Lekha Books

A+ A A-

வாழ்க்கையின் ஒரு பக்கம்

வாழ்க்கையின் ஒரு பக்கம்
பாறப்புரத்து
தமிழில்: சுரா

ல வேளைகளில் முயற்சித்தும், ஒரு கதைக்கான இலக்கணத்திற்குள் அடங்காத, வாழ்க்கையின் பழைய ஒரு பக்கம். உண்மையில் நடைபெற்ற இந்த கதையை வெளிப்படுத்தினால் என்னுடைய ஒழுக்கம் பற்றிய எண்ணம் எப்படி விமர்சிக்கப்படும் என்ற கடுமையான குழப்பம் இருக்கத்தான் செய்தது. அதனால் இவ்வளவு காலமும் நான் இதை இதயத்தின் அடித்தளத்தில் மறைத்து வைத்துக் கொண்டு நடந்து திரிந்தேன். ஆனால், இப்போது இந்த இதயச் சுமையை இறக்கி வைப்பது என்பது தவிர்க்க முடியாத விஷயமாக ஆகி விட்டிருக்கிறது....

அந்த நினைவுகளுக்கு முழுமையான வடிவம் கொடுப்பதற்கு எனக்கு சிறிதும் சிரமம் தோன்றவில்லை. இதோ... மலையின் மீது வெள்ளை அடிக்காத அந்தச் சிறிய வீடும் ஒற்றையடிப் பாதையும் மனமென்ற கண்ணாடியில் தெளிவாக தெரிகின்றன. எங்களுடைய கிராமத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் அது இருக்கிறது. இரண்டு கிராமங்களையும் ஒன்றையொன்று பிரிப்பது ஒரு புஞ்சை வயல்தான். வறண்ட காலமாக இருந்தால் வயலைக் குறுக்காக கடந்து, ஒன்றரை மைல் தூரம் நடந்தால் போதும். இல்லாவிட்டால் முட்டாற்றில் தேவாலயத்தின் வாசற் படியிலிருந்து கீழே செல்லும் ஒற்றையடிப் பாதையின் வழியாக மூன்று மைல்கள் நடக்க வேண்டும் (அன்றைய ஒற்றையடிப் பாதை இன்று பெரிய சாலையாகவும், சாலையின் வழியாக, பேருந்து சர்வீஸ் தொடங்கி நடக்கவும் செய்திருக்கின்றன). பாதையின் ஓரங்களில் வெளிறிப் போய் நிற்கும் மரவள்ளி தோட்டங்கள்... புற்களும் அவரையும் பயறும் இடையில் இங்குமங்குமாக காணப்படும், மக்கள் வசிப்பதும், நாகரீகமும் குறைவாக இருக்கும் பகுதி. சாதாரணமாக மாதத்தில் ஒரு முறை மட்டுமே குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி அந்த பாதையில் போக்குவரத்து இருக்கும். அந்த பாதை சென்று முடியும் இடத்தில் மாதத்திற்கொரு முறை நடக்கக் கூடிய ஒரு காளைச் சந்தை இருக்கிறது. பதினேழு வருடங்களுக்கு முன்பு, சுமார் ஏழெட்டு மாத காலம், மாதத்திற்கு நான்கு தடவைகள் நான் அந்த பாதையின் வழியாக போகவும், வரவும் செய்திருக்கிறேன். பதினேழு வருடங்கள் என்பதைக் கணக்கிட்டு கூறுவது என்பது எளிதான ஒரு விஷயம். என்னுடைய உத்தியோக வாழ்க்கை ஆரம்பமாவதற்குச் சற்று பின்னால், படிப்பு முடிவடைந்த பிறகு இருந்த காலம். என் வாழ்க்கையைப் பொறுத்த வரையில், அந்த காலகட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது. நான் இன்று வரை எழுதியிருக்கும் சொந்தக் கதையின் சாயல் உள்ள கலைப் படைப்புகள் எதிலும் அந்த காலகட்டத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. அந்தச் சிறிய வயதில் நான் ஒரு குடும்பத்தின் தலைவனாக ஆகி விட்டிருந்தேன். அவ்வாறு கூறினால், அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை முழுமையாக புரிந்து கொண்டீர்களா? என் வயதிலிருந்த மற்ற இளைஞர்களுக்கு இருந்த சுதந்திரம் எனக்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்டிருந்தேன். என்னுடைய தேவைகளை என்னிடம் மட்டுமே கூறிக் கொள்ள முடியும் என்பதையும், வீட்டிலிருந்த மற்ற உறுப்பினர்களின் சுமையை இன்று இல்லாவிட்டாலும் நாளை நான் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பதையும் நான் உணர்ந்திருந்தேன். அந்த நினைப்பு, என் வயதிலிருக்கும் ஒருவனுக்கு இருக்கக் கூடாத சிந்தனைப் பழக்கத்தையும், கவலை உணர்வையும் எனக்குள் வளர்த்தன. சிந்தனைகள் நிறைந்த சுமையுடன் அலைந்து திரிவது அன்று வழக்கமான ஒன்றாக இருந்தது. குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி இலக்கு எதுவுமில்லை. அவ்வாறு நடந்து திரிந்து கொண்டிருந்த காலத்தில்தான், மத விஷயங்களில் ஈடுபாடு கொண்டிருந்த ஒரு நண்பன் சொன்னான்:

'.....ல் ஒரு வேதப்பாட வகுப்பைத் தொடங்க வேண்டுமென்று நினைக்கிறேன். அந்த ஊரில் அதை நடத்துவதற்கு ஆட்கள் இல்லை. நீ அங்கு ஒரு ஆசிரியராக இருக்கலாமே?'

எந்தவொரு தயக்கமும் இல்லாமல் நான் அந்த வேலையை ஏற்றுக் கொண்டேன். ஏதாவதொரு வேலைக்கு என்னை யாரும் அழைப்பதில்லையே என்ற மனக்குறை இருந்தது. ஞாயிற்றுக் கிழமை மதிய நேரம் தாண்டியதும், அந்த நண்பன் வீட்டிற்கு வருவான். பிறகு ஒன்றாகச் சேர்ந்து புறப்படுவோம். அந்த ஒற்றையடிப் பாதையின் வழியாக மூன்று மைல் தூரம் நடப்பது என்ற விஷயம் எனக்குள் உற்சாகத்தை நிறைத்திருந்தது. அந்தச் சமயத்தில் வாழ்க்கையில் எதிர்பார்ப்பதற்கு என்று ஏதாவது இருந்தது என்றால், அது அந்த பயணம்தான் என்று தோன்றுகிறது.

ஒரு தேவாலயத்திற்குள்தான் வகுப்பு நடந்தது. பெரிய தேவாலயத்திற்கு இருக்கக் கூடிய தரைக் கற்கள் அமைத்து கட்டப்பட்ட அந்த தேவாலயத்தின் கல்லின் மீது கரிய நிறத்தில் பாசி பிடித்து கிடந்தது. எவ்வளவு காலமாக அது இருக்கிறது என்பதை கணக்கிட முடியவில்லை. பணமும் நாகரீகமும் குறைவாக இருக்கும் அந்த கிராமப் பகுதியில் விவசாயம் செய்து வாழும் பத்து நூறு கிறிஸ்தவர்கள்தான் வாடிக்கையாக வரக் கூடியவர்கள். நிரந்தரமாக ஒரு பாதிரியாருக்கு சம்பளம் கொடுக்க வழியில்லாத காரணத்தால், மாதத்தில் ஒரு முறையே தேவாலயத்தில் கூட்டம் நடக்கும். பள்ளிக் கூடத்தில் படிக்கும் குழந்தைகளின் சதவிகிதம் மிகவும் குறைவாக இருந்தது. பத்தோ ஐம்பதோ குழந்தைகள் வேதம் படிப்பதற்காக வருவார்கள். அவர்களை வயதை அனுசரித்து நான்கு வகுப்புகளாக பிரித்து பாடம் நடத்துவார்கள். அவர்களில் வயதில் மூத்த பிள்ளைகள் உள்ள உயர்ந்த வகுப்பிற்கான ஆசிரியராக நான் இருந்தேன். படிப்படியாக அவர்களில் ஒவ்வொருவரும் என்னுடைய அன்பிற்குரியவர்களாக ஆனார்கள். இதயத்தில் ஊற்றெடுத்து நிற்கும் அன்பு என்ற நீரோட்டத்திற்கு முதலில் நுழைய இடம் கிடைத்தது, ஒருவேளை.... அந்த பிள்ளைகளின் இளம் மனங்களிலாகத்தான் இருக்க வேண்டும். வாரத்திற்கொருமுறை மட்டுமே பார்ப்பதுண்டு என்றாலும் பால்ய வயதிலிருந்து பழக்கத்திலிருக்கும் உறவினரைப் போல அவர்கள் என் மீது அன்பு செலுத்தினார்கள். அவர்களுக்கு மத்தியில் மிடுக்கும், சுறுசுறுப்பும் அதிகமாக கொண்டிருந்த இளம் பெண்ணாக இருந்தாள் பேபி. அன்று அவளுக்கு பன்னிரெண்டு வயது இருக்கும். அவளைப் பற்றிய நினைவுகளில், முன்னால் வந்து நிற்பது அவளுடைய மணி குலுங்குவதைப் போன்ற சிரிப்புத்தான். 'சிரிப்புப் பெட்டகம்' என்ற செல்லமான கிண்டல் பெயரில்தான் நான் அவளை அழைப்பேன். நகைச்சுவையின் சாயல் கொண்ட எதையாவது கேட்டால், அவள் விழுந்து விழுந்து சிரிப்பாள். வேறு யாராவது சிரிப்பதற்கு தன்னுடன் இருக்கிறார்களா என்பதையெல்லாம் பார்ப்பதில்லை. பிறகு... இன்னொரு முறை சிரிப்பதற்காக ஏதாவது கூறுங்கள் என்பதைப் போல பெரிய கண்களைத் திறந்து, உதடுகளை விரித்து வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பாள். அவளுக்கு கருப்பு நிறம். கருத்து, வளர்ந்த கூந்தலும் அடர்த்தியான கருப்பு நிறத்திலிருந்த கண்களும் சேர்ந்து அவளுக்கு ஒரு தனிப்பட்ட அழகை தேடிக் கொடுத்தன. நான் போய் சேருவதற்கு நேரமானால், ஒற்றையடிப் பாதையில் அவள் என்னை எதிர்பார்த்து நின்று கொண்டிருப்பாள். பார்த்து விட்டால், சந்தோஷத்துடன் உரத்த குரலில் கூறுவாள்:

'ஓ.... நம்ம சார் வந்து விட்டார்.'

படிக்கக் கூடிய புத்தகத்தைக் கொண்டு வந்து தருவது அவள்தான். கடந்த நாளன்று சொல்லித் தந்த பகுதிகளிலிருந்து ஏதாவது வீட்டுப் பாடங்கள் கொடுத்திருந்தால், அதை ஞாபகப்படுத்துவதும் அவள்தான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

மலை

மலை

September 24, 2012

ஓநாய்

March 5, 2016

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel