Lekha Books

A+ A A-

அந்த பூ மொட்டு மலரவில்லை - Page 2

andha poo mottu malaravillai

'கடந்த வசந்த பஞ்சமிக்கு 'படா பய்யா' வாங்கிக் கொடுத்தது.'

'குளிக்க வைத்து, கண்ணுக்கு மை இட்டது யாரு?'

'தீதி...' (அக்கா).

'அப்படின்னா, இனிமேல் தினமும் இப்படி சுத்தமா வருவாயா?'

அவள் கூந்தலில் சொருகியிருந்த பூவை எடுத்து என்னை நோக்கி நீட்டினாள்.

'ம்...'

'குளித்து, கண்ணுக்கு மை இட்டு, முகத்தில் பவுடர் பூசணும். பவுடர் இருக்குதா?'

'இல்ல...'

கொஞ்சம் பவுடர் மீதமிருந்த ஒரு டப்பாவை நான் அவளுக்குக் கொடுத்தேன். ஆச்சரியத்துடன் அவள் என்னையே கண்களை அகல திறந்து வைத்துக் கொண்டு பார்த்தாள். பாபு ஷாப் இந்த அளவிற்கு நல்ல ஆளா?

நானும் பச்சுலியும் இப்படித்தான் அறிமுகமானோம். அதிக பட்சம் போனால், அவளுக்கு ஒன்பது வயது இருக்கும். நன்கு வெளுத்த, எடை குறைவான உடலமைப்பு. சிறிய முகத்தில் சந்தோஷமும் கவலையும் நிமிடத்திற்குள் தோன்றிக் கொண்டும் மறைந்து கொண்டும் இருந்தன. பாதம் வரை நீண்டிருக்கும் முரட்டுத்தனமான பாவாடையையும், ஆண் பிள்ளைகள் அணியக் கூடிய சட்டையையும் அவள் அணிந்திருந்தாள். அறிமுகமான பிறகு அவள் பாலுடன் வந்தால், என்னைப் பார்க்காமல் திரும்பிப் போவதில்லை. எப்போதும் ஏதாவது ஒரு புதிய செய்தி கூறுவதற்கு இருக்கும். வாசனை நிறைந்த ஒரு ரோஜா மலரை எனக்கு பரிசாக தருவதற்காக கொண்டு வருவாள். பச்சுலி பள்ளிக் கூடத்திற்குச் செல்லவில்லை. காலையிலும் மாலையிலும் பால் வினியோகிக்கக் கூடிய பணி பச்சுலிக்கு இருந்ததால், பள்ளிக் கூடத்திற்குச் செல்ல நேரமில்லாமல் போய் விட்டது. வேறு குறிப்பிட்டுக் கூறக் கூடிய அளவிற்கு வேலை எதுவுமில்லாத இரண்டு 'சோட்டா பய்யா'க்கள் பள்ளிக் கூடத்திற்குச் செல்கிறார்கள். எனினும், நைனிதேவியைக் கொல்வதற்கு எருமையின் வடிவத்தில் வந்த அசுரனின் கதை அவளுக்கு நன்றாக தெரியும். அதை அவள் என்னிடம் கூறியிருக்கிறாள். கதையின் இறுதியில் தேவியின் திவ்ய சக்தியால் அசுரனைக் கொல்லும் பகுதியை விளக்கிக் கூறி விட்டு அவள் சொன்னாள்:

'பாபு ஷாப்... நீங்க நல்லா கவனிக்கணும். தேவி கோபித்தால்,,, அதற்குப் பிறகு தப்பிக்கவே முடியாது.'

நைனி தேவி இருக்கக் கூடிய இடம் - மலைகளுக்கு நடுவில் இருக்கும் நீர் நிலை. பாதாளம் வரை அதற்கு ஆழம் இருக்கும் என்று பச்சுலி என்னிடம் கூறினாள். ஒவ்வொரு வருடமும் நான்கோ ஐந்தோ ஆட்கள் தேவிக்கு பலியாகிக் கொண்டே இருப்பார்கள். படகு மூழ்கியோ, கால் வழுக்கியோ நீர் நிலைக்குள் விழுந்தவர்கள் யாரும் தப்பித்ததில்லை...

குமயோன் மலைச் சரிவுகள் என்று அழைக்கப்படும் இந்த நிலப் பகுதியில் வசிக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் நைனிதேவியின் மக்கள். அவர்களுக்கு எல்லா வரங்களையும், ஆசீர்வாதங்களையும் தந்து கொண்டிருப்பது தேவிதான். இளவேனிற்காலத்தின் ஆரம்பத்தில், தேவின் ஞாபகத்திற்காக, அவர்கள் ஆர்ப்பாட்டமாக திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்...

பெண்கள் புதிதாக ஆடைகள் அணிந்து கூட்டமாக நடனம் ஆடுவது வசந்த பஞ்சமியன்றுதான். எல்லா செல்வங்களைக் கொண்டும் ஊருக்கு நல்லது செய்த நைனிதேவியைப் போற்றிப் புகழக் கூடிய பாடல்களைப் பாடி, நடனம் ஆடியவாறு அவர்கள் வசந்த காலத்தை வரவேற்பார்கள். சிறப்பு உணவு பதார்த்தங்கள் அடங்கிய விருந்துகளை ஏற்பாடு செய்வார்கள். அன்று தயார் செய்த பலகாரங்களில் ஒரு பகுதியை பச்சுலி எனக்கு கொண்டு வந்து தந்தாள். புதிய மஞ்சள் நிற பாவாடையையும் சட்டையையும் அவள் அணிந்திருந்தாள். 'சிலியாநவ்லி மந்திர'த்திற்கு முன்னால் நடனத்தைக் காண்பதற்காக அவள் என்னை அழைக்கவும் செய்தாள். நான் கேட்டேன்:

'பச்சுலி, உனக்கு நடனம் ஆடத் தெரியுமா?'

'அது எல்லோருக்கும் தெரியுமே!'

'பாட்டு இருக்குமா?'

'ம்....'

'ஒரு பாட்டைக் கேட்கட்டுமா?'

'தனியா பாடுறது இல்ல. வட்டமாக கைகளைக் கோர்த்து நின்று கொண்டுதான்.'

'பச்சுலி, நீ தனியா ஒரு பாட்டு பாடுறதைக் கேட்கிறேனே!'

சிறிது நேரம் அவள் வெட்கப்பட்டுக் கொண்டு நின்றிருந்தாள். வற்புறுத்தியவுடன், மெதுவான குரலில் பாடினாள்:

'பேட் பாகோ பாராமாஷோ

காஃபில் பாகோ சைத்தமேரீச்சைல

ஆல்மணாகீ மந்தாதேவி

ஃபுல்ச்சடோ பாதி மேரீச்சவ்லா'

'சபாஷ்! நல்லா இருக்குதே!'

அவள் வெட்கத்துடன் சிரித்தாள். கிளம்ப தயாரானபோது, நான் கேட்டேன்:

'பச்சுலி, இன்னைக்கு உனக்கு என்ன பரிசு வேணும்?'

'எதுவுமே வேண்டாம், பாபு ஷாப்.'

'விருப்பமானதைக் கேளு...'

'.....'

'பச்சுலீ...'

'ஜீ பாபு ஷாப்.'

'என்ன வேணும்?'

'பாபு ஷாப், உங்கக்கிட்ட எதையும் கேட்கக் கூடாதுன்னு தீதி சொல்லியிருக்காங்க.'

'ஓ... தீதிக்கு என் மேல கோபமா?'

'கோபமில்ல...'

'பிறகு?'

'பாபு ஷாப், 'தேஸி'லிருந்து (மலைப் பகுதிக்குக் கீழே இருக்கும் ஹிந்துஸ்தான் சமவெளியையும், இநதியாவின் மற்ற பகுதிகளையும் 'தேஸ்' (தேசம்) என்றுதான் குமயோனில் இருப்பவர்கள் குறிப்பிடுவார்கள். மலைப் பகுதியை 'பஹாட்' என்று கூறுவார்கள்.) வந்திருக்கும் உங்களிடமிருந்து ஏதாவது வாங்குவது குறைச்சலான விஷயம் என்று தீதி சொன்னாங்க.'

'ஓ!'

ஒரு வெள்ளி ரூபாயை எடுத்து நான் அவளிடம் கொடுத்து விட்டு சொன்னேன்:

'இதை அந்தஸ்து பார்க்கக் கூடிய நீதியிடம் காட்ட வேண்டாம். தெரியுதா?'

படிப்படியாக அவள் அதிக ஓய்வு நேரத்தை உண்டாக்கி, என்னைத் தேடி வந்து பேசிக் கொண்டிருப்பது என்பது வழக்கமான ஒரு விஷயமாகி விட்டது. காலையில் கடை வீதியில் இருக்கக் கூடிய ஆறு பலகாரக் கடைகளுக்கு அவள் பால் கொடுக்க வேண்டும். பிறகு, தீதியுடன் சேர்ந்து 'காகஸ்' நதியின் கரையில் புல் அறுப்பதற்காகச் செல்வாள். சாயங்காலம் நான்கு அலுவலகர்களின் வீடுகளுக்கு பால் கொண்டு போய் கொடுக்க வேண்டும். அது முடிந்த பிறகுதான் என்னைத் தேடி வருவாள். அவ்வளவு வேலைகளையும் செய்வதில் அவளுக்கு புகார் இல்லை. அவற்றைச் செய்வது என்பது தன்னுடைய கடமை என்று அவள் நினைத்துக் கொள்வாள். இந்த மலைப் பகுதியிலுள்ள ஆட்களைப் பொறுத்த வரையில், ஒரு தனித்துவம் அது. தங்களால் செய்யக் கூடியவற்றையும் தாண்டி, வேலை செய்யாத ஒரு குமயோனைச் சேர்ந்த ஆளைப் பார்ப்பதே அரிதான விஷயம். கஷ்டப்பட்டு உழைக்காமல் அவர்களால் வாழ முடியாது. மலைச் சரிவுகளை வெட்டி, சீர் செய்து, பாத்தி அமைத்து அவர்கள் விவசாயம் செய்தார்கள். ஒவ்வொரு வருடமும் பெய்ய கூடிய அதிகமான மழையில் விவசாய நிலங்கள் முழுவதும் அரித்துக் கொண்டு போய் விடுவதும் உண்டு. சிறிதும் அணையாத, நல்லவற்றை எதிர்பார்க்கக் கூடிய அந்த கடின உழைப்பாளிகள் மலையின் வயிற்றில் மீண்டும் விவசாய நிலங்களை உண்டாக்குவார்கள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel