Lekha Books

A+ A A-

அவன் - அவள்

Avan - Aval

ந்த வீட்டைப் பார்த்தால் இப்போது விழுந்து விடும், இப்போது விழுந்துவிடும் என்று தோன்றும். உள்ளே ஒரு அறை இருக்கிறது. மேலே இருந்து நீர் விழுந்து, உள்ளே முழுவதும் பள்ளங்களாக இருக் கும். முன்பு எப்போதோ மஞ்சள் நிறத்தில் பூசிய சிதிலமடைந்த பழைய சாயத்தில் புகை, ஈரம், அழுக்கு அனைத்தும் இருக்கும். அறை நிறைய பொருட்கள்.

கால்கள் இழக்கப்பட்ட நாற்காலிகள், கயிறு அறுந்த கட்டில்கள், உடைந்த சமையலறைப் பொருட்கள், கிழிந்து நாசமான பாய்கள், பழைய துணிகள் - இப்படி நீண்டு போய்க் கொண்டிருக்கும். மூலையில் உள்ள இரண்டு அடுப்புகளில் புகைந்து கொண்டிருக்கும் நெருப்புக் குச்சிகள் மட்டும் இருக்கும். நடப்பதற்கு இடமில்லை. சாமான்களும் ஒரு சகிக்க முடியாத நாற்றமும் மட்டும் அல்ல. - தவறு நேர்ந்துவிட்டது. சாமான்கள் மட்டுமல்ல அங்கு, அவற்றுக்கு மத்தியில் அவனும், அவனுடைய மனைவியும் இருக்கிறார்கள். குழந்தையும்.

அவன் நீண்டு, மெலிந்த ஒரு மனிதனாக இருந்தான். சாயம்போன சுவரைப் போல கறுத்த நிறத்திற்கு அடியில் அவன் வெளிறிப்போய் இருப்பது நன்றாகவே தெரியும். சிறுசிறு உரோமங்கள் நிறைந்த முகம். உடலெங்கும் நரம்புகள் எழுந்து நின்றுகொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் இருந்த கட்டிலில் உட்கார்ந்து உற்சாகத்துடன் புராண பாராயணம் நடத்திக் கொண்டிருக்கிறான். உடல் அமைதியாக இருக்கவில்லை. கைகள் நடுங்குகின்றன. சிவந்த கண்கள் அசைந்து கொண்டிருக்கின்றன. இடையே புத்தகத்தை மடியில் வைத்துக் கொண்டு, கால்களை அசைத்துக் கொண்டு, கைகளை பின்னால் வைத்துக் கொண்டு சாய்ந்து அமர்ந்தவாறு வாசிக்கிறான். உடனே கால்மீது வைத்திருந்த புத்தகத்தைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பிக்கிறான். இடையே பக்கங்கள் மாறி உட்காருகிறான். சிரமமாக இருக்கும் சமஸ்கிருதச் சொற்கள் வரும்போது, ஆர்வத்துடன் மனைவியின் முகத்தைப் பார்த்தவாறு சொல்லின் மூலத்தையும் அதற்கான அர்த்தத்தையும் விளக்கிக் கூறுவான். அதுதான் அவன்.

அருகில் கொம்புகளில் இருந்து பக்கவாடுகள் ஒடிந்த ஒரு மரத்தொட்டில் தொங்கவிடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு குழந்தை. மஞ்சள் நிறத்தில், மெலிந்துபோய், பெரிய தலையும் வயிறும் கொண்ட ஒரு குழந்தை. கைகளையும் கால்களையும் அசைத்து என்னவோ சத்தங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

கீழே தரையில் ஒரு இடத்தில் சுவரில் சாய்ந்து கொண்டு ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறாள். மிகவும் அதிகமாக மெலிந்திருப்பது அவள்தான். கிழிந்த ஏதோ ஒன்றை அவள் தைத்துக் கொண்டிருக்கிறாள். இடையில் அவ்வப்போது தொட்டில் ஆடுகிறது. இப்போது தையலை நிறுத்திவிட்டு, தன் கணவனின் முகத்தில் கண்களைப் பதித்தவாறு அவள் அமர்ந்திருக்கிறாள்.

பாராயணத்தில் மூழ்கி முகத்தில் ஒருவகை ஆனந்தம் பரவியிருக்கிறது. சமஸ்கிருதச் சொற்களை விளக்கிக் கூறும்போது, ஆச்சரியத்துடன் தலையை ஆட்டுகிறாள். கால்களை நீட்டி வைத்துக் கொண்டு, கைகளை மடியில் வைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருக்கிறாள். திடீரென்று அந்த முகம் வேறு மாதிரி மாறுகிறது. சந்தோஷம் மறைந்து கோபமும் கவலையும் வெறுப்பும் நிழலாடுகின்றன. நாளை விஷு. இந்த ஆண் என்ன செய்கிறான்? புராணக்கதை வாசித்துக் கொண்டிருக்கிறான்! புராணம்... விஷுவிற்காவது ஒரு மடக்கு கஞ்சி குடிக்க முடியாதா? ஓ.... இந்த ஆண் எதற்காக இப்படி நடக்கிறான்?

பாராயணத்தை அவள் கேட்கவில்லை. வார்த்தைகள் கடந்து போய்க் கொண்டிருக்க, அவளுடைய முகத்தில் வெறுப்பின் நிழலுக்கு கனம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் குழந்தைக்கு என்ன கொடுப்பது? மார்பில் சிறிதுகூட பால் இல்லை. அவன் வாசிக்கிறான்.... வாசிக்கிறான்!

அவன் வாசிப்பில் மூழ்கி இருக்கிறான். கைகளை எடுத்து, சைகைகளுடன் சொற்களைக் காற்றில் எறிந்து கொண்டிருக்கிறான். இடையில் வந்த சமஸ்கிருதச் சொற்களை ரசித்து, மீண்டும் திரும்பக் கூறிவிட்டு, அவற்றுக்கு அர்த்தத்தை விளக்க ஆரம்பிக்கிறான்.

“அப்படி காதல் வயப்படு...'' - அங்கு கயிறு அறுந்தது.

பெண் வேகமாக எழுந்தாள். நடக்க முடியாத அளவிற்குக் கவலையும் கோபமும் முகத்தில் நிறைந்திருந்தன. அவள் வெடித்துச் சிதறிக் கத்தினாள். “காதல் வயப்பட்டு... அப்படித்தானேடா? காதல் வயப்பட்டு....! நீ எதுக்குடா இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறே? வாசிக்கிறானாம்! நாளை விஷு என்று உனக்குத் தெரியும்ல?'' அவளுடைய கழுத்தில் இருந்த நரம்புகள் எழுந்து நின்றன. செம்பட்டை விழுந்த தலைமுடிகள் சுற்றிலும் சிதறின.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel