Lekha Books

A+ A A-

அடிமை - Page 3

adimai

“நான் இன்னைக்கு நடந்தே போறதா இருக்கேன்.”

“சரிதான்...”

“நான் நடக்குறது சாந்தம்மாவுக்குப் பிடிக்காது. இருந்தாலும் நான் நடந்துதான் போகப்போறேன்.”

“நாளைக்கு வருவீங்களா?”

“கட்டாயம் வருவேன்.”

அவன் சாலையில் இறங்கி நடந்தான். நான் கேட்டை அடைத்தேன். வராந்தாவிற்கு மீண்டும் வந்து நாற்காலியில் அமர்ந்தேன்.

அடுத்த நாள் சாயங்கால நேரம் ஆனபோது நான் அவனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன். அவன் பிடிக்கிற சிகரெட்டை கடையில் வாங்கிவரச் செய்து வைத்திருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இரண்டு மூன்று தடவைகள் தேநீர் கொண்டு வரவும் முன்கூட்டியே சொல்லி வைத்துவிட்டேன். என்னவெல்லாம் பேசுவது என்று மனதிற்குள் சில விஷயங்களை எண்ணி வைத்திருந்தேன்.

ஐந்தரை மணி ஆனபோது கார் கேட் அருகில் வந்து நின்றது. அவன் காரை விட்டிறங்கினான். அவன் கேட்டைக் கடந்து வருவதற்கு முன்பே, கார் அந்த இடத்தை விட்டு நீங்கியது.

“நான் நேற்று எந்தவித கவலையும் இல்லாம நிம்மதியா உறங்கினேன்”- இப்படி மகிழ்ச்சி ததும்ப சொன்னவாறு அவன் வராந்தாவில் தன் பாதத்தை வைத்தான். எனக்கு நேர் எதிராக நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவன் தொடர்ந்தான்.

“தேநீர் அருந்தினேன். சிகரெட் பிடிச்சேன். நடந்தேன். கடந்த கால நினைவுகளில் மூழ்கிப் போய் நான் உறங்கினேன்.” அவன்முகத்தில் ஒரு முழுமையான நிறைவின் வெளிப்பாடு தெரிந்தது.

நான் சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து அவன் கையில் தந்தேன்.

அவன் கேட்டான்; “எனக்காகவே இதை நீங்க வாங்கி வைச்சீங்களா?”

“ஆமா... என் வீட்டுக்கு வந்து உங்க பாக்கெட்ல கையை விட்டு சிகரெட்டை எடுத்து நீங்க பிடிக்குறதுன்றது அவ்வளவு நல்ல விஷயம் இல்லியே!”

தேநீர் வந்தது. நாங்கள் அதைக் குடித்தோம். அவன் அவ்வப்போது சிகரெட்டை உதட்டில் வைத்து ஊதினான்.

அவன் மாணவனாக இருந்தபோது எழுதிய கவிதையின் சில வரிகளை, தன்னையும் மீறி அவன் அதைப் பாடியிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டே நான் பாடினேன். அந்தக் கவிதையின் கருத்து இதுதான்.

‘அவளும் நானும் சேர்ந்து பாடல்கள் இசைத்து உலகமெங்கும் சுற்றித்திரிந்தோம். இருவரும் இணைந்து பல இடங்களிலும் அலைந்து பூக்களைச் சேகரித்தோம். எவ்வளவு மலர்கள் இருந்தாலும், அவளுக்குத் திருப்தி உண்டாகவேயில்லை. அவளுடைய பூக்கூடை நிறையவே இல்லை. அவள் என் தோளைத் தட்டினாள். ஆகாயத்தை விரலால் சுட்டிக் காட்டினாள். நான் ஆகாயத்தை நோக்கி உயர்ந்தேன். ஆகாயத்தில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருக்கின்றன. கார்மேகங்களையும், வெண் மேகங்களையும் கடந்து ஆகாயத்தின் எல்லையற்ற உயரத்தை நோக்கி போய்க் கொண்டே இருந்தேன் நான். அப்படி நான் உயரத்தில் செல்லச் செல்ல, அவளை மறந்தேன். அவள் பூக்கூடையையும் மறந்தேன். இப்போது நான் கீழே பார்த்தேன். பூமி கருகுமணி அளவிற்கு மிகவும் சிறியதாகத் தெரிந்தது. என் பார்வையிலிருந்து எல்லாமே மறைந்தன. நான் என்னையே மறந்து போனேன். எல்லையற்ற தன்மையுடன் இரண்டறக் கலந்து விட்டேன்.’

நான் கவிதையைப் பாடிக் கொண்டிருக்கும் போது, அவனைக் கடைக்கண்களால் பார்த்தேன். அவன் கண்களில் நீர் அரும்பி வழியத் தொடங்கியது. நான் கவிதை பாடுவதை நிறுத்தினேன். உதட்டின் அருகில் நின்றிருந்த கண்ணீர்த் திவலைகளைக் கையால் துடைத்தவாறு அவன் சொன்னான்;

“இப்பவும்- இப்பவும் அவளுக்குத் திருப்தியில்லை. இப்பவும் அவளின் பூக்கூடை நிறையவில்லை.”

“ஆகாயத்துல இருக்கிற நட்சத்திரங்களைக் கொண்டு வந்து கொடுத்தா...?” - நான் கேட்டேன்.

“அது அவளுக்குத் தேவையில்லை. ஆகாயத்துக்கு உயர்ந்து போக என்னை அவள் விடமாட்டா...” கண்ணீர் வழிய அமர்ந்திருந்த அவன் ஆகாயத்தை உயர்ந்து பார்த்தவாறு தொடர்ந்தான்;

“அவ மட்டும் என்னை வானத்துல உயர்ந்து போக அனுமதிச்சா, கார்மேகங்களையும், வெண்மேகங்களையும் தாண்டி ஆகாயத்தின் எல்லையற்ற தன்மையை நோக்கி என்னை போக அவள் அனுமதிச்சா...”

“அனுமதியில்லாம உங்களால உயரத்துக்குப் போக முடியாதா என்ன?”

அதைக் கேட்டதும் அவன் கண்களின் ஆழத்தில் சிறகற்று எந்தவித அசைவுமில்லாமல் கிடந்தன அவனுடைய உணர்ச்சிகள். அந்தக் கண்களில் திடீரென்று ஒரு பிரகாசத்தின் ரேகை தெரிந்தது. நன்றாகக் கேட்கும்படியான குரலில் அவன் சொன்னான்.

“அனுமதி தரலைன்னாலும் நான் ஆகாயத்தின் எல்லையற்ற உயரத்துக்கு நிச்சயம் போவேன்” - கம்பீரமாக கர்ஜிக்கும் குரலில் அவன் தொடர்ந்தான்.

“அவளும் அவளோட பூக்கூடையும்... மறக்கணும். அவளையும் அவளோட பூக்கூடையையும் நான் மறக்கணும். மறக்கணும்... ஆகாயத்தோட எல்லையற்ற உயரத்துக்கு நான் பறக்கணும்... பறந்து நான் பாடணும்.”

இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த உற்சாகமான, உணர்ச்சிமயமான அந்தக் கண்களை பல வருடங்களுக்குப் பிறகு நான் சில மணித்துளிகள் நேரத்துக்குப் பார்த்தேன். திடீரென்று அந்தக் கண்களில் ஒருவித பயம் வந்து ஒட்டிக் கொண்டது. சிறகற்ற உணர்ச்சி அசைவில்லாமல் கிடக்க ஆரம்பித்தது. அவன் தன்னுடைய தலையைக் குனிந்து கொண்டான். மீண்டும் அவனுடைய கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்தது.

“அன்று நான் ஒரு சுதந்திரமான மனிதனாக இருந்தேன். அப்போ நான் அழிவற்ற அழகின் காதலனா இருந்தேன். அப்போ நான் நிரந்தர உண்மையைத் தேடி எல்லையற்ற ஆகாயத்தில் பறந்து திரிஞ்சேன். இப்போ... இப்போ...?”

“ஆமா, நீங்கள் இப்போ கவிதை எதுவும் எழுதுறது இல்லையா?” - நான் மெதுவான குரலில் கேட்டேன்.

“கவிதையா? அவளின்... அவளின்... உதடுகள் என்னோட உதடுகளைத் தொட்டப்போ, என்கிட்ட இருந்த கவிதை என்னோட மூக்கு வழியா வெளியே பறந்து போயிடுச்சு...”

“நீங்க கவிதை பாடுறது இல்லியா?”

“நான் கவிதை பாடினா, அவளோட உதடுகள் என்னோட உதடுகளைத் தொடும். அதோட என்னோட பாட்டு ஒரு முடிவுக்கு வந்திடும்.”

அவன் தன்னுடைய தலையைக் குனிந்துகொண்டு எதுவும் பேசாமல் மௌனமாக உட்கார்ந்திருந்தான். இப்படியே சில நிமிடங்கள் ஓடியபிறகு, அவன் என்ன நினைத்தானோ, வேகமாக இருந்த இடத்தை விட்டு எழுந்தான்.

“நண்பரே, நான் போகட்டுமா?”

“ஏன்? அப்படி என்ன அவசரம்?”

“நான் ஒரு கடன்காரன். என்றைக்கும் தீராத கடன் இருக்கு...”

“தீராத கடனா? அப்படியொரு கடன் இருக்கா என்ன?”

“அவளோட அப்பா செலவழிச்ச பணத்தை வச்சித்தான் நான் பெரிய பெரிய பட்டங்களெல்லாம் படிச்சு வாங்கினது. உண்மையிலேயே அது ஒரு தீராத கடன்தான். பிறகு... பிறகு... அவளோட அழகு! அவளோட உடல் வனப்பு!”

கட்டுப்படுத்த முடியாத வெறுப்புடன் நான் சொன்னேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel