Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நான் நடிகன் ஆன கதை - Page 34

naan nadigan aana kathai

சாப்ளின் எங்கு சென்றாலும், ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொள்வார்கள். மிகப் பெரிய பல மனிதர்களுடன் அவருக்கு நட்பு உண்டானது. 1917ஆம் ஆண்டு இறுதியில் சாப்ளினும் நடிகையான மில்ட்ரஸ் ஹாரிஸும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், ஒரு வருடம் ஆன போது அவர்கள் மன ரீதியாக பிரிந்து விட்டார்கள். ம்யூச்சுவலுடன் இருந்த ஒப்பந்தம் முடிந்தவுடன் ‘ஃபஸ்ட் இண்டர்நேஷனல்’ என்ற கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். சாப்ளின் ஹாலிவுட்டில் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி ஸ்டூடியோ உண்டாக்கியது அந்தக் கால கட்டத்தில்தான். ‘ஏ டாக்ஸ் லைஃப்’ (1918) தான் அங்கு எடுக்கப்பட்ட முதல் படம். 1920இல் நியூயார்க்கில் சாப்ளினின் புகழ் பெற்ற படமான ‘தி கிட்’ திரைக்கு வந்தது. ஜாக்கி குகன் என்ற நான்கு வயது சிறுவன்தான் அதில் மைய பாத்திரம். ‘தி கிட்’ ஒரு க்ளாஸிக் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டது.

அந்தச் சமயத்தில் சாப்ளினின் தாய்க்கு உடல் நலம் முழுமையாக குணமானது. அவர் தன் தாயை அமெரிக்காவிற்கு அழைத்துக் கொண்டு வந்தார். மிகுந்த வசதிகள் கொண்ட ஒரு வீட்டை தன் தாய்க்காக கடற்கரையில் அவர் கட்டினார். ஃபஸ்ட் இண்டர்நேஷனலுக்காக ஒன்பது திரைப்படங்களை சாப்ளின் முழுமை செய்தார். இதற்கிடையில் சாப்ளினும் சிட்னியும் டக்ளஸ்ஃபெயர்பாக்ஸ், மேரி பிக்ஃபோர்ட் ஆகியோருடன் சேர்ந்து ‘யுனைட்டெட் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ என்ற கம்பெனியை உருவாக்கினார்கள். பிறகு பல பெரிய கம்பெனிகளின் உரிமையாளர்கள் இக்கம்பெனியுடன் இணைந்து பங்கு பெற்றதன் மூலம் ‘யுனைட்டெட் ஆர்ட்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன்’ வடிவமெடுத்தது. பெரிய அளவில் லாபம் சம்பாதித்த ‘கோல்ட் ரஷ்’ (1925) என்ற சாப்ளினின் படம் அந்த கம்பெனியின் மூலமாகத்தான் வெளியே வந்தது.

தொடர்ந்து திரைப்படங்களில் வேலை செய்ததன் காரணமாக சாப்ளின் உடல் ரீதியாக மிகவும் தளர்ந்து போய்விட்டார். திரைப்படங்களுக்கு தற்காலிகமாக ஓய்வு கொடுத்து விட்டு அவர் நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு வந்தார். அங்கு சாப்ளினுக்கு மிகப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. தனக்கு நன்கு பழக்கமான கென்னிங்டன் பூங்கா, பெளனல் டெர்ரஸ், ப்ரிக்ஸ்டன் சாலை ஆகிய இடங்கள் வழியாக ஒரு கனவில் செல்வதைப் போல அவர் கடந்து சென்றார். லண்டன் பத்திரிகைகள் சாப்ளினின் வருகைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தன.

நியூயாக்கிற்கு திரும்பியவுடன் சாப்ளின் தன் தாயைக் காண வந்தார். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். லிடாக்ரேயைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் சாப்ளினுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். சார்லியும் சிட்னியும். சாப்ளினின் தாய் அவ்வப்போது அவர்களை வந்து பார்த்துக் கொண்டிருந்தார். சாப்ளினின் இரண்டாவது திருமணமும் தோல்வியில் முடிந்தது.

‘தி சர்க்கஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது தன் தாய்க்கு உடல் நலக்கேடு உண்டாகிவிட்டது என்ற தந்தி சாப்ளினுக்கு வந்தது. அவர் மருத்துவமனையை அடைந்தபோது அவருடைய தாய் சுய நினைவு இல்லாமல் இருந்தார். மறுநாள் அவருடைய தாய் மரணத்தைத் தழுவினார். நோய்வாய்ப்பட்டு ஐரோப்பாவில் இருந்ததால் சிட்னியால் இறுதிச் சடங்குக்கு வர முடியவில்லை. ஹாலிவுட் சுடுகாட்டில்தான் சாப்ளினின் தாய் அடக்கம் செய்யப்பட்டார்.

பேசும் படங்கள் வந்த பிறகும் சாப்ளின் ஊமைப் படங்களைத் தயாரிக்கத்தான் விருப்பப்பட்டார். வார்னர் பிரதர்ஸ் கம்பெனியும் எம்.ஜி.எம். கம்பெனியும் பேசும் படங்களை தயாரித்த காலத்தில் அவர் தைரியமாக ‘சிட்டி லைட்ஸ்’ (1931) என்ற ஊமைப் படத்தைத் தயாரித்தார். முதல் காட்சிக்கு ஆட்கள் குறைவாக இருந்தாலும், பிறகு அந்த திரைப்படம் ரசிகர்களின், விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்ததென்னவோ உண்மை.

பத்து வருடங்களுக்குப் பிறகு சாப்ளின் மீண்டும் லண்டனுக்கு வந்தார். ‘சிட்டி லைட்ஸி’ன் திரையிடல்களில் பங்கு பெறுவதற்காக அந்தப் பயணம். அந்தப் பயணத்தின்போதுதான் அவர் வின்ஸ்டன் சர்ச்சிலையும் மகாத்மா காந்தியையும் சந்தித்தார். காந்தியை அவர் சந்தித்தது வரலாற்று முக்கியத்துவம் கொண்டது.

ஹாலிவுட்டில் தான் செய்வதற்கு இனிமேல் எதுவும் இல்லையென்று சாப்ளின் நினைத்தார். ஊமைப் படங்களின் காலம் முடிந்து விட்டது. பேசும் படங்களைத் தயாரிப்பதில் அவருக்குச் சிறிது கூட ஆர்வம் இல்லை. ‘சிட்டி லைட்ஸ்’ அப்போதும் நன்றாக ஓடிக் கொண்டிருந்தது. பிறகு அவர் தயாரித்த ‘மாடர்ன் டைம்ஸ்’ (1936) என்ற படமும் ஊமைப் படமாகவே இருந்தது. பவுலட் கோடார்ட் என்ற நடிகைதான் அதன் கதாநாயகி. அந்தத் திரைப்படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. பவுலட்டும் சாப்ளினும் திருமணம் செய்து கொண்டாலும், அதுவும் பிரிதலில்தான் போய் முடிந்தது.

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். ரஷ்யாவில் போரால் உண்டான துயரங்களுக்கு எதிராக செயல்பட்ட ஒரு அமெரிக்கன் அமைப்பு நடத்திய போருக்கு எதிரான ஊர்வலத்தை சாப்ளின் பாராட்டினார். இன்னொரு போருக்கு எதிரான ஊர்வலத்திலும் சாப்ளின் பேசினார். அத்துடன் பத்திரிகைகள் சாப்ளினுக்கு எதிராக திரும்பின. அவர் கம்யூனிஸ்ட் என்று பத்திரிகைகள் கூறின. அமெரிக்காவில் தங்க ஆரம்பித்து முப்பது வருடங்கள் ஆன பிறகும் சாப்ளின் பிரிட்டிஷ் குடிமகனாகவே இருந்தார். அமெரிக்க குடிமகனாக இல்லாத ஒரு வெளிநாட்டுக்காரரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியவைதான் என்று எல்லா தரப்புகளிலிருந்தும் சாப்ளினுக்கு எதிராக எதிர்ப்புகள் வந்து கொண்டிருந்தன.

1947இல் தயாரித்த ‘மொஸ்யே வெர்தோ’ என்ற திரைப்படம் சர்ச்சைக்குள்ளானது. மனரீதியாக அவர் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அந்தச் சமயத்தில் முழுமையான மன பக்குவத்துடன் ஊனா சாப்ளினுக்கு ஆறுதல் அளித்தார். அவர்களுக்கு ஜெரால்டின், மைக்கேல், ஜோஸஃபைன், விக்டோரியா என்று நான்கு குழந்தைகள் இருந்தார்கள்.

1952இல் ‘லைம் லைட்’ திரைக்கு வந்தது. மிகச் சிறந்த சாப்ளின் படம் அது. அதில் மூத்த மகனான சிட்னி, சாப்ளினுடன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஜெரால்டின், மைக்கேல், ஜோஸஃபைன் ஆகியோர் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

அதற்குப் பிறகு சாப்ளின் தன் குடும்பத்துடன் ஐரோப்பாவிற்கு பயணம் செய்தார். அங்கிருக்கும்போது அவருக்கு ஒரு தகவல் வந்தது. ‘கம்யூனிஸ்ட் தொடர்புகள் காரணமாகவும், அமெரிக்க குடிமகன் என்ற தகுதியை இதுவரை எடுக்காமல் இருந்ததற்காகவும் அமெரிக்காவிற்கு எதிராக செயல்பட்டதற்காகவும் இனிமேல் தங்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய தடை உண்டாக்கப்பட்டிருக்கிறது’- இதுதான் அட்டர்னி ஜெனரலின் செய்தி. தொடர்ந்து ஊனா மட்டும் தனியாக அமெரிக்காவிற்குச் சென்றார். தேவையான பணத்துடன் திரும்பி வந்தார். மீதி விஷயங்களை சாப்ளினின் சகோதரர் சிட்னியிடம் ஒப்படைத்தார்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version