Lekha Books

A+ A A-

பாத்தும்மாவின் ஆடு - Page 2

paathummaavin aadu

பாத்தும்மாவின் ஆடு, அதாவது- பெண்களின் அறிவு என்ற நகைச்சுவையான கதையைத்தான் நான் இப்போது கூறப் போகிறேன்.

பல நாட்கள் அலைந்து திரிந்த தனிமையான வாழ்க்கைக்குப் பிறகு மூக்கு நுனியில் கோபத்தை வைத்துக் கொண்டு நான் வைக்கம் நகரத்திற்கு அருகில் தலயோலப்பறம்பில் இருக்கும் என்னுடைய வீட்டைத் தேடி வந்தேன். ஸ்டைலான வரவேற்பு! எனக்கு என்னவென்று கூற முடியாத கோபம் வந்தது. நான் உட்கார்ந்து எனக்குள் முணுமுணுத்தேன். என் வீடு... நான் யாரைக் குற்றம் சொல்வது?

பத்து பதினைந்து வருடங்களாகவே என்னுடைய வீட்டில் நான் வசிக்கவில்லை. எப்போதாவது சில இரவுகள் அந்த வீட்டில் இருந்த ஞாபகம் மட்டுமே இருக்கிறது. நான் தங்குவதற்கென்று மட்டுமே வீட்டிற்கு எதிராகப் பொதுச் சாலையின் ஓரத்தில் ஓடு வேய்ந்த ஒரு சிறிய கட்டிடம் இருந்தது. அது கட்டப்படும் பொழுது நான் கல்லும் மண்ணும் சுமந்திருக்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறேன். மனத்திருப்திக்காவும், அழகுக்காவும் பலவற்றையும் செய்திருக்கிறேன். உயரமாக கற்சுவர் கட்டப்பட்ட வெள்ளை மணல் விரிக்கப்பட்டிருக்கும் முற்றத்தைச் சுற்றிலும் அழகான செடிகள் இருந்தன. முல்லையும் பிச்சியும் அடர்த்தியாகப் படர்ந்திருக்கும். முற்றத்தின் மூலைகளில் கொய்யாச் செடி வளர்ந்திருந்தது. அங்கு இரண்டு குளங்கள் இருந்தன. ஒன்று குடிப்பதற்கு; இன்னொன்று விளையாடுவதற்கு. எனக்கு மட்டுமே இருக்கும் விசேஷமான கழிப்பறை. நிலம் முழுவதும் தென்னை மரங்களும் வாழை மரங்களும். அதோடு பலவிதப்பட்ட மரங்களையும் நான் வளர்த்தேன். அந்தத் தோப்பில் நல்ல மாமரங்களும் இருந்தன. சாலையின் ஓரத்திலும் எல்லையிலும் அழகான செடிகள். நிலத்தைச் சுற்றி ஆறடி உயரத்தில் ஓலையும் முள்ளும் கொண்ட வேலி. முன்னால் தாழ்ப்பாள் போட்டு எப்போதும் பூட்டிக் கிடக்கும் கேட். பாதையில் போவோர் அழகான செடிகளையும் மலர்களையும் அந்தக் கேட்டின் வழியே பார்க்க முடியும்.

நான் அந்தச் சிறு வீட்டில்தான் தனி மனிதனாக வாழ்ந்து கொண்டிருந்தேன். தேநீரையும் பலகாரத்தையும் சாப்பாட்டையும் என் உம்மா- அதாவது என் தாய் கேட்டின் மேற்பகுதி வழியாக உள்ளே தருவாள். நான் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. வசதியாக உட்கார்ந்து எழுதுவேன். இல்லாவிட்டால் எதையாவது படித்துக் கொண்டிருப்பேன். இல்லாவிட்டால் செடிகளையும், மரங்களையும் தடவியவாறு அங்கு நடந்து கொண்டிருப்பேன். அப்படி இருக்கும் பொழுதுதான் நான் ஊர் சுற்றக் கிளம்பினேன். வர்க்கலயில் சிவகிரி, சென்னை, எர்ணாகுளம், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மூன்று வருடங்கள் வசித்தேன். பிறகு உடல் நலமில்லாமல் அமைதி தேடி திரும்பி வந்தால், நான் இருந்த சிறு கட்டிடத்தை எனக்கு அடுத்த இளையவனான அப்துல்காதர் வாடகைக்கு விட்டிருக்கிறான். எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர் பெருமதிப்பிற்குரிய ராமன்குட்டி சமையல்காரனுடன் அங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு வீடு மிகவும் பிடித்துவிட்டது. எனினும், வீட்டைக் காலி பண்ணி கொடுக்கத் தயாராக இருந்தார். ஆனால், அந்தப் பெரிய கிராமத்தில் வேறு வீடு கிடைப்பதற்கு வழியே இல்லை. என்ன செய்வது?

ம்ஹும்... எது எப்படியோ நான் அந்த வீட்டில் வசிக்க ஆரம்பித்தேன். நிசப்தம், மன அமைதி, பிறகு முழுமையான ஓய்வு- இவைதான் எனக்கு வேண்டும். உடல் ஆரோக்கியத்தை மீண்டும் பெற வேண்டும். மனதில் கவலை ஏற்படுத்தக்கூடிய தொந்தரவுகளோ சத்தங்களோ எதுவும் உண்டாக்கக் கூடாது. ஆனால் நான் தொந்தரவுகள், சத்தங்கள், ஆரவாரங்கள் ஆகியவற்றுக்கு நடுவில் மாட்டிக் கொண்டேன். அதுவும் சரியான மத்தியத்தில்!

ஓலை வேய்ந்த ஒரு சிறிய, இரண்டு அறைகளையும் ஒரு சமையலறையையும் இரண்டு வராந்தாக்களையும் கொண்ட கட்டிடம்தான் என் வீடு. அதில் யாரெல்லாம் வசித்தார்கள் தெரியுமா?

என் உம்மா, எனக்கு இளையவனான அப்துல்காதர், அவனுடைய மனைவி குஞ்ஞானும்மா, அவர்களின் செல்லக் குழந்தைகளான பாத்துக்குட்டி, ஆரீஃபா, ஸுபைதா, அப்துல்காதருக்கு இளையவனான முஹம்மது ஹனீஃபா, அவனுடைய மனைவி அய்ஸோம்மா அவர்களின் செல்லக்குழந்தைகளான ஹபீப் முஹம்மது, லைலா, முஹம்மது ரஷீத், ஹனீஃபாவிற்கு இளையவளான ஆனும்மா, அவளுடைய கணவன் சுலைமான், அவர்களின் செல்லக் குழந்தையான ஸையது முஹம்மது, பிறகு எல்லாருக்கும் இளைய தம்பியான அபுபக்கர் என்னும் அபு.

இத்தனை பேரும் அந்த வீட்டில் இருந்தார்கள். இவர்கள் இல்லாமல் வேறு சிலரும்... எங்கிருந்தோ வந்து குடியேறி உம்மாவின் அன்பைப் பெற்று வசித்துக் கொண்டிருந்த சில பூனைகள், அவர்களுக்குப் பயந்து பரண்களில் எந்நேரமும் ஓடிக் கொண்டிருக்கும் எலிகள், வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து கரைந்துகொண்டு ஆர்ப்பாட்டம் பண்ணும் காகங்கள்... இவை எல்லாவற்றுக்கும் மேலாக என் உம்மாவிற்குச் சொந்தமானவையும், வீட்டை ஆட்சி செய்து கொண்டிருப்பவையுமான சுமார் நூறு கோழிகள், எண்ணிக்கையில் அடங்காத அவற்றின் குஞ்சுகள், அவற்றைப் பிடித்துக் கொண்டு போய் தின்று வாழும் பருந்துகள் மரங்களில்...

வீட்டில் எப்போதும் ஆரவாரம் இருந்துகொண்டே இருக்கும். பெரிய அளவில் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். ரஷீதும் ஸுபைதாவும் இன்னும் நடக்க ஆரம்பிக்கவில்லை. பால் குடிக்காத நேரங்களில் அவர்கள் சிறிதும் நிறுத்தாமல் அழுவார்கள். நடக்க ஆரம்பித்திருக்கும் ஆரீஃபாவும் ஒரு அழுகைப் பிரியைதான். அவளை விட சற்று வயது கூடிய லைலாவும் ஸையது முஹம்மதுவும் கூட அருமையாக அழக்கூடியவர்கள்தான். அபியும் பாத்துக்குட்டியும் (ம்ஹா... ஹபீப் முஹம்மது என்ற பெயர் பள்ளிக்கூடத்தில் மட்டும் தான். வீட்டில் அழைப்பது... அபி. தன்னைத் தானே அவன் கூறிக் கொள்ளும் பெயர் ‘பி’. அவனும் பாத்துக்குட்டியும் முதல் வகுப்பில் படிக்கிறார்கள்) இரண்டு பேரும் மிகவும் அருமையாக அழுவார்கள். பிடிவாதக்காரர்களும் கூட. குழந்தைகள், பூனைகள், கோழிகள், பெண்கள், பருந்துகள், எலிகள்,காகங்கள்- எல்லாரும் சேர்ந்து அருமையான ஒரு கச்சேரியே படைப்பார்கள்.

இப்போது கூறிய ஆர்ப்பாட்டத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது வந்து நிற்கிறது ஒரு ஆடு!

பெண் ஆடுதான். தவிட்டு நிறம். நல்ல சுறுசுறுப்புடன் இருக்கும். அதிகாலையில் என்னுடைய வீட்டிற்கு வந்து சமையலறைக்குள் நுழைந்து காலை உணவாக எதையாவது சாப்பிடும். பிறகு வீட்டிற்குள் நடந்து தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் உடம்புகளை மிதித்து அவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடும். முற்றத்திற்கு நடந்து இரவில் விழுந்து கிடக்கும் பலா இலைகளை வேக வேகமாகத் தின்ன ஆரம்பிக்கும்.

முற்றத்திற்கருகில் இருக்கும் அந்த பலா மரம் மிகவும் வயதான மரம். எனினும், அதில் பழங்கள் உண்டாகின்றன. எவ்வளவு ஆடுகளுக்கு வேண்டுமென்றாலும் அதில் இலைகள் இருக்கின்றன. ஆடு பலா இலைகளை வேகவேகமாகத் தின்றுவிட்டு முற்றத்தின் அருகில் இருக்கும் சாம்ப மரத்தடியைத் தேடிச் செல்லும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel