Lekha Books

A+ A A-

அடிமை - Page 2

adimai

ஒருநாள் நான் ஒரு திரைப்பட அரங்கிற்கு முன்னால் நின்றிருந்தேன். ஒரு ஷெவர்லெ கார் எனக்கு அருகில் வந்து நின்றது. அவன் காரிலிருந்து இறங்கினான். தன்னுடைய மனைவியை கைகொடுத்து இறங்க உதவினான். அங்கு நின்றிருந்த யாரும் அவனைப் பார்க்கவில்லை. எல்லாரும் அவனுடைய தேவதையையொத்த அழகான மனைவியையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவன் திரும்பி என்னைப் பார்த்தான். பிறகு என்ன நினைத்தானோ அடுத்த நிமிடம் தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொண்டான். அப்போது அவனுடைய முகத்தில் தெரிந்த உணர்ச்சிகள் என்ன என்பதை என்னால் சரியாக கவனிக்க முடியவில்லை.

அவனுடைய பேரழகியான மனைவி அவன் தோளைத் தட்டியவாறு காருக்குள் எதையோ சுட்டிக் காட்டினாள். சொன்ன சொல்படி நடக்கும் கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரனைப் போல் அவன் அவளுடைய ‘வேனிட்டி பேக்’கை எடுத்து அவள் கையில் தந்தான். அவள் முன்னால் நடக்க, அவளுக்குப் பின்னால் நடந்தான். அவர்கள் திரையரங்கிற்குள் நுழைந்தார்கள்.

அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்தும், தனித்தனியாகவும் காரில் ஏறிப்போவதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன். அவன் இருக்கும் துறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு துறையுடன் சம்பந்தப்பட்டிருக்கும் நான் அதன் பின்னால் அவனைப் பார்க்கவே இல்லை. அவனைப் பற்றி நான் நினைக்கவும் இல்லை.

கொஞ்சமும் எதிர்பார்க்காததும், ஆச்சர்யம் தரக்கூடியதாகவும் இருந்தது இந்தச் சந்திப்பு. நான் அவனுடைய முகத்தை உற்றுப் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். உதட்டில் இருந்த சிகரெட்டை தூக்கியெறிந்து விட்டு, இன்னொரு சிகரெட்டை எடுத்து அவன் உதட்டில் வைத்தான்.

“அந்தக்காலம்...! மீண்டும் கடந்த காலத்துக்கு நம்மால் பயணம் செய்ய முடியுமா என்ன...”

நான் அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. ஐன்ஸ்டீனின் நான்காவது பரிமாணம் தியரியைப் பற்றி சொன்னால் என்ன என்று என் மனதிற்குள் நினைத்தேன். காலத்திற்கு அப்படி கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று எதுவும் கிடையாது என்று நான் கூறினால் இந்த விஷயத்தை அவனால் புரிந்து கொள்ளமுடியுமா என்று நினைத்து எதுவுமே பேசாமல் மவுனமாக இருந்தேன்.

என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவன் இலேசாக புன்சிரிப்பு தவழச் சொன்னான்; “அப்போ நீங்க ஒரு வீரரா இருந்தீங்க.”

“இப்பவும்தான்” - என்னையும் அறியாமல் நான் இப்படி சொன்னேன்.

“நான் அப்போ...”

“உணர்ச்சிகரமான ஒரு கவிஞரா இருந்தீங்க” இதுவும் என்னை மீறி நான் சொன்னதுதான்.

“இப்போ...”

“இப்போ...”

“இப்போ நான் ஒரு சைக்கிள் மாதிரி ஆயிட்டேன்.”

“என்ன? சைக்கிள் மாதிரியா?”

“ஆமா...என் வாழ்க்கை கிட்டத்தட்ட ஒரு சைக்கிளோட வாழ்க்கை மாதிரியே ஆயிடுச்சு.”

“சைக்கிளுக்கு வாழ்க்கைன்னு எதுவுமே இல்லையே!”

“எனக்கும் வாழ்க்கை இல்ல. மற்றவர்கள் சவாரி செய்றதுக்கு உபயோகப்படுற ஒரு இயந்திரம்தான் நான்” - அவன் குலுங்கிக் குலுங்கி சிரித்தான்.

எதற்காக அவன் அப்படிச் சிரிக்க வேண்டும்? உணர்ச்சிகரமாக கவிதைகள் பாடும் ஒரு கவிஞன், மற்றவர்கள் சவாரி செய்யப் பயன்படுத்தும் ஒரு இயந்திரமாக மாறியதற்காக உண்மையிலேயே அழத்தானே வேண்டும்!

அவன் தொடர்ந்தான்; “நான் ஒரு விலையுயர்ந்த சைக்கிள். அழகான சைக்கிள். விலை அதிகமாக இருந்தாலும் இல்லைன்னாலும், அழகா இருந்தாலும் இல்லைன்னாலும் சைக்கிளால ஒரே ஒரு பயன்தான்... அது மற்றவர்கள் சவாரி செய்ய உதவும்” இதைச் சொல்லிவிட்டு அவன் மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தான்.

“மதிப்பு அதிகமா இருந்தாலும் இல்லைன்னாலும் ஒரு வேலை பார்க்கும் மனிதன்- ஒரு அதிகாரி ஒரு சைக்கிள்தான்... இல்லையா?” - நான் ஆர்வத்துடன் கேட்டேன்.

அவன் அதற்கு பதிலெதுவும் கூறவில்லை. நான் கேட்டேன்; “உங்க மனைவி நலமா இருக்காங்கல்ல?”

“சாந்தம்மா நல்ல சுகமா இருக்கா. அவளோட சுகத்துக்காகத்தான் நான் வாழறதே. அவளுக்கு எந்த கவலையும் வர நான் விடமாட்டேன். அதுதானே சரி?”

“சைக்கிளோட தர்மம் அதுவாக இருக்கலாம்.” - நான் வந்த சிரிப்பை   அடக்கிக்கொண்டு கேட்டேன்; “உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?”

“நாலு. மூணு பெண் குழந்தைங்க. ஒரு ஆண். ரெண்டு பெண் குழந்தைகளும் ரெண்டு ஆண் குழந்தைகளும் இருந்திருந்தா நல்லா இருக்கும், இல்ல?”

“அப்படியா?”

“நாலுமே பெண்ணா இருந்தா நல்லா இருக்கும்னு சாந்தம்மா விருப்பப்பட்டா...” - அவன் இதயத்திலிருந்து ஒரு சிரிப்பு சிரித்தான். உதட்டில் இருந்த சிகரெட்டை தூரத்தில் எறிந்துவிட்டு, இன்னொரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்.

தேநீர் வந்தது. நான் கேட்டேன்; “உங்களுக்கு தேநீர் பிடிக்குமா? காப்பியா?”

“தேநீர்தான். ஆனால் வீட்டுல சாப்பிடுறது காப்பிதான்.”

“அதென்ன அப்படி?”

“சாந்தம்மாவுக்கு காப்பிதான் ரொம்பவும் பிடிக்கும்.”

அவன் மிகவும் ஆர்வத்துடன் தேநீரைக் குடித்தான். இடையில் சிகரெட் பிடிக்கவும் தவறவில்லை.

நான் கேட்டேன்; “இன்னும் கொஞ்சம் தேநீர் கொண்டு வரச் சொல்லட்டுமா?”

“இப்போ இது போதும்... இப்படியே தினந்தோறும் சிகரெட் பிடிக்கவு ம், தேநீர் குடிக்கவும் முடிஞ்சா, எவ்வளவு நல்லா இருக்கும்.” பிரகாசம் குறைந்து காணப்பட்ட அந்தக் கண்களில் இதைச் சொன்னபோது உயிர்ப்பு தெரிந்தது.

“இங்கே வந்தா, சிகரெட் பிடிக்கலாம். தேநீரும் குடிக்கலாம்.”

“நான் இப்போ இங்கே இருக்குற விஷயமே சாந்தம்மாவுக்குத் தெரியாது.”- அவன் முகத்தில் இனம்புரியாத ஒரு நிழல் படர்ந்தது.

“தெரியாம வந்திருக்கீங்களா?”- நான் சிரித்தேன்.

“நான் யார் வீட்டுக்கும் போறதை பொதுவா சாந்தம்மா, விரும்புறது இல்ல...”

“பிறகு எதுக்கு இங்கே வந்தீங்க?”

“வந்த விஷயமா? இதற்குத்தான்... சிகரெட் பிடிக்க, தேநீர் குடிக்க... பிறகு கடந்த காலத்தைப் பற்றி அசை போட்டுப் பார்க்க...” உதட்டிலிருந்த சிகரெட்டின் மீதியை வீசி எறிந்துவிட்டு, அவன் இன்னொரு சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்து எரிய விட்டவாறு கேட்டான்.

“நீங்க சிகரெட் பிடிக்கிறது இல்லியா?”

“இல்ல... எனக்கு வெற்றிலை போடத்தான் பிடிக்கும்.”

“நான் சிகரெட் பிடிக்கிறது சாந்தம்மாவுக்கு கொஞ்சம்கூட பிடிக்காது.”

“அவங்களுக்கு விருப்பமில்லாததைப் பண்ணிட்டு, அவங்ககிட்ட போறப்ப...”

“சாந்தம்மாக்கிட்ட நான் எதையும் சொல்ல மாட்டேன்.” - அவன் முகத்தில் இனம்புரியாத ஒரு பயம் நிழலாடியது. அவன் எழுந்தான்.

“நான் போகட்டுமா? நான் நாளைக்கு வருவேன். நான் திரும்பவும் தேநீர் குடிக்கணும். சிகரெட் பிடிக்கணும். கடந்த காலத்தைப் பற்றி அசைப்போட்டுப் பார்க்கணும்.” - அவன் முற்றத்தில் இறங்கி நடந்தான்.

கேட்வரை அவனுடன் சேர்ந்து போனேன். நான் கேட்டேன். “கார் இல்லாம எப்படிப் போவீங்க?”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel