Lekha Books

A+ A A-

பாத்தும்மாவின் ஆடு - Page 5

paathummaavin aadu

நான் சொன்னேன்: “டேய் அபு, ஹனீஃபாவோட கையில பணம் எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன்.” அபு மெதுவான குரலில் சொன்னான்:

“ஹனீஃபா அண்ணன் பயங்கர கஞ்சன். கையில நிறைய பணம் இருக்கு.”

“போடா...”

அவன் ரப்பர் வில்லை எடுத்துக்கொண்டு சில உருண்டையான கற்களுடன் பறவைகளை வீழ்த்துவதற்காகச் சென்றான்.

“வா ஆடே, அவன் ஒண்ணும் பண்ண மாட்டான்” என்று கூறியவாறு ஆட்டுடன் பாத்தும்மா இந்தப் பக்கம் வந்தாள். அருகிலிருந்த நிலத்தில் அபு நிற்பதைப் பார்த்து பாத்தும்மா சொன்னாள்: “டேய் அபு, என்ன வாயை மூடிக்கிட்டு இருக்குற... பெரிய அண்ணன் வந்திருக்குறது தெரியும்ல?”

“என்னை ‘டேய் அபு’ன்னு பெரிய அக்கா அழைச்சதைக் கேட்டீங்கள்ல அண்ணே! நீங்க வந்திருக்குற தைரியம்தான் எல்லாத்துக்கும் காரணம்.... ம்ஹும்...”

அபுவிற்கு மூத்ததற்கு மூத்ததற்கு மூத்தவள்தான் பாத்தும்மா. அவள் அவனை ‘டேய் அபு’ என்று அழைத்தது அவனுக்கு மிகவும் குறைச்சலாகப் பட்டுவிட்டது.

நான் சொன்னேன்: “அப்படின்னா உன்னை ‘அபு சார்’ன்னு கூப்பிடலாமாடா? போடா!”

பாத்தும்மா எனக்கருகில் வந்தாள். சுற்றிலும் பார்த்தாள். யாருமில்லை! ரகசியமான குரலில் சொன்னாள்: “பெரியண்ணே, யாருக்கும் தெரிய வேண்டாம். ஆனும்மாவுக்குத் தெரிஞ்சா சண்டைக்கு வருவா. எனக்கு நீங்க பணமா எதுவும் தர வேண்டாம். கதீஜாவுக்கு ரெண்டு கம்மல் செய்து கொடுத்தா போதும். ஹனீஃபாவுக்கும் இது தெரியக்கூடாது. சின்ன அண்ணனுக்கும் தெரியக்கூடாது. அபுவிற்கும் தெரியக்கூடாது. உம்மாவுக்கும் தெரியக்கூடாது.”

நான் மெதுவான குரலில், “கம்மல் வெள்ளியில இருக்கணுமா? தங்கத்துலயா?” என்று கேட்டேன்.

பாத்தும்மா சுற்றிலும் பார்த்துவிட்டு தாழ்வான குரலில்,

“தங்கத்துலதான் வேணும். பெரியண்ணே நீங்க இந்த விஷயத்தை வேற யார்கிட்டயாவது சொல்லுவீங்களா?” என்றாள்.

“சேச்சே...”- நான் சொன்னேன்: “பரம ரகசியமா வச்சிருப்பேன்.”

அதன்படி பாத்தும்மாவுடன் எனக்கு ஒரு ரகசிய உடன்பாடு உண்டானது.

“கம்மல் சீக்கிரம் வேணும்” என்றாள் பாத்தும்மா பார்க்கலாம்.

இந்தக் கம்மல் ஒரு அவசர விஷயமாக ஆனதற்குக் காரணம் இருக்கிறது. நான் வந்தவுடன் எர்ணாகுளத்திலிருந்து மூன்று சிறிய குடைகளை வரவழைத்து அப்துல்காதரின் மகள் பாத்துக்குட்டி, ஹனீஃபாவின் மகன் அபி, ஆனும்மாவின் மகன் ஸையதுமுஹம்மது ஆகியோருக்குக் கொடுத்தேன்.

பாத்தும்மாவின் மகள் கதீஜாவிற்குக் குடை தரவில்லை. பாத்துக்குட்டியும், அபியும், ஸையது முஹம்மதும், கதீஜாவும் கிட்டத்தட்ட ஒரே வயதைச் சேர்ந்தவர்கள். உயரம், பேச்சு எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கும். அழுவதுகூட ஒரே மாதிரிதான். எனினும் கதீஜாவிற்குக் குடை கொடுக்கவில்லை. என்ன காரணம்? உண்மையாகச் சொல்லப் போனால் நான் அந்த விஷயத்தையே மறந்துவிட்டேன். பரவாயில்லை. தங்கத்தால் ஆன இரண்டு கம்மல்கள் அவளுக்கு ரெடி!

பாத்தும்மா அந்தப் பக்கம் போய், வீட்டு வேலைகளில் ஈடுபட்ட நேரம் பார்த்து ஆனும்மா மெதுவாக என்னைத் தேடி வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தாள்.

பாத்தும்மா பள்ளிக்கூடம் போனதில்லை. ஆனும்மா பள்ளிக்கூடம் போயிருக்கிறாள். அதனால் பேசுவது பாத்தும்மாவைப் போல அல்ல. ஆனும்மா மெதுவான குரலில் சொன்னாள்:

“பெரியண்ணே, நீங்க எனக்குப் பணம் எதுவும் தரவேண்டாம். பாத்திரங்கள் வாங்கிக் கொடுத்தா போதும். அதுவும் இப்போ வேண்டாம். நாங்க வேற வீட்டுல போயி இருக்குறப்போ வாங்கித் தந்தா போதும். இந்த விஷயத்தை அக்காக்கிட்ட சொல்லிடாதீங்க...”

அதாவது- பாத்தும்மாவிற்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்பதுதான் இதன் சாரம். அவளுக்குத் தெரிந்தால் அவள் கூறுவாள்:

“போதும்டி... போதும்டி உன் திருட்டுத்தனம். நீ படிச்சவ! நான் இல்லாத நேரத்துல நீ பெரிய அண்ணன்கிட்ட சொல்லி எல்லாத்தையும் வாங்கிட்டேல்ல!”

அதனால்தான் இந்தப் பாத்திரங்கள் சமாச்சாரம் காதும் காதும் வைத்தது மாதிரி இருக்க வேண்டிய ஒன்றாகிவிட்டது. ஆனும்மாவிற்கு வீட்டு பாத்திரங்கள் வாங்கித் தருகிறேன் என்றும், அதை ரகசியமாக வைத்திருப்பேன் என்றும் ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திட்டேன். எல்லாம் முடிந்து அமைதியாக உட்கார்ந்திருந்தபோது ஒரு ஆரவாரம் கேட்கிறது.

“உள்ளாடத்திப்பாரு... உள்ளாடத்திப் பாரு... நான் அழைச்சிட்டுப் போக மாட்டேன்.”

லைலாவின் குரல் அது. அவள் யாரை உள்ளாடத்திப்பாரு என்று அழைக்கிறாள்? அதிக நேரம் அதற்காகக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகவில்லை. அவமானத்தை அதற்கு மேலும் தாங்க முடியாமல், கலங்கிப் போன கண்களுடன் முழு ஆண்பிள்ளையான ஸையதுமுஹம்மது என் முன்னால் வந்து நின்றான்.

அவன் முழு நிர்வாண கோலத்தில் இருந்தான்.

அவன் புகார் சொல்லும் குரலில் சொன்னான்: “பெரிய மாமா, லைலாம்மா என்னை உள்ளாடத்திப்பாருன்னு சொல்றது...”

ஒரு ஆண் பிள்ளையை உள்ளாடத்திப்பாரு என்று அழைப்பதா? அதுவும் ஒரு சிறு பெண்!

“கொம்பை எடுத்துட்டு வாடா.”

ஸையதுமுஹம்மது வேகமாக கொம்பை எடுத்து வருவதற்காகச் சென்றான்.

நான் அழைத்தேன்: “அடியே லைலா! இங்கே வா.”

அவள் வந்தாள். அவளும் முழு நிர்வாணக் கோலம்தான். ஸையதுமுஹம்மது கொண்டுவந்த கொம்பை பார்த்து அவள் சொன்னாள்: “பெரியப்பா, உங்களைக் கூட்டிட்டுப் போக மாட்டேன்.”

‘வேண்டாம்டி’ என்று சொன்னவாறு ஸையது முஹம்மதுவிடமிருந்த கொம்பை வாங்கினேன். லைலா ‘அய்யோ’ என்று உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள்.

“அம்மா... அம்மா...”

லைலா தன்னுடைய உம்மாவை ‘அம்மா’ என்றுதான் அழைப்பாள். நான் சொன்னேன்: “நீ உன் அம்மாவைக் கூப்பிடு! உன் வாப்பாவைக் கூப்பிடு! உன் தாத்தாவைக் கூப்பிடு! எல்லாரையும் நான் அடிச்சு உதைக்கப் போறேன்.”

தாத்தா என்றால் லைலா உம்மாவின் தந்தையைச் சொல்கிறேன். மேற்படி ஆள் இருப்பது ஹனீஃபாவின் விவசாய நிலத்திற்கு அருகில். அந்தப் பகுதியில் எங்கோ ஒரு ரெயில்வே ஸ்டேஷன் வரப்போகிறது. அந்தச் சமயத்தில் நிலத்திற்கு கேட்கும் விலை கிடைக்கும். அது மட்டுமல்ல- அந்தப் பகுதி வளர்ச்சியடையவும் செய்யும். இந்த விஷயங்களையெல்லாம் மனதில் வைத்துத்தான் லைலாவின் தாத்தா ஹனீஃபாவிடம் சொல்லி அந்த இடத்தை வாங்க வைத்திருந்தார்.

லைலா சொன்னாள்: “அம்மாவை அடிக்க வேண்டாம். வாப்பாவை அடிக்க வேண்டாம். தாத்தாவையும் அடிக்க வேண்டாம்.”

“அப்படின்னா இனிமேல் நீ ஆண்பிள்ளையை உள்ளாடத்திப்பாருன்னு கூப்பிடக்கூடாது.”

“கூப்பிட மாட்டேன்.”

“உன் வாப்பா வீடு கட்டுறப்போ அங்கே ஸையதுமுஹம்மதுவை அழைச்சிட்டுப் போவியா? பெரியப்பாவை அழைச்சிட்டுப் போவியா?”

அவள் கண்ணீர் மல்க சொன்னாள்: “எல்லாரையும் அழைச்சிட்டுப் போவேன்.”

அப்பாடா! எப்படியோ அந்த விஷயம் முடிவுக்கு வந்தது. நஷ்ட ஈடாக ஸையது முஹம்மதுக்கு இரண்டு மிட்டாயும் ஒரு பூவன் பழமும் கொடுத்தேன். என்னிடம் நேந்திர வாழைப்பழம், முட்டைக்கோஸ், கண்ணன் பழம், பலாப்பழம், பூவன் பழம், மிட்டாய் ஆகியவை எப்போதும் இருக்கும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel