Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

1983

1983

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

1983

(மலையாள திரைப்படம்)

2014ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் திரைக்கு வந்த மலையாள திரைப்படம். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்கியவர் ஆப்ரிட் ஷைன் (Abrid Shine). இவர் ஒரு Fashion Photographer. படத்தின் கதையையும் இவரே எழுதியிருக்கிறார். திரைக்கதையை ஆப்ரிட் ஷைன்- பிபின் சந்திரன் இருவரும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள்.

மாறுபட்ட கதை, அருமையான திரைக்கதை - இவைதாம் படம் பார்ப்போரிடம் சிறிது கூட சோர்வே உண்டாகாத அளவிற்கு, படத்துடன் முழுமையாக ஒன்றச் செய்கின்றன.

பிரதீஷ் வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் இசையமைப்பாளர் கோபி சுந்தர்.

1983ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரை நடைபெறும் கதை இது. 2013ஆம் ஆண்டில், படத்தின் கதாநாயகனாக ரமேஷன் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறான்.

கதை பின்னோக்கி செல்கிறது.

1983ஆம் ஆண்டு. அந்த வருடத்தில்தான் முதல் தடவையாக இந்தியா உலக கிரிக்கெட் கோப்பையை வென்றது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் கபில்தேவ்.

தூர்தர்ஷனில் உலக கிரிக்கெட் போட்டி காண்பிக்கப்பட்டது. இந்தியா முழுவதிலும் இருக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள் தங்களின் உணவு, உறக்கம் எல்லாவற்றையும் மறந்து விட்டு, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்து, வெறியுடன் கிரிக்கெட்டை நாட்கணக்கில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

கல்கத்தாவிலிருந்த சச்சின் டெண்டுல்கருக்கு அப்போது வயது 10. அப்போதுதான் சச்சினுக்கு கிரிக்கெட்டின் மீது அளவற்ற ஆர்வம் உண்டாக ஆரம்பித்தது. தானும் கிரிக்கெட் விளையாட வேண்டும், இதே போல உலக அளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் சச்சினுக்கு அப்போதுதான் உண்டானது. இதை சச்சினே பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறார்.

சச்சினுக்கு மட்டுமல்ல- நம் படத்தின் கதாநாயகனான ரமேஷனுக்கும் அப்போது 10 வயது நடந்து கொண்டிருந்தது. சச்சினுக்கு மட்டும்தான் கிரிக்கெட்டின் மீது ஆர்வம் உண்டாக வேண்டுமா? கேரளத்தின் ஏதோ மூலையில் இருக்கும் குக்கிராமமான ப்ரம்மமங்களத்தில் பிறந்த ரமேஷனுக்கு அந்த ஆர்வம் உண்டாகக் கூடாதா என்ன? அவனுக்கும் உண்டானது.

விளைவு?

பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த அவன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தான். தென்னை மட்டையையும் டென்னிஸ் பந்தையும் வைத்து அவர்கள் புறம்போக்கு இடங்களில் கிரிக்கெட் விளையாடினார்கள். பள்ளிக் கூடத்திற்குப் போகாத நேரங்களிலெல்லாம் கிரிக்கெட்தான். வேறு எதைப் பற்றியும் அவன் கவலைப்படுவதே இல்லை.

அவனுடைய மனம் முழுக்க ஆக்கிரமித்திருந்தது கிரிக்கெட் மட்டுமே.

சிறிது சிறிதாக சிறுவன் வளர்ந்து, இளைஞனாக ஆனான். அவனுடன் சேர்ந்து அவனுடைய கிரிக்கெட் ஆர்வமும். ஆர்வம் என்பதை விட. அவனுக்குள் கிரிக்கெட் என்பது ஒரு வெறியாகவே ஆகி விட்டிருந்தது. இன்னும் சொல்லப் போனால்- அந்த கிராமமே 'கிரிக்கெட் கிறுக்கு' பிடித்த கிராமம் என்பதைப் போல ஆகி விட்டது. கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ஒவ்வொருவரும் தங்களையே முற்றிலும் தொலைத்து விட்டு, கிரிக்கெட் விளையாட்டுடன் ஐக்கியமாகி திரிந்தார்கள்.

ரமேஷன் கிரிக்கெட் விளையாட்டில் அரசனாக இருந்தான். அவன் பேட்டிங் செய்தால், கிரிக்கெட் பந்து எங்கு போய் விழும் என்றே தெரியாது. அவன் களத்தில் இறங்கினாலே, பவுண்டரியும்... சிக்ஸரும்தான். அவனுடைய விளையாட்டு திறமையைப் பார்த்து ஊரே மூக்கில் விரல் வைத்து அதிசயமாக பார்த்தது.

அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களே இரு அணிகளாக பிரிந்து விளையாடுவார்கள். சில நேரங்களில் அந்த கிராமத்திற்கும், பக்கத்து கிராமங்களில் இருக்கும் கிராமத்திற்குமிடையே கிரிக்கெட் போட்டி நடைபெறும். எந்த அணி விளையாடினாலும், ரமேஷன் எந்த அணியில் இருக்கிறானோ, அந்த அணிதான் வெற்றி பெறக் கூடிய அணி என்பதைக் கூறவும் வேண்டுமா?

ரமேஷனின் தந்தை அந்த ஊரில் ஒரு 'லேத் பட்டறை' வைத்துக் கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதர். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துத்தான் அவர் தன் குடும்பத்தையே நடத்திக் கொண்டிருக்கிறார். தன் மகன் ரமேஷன் ஒழுங்காக படிக்காமல், எப்போதும் கிரிக்கெட் மட்டையும், பந்துமாக அலைந்து கொண்டிருப்பதில் அவருக்கு சிறிதும் விருப்பமில்லை. பல தடவைகள் அவர் தன் மகனை நேரில் அழைத்து, அதற்காக கண்டிப்பான வார்த்தைகளை பயன்படுத்தி அவனைத் திட்டவும் செய்கிறார். ஆனால், அவன் அவற்றையெல்லாம் பொருட்டாகவே நினைக்காமல், தன் மனம் என்ன கூறுகிறதோ, அந்த வழியிலேயே போய்க் கொண்டிருக்கிறான். அவனுடைய தந்தைக்கு அவனை ஒரு எஞ்ஜினியராக எப்படியும் ஆக்கி விட வேண்டும் என்ற ஆசை. தன் மகனின் நடவடிக்கைகளைப் பார்த்து, தன்னுடைய எஞ்ஜீனியர் ஆசை எங்கே நிறைவேறாமற் போய் விடுமோ என்ற மன கவலை அவருக்கு எப்போதும் இருந்து கொண்டிருந்தது.

ரமேஷன் படிக்கும் அதே பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி மஞ்சுளா. காண்போர் மனதைச் சுண்டி இழுக்கக் கூடிய பேரழகு படைத்த பருவச் சிட்டு அவள். சில நேரங்களில் அவர்கள் இருவர் மட்டும் தனியாக நடந்து கொண்டே தங்களை மறந்து பேசிக் கொண்டிருப்பார்கள். நல்ல வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த அந்த அழகு தேவதைக்கு என்ன காரணத்தாலோ, ரமேஷனின் மீது அளவற்ற ஈடுபாடு உண்டாகி விட்டிருந்தது.

12வது வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியாயின. அதில் ரமேஷன் மிகவும் குறைவான மதிப்பெண்கள் வாங்கி, தோல்வியைத் தழுவினான். மஞ்சுளா நல்ல மதிப்பெண்கள் வாங்கி, தேர்ச்சி பெற்றாள். ரமேஷன் தோல்வியடைந்ததற்குக் காரணம்- எப்போதும் கிரிக்கெட் மட்டையையும் பந்தையும் கையில் வைத்துக் கொண்டு அலைந்ததுதான் என்று மிகவும் கோபத்துடன் சத்தம் போட்டார் அவனுடைய தந்தை. தன் மகனை எஞ்ஜீனியராக்கி அழகு பார்க்க வேண்டும் என்று தான் கண்ட கனவு நடக்காமல் போய் விட்டதே என்ற மன கவலை அவருக்கு.

மஞ்சுளா பக்கத்திலுள்ள நகரத்திலிருக்கும் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு படிப்பதற்காகச் சென்றாள். ரமேஷன் என்ன செய்வான்? அவனுடைய படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, அவனை தன்னுடைய லேத் பட்டறையில் தன்னுடன் வேலை பார்க்கும்படி செய்தார் அவனின் தந்தை. அவரால் வேறு என்ன செய்ய முடியும்? கைலியை அணிந்து கொண்டு, மின்சார இணைப்பு கொடுப்பதும், சக்கரங்களை ஓட விடுவதும், எதையாவது வெல்டிங் செய்வதும், தீப் பொறிகளை பறக்கச் செய்வதும் ரமேஷனின் வேலையாக ஆனது.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version