Lekha Books

A+ A A-

ஒட்டகம் - Page 2

Ottagam

ஒட்டகமும் அந்தச் சிறுவர்களும் நகரத்திலிருக்கும் அந்த பெரிய ஹோட்டலை நம்பித்தான் வாழ்கிறார்கள். ஹோட்டலுக்குத் தேவைப்படும் நீர் முழுவதையும் பக்கத்திலிருக்கும் ஆற்றிலிருந்து பீப்பாய் வண்டியில் கொண்டு வருவதுதான் அவனுடைய வேலை.

பதினாறு வருடங்களாக அவன் அந்த வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறான்.

பதினாறு வருடங்களுக்கு முன்பு இருந்த அவனுடைய வாழ்க்கையைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. யாரும் அதைப் பற்றி அவனிடம் விசாரித்ததும் இல்லை. அந்த பீப்பாய் வண்டியின் ஒரு பகுதியாக இல்லாமல் வேறு மாதிரி அவனுடைய வாழ்க்கையைக் கற்பனை பண்ணி பார்க்க யாராலும் முடியவில்லை.

இப்படியே அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். "எட்டு ஆளுங்க சாப்பிடுற சாப்பாட்டை இவன் ஒருவனே சாப்பிடுறான்னா சாதாரண விஷயமா!" என்ற ஒரே ஒரு குற்றச்சாட்டைத்தான் ஹோட்டல் நிர்வாகி ஒட்டகத்தின் மீது கூறுவார். நீர் கொண்டு வருவது இல்லாமல் ஹோட்டலுக்கு தேவைப்படும் விறகுகளைப் பிளக்கும் வேலையையும் அவன்தான் செய்கிறான்.

ஆகஸ்டு புரட்சியால் இந்தியா அதிர்ந்தது. இரண்டாம் உலகப்போர் முடிந்தது. இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது- இவை எதுவுமே ஒட்டகத்திற்குத் தெரியாது. இந்த உலகத்தில் அசாதாரணமான சில விஷயங்கள் நடக்கின்றன என்பதை இரண்டே முறைகளில்தான் அவன் உணர்ந்திருக்கிறான்.

ஒருநாள் காலையில் எப்போதும்போல அவன் பீப்பாய் வண்டியில் நீரை நிறைத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தான். பாதையோரத்திலிருந்த ஒரு தொழிற்சாலையின் முன்னால் வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு லாரி நிறைய போலீஸ்காரர்கள் வந்து இறங்கினார்கள். அவர்கள் வேலை நிறுத்தம் செய்து கொண்டிருந்தவர்களையும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் லத்தி சார்ஜ் செய்து விரட்டினார்கள். அந்த ஆரவார சூழ்நிலைக்குள் பீப்பாய் வண்டியை இழுத்துக்கொண்டு அங்கு

வந்த ஒட்டகம் மாட்டிக் கொண்டான். அவன் பீப்பாய் வண்டியைக் கீழே போட்டுவிட்டு ஓடினான். ஓடும்போது அவனுடைய முதுகில் ஒரு அடி விழுந்தது. முதுகை இரண்டு கைகளாலும் பலமாய் பிடித்துக்கொண்டு அவன் திரும்பிப் பார்க்காமல் கழுத்தை நீட்டிக் கொண்டு, கீழுதடை முன்னோக்கித் தள்ளியவாறு படுவேகமாக ஓடினான். தெருவை அடைந்த பிறகும் அவன் ஓடுவதை நிறுத்தவில்லை. அவன் தெருவின் இரண்டு, பக்கங்களிலுமிருந்த கடைக்காரர்களைப் பார்த்தவாறு தன் வாயை குகையைப் போல திறந்து வைத்துக்கொண்டு ஒரு தாழ்ந்த குரலில் "அடிக்க வர்றாங்க" என்று முன்னறிவிப்பு கூறியவாறு ஓடிக்கொண்டிருந்தான்.

நகரத்தில் இருப்பவர்களின் முதுகில் எல்லாம் அடிவிழப்போகிறது என்பது அவனுடைய எண்ணம்.

அன்று முழுவதும் ஒட்டகம் அந்த விறகு வைக்கும் அறையிலேயே பயந்துபோய் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். ஹோட்டல் நிர்வாகி எவ்வளவு சொல்லியும், திட்டியும் அவன் அந்த இடத்தை விட்டு அசைவதாக இல்லை. கடைசியில் அந்தச் சிறுவர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அந்த பீப்பாய் வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்து அங்கு சேர்த்தார்கள். அந்த வண்டி எவ்வளவு கனமாக இருக்கிறது என்பதையே அன்றுதான் அந்தச் சிறுவர்கள் தெரிந்துகொண்டார்கள்.

இரண்டாவது சம்பவம்- அந்த பீப்பாய் வண்டி அவனுடைய முதுகின்மீது கவிழ்ந்து விழுந்தது. ஒரு சாதாரண மனிதனாக இருந்தால் அந்த நிமிடத்தில் நிலைகுலைந்து போயிருப்பான். தலையும் முதுகும் பலமாக பாதிக்கப்பட, ரத்தத்தில் குனிந்தவாறு ஒட்டகம் பீப்பாய்க்குக் கீழேயிருந்து தன்னை இழுத்துக் கொண்டிருந்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel