Lekha Books

A+ A A-

டி.க்யூலாவின் முத்தம் - Page 3

D.Culavin-mutham

"ஓ-நெகட்டிவ்"- நான் சொன்னேன். தொடர்ந்து மருத்துவமனையில் தந்த சீட்டை அவருக்கு நேராக நீட்டினேன்.

"ஏய்... அதெல்லாம் தேவையில்ல... நோ ப்ராப்ளம்" -அந்த ஆள் சொன்னார்: "ஓ- நெகட்டிவ் இரத்தமா வேணும்? வெரிகுட். ரொம்ப ரொம்ப நல்ல ப்ளட். சொல்லப்போனா, சிறப்புத் தகுதி கொண்ட ப்ளட். நோ ப்ராப்ளம்..."

எனக்கு அதைக் கேட்ட பிறகுதான் நிம்மதியே வந்தது. அப்போது அந்த மனிதர் என்னைப் பார்த்து கேட்டார்: "மிஸ்டர் கோபி, உங்களுடைய ப்ளட் க்ரூப் என்ன?"

"ஓ-நெகட்டிவ்"- நான் சொன்னேன்.

"எக்ஸலன்ட். வெரிகுட்."- அவர் சொன்னார். பிறகு ஏதோ ரொம்ப நாட்கள் பழகிய மனிதரைப் போல அவர் என் கழுத்தில் கையைப் போட்டார். "எவ்வளவு நல்ல மனிதரா இருக்காரு'- நான் மனதிற்குள் நினைத்தேன். மேலாளரின் நண்பர்கள் என்றால் சும்மாவா?

லிஃப்ட் நின்றது. கதவு திறந்தது. டி.க்யூலா என் தோளில் கையைப் போட்டவாறு என்னையும் அழைத்துக் கொண்டு நடந்தார். கீழே விரிக்கப்பட்டிருந்த பச்சை வர்ண விரிப்பில் என் செருப்பு ஆழமாகப் பதிந்தது. இனிமையான புல்லாங்குழல் இசை எங்கோ இருந்து மெல்லிசாகக் கேட்டுக் கொண்டிருந்தது. "ப்ளட் பேங்க்ன்றது இவ்வளவு பெரிய பிஸினஸ்ஸா என்ன?"- நான் ஆச்சரியப்பட்டு நின்றேன். எல்லாமே பெரிய அளவில் நடந்துகொண்டிருக்கிற ஒரு விஷயம் இது. இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? காரணம் - இரத்தம் இல்லாமல் மனிதன் இருக்க முடியுமா? அப்படிப்பட்ட ஒரு பிஸினஸ் என்ன சாதாரணமாகவா இருக்கும்? நடக்கட்டும். சம்பாதிக்கக் கூடியவன் சம்பாதிக்கட்டும். நம் வாழ்க்கை இப்போது போய்க் கொண்டிருக்கிற மாதிரி போனாலே போதும். இப்படிப் பல விஷயங்களையும் சிந்தித்தவாறு, கீழே இருக்கிற விரிப்பில் செருப்பு போட்டு நடக்கிறபோது கிடைக்கிற சுகத்தை மனதிற்குள் அனுபவித்துக்கொண்டே நான் நடந்து கொண்டிருந்தபோது, டி.க்யூலா ஒரு கதவுக்கு முன்னால் நின்றார். சித்திர வேலைப்பாடுகளால் ஆன மரத்தால் செய்யப்பட்ட கதவில் மின்னுகிற வெள்ளி எழுத்துக்களில் 'சிரஞ்சீவி ப்ளட் பேங்க். இங்கு எல்லாவித இரத்தமும் வாங்கப்படும். விற்கப்படும்' என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. அதற்குக் கீழே சிவப்பு எழுத்துக்களில் 'எனக்குத் தாகமாக இருக்கிறது' என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது. என்ன? நான் நினைத்துப் பார்த்தேன்... சரிதான்! இது இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளாயிற்றே! அது எப்படி இங்கே வந்தது?

டி.க்யூலா ஒரு பெரிய வெள்ளியால் ஆன சாவியால் கதவைத் திறந்தார். பிறகு புன்னகைத்தவாறு சொன்னார்: "மிஸ்டர் கோபி... வெல்கம். நீங்க வேலை பாக்குறதும் பேங்க். இதுவும் பேங்க். நோ ப்ராப்ளம். அங்கே பணம். இங்கே இரத்தம். அங்கே வட்டி இருக்கு. இங்கே இரத்த உறவு மட்டும். வெறும் இரத்த உறவு. வாங்க... வாங்க..."

நான் மகிழ்ச்சியுடன் உள்ளே நுழைந்தேன். 'அவர் சொன்னது சரிதானே?'- நான் நினைத்தேன். இரண்டுமே பேங்குகள்தான். டி.க்யூலா கதவை அடைத்தார். புதிய கதவாக இருந்ததால், அடைக்கும்போது இலேசாக முனகியது. கதவு பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், ஆசாரியின் வேலையில் குறைபாடு இருந்தது. அறைக்குள் நான் முன்பு அனுபவித்தே இராத ஒரு நல்ல நறுமணம் கமழ்ந்துகொண்டிருந்தது. கண்ணாடி போல மினுமினுத்தன டி.க்யூலாவின் மேஜையும், அதற்குப் பின்னால் போடப்பட்டிருந்த சுழல் நாற்காலியும். டி.க்யூலா அதில் உட்கார்ந்தபோது, நாற்காலியில் பலப்பல நிறங்களும் தோன்றித் தோன்றி மறைந்தன. அவர் புன்சிரிப்பு தவழச் சொன்னார்: "இன்னைக்கு இருக்குற தொழில் நுணுக்கங்கள் பலவற்றையும் பயன்படுத்தி நாங்க இந்த பிஸினஸை நடத்திக்கிட்டு இருக்கோம். அதே நேரத்துல ஆயிரக்கணக்கான வருடங்களா இருக்கிற பாரம்பரியப் பெருமையையும் நாங்க காப்பாத்திக்கிட்டு வர்றோம். இதை வாசிச்சுப் பாருங்க." டி.க்யூலா தனக்குப் பின்னால் இருந்த வெள்ளைச்சுவரைச் சுட்டிக்காட்டினார். அங்கே கறுப்பு எழுத்துக்களில் 'மனித இனத்தை ஒன்று சேர்ப்பது இரத்தம். இரத்தத்தால் இணைந்ததை மனிதர்கள் பிரிக்காமல் இருக்க வேண்டும். ஆமென்' என்று எழுதப்பட்டிருந்தது. எழுத்துக்களில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருப்பதைப் போன்று தோன்றுவது மாதிரி சிவப்பு வர்ணத்தில் இரத்தத் துளிகளையும் வரைந்து வைத்திருந்தார்கள். நான் பார்க்கும்போது அதிலிருந்து ஒரு இரத்தத் துளி மெதுவாகக் கீழ்நோக்கி உருண்டு வருவது போல் இருந்தது. அதைப் பார்த்தும், சரியாகப் பார்க்காதது மாதிரி நடித்தேன். வீணாக ஏதாவது சொல்லி, அவரை ஏன் வருத்தத்திற்குள்ளாக்க வேண்டும் என்று நினைத்ததே காரணம். சுமாரான அறிவைக்கொண்ட யாரோ ஒரு பெயிண்டர் சிறிது நேரத்திற்கு முன்புதான் அதை வரைந்திருப்பார் போலிருக்கிறது! "நல்ல பெயிண்டர்களும், ஆசாரிமார்களும் இப்போ வளைகுடா நாடுகள்லதானே இருக்காங்க!"- நான் எண்ணிப் பார்த்தேன். இப்போது அதை நினைத்துப் பார்த்து என்ன பிரயோஜனம்? டி.க்யூலா திடீரென்று உதடுகளை அகல விரித்துச் சிரித்தார். அவர் சொன்னார்: "மிஸ்டர் கோபி.... ஒரு ப்ளட் பேங்கிற்கு இப்பத்தான் முதல் தடவையா நீங்க வர்றீங்கன்னு நினைக்கிறேன். சரியா?"

நான் சொன்னேன்: "ஆமா... மொத்தம் நாலு குப்பி இரத்தம் வேணும். அதுக்கு எவ்வளவு பணம் வேணும்?"

அப்போது டி.க்யூலா சிரித்துக் கொண்டுதான் இருந்தார். பார்க்க வாட்டசாட்டமாக அவர் இருந்தாலும் அவரிடம் இருக்கும் ஒரு குறைபாட்டை நான் கவனிக்கவே செய்தேன். அவர் சிரிக்கும்போது, மேல் வரிசையில் இரண்டு பக்கங்களிலும் இருந்த இரண்டு பற்களுக்கு சராசரியைவிட கொஞ்சம் நீளம் அதிகமாக இருந்தது. அந்தப் பற்கள் கீழே இருக்கும் தோல் பகுதியைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவர் சொன்னார்: "மிஸ்டர் கோபி.. இரத்தத்துக்கு என்ன விலைன்ற விஷயத்தை பிறகு சொல்றேன். வாங்க முதல்ல நாம இரத்த சேமிப்பு அறைக்குப் போவோம்." டி.க்யூலா எழுந்து என்னையும் உடன் அழைத்துக்கொண்டு நடந்தவாறு ஒரு சுவரை நோக்கி கையைக் காட்டினார். அங்கே திடீரென்று ஒரு கதவு புகைமண்டலத்துக்கு நடுவிலேயோ, பனிமண்டலத்துக்கு மத்தியிலேயோ திறந்தது. அங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமுமே எனக்கு வினோதமாகத் தெரிந்தது. நான் நினைத்துப் பார்த்தேன்: "எல்லாம் பணம் செய்யிற வேலை. எது எப்படியோ... நல்ல ஒரு பார்ட்டியைத்தான் மேனேஜர் பிடிச்சிருக்காரு. நாங்கள் உள்ளே சென்ற அறையின் அளவை என்னால் கணக்குப் போட முடியவில்லை. காரணம்- சபரிமலைக்குப் போகிற பாதை முழுக்க மூடுபனி மூடியிருப்பதைப் போல் அந்த அறை முழுவதும் ஒரு வெள்ளைப் புகைமயமாக இருந்தது. இருந்தாலும் ஒரு பெரிய ஹாலில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது. மூடுபனிக்கு நடுவில் சவப் பெட்டிகள் வைக்கப்பட்டிருப்பது மாதிரி, பெரிய பெட்டிகள் அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை மிகவும் கஷ்டப்பட்டு நான் பார்த்தேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel