
இளம் வயது காலத்தில் தகர என்னுடைய மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்தான். தற்கொலை செய்து வாழ்க்கையை முடித்துக் கொண்ட என்னுடைய நண்பர்களின் பட்டியலில் அவனும் இருந்தான்.
தற்கொலை செய்து கொண்ட ஒரு நண்பன் என்று மட்டும் கூறினால், அது அவனைப் பற்றி எதுவுமே ஆகாது. தற்கொலையில் இறுதி முடிவைக் கண்டவர்களில் பெரும்பாலானவர்களின் முகங்களை காலம் எனக்குள்ளிருந்து அவ்வப்போது மறையச் செய்வதுண்டு. ஆனால், தகர எஞ்சி நின்று கொண்டிருக்கிறான். ஒவ்வொரு பருவத்தின்போதும் உயிர்ப்புடன் முளைத்துக் கொண்டிருக்கும் கிராமத்துச் செடியின் புத்துணர்ச்சியுடன்.
அவன் இறந்தபோது எங்கள் எல்லாருக்கும் மிகப் பெரிய கவலை உண்டானது. பள்ளிக்கூடச் சிறுவர்களான எங்களுக்கு அது ஒரு தாங்க முடியாத இடியாக இருந்தது. அன்று எங்கள் எல்லாருக்கும் மரணம் என்பது ஒரு அபூர்வமான அனுபவமாக இருந்ததால், சில நாட்களுக்கு அது ஒரு மனதை பாதிக்கக்கூடிய மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. பள்ளிக்கூடம் விட்டுச் செல்லும்போதும், பள்ளிக்கு வரும்போதும் வழியில் நாங்கள் தகரயைப் பற்றி நினைத்துப் பார்த்தோம். பள்ளிக்கூடத்தின் இடைவேளை நேரங்களிலும், வெளி வாசலில் வேர்க்கடலை விற்பவனைச் சுற்றி நின்று கொண்டிருந்த போதும், எங்களுக்கு மத்தியில் அன்று உற்சாகமே இல்லை.
மறுநாள் எங்களில் பலர் தூங்க முடியாமல் இருந்ததைப் பற்றியும், தூக்கத்தில் தகரயை கனவு கண்டதைப் பற்றியும் உள்ள கதைகளை ரகசியமாக எங்களுக்குள் பரிமாறிக் கொண்டோம். சில நாட்களுக்கு யாருக்கும் எந்த விஷயத்திலும் மனம் செல்லவேயில்லை. பிறகு... ஒவ்வொருவராக தகரயை மறந்து விட்டார்கள். மரணத்தின் அந்த எதிர்பாராத வருகை, வந்ததைப்போலவே பின்வாங்கிக் கொண்டும் சென்றது.
ஆனால், தகர அப்படி தூக்கில் தொங்கி இறந்தது சிறிதும் எதிர்பாராத ஒரு விஷயமாக இருக்கவில்லை. அவன் அப்படிச் செய்வான் என்று நான் ஏற்கெனவே நினைத்திருந்தேன். தூக்கில் தொங்கி இறப்பது என்பது அவனுடைய மிகப் பெரிய ஆசையாக இருந்தது என்ற விஷயம் எனக்குத் தெரியும்.
என்னைத் தவிர, தகரயின் அந்த ரகசிய ஆசை செல்லப்பன் ஆசாரிக்கு மட்டுமே தெரியும். அவன் அதைப் பற்றி எங்கள் இருவரிடமும் மட்டுமே கூறியிருக்கிறான். மிகுந்த சந்தோஷமும் கவலையும் வரக்கூடிய நாட்களில் அவன் எங்கள் இருவரிடமும் அதை பல தடவைகள் திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறான். ஒவ்வொரு முறை கூறும்போதும் அவன் எச்சரிப்பான்.
"நீங்க இரண்டு பேரையும் தவிர நான் மூனாவதா ஒரு ஆள்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதே இல்லை... ஒரு ஆளிடமும் கூறக்கூடாது. சொன்னால் நான் தூக்குல தொங்கி இறந்திடுவேன்.''
நானும் செல்லப்பன் ஆசாரியும் அவன் சொன்னதைக் கேட்டு சிரிப்போம்.
செல்லப்பன் ஆசாரியின் காதில் இரண்டு நீலநிறக் கற்கள் பதிக்கப்பட்ட கடுக்கன்கள் இருந்தன. அவன்மீது எங்களுக்கு மதிப்பு இருந்ததற்குக் காரணமே அவைதான். எனக்கும் தகரவிற்கும். தகரயின் வாழ்க்கையின் இரண்டாவது ஆசையே அந்த நீலநிறக் கற்களால் ஆன கடுக்கனை அணிந்து கொண்டு ஒரு நாள் கடை வீதியில் உற்சாகமாக நடந்து திரிய வேண்டும் என்பதுதான்.
ஆனால், செல்லப்பன் ஆசாரி அதைக் கொடுக்கவில்லை. தருகிறேன்.... தருகிறேன் என்று கூறி, இறுதி வரை தகரவிற்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தான். அவனைக் குற்றம் சொல்லிப் பிரயோஜனமில்லை. தகரயை எப்படி நம்புவது?
திருடிக்கொண்டு ஓடிவிடுவான் என்று நினைக்கவில்லை. தகரவிற்கு திருடுவதற்குத் தெரியாது. யாராவது வழியில் பார்த்து பாசத்துடன் கேட்டால், அவன் அதைக் கழற்றிக் கொடுத்து விடுவான். பிறகு கேட்டால் அதை யாருக்கு கழற்றிக் கொடுத்தோம் என்று அவனுக்கே ஞாபகத்தில் இருக்காது. தோண்டித் தோண்டி விசாரித்தாலும், முட்டாளைப்போல நின்று கொண்டு இளிப்பதற்கு மட்டுமே அவனுக்குத் தெரியும். கோபப்பட்டால், உரத்த குரலில் அழ ஆரம்பித்து விடுவான்.
நானும் செல்லப்பன் ஆசாரியும் பிறக்கும்போதே, கடை வீதியில் தகர முளைத்து விட்டிருந்தான். சந்தையின் ஆரவாரத்தையும் அசிங்கத்தையும் கேடு கெட்ட இரவுகளையும் தாண்டி, தகர அன்று எல்லா இடங்களிலும் எல்லாருக்குமாக ஓடித் திரிந்து கொண்டிருந்ததை நாங்கள் நினைத்துப் பார்க்கிறோம். அன்று எனக்கு அவனைப் பார்த்தால் பயமாக இருக்கும். எச்சிலை ஒழுக விட்டுக்கொண்டு, அழுக்காகிப்போன காக்கி நிற அரைக்கால் சட்டையை மேலே இழுத்துப் போட்டுக்கொண்டு, புரிந்து கொள்ள முடியாத மொழியில் எல்லாரிடமும் பேசிக் கொண்டு நடக்கும் அவனுடைய பெரிய உருவம் அந்தக் காலத்தில் அச்சுறுத்தக் கூடிய கனவுகளுக்குள் வந்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது.
அதற்குப் பிறகு பள்ளிக்கூடச் சிறுவர்களாக ஆனவுடன் அந்த பயமெல்லாம் எங்களை விட்டுப் போய்விட்டது. தகர எங்களுக்கு நெருக்கமானவனாக ஆனான். தெளிவான அறிவு இல்லாத அந்த மனிதன்மீது ஒரு தடிமனான பொம்மை என்பதைப்போல நாங்கள் அன்பு செலுத்த ஆரம்பித்தோம். அவனுக்கும் அது மட்டுமே தேவைப்பட்டது.
என்னைவிட இரண்டு மூன்று வகுப்புகளுக்கு மேலே செல்லப்பன் ஆசாரி இருந்தான். எனக்கு மோசமான விஷயங்களைக் கற்றுத் தந்ததில் செல்லப்பன் ஆசாரிக்கு மிகப் பெரிய பங்கு இருந்தது. சாதாரண பேச்சுக்களுக்கு மத்தியில் செக்ஸ் விஷயத்தைச் சொல்லிக் கொடுப்பதில் அவனுக்குப் பெரிய திறமை இருந்தது.
பள்ளிக்கூடத்திலிருந்து வீடு வரை நான்கு மைல் தூரம் ஆள் அரவமற்ற ஒற்றையடிப்பாதையின் வழியாகத் திரும்பி வரும்போது, முற்றிலும் இயல்பான ஒரு உத்தியுடன் அவன் சிற்றின்ப விஷயத்தைப் பற்றிப் பேசினான். அந்தக் காலத்திலேயே அவனுக்கு எல்லா விஷயங்களும் நன்கு தெரிந்திருந்தன. தெரிந்தவற்றை பத்து மடங்கு கற்பனைக் கதைகள் சேர்த்து அவன் கேட்கும்படி செய்வான். வெறுமனே கதை விடுகிறான் என்ற நினைத்துக் கொண்டே நான் அவற்றைக் கேட்பதில் ஒரு ஆர்வத்தைக் காட்டினேன். அந்த பொய்க் கதைகளும், அவற்றில் இருந்த கற்பனை என்று யாருக்கும் புரியக்கூடிய சம்பவங்களும் அந்தக் காலத்தில் எனக்குள் ஒரு இனம் புரியாத உணர்ச்சியை உண்டாக்கின. இடையில் நாங்கள் ஏரியின் ஓரத்தில் இருந்த சிதிலமடைந்த பாலத்திற்குக் கீழே நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்போம். கால்பந்து விளையாடியதன் மூலம் அந்த வியர்வையின் நாற்றத்தைப் பெருமையுடன் வாசனை பிடித்தவாறு அவன் கூறும் கதைகள் என்னுடைய மூளைக்குள் எப்போதும் ஏதாவதொரு விதத்தில் புதுமையானவை என்பதைப் போல நுழைந்து கொண்டிருந்தன.
பல நேரங்களில் செல்லப்பன் ஆசாரியின் கதைகளுக்கு எந்த இடத்தில் வைத்துப் பார்த்தாலும் சில ஒற்றுமைகள் இருந்தன. எல்லா கதைகளிலும் செல்லப்பன் ஆசாரியும் இருப்பான். ஒரு பெண்ணும் இருப்பாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook