Lekha Books

A+ A A-

நீலத்தாமரை - Page 5

neela-thaamarai

இங்கே இருந்த குழந்தைகளைப் படிக்க வைக்கிறதுக்காக அவர் கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி மதுரைக்கோ தஞ்சாவூருக்கோ போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போயிட்டு வந்தாரு. அதுக்குப் பிறகு அந்த ஆலமரத்துக்குக் கீழே போய் உட்கார்ந்த மனிதர்தான்... அங்கேயே நிரந்தரமா தங்க ஆரம்பிச்சிட்டாரு. பாவம்...

தேநீர் டம்ளரை எடுத்துக் கொண்டு குஞ்ஞிமாளு உள்ளே போகத் தொடங்க, அம்மா-

“இப்ப ஒரு பிரச்னையும் இல்ல. ஹரிதாசன் வந்தபிறகு, ரெண்டு நேரம் பலகாரம் பண்ணி ஆகணும்...”

அம்மா எழுந்து நிற்கிறாள்.

“நான் அரிசி எடுத்துத் தர்றேன்!”

10

திய நேரம்.

உள் அறையில் அமர்ந்து அம்மா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு குஞ்ஞிமாளு பரிமாறிக் கொண்டிருக்கிறாள். அம்மா குளித்து முடித்து, நெற்றியில் விபூதி அணிந்திருக்கிறாள்.

அம்மா:    உனக்கு வேண்டியதை எடுத்து வச்சிட்டு, அதுக்குப் பிறகு ஆம்பளைகளுக்குச் சாப்பாடு போடு. குட்டி சங்கரன்- பாவம்! அவருக்கு உடல்ல அப்படியொரு பிரச்னை! எவ்வளவு சாப்பிட்டாலும், அவருக்கு திருப்தியே உண்டாகாது.

குஞ்ஞிமாளு:    சோறு நிறைய இருக்கு. கொடுக்கலாம்.

அம்மா:    ஹரிதாசனோட அறையை நல்லா பெருக்கி சுத்தமா வச்சிருக்கணும். பரீட்சை முடிஞ்சிடுச்சு. எப்போ இங்கே வரப் போறான்னு தெரியல.

குஞ்ஞிமாளு:    சாவி எங்கே இருக்கு?

அம்மா:    பூட்டு போடல. அவன் வந்தான்னா வீட்ல ஒரு சின்ன அசைவு கூட இருக்கக்கூடாது. அவன் அப்பாவோட கோபம், ஆர்ப்பாட்டம் எல்லாமே இவன்கிட்டயும் இருக்கு. ஆனா, மனசுக்குள்ள எதுவுமே இல்ல பாவம்...

கையையும் கால்களையும் கழுவி, சாப்பிடுவதற்காக குட்டி சங்கரமேனன் உள்ளே வருகிறார்.

குட்டிசங்கரன்:  மாளு அக்கா, வேலியைச் சரி பண்ணியாச்சு.

அம்மா:    (தான் சாப்பிடும்போது, அவர் வந்ததை விரும்பாத குரலில்) வெளியே நில்லுங்க. அச்சுதன் நாயரைக் கூப்பிடுறப்போ, நீங்க வந்தா போதும்.

அவர் ஏமாற்றத்துடன் வெளியே செல்கிறார்.

11

டைக்கப்பட்டிருந்த கதவைத் திறந்து, குஞ்ஞிமாளு ஹரிதாசனின் அறைக்குள் செல்கிறாள். உள்ளே ஏகப்பட்ட புத்தகங்கள், பத்திரிகைகள் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கட்டிலில் மடித்து வைக்கப்பட்டிருந்த மெத்தையை எடுத்து விரித்து, அவள் சுத்தம் செய்கிறாள். அப்படி சொல்கிற அளவிற்கு தூசியோ, அழுக்கோ எதுவும் அறையில் இல்லை. இருந்தாலும், அம்மாவின் திருப்திக்காக அறையை அவள் பெருக்கிச் சுத்தம் செய்கிறாள். ஒரு இளைஞனின் அறையை அவள் ஆச்சரியம் மேலோங்க பார்க்கிறாள். கலைநயத்துடன் உள்ள ஒரு காலண்டர் அங்கு சுவரில் தொங்கிக் கொண்டிருக்கிறது. சுவரில் வேறு ஒன்றிரண்டு படங்களும்.

ஒரு பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தை எடுத்து அவள் திறந்து பார்க்கிறாள்.

அதன் முதல் பக்கத்தில் ‘சி.பி.ஹரிதாஸ் எம்.ஏ. முதல் வருடம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. சுவரிடம் ஹரிதாஸின் புகைப்படமொன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அதையே ஆர்வத்துடன் பார்த்தவாறு அவர் ஒரு நிமிடம் நிற்கிறாள்.

பைண்ட் செய்யப்பட்ட புத்தகத்தில் சின்னச் சின்னதாக எழுதப்பட்டிருக்கும் பக்கங்கள் திரையில் காட்டப்படுகின்றன. அவள் ஒரு பக்கத்தில் தன் கவனத்தைச் செலுத்தி மனதிற்குள் தட்டுத் தடுமாறி படிக்கிறாள். நான்கு வரிகள் உள்ள கவிதைகள் கருவி எதுவும் இல்லாமல் அவளின் உச்சரிப்பில் ட்ராக்கில்-

அவள் கல்லூரி ஆண்டு மலரைப் புரட்டுகிறாள். புகைப்படங்கள் உள்ள பல பக்கங்கள். ஒரு பக்கத்தில் யூனியன் மீட்டிங்கிலோ வேறு ஏதோ ஒரு மீட்டிங்கிலோ ஹரிதாசன் சொற்பொழிவாற்றும் புகைப்படம் பிரசுரமாகியிருக்கிறது. அது ஹரிதாசன்தானா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவள் மேலும் அருகில் அந்த ஆண்டு மலரை வைத்து பார்க்கிறாள். கள்ளங்கபடமில்லாத அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளில் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி வெளிப்படுகிறது.

குஞ்ஞிமாளு தோட்டத்தில் கன்றுக்குட்டியை வேறு இடத்திற்கு மாற்றி கட்டுகிறாள். அவள் அருகில் வரும்போது, கன்றுக்குட்டி கத்துகிறது. கயிறை அவிழ்க்கும்போது குஞ்ஞிமாளு பசுவைப் பார்த்து-

“சத்தம் போடாதே, வர்ற ஆளுக்கு இந்த மாதிரி சத்தம் போடுறதெல்லாம் பிடிக்காதாம்.”

அவள் பசுவை தொழுவத்திற்குள் கொண்டு செல்கிறாள்.

வெளியே இருந்து அம்மாவின் குரல்:

“குஞ்ஞிமாளு, சீக்கிரமா சாயாவுக்கு தண்ணி வை...”

வெளிவாசல்.

வேஷ்டியை மடித்துக் கட்டியவாறு ஹரிதாசன் முன்னால் வந்து கொண்டிருக்கிறான். அவனுக்குப் பின்னால் தலையில் சாமான்களைச் சுமந்தவாறு கூலிக்காரன்.

அச்சுதன்நாயர் கூலிக்காரனின் தலையில் இருந்த சாமான்களை இறக்கி (பெட்டியும் ஒரு தோள் பையும்) திண்ணையில் வைக்கிறார்.

ஹரிதாசன் பாக்கெட்டில் இருந்து காசையெடுத்து கூலிக்காரனுக்குத் தருகிறான். திண்ணைக்கு அருகில் போட்டிருந்த நாற்காலியில் அமர்கிறான்.

அச்சுதன்நாயர் நல்ல கனமான பெட்டியைத் தூக்கிக் கொண்டு உள்ளே போகிறார்.

தாயும், மகனும் மட்டும் தனியே அங்கிருக்கிறார்கள்.

அம்மா:    பரீட்சை முடிஞ்ச பிறகும் நீ ஏன் இவ்வளவு நாட்களா இங்கு வரல?

ஹரிதாசன்:     நண்பர்கள் எல்லோரும் பல நாட்களா பிரிஞ்சு இருக்க வேண்டியதிருக்கு. அதுனால நாலஞ்சு நாட்கள் சேர்ந்து ஜாலியா இருப்போமேன்னு நினைச்சோம்.

அம்மா:    நான் நினைச்சேன் நீ அப்பு மாமாவோட வீட்டுப் பக்கம் போயிருப்பேன்னு!

ஹரிதாசன்:     கடிதம் போட்டிருந்தார் நேரம்தான் இருக்கே! பிறகு எப்பவாவது போக வேண்டியதுதான்!

உள்ளேயிருந்து குஞ்ஞிமாளு பணிவுடன் தேநீர் கொண்டு வருகிறாள். அதை நாற்காலிக்கு அருகில் இருக்கும் ஸ்டூலின் மேல் வைக்கிறாள்.

குஞ்ஞிமாளு:    (திரும்பும்போது மிகவும் மெதுவான குரலில் அம்மாவிடம்) பலகாரம் கொண்டு வரட்டுமா?

அம்மா:    பிறகு கொண்டு வா.

மகன் தேநீர் அருந்துகிறான். தாயும் மகனும் பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை.

ஹரிதாசன்:     மீனாட்சியம்மாவை எங்கே?

அம்மா:    அவங்க போயிட்டாங்க.

12

மையலறையில் குஞ்ஞிமாளு முருங்கை இலையைச் சுத்தம் செய்துகொண்டிருக்கிறாள். அம்மா கடந்து வருகிறாள்.

“ஆமா... என்ன வைக்கிற? பூசணிக்காயும், சேனைக்கிழங்கும் அவனுக்குப் பிடிக்காது - தெரியுமா?”

குஞ்ஞிமாளு:    கொஞ்சம் முருங்கைக்கீரை கிடைச்சது.

அம்மா:    அது அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும். பருப்பைச் சேர்த்து அதை வேக வை. அப்பளம் பொரிச்சிடு. சுண்ட வத்தல் இருந்தா அவன் ரொம்பவும் விரும்புவான்.

அவள் வேகமாக சமையல் வேலையில் ஈடுபடுகிறாள்.

அம்மா:    வேலையை முடிச்சிட்டு, அவனோட அழுக்குத் துணிகளை துவைச்சுப் போடு. ஏணியில துணிகளை வச்சிருக்கேன். அடுப்புல குழம்பை வச்சிட்டு, குளியலறையில் தண்ணி எடுத்து வை. அவன் அங்கேதான் குளிப்பான்.

அவள் தன் வேலையில் தீவிரமாக இருக்கிறாள்.

ஏணிமேல் இடப்பட்டிருந்த அழுக்கு வேஷ்டியையும் அண்டர்வேரையும் பனியனையும் சட்டையையும் குஞ்ஞிமாளு எடுக்கிறாள். சட்டையை எடுத்து எதேச்சையாக முகர்ந்து பார்க்கிறாள்- எந்தவிதமான எண்ணமும் இல்லாமல். அவளையும் அறியாமல் ஒரு வகை உணர்வு அவளை உந்துகிறது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel