Lekha Books

A+ A A-

வாழ்க்கையின் ஒரு பக்கம் - Page 3

'என்ன?'

'இந்த வீட்டில் எப்போதும் தங்கி, பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களுக்கு ஆசை.'
தொடர்ந்து அவள் அந்த இளம் மகளின் முகத்தையும், என் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள். அப்போது அந்த கண்கள் ஈரமாகி இருந்தனவோ? அவ்வாறு அந்த பழகிய உறவு ஆழமாகி விட்டிருந்த காலத்தில், சிந்திக்காமல் நான் ஊரை விட்டு கிளம்பினேன். அது வாழ்க்கையின் ஒரு திருப்பமாக இருந்தது. வாழ்க்கைக்கு புதிய அர்த்தமும் பார்வையும் உண்டாகின்றன. வயதில் வயது... இல்லாவிட்டால்... அறிவில் தானொரு பெரிய ஆளாக ஆகியிருக்கிறோம் என்ற உணர்வு உண்டாகிறது. பலவிதமான பண்பாடுகளைச் சேர்ந்தவர்களுடன் அன்பு நிறைந்த உறவு ஏற்படுத்துகிறேன். தெரியாமலிருந்த வாழ்க்கையின் நிர்வாணமான பக்கங்களைக் கண்களைத் திறந்து பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. இதயத்தில் கற்பனைகள் வடிவம் எடுக்கவும், உணர்ச்சிகளுக்கு வெப்பம் உண்டாகவும் செய்கின்றன.

அப்படித்தான் அந்தச் சிறிய பெண்ணுக்கு ஒரு புதிய வடிவம் கொடுக்க நான் முயன்றேன். அன்று வரை நினைவில் வந்திராத வடிவம். என் கனவுகளின் மூலம் அவள் வளர்ந்து கொண்டிருந்தாள். நண்பர்களில் பலருக்கும் சொந்தமான காதல் கதைகள் உண்டு. அவர்களுக்கு சிலிர்க்கச் செய்யும் அனுபவங்கள் உண்டு.

அந்த அனுபவ கதைகளை விளக்கி கேட்க நேரும்போது, நான் மொத்தத்தில் நினைப்பது சிரிப்புப் பெட்டகமான அந்த சிறிய பெண்ணைத்தான். எப்போதும் அந்த வீட்டில் தங்குவதைப் பார்க்க விரும்புவதாக பேபியின் தாய் கூறியதற்கான அர்த்தம், அந்த சிந்தனைகளுக்கு பலம் சேர்த்தது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு நான் முதல் தடவையாக விடுமுறையில் திரும்பி வந்தபோது, ஆள் முற்றிலும் மாறிப் போய் தெரிகிறேன் என்று பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் கூறினார்கள். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. அன்று நான் பேபியின் வீட்டிற்குச் சென்றேன். என்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப் போல அந்த தாயும் மகளும் வாசலிலேயே இருந்தார்கள். நான் வியப்புடன் கண்களை அகல விரித்து வைத்துக் கொண்டு நின்றேன். என்னுடைய கனவுகளும் கற்பனைகளும் செயல் வடிவம் பெற்றிருக்கின்றன. உணர்ச்சிகள் நிறைந்த கண்களும் சதைப் பிடிப்பான உடலழகும் கனவில் பார்த்ததைப் போலவேதான்.... தாயும் மகளும் புன்னகைத்தார்கள். நான் கேட்டேன்:

'சிரிப்புப் பெட்டகமே, என்ன விசேஷம்?'

அவள் குலுங்கிக் குலுங்கி சிரிக்கவில்லை. நான் ஆச்சரியப்பட்டேன். அந்தப் பெண் வாய் விட்டு சிரிக்க மறந்து விட்டாளோ? முகத்தைக் குனிந்து கொண்டு, வருத்தம் நிறைந்த குரலில் அவள் கூறினாள்:
'எங்களை மறக்கலையே?'

நான் சொன்னேன்:

'மறந்திருந்தால், இப்போ வருவேனா?'

'ஆமாம்...' - அவளுடைய தாய்.

'என் நினைவில் நீ மட்டும்தான் இருந்தாய்' என்று நான் கூறவில்லை. என் முக வெளிப்பாட்டில் ஒருவேளை, அந்த அர்த்தம் தெரிவதை அவள் கண்டு பிடித்திருப்பாளோ? நான் மொத்தத்தில் உணர்ச்சிகளின் போராட்டத்தில் இருந்தேன். அவளைத் தனியாக பார்க்க வேண்டும். உரையாட வேண்டும். நான் ஒரு பெண்ணைக் காதலிக்க தகுதியுள்ளவனாக ஆகியிருக்கிறேன் என்பதைக் கூற வேண்டும்....

குசல விசாரிப்புகளுக்கு மத்தியில் பேபி காபியுடன் வந்தாள். சமையலறையின் வாசலிலிருந்து காப்பி பாத்திரத்துடன் அவள் நடந்து வரும்போது, அவளுடைய உறுப்புகளின் அசைவுகள் எந்த அளவிற்கு ஆர்வத்தைத் தூண்டக் கூடிய வகையில் இருந்தன! அந்த சரீர வடிவமைப்பிற்கு என்ன கலையழகு! அதைத் தொட்டு, அறிந்து...

சாயங்காலம் நெருங்கியபோது நான் திரும்பி வந்தேன். மீண்டும் வர வேண்டுமென்று பேபியின் தாய் திரும்பத் திரும்ப அழைத்தாள். திரும்பும்போது நான் என்னுடைய கட்டுப்பாடற்ற, புனிதத்தன்மையற்ற சிந்தனைகளுக்கு கடிவாளம் போட முயன்றேன். ஆனால், முடியவில்லை. வாழ்க்கையின் இலட்சியமே அந்த இளம் பெண்ணிடம் மையம் கொண்டிருப்பதைப் போல தோன்றியது.

ஒரு வாரத்திற்குப் பிறகு.... நான் காலையில் வெளியேறுவதற்கு முன்பு பேபியின் தந்தை வீட்டிற்கு வந்தார். எனக்கு அவரை உடனடியாக அடையாளம் தெரியவில்லை. அவர் அந்த அளவிற்கு மெலிந்து போய் காணப்பட்டார். ஒரு தொழிலுக்கான தேடல் அப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். அதிகமாக எந்தவொரு முகவுரையும் இல்லாமல் அவர் தாழ்ந்த குரலில் சொன்னார்:

'ஒரு.... ஒரு பத்து ரூபாய் வேணும். அடுத்த வாரம் திருப்பித் தர்றேன்.'

நான் ஒரு நிமிடம் சிந்தித்துக் கொண்டு நின்றிருந்தபோது, மீண்டும் சொன்னார்:

'வீட்டுத் தேவைக்குத்தான். அடுத்த வாரமே தர்றேன்'

'பரவாயில்லை. இதை திருப்பித் தருவதற்காக கஷ்டப்பட வேண்டாம்.'

'ச்சே! அது முடியுமா?'

நான் பணத்தைக் கொடுத்தேன். விடை பெறும்போது அவர் சொன்னார்:

'அங்கே வருவீங்கள்ல?'

'வர்றேன்.'

அந்த கடனும் அழைப்பும் எனக்குள் ஆர்வத்தை வளர்த்தன. வீட்டை விசாரித்து அவர் என்னைத் தேடி வந்ததும்... ஒருவேளை அவர் தெரிந்தே..... அந்த வீட்டிற்கு அழைக்கப்படும் முதல் விருந்தாளி நானாகத்தான் இருக்க வேண்டும் என்று இருக்கிறதா என்ன? என்னை விட முன்பே ஒரு ஆள்....

அடுத்த ஞாயிற்றுக் கிழமை சாயங்கால நேரத்தில் நான் அந்த வீட்டிற்குச் சென்றேன். அழைக்கப்பட்டால், ஒரு இரவு வேளையை அங்கு செலவிட வேண்டும்.

நான் மாலை நேரத்தில் சென்றதால், அவர்களுடைய முகத்தில் மெல்லிய பதைபதைப்பு தெரிந்ததோ? எனினும், குசல விசாரிப்புகளுக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் குறைவு உண்டாகவில்லை. நான் அறைக்குள் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். மிகவும் அருகிலிருந்த மேஜையின் மீது விளக்கும் புத்தகங்களும் இருந்தன. பேபி அங்கே வந்தாள். என் இதயம் பலமாக துடித்தது. அவள் தனியாக வந்தாள். அவளுடைய தாய் சமையலறையில் வேலைகளில் ஈடுபட்டிருந்தாள். நான் மெதுவாக, மிகவும் மெதுவாக அழைத்தேன்:
'பேபீ...'

அவள் சற்று பதைபதைப்புடன் அழைப்பைக் கேட்டாள்.

'என்ன?'

'இங்கே வா...' (நான் மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தேனோ?)

அவள் மெதுவாக அருகில் வந்தாள். கையை நீட்டினால் தொடலாம் என்ற அளவிற்கு நெருக்கத்தில். அவளுடைய கண்களில் பயம் இருந்தது. நான் அவளுடைய இடுப்பைக் கையால் சுற்றி....

பின்னாலிருந்து என் கையை யாரோ வேகமாக பிடித்தார்கள். நான் அதிச்சியடைந்து திரும்பிப் பார்த்தேன். பேபியின் தாய்! ஒரு நிமிடம்... எதுவுமே நடக்காததைப் போல அவள் சொன்னாள்:

'பேபி, சமையலறைக்குப் போ.'

அவளுடைய கை என் சட்டையின் மீதுதான் இருந்தது. அந்த விரல்கள் அசைந்து கொண்டிருந்தன அல்லவா?

அவள் என் கண்களைப் பார்த்து புன்னகைக்க முயற்சித்தாள். பிறகு கேட்டாள்:

'வருத்தப்படுறீங்களா?'

நான் பேசவில்லை.

'அவள் பெண். சின்ன பொண்ணு. அவளுக்கு ஆழமான சிந்தனை இருக்கணும்.'

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel