
அப்போதுதான் நான் பார்த்தேன். அவரின் உடம்பில் இருந்த கவுனை அவர் முழுமையாக நீக்கி இருந்தார். அவர் உடம்பில் மருந்துக்குக்கூட துணி எதுவும் இல்லை. முகத்தில் இருந்த சிவப்பு உடம்பில் இல்லை. அவரின் உடம்பு சுருங்கிப் போயிருந்தது. சிரித்தவாறு இரண்டு கைகளையும் எனக்கு நேராக நீட்டிக் கொண்டிருந்தார் அந்தக் கிழட்டு மனிதர்.
நான் சொன்னேன்: "மிஸ்டர் டி.க்யூலா... எனக்கு இந்த மாதிரியான விஷயங்கள்ல விருப்பமே இல்ல... இரத்தம் இருந்தா தாங்க. இல்லாட்டி சொல்லிடுங்க. நான் வேற எங்கேயாவது போயி வாங்கிக்கிறேன்..."
டி.க்யூலா நடுங்கிக் கொண்டிருந்தார். அவர் ஒருவித வெறியுடன் என்னையே பார்த்தவாறு நின்றிருந்தார். உண்மையிலேயே எனக்கு வெட்கமாக இருந்தது. 'சில ஆண்களோட பார்வையைப் பார்த்தா பொம்பளைகளுக்கு இப்படித்தான் தோணும்"- நான் மனதிற்குள் நினைத்தேன். திடீரென்று அவர் எனக்கு நேராக ஓடிவந்தார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்கும் பொழுது, அவர் என்னைக் கட்டிப்பிடித்து மீண்டும் என் கழுத்தின்மீது தன் முகத்தைத் தாழ்த்தினார். நான் பதறிப்போய் விலகி நின்றேன். அப்போது அவர் என் கால்களில் விழுந்து, தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். 'கஷ்டம்!'- நான் நினைத்தேன். ஒரு மனிதனின் நிலைமை இப்படியா இருக்க வேண்டும்? இந்தப் பணமும் பகட்டும் இருந்து என்ன பிரயோஜனம்?' நான் நினைத்தேன்: 'உஷாவுக்காகத்தானே இதெல்லாம்? பரவாயில்ல...' நான் அந்த ஆளை அழைத்தேன்: "மிஸ்டர் டி.க்யூலா... பரவாயில்ல... வாங்க. ஆனா, இங்கே வாங்குற இரத்தத்துக்கு க்யாரண்டி இருக்குல்ல?" டி.க்யூலா எழுந்து தன் இரண்டு கைகளையும் பிடித்தவாறு சொன்னார்: "எல்லாக் காலத்துக்கும் பொருந்துகிற மாதிரி க்யாரண்டி.... மிஸ்டர் கோபி. மரணமே இல்லாத க்யாரண்டி..." நான் கட்டிலில் படுத்தேன். டி.க்யூலாவின் முகம் என் முகத்திற்கு நெருக்கமாக வருவதும், ஊசி குத்துவதைப் போல சுகமான இரண்டு இலேசான வேதனைகள் என் கழுத்தில் உண்டாவதும் மட்டும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு நான் சுய நினைவை இழந்துவிட்டேன்.
பிறகு... இரத்தம் இருந்த பெட்டியை என் கையில் எடுத்துத் தருகிறபோது, டி.க்யூலா என்னிடம் சொன்னார்: "மிஸ்டர் கோபி... என் நண்பரே... இனியும் நீங்க இங்கே வரணும்."
"வர்றேன்"- நான் சொன்னேன்.
"நாம இரத்த உறவுக்காரங்களாயிட்டோம். ஞாபகத்துல வச்சுக்கோங்க"- அவர் சொன்னார். "ஆமா"- நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்து நான் சொன்னேன். உண்மையிலேயே அது ஒரு சுகமான அனுபவம்தான்! நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்: "எல்லாம் விஞ்ஞானத்தோட வளர்ச்சிகள்! இரத்தம் தர்றது இவ்வளவு சுகமான அனுபவம்னா, என்னோட முழு இரத்தத்தையும் தர்றதுக்கு நான் தயாராக இருந்தேன்."
நான் மருத்துவமனையை அடைந்தபோது, அத்தை கட்டிலில் குறட்டைவிட்டு உறங்கிக் கொண்டிருந்தாள். பெரிய மாமா ஒரு நாற்காலியில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். உஷாவுக்கு இன்னும் பிரசவம் ஆகவில்லை. உஷா நான் எப்போதும் தொட்டுப் பார்க்க ஆசைப்படும் அவளின் அழகான கண்களால் மேற்கூரையைப் பார்த்தவாறு படுத்துக் கிடந்தாள். என்னைப் பார்த்ததும் அவள் சொன்னாள்: "யாரு... கோபியா? நான் முரளின்னு நினைச்சேன்..."
"இரத்தம் கிடைச்சிடுச்சு, உஷா-"- நான் சொன்னேன்.
அத்தை கண்களைத் திறந்து எங்கேயோ பார்த்தவாறு சொன்னாள்: "இரத்தமா?" அடுத்த நிமிடம் குறட்டைவிடத் தொடங்கினாள்.
உஷா சொன்னாள்: "மீதி காசை அலமாரியில வச்சிரு கோபி. இரத்தத்தை சிஸ்டர்ஸ் கையில கொடுத்திடு..."
நான் கொண்டு போனது பெரிய மாமாவின் பணம் இல்லை என்பதையும், என் சொந்தப் பணத்தைத்தான் என்பதையும், அதைக் கொஞ்சம்கூட செலவழிக்காமல் இரத்தம் வாங்கி வந்திருக்கிறேன் என்பதையும் நான் உஷாவிடம் கூறவில்லை. அதைச் சொல்லி என்ன ஆகப் போகிறது?
என் பல் நுனியை நாக்கால் தொட்டு ரசித்தவாறு நான் உஷாவின் வெளுத்து சிவந்த கழுத்தின் அழகைப் பார்த்த நின்றிந்தபோது, டி.க்யூலா என் இரத்தத்தை எடுக்கும்போது உண்டானதுபோல ஒரு சுகம் எனக்கு கால் முதல் தலை வரை உண்டானது. இலேசாக உணர்ச்சிவசப்பட்ட நான் என் மனதிற்குள் கூறினேன்: 'என் அன்பு உஷா... உன்கிட்ட அந்த சுகம் எப்படின்னு என்னால சொல்ல முடிஞ்சதுன்னா, நீ ஒரு நாள் கூட அந்த முரளியோட முகத்தைப் பார்ப்பியா?'
தொடர்ந்து பெரிய மாமாவின் பல் இல்லாத வாயைப் பார்த்தவாறு நான் எனக்கு மட்டும் கேட்கிற மாதிரி சொன்னேன்: "பெரிய மாமா, போய்த் தொலைங்க... இரத்த பந்தத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?"
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook