
நல்ல நிலவு வானத்தில் காய்ந்து கொண்டிருந்தாலும், திடீரென்று ஒரு மழை பெய்ய ஆரம்பித்தது.
"நரியோட கல்யாணத்திற்கு வெயிலும் மழையும்- ஒட்டகத்தோட கல்யாணத்துக்கு நிலாவும் மழையும்!'' -இப்படிக் கூறியவாறு குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டே சிறுவர்கள் கீழே இறங்கி தூங்க ஆரம்பித்தார்கள்.
திருமணம் முடிந்தவுடன் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் ஒட்டகம் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்றிருந்தான். தன்னுடைய பழைய இடத்திலேயே போய் படுத்துத் தூங்கும்படி நிர்வாகி அதிகார தோரணையில் சொன்னார். சிறிது நேரம் சென்ற பிறகு சிறுவர்களுக்கு நடுவில் புது மாப்பிள்ளையும் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான்.
தனக்கு என்ன கிடைத்தது என்பதோ, தன்னிடமிருந்து என்ன போனதென்றோ தெரியாமல் ஒட்டகம் எப்போதும் போலவே தன்னுடைய வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். வாழ்க்கையில் அவனுக்குப் புரியாத பல விஷயங்களில் ஒன்றாக இருந்தது அந்தத் திருமணம்.
மாதங்கள் ஓடின.
வெளியே பார்ப்பதற்கு ஒட்டகத்திடம் மாற்றங்கள் எதுவும் தெரியவில்லையென்றாலும், அவனுடைய மூளையில் சிந்தனையின் வெளிப்பாடுகள் தோன்றத்தான் செய்தன. பொதுவாக எந்த நோயாலும் பாதிக்கப்படாத அவனுக்கு தாங்க முடியாத அளவிற்கு ஒருவித தலைவலி உண்டானது.
பீப்பாய் வண்டியை இழுத்துச் செல்லும்போது தெருவோரங்களை இப்போதெல்லாம் அவன் வெறித்துப் பார்ப்பதேயில்லை. அவனுடைய கழுத்து சுருங்கி, தலை இறங்கியது. காரணங்களே இல்லாமல் அவனுக்கு கோபம் வர ஆரம்பித்தது. அப்போது அவன் பயங்கர சத்தத்துடன் கத்துவான்.
மாதுவை அவன் சில நேரங்களில் பார்ப்பான். அவள் சமையலறையில் இருந்தவாறு தேங்காய் அரைப்பதையும் மசாலா வறுப்பதையும் அவன் பார்ப்பான். சமையலறையிலிருக்கும் தொட்டியில் நீர் நிறைக்கும்போதுதான் அவனுக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கும். ஒட்டகத்தைப் பார்க்கும்போது மாது தன் வாயை மூடிக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பாள்.
அவன் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டான்.
திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கழிந்த பிறகு, மாது அழகான ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள் என்ற செய்தியை ஒட்டகம் கேள்விப்பட்டான்.
ஒரு நாள் மாலை நேரத்தில் பீப்பாய் வண்டியை இழுத்துக்கொண்டு அவன் போய்க் கொண்டிருந்தான்.
திடீரென்று சிறுவர்கள் உரத்த குரலில் கத்தினார்கள்: "ஒட்டகத்தோட குழந்தை!''
ஒட்டகம் கழுத்தைத் திருப்பிப் பார்த்தான். தெருவோரமாக மாது போய்க் கொண்டிருந்தாள். அவளுடைய மார்பில் அந்தப் பச்சிளம் குழந்தை இருந்தது.
ஒட்டகத்தின் கண்கள் பிரகாசித்தன. அவன் ஒரு சாதாரண மனிதனைப்போல அழகாகப் புன்னகைத்தான். பிறகு மெதுவாக வண்டியை நிறுத்தினான். மாதுவை நெருங்கி அவன் வந்தான்.
மாது பதைபதைத்துப் போய் அதே இடத்தில் நின்றுவிட்டாள். ஒட்டகம் அவளுடைய இடுப்பிலிருந்த அந்த பச்சிளம் குழந்தையை வாரி எடுத்து தன் கைக்குள் வைத்தவாறு பீப்பாய் வண்டியை நோக்கித் திரும்பி நடந்தான். குழந்தையை ஒரு கையால் இறுகப் பற்றியவாறு இன்னொரு கையால் வண்டியை இழுத்துக் கொண்டு அவன் நடக்க ஆரம்பித்தான்.
மாது உரத்த குரலில் கத்தியவாறு வண்டிக்குப் பின்னால் வேகமாக ஓடினாள். சிறுவர்கள் கத்தினார்கள். ஆட்கள் கூட ஆரம்பித்தார்கள். ஆரவாரம் கேட்டு ஒரு போலீஸ்காரர் அங்கு வந்து சேர்ந்தார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook