Lekha Books

A+ A A-

அந்த பூ மொட்டு மலரவில்லை

andha poo mottu malaravillai

அந்த பூ மொட்டு மலரவில்லை

பாறப்புரத்து

தமிழில் : சுரா

ச்சுலியின் முதல் நினைவு நாளன்றுதான் என்னுடைய முற்றத்திலிருந்த சிறிய பூந்தோட்டத்தில் 'டேலியா' பூத்தது. வெள்ளையும் சிவப்பும் கலந்த இதழ்களைக் கொண்ட ஒரே ஒரு பூ மட்டும்! லில்லியும் ஸினியாவும் பாப்பியும் மலர் மொட்டுகளை நீட்டிக் கொண்டிருந்தன. அவ்வளவுதான்...

வசந்த லட்சுமிக்கு ஆடை அணிவிக்க இயற்கை வெண் மேகங்களால் ஆன பட்டுப் புடவையை நெய்து முடிக்கவில்லை. எனினும், அவளுடைய இனிய நினைவுக்கு முன்னால் எளிமையான ஒரு பரிசை சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதைப் போல 'டேலியா'வில் மட்டும் ஒரு பூ மலர்ந்திருக்கிறது! பச்சுலிதான் அந்த டேலியாவை நட்டு வளர்த்ததே. ஒரு சாயங்கால வேளையில் முளைக்க ஆரம்பித்திருந்த அந்தச் செடியின் கிழங்கை அவள் கொண்டு வந்து தந்ததை நேற்று நடந்ததைப் போல நினைத்துப் பார்க்கிறேன். மூச்சு வாங்க அவள் கதவைத் தட்டி அழைத்தாள்:

'பாபு ஷாப்... !'

நான் கதவைத் திறந்தபோது, பெரிய ஒரு காரியத்தைச் செய்து விட்ட பெருமையுடன் சொன்னாள்:

'ஏ லே' (இதை வாங்கிகோங்க)

'என்ன?'

'டேலியா.'

'எங்கே கிடைச்சது?'

'பிதாஜி நட்டிருந்ததை, நான் யாருக்கும் தெரியாமல் தோண்டி எடுத்துக் கொண்டு வந்துட்டேன்.'

'திருடிட்டே! பச்சுலி, நீ திருடி... அப்படித்தானே?'

'சரிதான்... பிறகு... பாபு ஷாப்... நீங்க சொல்லித்தானே?'

அவளுக்கு அழுகை வந்தது. நான் சொன்னேன்:

'சரி...பரவாயில்லை... இனிமேல் திருடக் கூடாது. தெரியுதா?'

பூந்தோட்டத்தின் மத்தியில் நான் தோண்டி உண்டாக்கிய குழியில் அவளே அந்தச் செடியை நட்டாள். பிறகு வாளியில் நீர் கொண்டு வந்து அதற்கு ஊற்றினாள்.

அவள் கூறியது பொய்யல்ல. நான் சொல்லித்தான் அவள் திருடினாள். இந்த இமயமலைப் பகுதிக்கு நான் வந்து, இரண்டு மாதங்களே ஆகியிருக்கின்றன. வந்தபோது மழைக் காலமாக இருந்தது. இரவு, பகல் வேறுபாடு இல்லாமல் வானம் இருண்டு மூடி கிடந்தது. பத்து அடி தூரத்திலிருக்கும் ஆளைப் பார்க்க முடியாத அளவிற்கு பனி மூடி கிடந்தது. மழை ஆரம்பித்தால், பல நாட்கள் சிறிது கூட நிற்காமல் பெய்து கொண்டே இருக்கும். இப்படியே இரண்டு மாத காலம் கடந்த பிறகு, மழை மேகங்கள் இல்லாமல் வானம் தெளிவானது. அடர்த்தியான நீல நிறத்திலிருந்த வானப் பரப்பிற்குக் கீழே வெண் மேகங்கள் செம்மறியாட்டுக் கூட்டத்தைப் போல மேய்ந்து நகர்ந்து போய்க் கொண்டிருந்தன. தேவதாரும், பைனும் தளிர்களை நீட்டின. காட்டுச் செடிகள் கூட பூக்களை மலரச் செய்து நின்று கொண்டிருந்தன. அதை பார்த்துத்தான் நான் சிறிய பூந்தோட்டத்திற்கு நிலத்தைத் தயார் செய்தேன். அதற்கு முன்பே பச்சுலி எனக்கு அறிமுகமாகி விட்டிருந்தாள். ஸினியாவும், பாப்பியும், ரோஜாவும் தோட்டத்தில் நடப்பட்டிருப்பதைப் பார்த்து அவள் கேட்டாள்:

'பாபு ஷாப்... உங்களுக்கு 'டேலியா' கிடைக்கலையா?'

'இல்லையே, மகளே!'

'எங்களுடைய வீட்டில் பிதாஜி நட்டு வைத்திருக்கிறார்.'

'உங்களுடைய வீட்டில் இருந்து, எனக்கு என்னடீ பிரயோஜனம்?'

'நான் கொண்டு வந்து தர்றேன்.'

'சரி... பார்ப்போம்.'

ஆனால், அவள் அதைக் கொண்டு வந்து தந்தபோது, 'திருடி' என்று அழைத்து நான் அவளை அழ வைக்க முயற்சித்தேன். அதற்கு முன்பும் நான் அவளை அழ வைத்திருக்கிறேன். அலுவலகத்தில் 'சவுக்கிதா'ராக பணியாற்றும் தேவ்சிங்கின் இளைய மகள்தான் பச்சுலி. அலுவலக வளாகத்தில் தோட்டக்காரனின் பணியைப் பார்த்துக் கொண்டிருந்ததும் அவன்தான். தேவ்சிங்கிடம் தினமும் சாயங்காலம் இரண்டு ஆழாக்கு பால் வீதம் நான் வாங்கிக் கொண்டிருந்தேன். அவனிடம் இரண்டு கறவை எருமை மாடுகள் இருந்தன. அலுவலகம் முடிந்து வந்து, ஆடைகளை மாற்றி, கடைவீதி வரை நடந்து போய் திரும்பி வரும் நேரத்தில் பச்சுலி, சொம்பில் பால் கொண்டு வந்து மேஜையின் மீது வைத்திருப்பாள். கொஞ்ச நாட்களாக அவளைப் பார்க்க முடியவில்லை. நான் வெளியே போகும் நேரம் பார்த்து, வருவது... தாமதமாக அலுவலகத்திலிருந்து வந்த ஒரு நாள் பார்த்தேன். ஓசை உண்டாக்காமல் அவள் மெதுவாக நுழைந்து வந்தபோது, பார்த்தது என்னுடைய முகத்தைத்தான். வேகமாக சொம்பை மேஜையின் மீது வைத்து விட்டு, ஓடிச் செல்வதற்கு முயற்சித்தபோது, நான் அழைத்தேன்.

'இங்கே வா.'

அவள் அதிர்ச்சியடைந்து திரும்பி வந்தாள். ஓடிச் சென்றால் பாய்ந்து பிடிக்கக் கூடிய ஒரு மோசமான மிருகத்திற்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறோம் என்பதைப் போல, பயந்து பார்க்கும் கண்களுடன் மெதுவான குரலில் கேட்டாள்:

'க்யாசு பாபு ஷாப்...?' (என்ன பாபு ஸாப்?)

'பெயர் என்ன?'

'பச்சுலி....'

'அப்படின்னா என்ன அர்த்தம்?'

'மாலும் நெ பாபுஷாப்...' (தெரியாது பாபு ஸாப்....)

'என்ன வயசு?'

'மாலும் நெ....'

'குளித்து எத்தனை நாளாச்சு?'

'என்ன?'

'கையை நீட்டு...'

அவள் கூறியபடி செய்தாள்.

'பாரு... உள்ளங்கையில் எவ்வளவு அழுக்கு இருக்கு! முகத்தில், கழுத்தில்... எல்லா இடங்கள்லயும் அழுக்கு. இந்த அழுக்கு கையால்தானே நீ எனக்கு பால் கொண்டு வந்தாய்?'

'....'

'அப்படின்னா, இந்த பாலும் அழுக்காத்தானே இருக்கும்?'

அதை மறுப்பதைப் போல தலையை ஆட்டியவாறு, அவள் மெதுவான குரலில் சொன்னாள்:

'நெ பாபுஷாப்....'

'சரி... அழ வேண்டாம். நாளைக்கு இந்த பாவாடையையும் உடுப்பையும் சுத்தம் செய்து, குளித்து, அழகான பொண்ணா வரணும். என்ன?'

அவள் பதில் கூறவில்லை.

'ம்... சரி... போ... அழக் கூடாது. தெரியுதா?'

மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து அவள் திரும்பி நடந்து சென்றாள். வெளியே சென்றவுடன், தேம்பித் தேம்பி அழுவது காதில் விழுந்தது...

குளித்து, கண்ணில் மை இட்டு, தலை முடியில் பூ சூடி அவள் மறுநாள் வந்தாள். சலவை செய்த ஒரு பாவாடையையும், உடுப்பையும் அணிந்திருந்தாள்.

எனினும், என்னைப் பார்த்ததும் பயத்துடன்தான் பார்த்தாள். நான் அழைத்தேன்.

'பச்சுலி, பக்கத்துல வா.'

பயந்து... பயந்து அவள் வந்தாள். நான் சொன்னேன்:

'பஞ்சுலியா இது? ஓ... பூ கூட வச்சிருக்கியே!'

மெல்லிய ஒரு புன்னகை அவளுடைய அதரங்களில் அரும்பி மறைந்தது. பாபு ஷாப் இனி திட்டுவேனா?

'என்ன பூ, பச்சுலி?'

'குலாப்' (ரோஜா)

'வாசனை இருக்குதா?'

அவள் கூந்தலில் சொருகியிருந்த பூவை எடுத்து, என்னை நோக்கி நீட்டினாள்.

'நல்ல வாசனை இருக்கே!'

'உடுப்பும், பாவாடையும் புதியதா?'

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel