Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

1983 - Page 3

1983

இதற்கிடையில் அந்த கிராமத்தில், கிராமங்களுக்கிடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதற்கு சிறப்பு விருந்தினராக மாநில அளவில் முன்பு விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரரான விஜய் மேனன் வந்திருந்தார். கிராமத்து இளைஞர்கள் விளையாடிய கிரிக்கெட் விளையாட்டை அவர் பார்த்தார். தென்னை மட்டையையும், டென்னிஸ் பந்தையும் வைத்துக் கொண்டு ரமேஷன் ஆடிய அபாரமான ஆட்டத்தைப் பார்த்து உண்மையிலேயே அவர் அசந்து போனார். நாற்பது வயதை அடைந்திருக்கும் ஒரு கிராமத்து மனிதன் என்ன அருமையாக விளையாடுகிறான் என்று அவர் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார். அவன் குவித்த பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பார்த்து அவருக்கு வியப்புதான் உண்டானது. ஒரு குக்கிராமத்தில் இப்படியொரு நினைத்துப் பார்க்க முடியாத திறமைசாலியா என்று அவர் மூக்கில் விரல் வைத்து பார்த்தார்.

'யார் அந்த இளைஞர்? அவரை இங்கே வரச் சொல்லுங்கள்' என்றார் விஜய் மேனன். ரமேஷனைப் பற்றி அவர் ஆர்வத்துடன் விசாரித்தார். தன்னுடைய சோக கதையை அவன் மனம் திறந்து கூறினான். தன்னுடைய மகனையும், அவனிடம் இருக்கும் கிரிக்கெட் திறமை பற்றியும் விஜய் மேனனிடம் ரமேஷன் கூற மறக்கவில்லை. அதற்கு விஜய் மேனன் 'இவ்வளவு திறமைகளை வைத்துக் கொண்டு ஒரு குக்கிராமத்திற்குள்ளேயே அடங்கிக் கிடந்தால் எப்படி? தென்னை மட்டையையும், டென்னிஸ் பந்தையும் வைத்து விளையாடுவதா கிரிக்கெட்? கிரிக்கெட் விளையாட்டிற்கென்று நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. அதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில், சர்வ தேச அளவில் என்று நிறைய போட்டிகள் இருக்கின்றன. ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரன் இப்படி ஒவ்வொரு கட்டமாக தாண்டி, வாழ்க்கையில் முன்னேறி வர வேண்டும். கபில்தேவ், சுனில் கவாஸ்கர், அசாருத்தீன், சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் இப்படி படிப்படியாக முன்னேறித்தான் உலகமெங்கும் தெரியக் கூடியவர்களாக ஆனார்கள். இப்படி ஒரு சிறிய கிராமத்திற்குள்ளேயே விளையாடிக் கொண்டிருந்தால், எந்த காலத்திலும் பெரிய ஆளாக வரவே முடியாது' என்றார். 'சார்... நான் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், வர முடியாமல் போய் விட்டது. என் மகனையாவது அப்படி கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன்' என்றான் ரமேஷன். நகரத்திலிருக்கும் தன்னுடைய 'ஸ்போர்ட்ஸ் அகாடெமி'க்கு அவனை அழைத்துக் கொண்டு வரும்படி ரமேஷனிடம் கூறினார் விஜய் மேனன்.

அடுத்த வாரமே அந்த அகாடெமிக்கு தன் மகனுடன் போய் நின்றான் ரமேஷன். சிறுவன் கண்ணனின் பேட்டிங்கைப் பார்த்த விஜய் மேனன், அவனை அங்கு சேர்த்துக் கொண்டார். ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு கிழமைகளில் பையனை அழைத்துக் கொண்டு வந்தால் போதும் என்றார். முதலில் சிறுவனுக்கு பேட், பந்து, தலைக் கவசம் ஆகியவை வாங்க வேண்டும். அதற்கு பணத்திற்கு எங்கே போவது?

ரமேஷனின் மனைவி சுசீலா, தன் கணவனின் கவலையைப் பார்த்து, தன்னுடைய நகைகளைக் கழற்றிக் கொடுத்தாள். அதை வைத்து பேட், பந்து, தலைக் கவசம் ஆகியவற்றை வாங்கினான் ரமேஷன். கண்ணனின் கிரிக்கெட் பயிற்சி தொடர்ந்தது. சிறுவனுக்கு கிரிக்கெட்டின் பல உத்திகளையும் ஆர்வத்துடன் கற்றுக் கொடுத்தார் விஜய் மேனன்.

'பவுலிங்'கில் பலவித கில்லாடித்தனங்களையும் காட்டக் கூடிய ஒரு சிறுவன் வேண்டுமென்றே பந்தை கன்னா பின்னாவென்று எறிந்து, கண்ணனின் முழங்காலில் காயத்தை உண்டாக்கி, அவனைச் செயல்பட முடியாமல் ஆக்கினான். அந்த பையனின் 'பவுலிங்'கைப் பார்த்தாலே, பயந்தான் கண்ணன்.

ரமேஷனும், நடக்க முடியாமல் நொண்டிக் கொண்டே வந்த மகன் கண்ணனும் ஒரு பூங்காவிற்கு முன்னால் நின்று கொண்டிருந்தார்கள். உள்ளே கிரிக்கெட் பயிற்சி நடப்பதாகவும், அதை பார்ப்பதற்கு 20 ரூபாய் கட்டணம் என்றும் போடப்பட்டிருந்தது. ரமேஷன் டிக்கெட் வாங்கிக் கொண்டு, தன் மகனுடன் உள்ளே சென்றான்.

உள்ளே ஒரு 'பவுலிங் மெஷின்' வைக்கப்பட்டிருந்தது. அது பந்தை ஜெட் வேகத்தில் எறிய எறிய, அங்கிருந்த சிறுவர்கள் சுறுசுறுப்பாக 'பேட்டிங்' செய்தார்கள் 'இப்படியொரு மெஷின் இருந்தால் அருமையாக கிரிக்கெட் பயிற்சி பெறலாமே!' என்று நினைத்த ரமேஷன், அதன் உரிமையாளரிடம் அதன் விலையைக் கேட்டான். அவர் அதன் விலை சில இலட்சங்கள் என்று கூறினார். அந்த பணத்தை ரமேஷன் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது.

தொங்கிய முகத்துடன் கிராமத்திற்கு வந்த ரமேஷன் லேத் பட்டறையில் இரவும், பகலும் என்னவோ வேலையில் ஈடுபட்டான். அங்கு துருப்பிடித்த நிலையில் கிடந்த இரும்பு சக்கரங்களை எடுத்து, நெருப்புப் பொறி பறக்க வைத்தான். வெல்டிங் செய்தான். என்னென்னவோ பண்ணிக் கொண்டிருந்தான். இரவில் வீட்டிற்குக் கூட வரவில்லை. இந்த அளவிற்கு தொழிலில் ஆழமாக தன் மகன் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து, ரமேஷனின் தந்தை சந்தோஷப்பட்டு புன்னகைத்தார்.

பொழுது விடிந்தது. தான் புதிதாக உண்டாக்கிய கருவியை வீட்டிற்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினான் ரமேஷன். அதில் மூன்று சக்கரங்கள் சுழன்றன. ஒரு சக்கரம் மட்டும் சுற்றவே இல்லை. அது அவன் உருவாக்கிய 'பவுலிங் மெஷின்'. அந்தச் சக்கரமும் சுழன்றால் மட்டுமே, பவுலிங் செய்யப்படும் பந்துகள் பறக்கும். என்ன முயன்றும், அதை அவனால் சரி செய்யவே முடியவில்லை. கவலையுடன் அமர்ந்திருந்த தன் மகனைப் பார்த்த ரமேஷனின் தந்தை 'உனக்கு என்ன பிரச்சினை? ' என்று கேட்டார். அவன் கூறினான். உடனடியாக ஒரு 'ஸ்க்ரூ ட்ரைவரை' கொண்டு வரும்படி அவர் கூறினார். அதை வைத்து அவர் என்னென்னவோ பண்ணினார். சில நிமிடங்களில் அந்த கருவி இயங்க ஆரம்பித்தது.

அதிலிருந்து பந்துகள் பறந்தன. ரமேஷனும், அவனின் செல்ல மகன் கண்ணனும் ஜெட் வேகத்தில் 'பேட்டிங்' செய்தார்கள். அவர்கள் மட்டுமா? ரமேஷனின் தந்தை கூட பேட்டிங் செய்ய ஆரம்பித்தார் அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர் ரமேஷனின் தாயும், அவனுடைய மனைவியும். முழு குடும்பமும் கிரிக்கெட் விளையாட்டில் மூழ்கியிருந்தது.

காலில் காயம் உண்டாகி விட்டதால், நகரத்திற்கு பையன் வராமற் போகவே, அவனைத் தேடி விஜய் மேனனே கிராமத்திற்கு வந்தார். ரமேஷன் செலவே இல்லாமல் பழைய இரும்புச் சக்கரங்களைக் கொண்டு உருவாக்கிய புதுமையான 'பவுலிங் மெஷி'னையும்,  அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பயிற்சியையும் அவர் பார்த்து, வியப்படைந்தார்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version