Lekha Books

A+ A A-

பாத்தும்மாவின் ஆடு - Page 7

paathummaavin aadu

நான் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்துவிட்டு அறைக்குள் சென்று ரூபாய் நோட்டையும், நேந்திர வாழைப்பழத்தையும் எடுத்துக்கொண்டு வந்தேன். நேந்திர வாழைப் பழத்தின் வாசனையை அறிந்து பாத்தும்மாவின் ஆடு எனக்கு முன்னால் வந்து நின்றது. தோலை நீக்கி நான் பழத்தைத் தின்றேன். என்னவோ தின்பதைப் பார்த்து உம்மாவிற்கு மிகவும் பிரியமான பூனைகள் வந்தன. உம்மாவின் மேற்பார்வையில் கொட்டமடித்துக் கொண்டிருக்கும் கோழிகளும் வந்தன.

நான் பழத்தோலை பாத்தும்மாவின் ஆட்டிற்குக் கொடுத்தேன். இன்னும் தோல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ஆடு அங்கேயே நின்றிருந்தது. நான் சுற்றிலும் பார்த்தேன். யாரும் இல்லை. மானும் மனிதர்களும் இல்லை. கோழிகளும் பாத்தும்மாவின் ஆடும் பூனைகளும் மட்டுமே அங்கு இருந்தன.

நான் மிகவும் ரகசியமாக ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து உம்மாவின் மடியில் வைத்தேன். உம்மா இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்தாள். மானும் மனிதர்களும் இல்லை. உம்மா அந்த நோட்டை மடித்து துணி நுனியில் கட்டி சட்டைக்குள் வைத்துக் கொண்டாள். பிறகு எதுவுமே நடக்காதது மாதிரி அவள் உட்கார்ந்திருந்தாள்.

நான் கேட்டேன்: “பிறகு என்ன விசேஷங்கள்?”

உம்மா சொன்னாள்: “டேய், எனக்கு இவ்வளவு வயசாயிடுச்சு. எப்போ நான் சாகப் போறேன்னு தெரியாது. என் மனசுல ஒரு ஆசை இருக்கு. நீ ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணி, உங்ககூட நான் இருக்கணும்.”

அவ்வளவுதான்- நான் சத்தம் போட ஆரம்பித்துவிட்டேன்.

“எங்கேயாவது அமைதியா இருக்கலாம்னு நினைச்சா விட்டால்தானே! பாத்தும்மா! ஆனும்மா! ஓடிவாங்க... என் பெட்டியையும் படுக்கையையும் எடுத்துட்டு வாங்க. ஒரு சாமான் தூக்குற ஆளைக் கூப்பிடுங்க...”

அவர்கள் இரண்டு பேரும் ஓடி வந்தார்கள்.

“என்ன உம்மா இது?” என்று ஆனும்மா கேட்டாள்.

பாத்தும்மா சொன்னாள்: “பெரியண்ணன்கிட்ட உம்மா காசு கேட்டுருக்கும்!”

நான் உடனே சொன்னேன்:

“அப்படி எதுவும் இல்ல.”

உம்மா எழுந்து அந்தப் பக்கம் போனாள். “என்ன உம்மா?” என்று கேட்டவாறு பாத்தும்மாவும் ஆனும்மாவும் உம்மாவின் பின்னால் போனார்கள்.

நான் அதே இடத்தில் ஒரு வகை நிம்மதியுடன் அமர்ந்திருந்தேன். மீண்டும் ஆனும்மாவிடம் சொல்லி தேநீர் வரவழைத்துப் பருகினேன். பிறகு ஒரு பீடியைப் பற்ற வைத்து இழுத்தேன்.

அப்போது பாத்தும்மாவின் ஆடு வாசலில் நின்றவாறு வராந்தாவில் எனக்குப் பக்கத்திலிருந்த தீப்பெட்டியை நாக்கை நீட்டி சாப்பிடும் முயற்சியில் இருப்பதை பார்த்தேன். நான் அதை எடுத்து குச்சிகளை எடுத்து விட்டு வெற்றுத் தீப்பெட்டியை ஆட்டிடம் நீட்டினேன்.

பாத்தும்மாவின் ருசியுடன் அந்த வெற்றுத் தீப்பெட்டியை தின்றது. அது போகாமல் நிற்பதைப் பார்த்து நான் சொன்னேன், “அழகியே! தீக்குச்சிகள் எனக்கு வேணும். வேற வெற்று தீப்பெட்டிகள் வேணும்னா இருக்கு... தர்றேன்”

அந்த நேரத்தில் பாத்தும்மா ஒரு பாத்திரத்தில் நீர்கொண்டு வந்து ஆட்டின் முன்னால் வைத்தாள். நான் பாத்தும்மாவிடம் சொன்னேன்:

“பாத்தும்மா, உன் ஆடு என்னோட ரெண்டு புத்தகங்களை தின்னுடுச்சு.”

நான் ஏதோ சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்ட மாதிரி பாத்தும்மா சொன்னாள்:

“அப்படிச் சொல்லாதீங்க பெரியண்ணே. என் ஆடு அப்படியெல்லாம் செய்யாது” என்று கூறிவிட்டு மிகவும் தாழ்ந்த குரலில் கேட்டாள்: “கம்மல் விஷயம்?”

நானும் மெதுவான குரலில் சொன்னேன்: ஞாபகத்துல இருக்கு...”

இன்னும் மெதுவான குரலில் “யாருக்கும் தெரிய வேண்டாம்” என்று சொல்லிவிட்டு பாத்திரத்துடன் பாத்தும்மா அப்பால் சென்றாள்.

ரஷீதும் ஸுபைதாவும் அழுது கொண்டிருந்தார்கள். ஒரு தொடர் அழுகையைப் போல ஆரிஃபாவும் ஸையது முஹம்மதுவும் லைலாவும்

அழுகையை ஆரம்பித்தார்கள். இடையில் அவ்வப்போது லைலா “அம்மாவை அழைச்சிட்டுப் போக மாட்டேன்” என்று கூறிக் கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் பொழுது அபு ஒரு கடிதத்துடன் வந்தான். கடிதத்தைத் தந்துவிட்டு ஒரு கொம்புடன் “என்ன இது?” என்று உரத்த குரலில் கத்தியவாறு அந்தப் பக்கம் அவன் சென்றான். உடனே எல்லாரும் அழுகையை நிறுத்தினார்கள். வீடு படு நிசப்தமாக இருந்தது.

நான் கடிதத்தைப் பிரித்துப் படித்தேன். தூரத்திலிருந்த சென்னை நகரத்திலிருந்து அந்தக் கடிதம் வந்திருந்தது. திரு.எம்.கோவிந்தனின் மனைவி டாக்டர் பத்மாவதி அம்மா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.

தாயும் மகனும் நலமுடன் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்தவாறு நான் உடனே பதில் கடிதம் எழுதினேன். பாலாவிற்கு ஒரு தம்பி கிடைத்ததற்காக அவளை வாழ்த்தினேன். அவளிடமிருந்த சொத்தான இரண்டரை ரூபாயை வங்கியில் போடச் சொல்லும்படி நான் அவளுடைய தந்தைக்கு எழுதினேன். திரு.எம்.கோவிந்தன் மகத்தான முறையில் இரண்டாவது தடவையாக தந்தை ஆனதற்காக அவரை வாழ்த்தினேன். அத்துடன் எ.நாராயணன் நம்பியார், எம்.எ.கெ.ஸி.எஸ்.பணிக்கர், டேவிட் ஜார்ஜ், ஜானம்மா பாருக்குட்டி அம்மா, கெ.எ.கொடுங்ஙநல்லூர், கெ.பி.ஜி. பணிக்கர் (கோபகுமார்), சரத்குமார், ராம்ஜி, ஆர்.எம்.மாணிக்ககத்து ஆகிய சென்னை வாழ் நண்பர்களைப் பார்த்தால் நான், என்னைப் பெற்று வளர்த்த என்னுடைய உம்மாவுடன் இப்போது வசித்துக் கொண்டிருக்கிறேன் என்ற செய்தியைச் சொல்ல வேண்டுமென்றும், எல்லாருடைய நலத்தையும் நான் விசாரித்ததாகச் சொல்லும்படியும் கேட்டுக் கொண்டேன். தந்தைக்கும், பிள்ளைகளுக்கும் தாய்க்கும் மீண்டுமொரு முறை வாழ்த்துச் சொல்லி கடிதத்தை முடித்து உறைக்குள் அடைத்து அதை நன்றாக ஒட்டி முகவரி எழுதி அபுவை அழைத்து அவனிடம் தந்து “சீக்கிரமாக இதை தபால்ல போடுடா” என்று கட்டளையிட்ட போது ஒரு விஷயம் ஞாபகத்தில் வந்தது.

“நில்லுடா” - என்றேன். “உன்னைப் பற்றி பெரிய புகார்கள் வருது. நீ அப்துல் காதரோட கடையில இருக்குற பணத்தை எல்லாம் கண்டவங்களுக்கெல்லாம் கடன் தர்றியாமே? கண்ட பத்திரிகைகளுக்கெல்லாம் நீ ஏஜென்ஸி எடுத்திருக்கே. நீ யார் சொல்றதையும் கேக்கறது இல்ல. சரியா?”

எல்லா கேள்விகளுக்கும் பதிலாக அவன் சொன்னான்: “என்னை யாருக்கும் பிடிக்கல.”

“பெரியண்ணே, நீங்க வந்தவுடன் பார்த்தீங்களா? அக்காமார்களும், சின்ன அண்ணியும், பெரிய அண்ணியும் உம்மாவும் சேர்ந்து இந்த வாசல், இடம் எல்லாத்தையும் பெருக்கி குப்பையை நெருப்பு வச்சு எரிச்சு சுத்தமா வச்சிருந்ததைப் பார்த்தீங்களா? முன்னாடியே நான் சொன்னேன். யாரும் அதைக் கேட்கல. எல்லாரும் என்னை பெருக்கி சுத்தம் செய்யச் சொன்னாங்க. இப்போ நடந்தது என்ன? பெரியண்ணே உங்ககிட்டயிருந்து பணம் வாங்குறதுக்கான திட்டம் இது. பணக்காரர் வந்துட்டா, சந்தோஷப்படுத்தணும்னு அவங்க இந்த வேலைகளைச் செய்திருக்காங்க.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel