Lekha Books

A+ A A-

வாழ்க்கையின் ஒரு பக்கம் - Page 2

இப்படியே நாட்கள் கடந்து சென்றன. ஒரு ஞாயிற்றுக் கிழமை வகுப்பு முடிவடைந்து மற்ற பிள்ளைகள் அனைவரும் போய் விட்ட பிறகும், அவள் எனக்கு அருகில் சுற்றிச் சுற்றி நின்றவாறு கேட்டாள்:

'சார்!'

'என்ன 'சிரிப்புப் பெட்டகமே!'?

அவள் சிரித்தாள்.

'சிரிச்சியா?'

'பிறகு... சார், என்னுடன் வீட்டிற்கு வரணும்.'

'என்ன விசேஷம்?'

'பிறகு... என்னுடைய பிறந்த நாள்.'

'ஓ! பாயசம் இருக்குமே!'

அவள் மீண்டும் சிரித்தாள்.

அவள் என்னை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றாள். தேவாலயத்திற்கு அருகிலேயே இருந்தது வீடு. கற்களால் ஆன, வெள்ளை பூசாத, பொதுவாகவே நல்ல நிலையிலிருந்த ஒரு ஓலை வேய்ந்த வீடு. வாசலை அடைவதற்கு முன்பே அவள் எனக்கு முன்னால் ஓடி நுழைந்து கொண்டிருந்தாள். சிறிது நேரம் சென்றதும், தாயும் மகளும் ஒன்றாக வாசலில் தோன்றினார்கள். மகளைப் போல தாயும் முகத்தில் புன்னகையை அணிந்திருந்தாள். கறுத்து, நீளமாக வளர்ந்திருந்த கூந்தலும், பெரிய கண்களும் மகளுக்கு இருந்ததைப் போலவேதான் இருந்தன. வயது உண்டாக்கிய வெளி வித்தியாசங்களை நீக்கிப் பார்த்தால், தாயும் மகளும் ஒன்றேதான். நான் உள்ளே நுழைந்ததும், பால்ய வயதிலிருந்து பழக்கமானவனைப் போல சொன்னேன்:

'எங்கே 'சிரிப்பு பெட்டகம்' பாயசம்? கொண்டுவா.'

தாயும் மகளும் சிரித்தார்கள். மகளின் தோளில் கையை வைத்து நெருக்கமாக நிறுத்தி வைத்துக் கொண்டு தாய் சொன்னாள்:

'உண்மைதான். இதைப் போன்ற ஒரு சிரிப்பு பெட்டகத்தைப் பார்க்க முடியாது.'

'அம்மா, உங்களின் மகள் அல்லவா?' என்று நான் கூறவில்லை.

'இந்த பெண் எப்போதும் கூறுவாள். எவ்வளவு நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்!'

'பேபி என்னுடைய மிகவும் திறமை வாய்ந்த சிஷ்யை!'

தாய் தன் மகளை பாசத்துடன் தடவினாள். மகள் பதைபதைப்புடன் சொன்னாள்:

'ம்... சார் விளையாட்டுக்காக சொல்றாரு.'

'இதோ நான் வந்துட்டேன்' என்று கூறியவாறு அன்னை உள்ளே சென்று ஒரு சொம்பில் நீருடன் வந்தாள்.

பிறகு வந்த பாத்திரங்களில் நான்கைந்து வகையான பலகாரங்கள் இருந்தன. சாதாரணமாக கிராமப் பகுதிகளில் பார்க்க முடியாத விசேஷமான பலகாரங்கள்! அவற்றை எனக்கு முன்னால் வைத்து விட்டு, விலகி நின்று கொண்டு அவள் சொன்னாள்:

'இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை பிறந்த நாளன்று விருந்து வைத்துக் கொண்டிருந்தோம். லட்டுக்கு இனிப்பு அதிகமாக இருக்கிறதோ?'

'இல்லை... நான் பெரிய இனிப்பு விரும்பி.'

'இவளோட அப்பா நேர் எதிரானவர்.'

'அப்பாவைப் பார்க்கவில்லையே' என்று எனக்கு கூற வேண்டிய நிலை உண்டாகவில்லை. அவள் சொன்னாள்:

'மதியம் தெரு வரை சென்றார். இப்போ இங்கு வருவார். வீடு எங்கே இருக்குன்னு சொல்லலையே!'

நான் இடத்தின் பெயரைக் கூறியதும், வீட்டின் பெயரைக் கேட்டாள். அதைச் சொன்னதும், வீட்டில் உள்ளவர்களைப் பற்றி கேட்டாள். பிறகு அங்கு உரையாடலின் விஷய எல்லைகள் கடந்து... கடந்து சென்றன. நகரத்தில் சந்தைக்கு மிகவும் அருகில்தான் அவளுடைய குடும்பம் இருக்கிறது. அவள் வாங்கிய நிலமும் வீடும்தான் அது. பாம்பேயில் வேலையில் இருக்கும்போதுதான் அவ்வளவையும் சம்பாதித்திருக்கிறாள். நல்ல சம்பளம் வரக் கூடிய வேலை. பேபியைப் பெற்றெடுத்தது பாம்பேயில் வைத்துத்தான். நல்ல நிலையுடனும் வசதியுடனும் அங்கு வாழ்ந்தாள். அந்த அருமையான காலத்தில் எதிர்காலத்தைப் பற்றி கவனத்தில் வைக்கவில்லை. திடீரென்று அந்த மனிதருக்கு ஒரு உடல் நலக்கேடு உண்டானது. கையில் எஞ்சியிருந்த பணம் முழுவதும் சிகிச்சைக்குச் செலவாகி விட்டது. உடல் நலக்கேடு சிறிது குணமான நேரத்தில் வேலை கையை விட்டு போய் விட்டது. பிறகு ஒரு வேலை கிடைக்கவில்லை. சுருக்கமாக கூறுவதாக இருந்தால் -- செழிப்பிற்கு மத்தியிலிருந்து கஷ்டத்திற்கு அந்த குடும்பம் திடீரென்று வீசி எறியப்பட்டது.

இவ்வளவு விஷயங்களையும் எந்த அளவிற்கு திறமையாக அவள் என்னிடம் கூறி புரிய வைத்தாள்! என்னுடைய கவனம் முழுவதையும் பிடித்து வைக்க அவளால் முடிந்தது. உரையாடிக் கொண்டிருக்கும்போதே கையில் ஒரு பொட்டலத்துடன் அந்த குடும்பத்தின் தலைவர் வந்தார். நோய்வாய்ப்பட்ட அந்த மனிதரின் முகத்தில் நிறைந்து நின்றிருந்த கவலையின் ரேகைகள் தெளிவாகத் தெரிந்தன. மிகவும் குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி அவர் குசலம் விசாரித்தார். 'நான் அதிகமாக பேசாதது அன்பு இல்லாததால் அல்ல' என்ற ஒரு மன்னிப்பும் அந்த முகத்தில் தெரிந்தது. சாயங்காலம் ஆன பிறகுதான் நான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

அது ஒரு பழக்க உறவிற்கான ஆரம்பமாக இருந்தது. பிறகு ஞாயிற்றுக் கிழமைகளுக்காக காத்திருப்பதற்கு எனக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று -- வேத பாட வகுப்பில் கற்பிப்பது. பிறகு... அந்த பழக்கத்தால் உண்டான உறவைப் புதுப்பிப்பது. அந்த வீட்டுடன் என்னை நெருக்கமாக்கிய உணர்வு என்ன என்பதை விளக்கிக் கூறுவது மிகவும் சிரமமான விஷயம். திறமைசாலியான அந்த இளம் பெண்ணின் உருவம் இதயத்தில் பதிந்திருந்தாலும், அந்த உணர்வை காதல் என்று குறிப்பிட நான் தயாரில்லை. ஆனால், காலம் கடந்தபோது.... அவையெல்லாம் பிறகு வரும் விஷயங்கள்...

நாட்கள் கடந்து செல்ல, நண்பனை எதிர்பார்க்காமலே நான் சீக்கிரமே போக ஆரம்பித்தேன். பேபியின் வீட்டில் போய் இருந்து விட்டு, நேரமாகும்போது, அவளுடன் சேர்ந்து தேவாலயத்திற்கு வருவேன். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் எனக்காக அவர்கள் ஏதாவது தனிப்பட்ட முறையில் செய்து வைத்திருக்காமல் இருக்க மாட்டார்கள். ஒரு வாரத்திற்கான செய்திகளையும் தயார் பண்ணி வைத்திருப்பார்கள். பேபியின் 'அப்பா' பல நேரங்களிலும் அங்கு இருக்க மாட்டார். ஒரு தொழிலைத் தேடி அவர் அலைந்து கொண்டிருந்தார். வீடு இருந்த நிலத்தில் கொஞ்சம் விவசாயம் செய்வதற்காக உள்ள இடம் தரிசாக கிடந்தது. எனினும், அந்த தாய் மற்றும் மகளின் முகத்தில் நான் எந்தச் சமயத்திலும் கவலையின் கரிய நிழலைப் பார்த்ததில்லை.

ஒருநாள் நான் செல்லும்போது, வழக்கம்போல அந்த வீட்டின் தலைவர் அங்கு இல்லை. அவர் தூரத்தில் எங்கோ வேலையைத் தேடி சென்றிருந்தார். ஒரு வாரம் கடந்த பிறகே திரும்பி வருவார். பேச்சு முடிந்து நான் வழக்கம் போல விடை பெற்றபோது பேபியின் தாய் சொன்னாள்:

'இன்று இங்கு தங்க வேண்டும் என்று சொன்னால், கேட்பீர்களா?' நாங்கள் தனியாகத்தான் இருக்கிறோம்.'

'நான் வீட்ல சொல்லிவிட்டு வரலையே! அது மட்டுமல்ல -- இன்று ஒரு நாள் தங்கினால், பயம் போய் விடுமா?'

'ஒரு நாள் அல்ல...'

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel