருந்த சந்தனத்தைத் தொடுகிறாள். இரண்டு பூக்களை எடுத்து தலையில் வைத்துக் கொள்கிறாள்.

அம்மிணி: நம்பூதிரி எனக்குக் கொஞ்சம் அதிகமா கொடுத்தார்.

அம்மிணி அவளுடன் சேர்ந்து நடக்கிறாள்.

அம்மிணி: நீ ஏன் கோவிலுக்குள்ள வரல?

குஞ்ஞிமாலு:    எனக்கு வேலை நிறைய இருக்கு.

அம்மிணி: உன்னை இதுக்கு முன்னாடி இங்கே நான் பார்த்தது இல்லியே!

குஞ்ஞிமாளு:    நான் நேத்துதான் இங்கே வந்தேன். கிழக்கும் பாட்டெ வீட்டுக்கு.

அம்மிணி: ஓ... அப்படியா? நீ அங்கேதான் தங்கி இருக்கியா?

குஞ்ஞிமாளு ‘ஆமாம்’ என்பது மாதிரி தலையை ஆட்டுகிறாள்.

அவர்கள் இருவரும் ஆலமரத்திற்குக் கீழே வரும்போது கிழவர் வழக்கம்போல தனக்குத்தானே என்னவோ பேசிக் கொண்டிருக்கிறார். அவர் முகத்தில் எப்போதும் இருக்கும் பிரகாசம் இப்போதும் இருக்கிறது.

கிழவர் அவர்களை கவனிக்கவில்லை.

அம்மிணி: முன்னாடியே வந்திருக்கலாம்ல? இன்னைக்குக் காலையில கோவில் குளத்துல பூ பூத்திருந்துச்சு. நேத்து சாயங்காலம் யாரோ படிமேல பணம் வச்சிருந்திருக்காங்க.

குஞ்ஞிமாளு:    இப்பவும் அந்த பூ அங்கே மலர்ந்து இருக்கும்ல!

அம்மிணி: நான் அதைச் சொல்லல. இங்கே இருக்குற கடவுளைப் பத்திய விசேஷமே அதுதான். ஏதாவது காரியம் நடக்கணும்னா அதை மனசுல நினைச்சுக்கிட்டு நாம போயி பணம் வைக்கணும். அது சரியா நடக்குறதா இருந்தா, காலையில கோவில் குளத்துல பூ விரியும். நீலதாமரை... ஒரே ஒரு பூதான் பூக்கும். அந்த மாதிரி பூவை உலகத்துலயே வேற எங்கேயும் பார்க்க முடியாது. குஞ்ஞிமாளுவிற்கு அதைக் கேட்டு நம்பிக்கை வரவில்லை. அவள் முகத்தில் ஆச்சரியம் தெரிகிறது.

அம்மிணி: சோதிக்கலாம்னு பணம் வச்சு பார்த்தா, பூ விரியவே விரியாது - தெரியுமா? இதுக்காக எங்க இருந்தெல்லாம் ஆளுங்க வர்றாங்கன்னு நினைக்கிறே! மத்த கோவில்கள்ல சுத்தி கலசம் வேணும்னா கட்டாயம் இந்த பூ வேணும்.

குஞ்ஞிமாளு:    உன் வீடு எங்கே இருக்கு?

அம்மிணி: நான் ஷாரத்தெயில இருக்கேன்.

எதிரில் வரும் ஒரு பெண் அவர்கள் முன் வந்ததும், அம்மிணியைப் பார்த்து-

“உங்க அக்கா வந்தாச்சா அம்மிணி?”

அம்மிணி: வர்ற வாரம் வர்றாங்க.

நடக்கிறார்கள்.

குஞ்ஞிமாளு பிரிய வேண்டிய இடம் வந்ததும்-

அம்மிணி: சரி... நீ நடந்து போ. மறுபடியும் நாம பார்ப்போம். ஆமா... ஹரிதாசன் எப்போ வர்றாப்ல? மாளுக்குட்டி அம்மாவோட மகன்?

குஞ்ஞிமாளு:    எனக்குத் தெரியாது.

அவரவர்கள் வழியே நடக்கிறார்கள்.

9

வீடு வாசல்.

ஈரத்துணியுடன் வீட்டு வெளி வாசலுக்குள் நுழையும் குஞ்ஞிமாளுவைப் பார்த்தவாறு, வாசல் திண்ணையில் அமர்ந்து தலை வாரிக் கொண்டிருக்கும் மாளுக்குட்டி அம்மா.

“போடுறதுக்கு வேற துணி கொண்டு வந்திருக்கே, இல்ல?”

குஞ்ஞிமாளு:    கொண்டு வந்திருக்கேன்.

அவள் உள்ளே போகிறாள்.

படி ஏறி வரும் கணக்குப் பிள்ளை அச்சுதன் நாயரும் (அவர் கையில் ஒரு கொடுவாள் இருக்கிறது) அவருடன் சாப்பாட்டுப் பிரியரான குட்டி சங்கரமேனனும்.

அச்சுதன் நாயர்: இவருக்கு நீங்கதான் ஏதாவது அறிவுரை சொல்லணும். எது எப்படின்னாலும் இவர் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆளாச்சே!

குட்டி சங்கர மேனன் குற்ற உணர்வுடன், தலை குனிந்து நின்றிருக்கிறார்.

அம்மா:    என்ன விஷயம்?

அச்சுதன் நாயர்: காலையில எழுந்தாச்சுன்னா, இந்த ஆளு டீ கடையில் போய் உட்கார்ந்துக்கிறாரு. அங்க வர்ற ஆளுங்க பேசுறது, சிரிக்கிறது எல்லாத்தையும் பார்த்துக்கிட்டே உட்கார்ந்திருக்காரு. ஆளுங்க கண்டபடி கெட்ட வார்த்தையில திட்டினாக்கூட இவர் அதைப் பற்றிக் கவலைப்படுறதே இல்ல...

குட்டி சங்கர மேனன்: நான் சும்மா போனேன் மாளு அக்கா.

அம்மா:    (ஒரு நிமிடம் யோசித்தவாறு) கிழக்குப் பக்கம் வேலி சாய்ஞ்சு கிடக்கு. அச்சுதன்நாயர் கூட சேர்ந்து அதைக் கொஞ்சம் சரிப்படுத்துங்க. நான் சாயா தயார் பண்ணித் தர்றேன்.

குட்டிசங்கரன்:  நான் சாயா குடிக்கிறதுக்காக வரல.

அம்மா:    சரி... அதான் வேலியைச் சரி பண்ணச் சொன்னேன்ல!

அச்சுதன் நாயருடன் சேர்ந்து குட்டி சங்கர மேனன் தோட்டத்தை நோக்கி போகிறார். அம்மா அந்த மனிதரையே ஒரு நிமிடம் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறாள். யாரிடம் என்றில்லாமல்-

“பாவம்!”

குஞ்ஞிமாளு வேறு ஆடை அணிந்து உள்ளேயிருந்து வந்து, தேநீரை அம்மாமுன் வைக்கிறாள்.

குஞ்ஞிமாளு:    பலகாரம் ஏதாவது தயார் பண்ணணுமா?

அம்மா:    (எழுந்தவாறு) இருக்குறது நாம மட்டும்தானே! சாயா மட்டும் போதும். சீக்கிரமே சாப்பாடு தயார் பண்ணப் பாரு. இவ்வளவு நேரமாயிடுச்சு - முற்றத்தைப் பெருக்க காளி இன்னும் வரலியே!

குஞ்ஞிமாளு:    கோவில்ல படியில் பணம் வச்சா, பூ விரியுமா அம்மா?

அம்மா:    அப்படித்தான் எல்லாரும் சொல்றாங்க. நான் இதுவரை பணம் வச்சு பார்த்தது இல்ல. வைத்தியமடம் திருமேனிக்கு இது மேல பெரிய நம்பிக்கை. மருந்து எழுதித் தர்றதுக்கு வந்தப்போ என்கிட்ட இதைப் பற்றிச் சொன்னாரு. ஆனா, நான் இதுவரை பார்த்தது இல்ல.

குஞ்ஞிமாளு:    ஆலமரத்துக்குக் கீழே இருக்குற பெரியவருக்குப் பைத்தியமா என்ன?

அம்மா:    வாலிபமா இருந்த காலத்துல அவர் எவ்வளவு பெரிய அறிவாளியான மனிதர் தெரியுமா? எங்கம்மா அவரைப் பற்றி நிறைய சொல்லி இருக்காங்க.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel