Lekha Books

A+ A A-

டியர்ஸ் ஆஃப் காஸா

Tears of Gaza

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

டியர்ஸ் ஆஃப் காஸா - Tears of Gaza

(நார்வே திரைப்படம்)

போருக்கு எதிராக எடுக்கப்பட்ட நார்வே நாட்டு திரைப்படம் 'Tears of Gaza.' 2008ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி இஸ்ரேல், பாலஸ்தீனத்திலிருக்கும் காஸா மீது மிகப் பெரிய ராணுவ தாக்குதலை நடத்தியது. உலகின் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒரு இடம் காஸா. அந்த போர் 22 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற கடுமையான போரில் 20,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வீடுகள், தொழிற்சாலைகள். தோட்டங்கள் அழிந்தன. 1387 பேர் கொல்லப்பட்டனர். 773 பேர் உடல் ஊனமுற்றவர்களாக ஆனார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள். அவர்களில் 257 பேர் 16 வயதிற்குக் கீழே உள்ளவர்கள். 5500 பேர் காயமுற்றார்கள். 700க்கும் மேற்பட்ட பெண்களும், 1800க்கும் மேற்பட்ட குழந்தைகளும் நீண்ட கால மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களாக ஆனார்கள்.

அப்படிப்பட்ட மிகப் பெரிய பாதிப்புகளையும், அழிவையும் உண்டாக்கிய போரையும், இஸ்ரேல் மிருகத்தனமாக நடத்திய போரின் கொடுமைகளையும் மக்களுக்குக் காட்டுவதற்காக எடுக்கப்பட்ட படமே இது. இன்னும் சொல்லப் போனால்- இதை ஒரு 90 நிமிடங்கள் ஓடக் கூடிய டாக்குமெண்டரி என்று கூறுவதே பொருத்தம். அதற்கேற்றபடி வானத்திலிருந்து குண்டுகள் போடப்படுவது, ஏவுகணைகள் வீசப்படுவது ஆகியவற்றின் உண்மையான காட்சிகளையே படத்தில் இடம் பெறச் செய்திருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர், சிறுமிகளின் பார்வையில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதை இயக்கியவர் Vibeke Lokkeberg. போரைப் பற்றி பாலஸ்தீன மக்கள் பலரிடமும், வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சிலரிடமும் விசாரித்து பெற்ற தகவல்கள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

படம் முடிவடைந்த பிறகு, இதற்கு இஸ்ரேலில் மிகப் பெரிய எதிர்ப்பு உண்டானது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக எடுக்கப்பட்ட படம் என்ற பலமான விமர்சனம் எல்லா பக்கங்களிலும் எழுந்தது. இஸ்ரேலுக்கு எதிராக எடுக்கப்பட்ட படமென்றும், உலகிலேயே மிகவும் கொடூரமான ராணுவ தாக்குதல்களை ஏற்படுத்தக் கூடிய நாடு அது என்ற எண்ணத்தை அந்தப் படம் மக்கள் மத்தியில் உண்டாக்குகிறது என்றும், அந்நாட்டைச் சேர்ந்த மக்களும், அரசியல் விமர்சகர்களும் ஒருமித்த குரலில் கருத்து தெரிவித்தார்கள். அவர்கள் என்னதான் கூறினாலும்- காஸா போரின்போது நடைபெற்ற சம்பவங்களின் உண்மையான காட்சிகள் படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்ததால், மற்ற நாடுகள் இஸ்ரேலியர்கள் கூறியதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இஸ்ரேல் எந்த அளவிற்கு பாலஸ்தீனத்தின் மீதும், அம்மக்களின் மீதும் கொடூரமான ராணுவ தாக்குதலை, சிறிது கூட மனிதாபிமானமே  இல்லாமல், அரக்க குணத்துடன் நடத்தியிருக்கிறது என்பதை அப்படத்தின் மூலம் உலகமே உணர்ந்து கொண்டது என்பதுதான் உண்மை.

2011ஆம் ஆண்டில் இஸ்ரேல் மக்களுக்காக. Jerusalem Film Festivalஇல் இப்படம் திரையிடப்பட்டது.

Gaza Film Festivalஇல் இந்தப் படத்திற்கு Gold Award கிடைத்தது. அந்த பரிசு தொகை படத்தில் இடம் பெற்ற பாலஸ்தீன குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

Al Jazeera International Documentary Festival 2011ஆம் ஆண்டில் Dohaவில் நடைபெற்றது. அதில் 'Tears of Gaza' திரையிடப்பட்டு, சிறந்த திரைப்படத்திற்கான 'Human Rights Award' ஐப் பெற்றது.

அரேபிய மொழியிலும், ஆங்கிலத்திலும் எடுக்கப்பட்ட இப்படம் முழுக்க முழுக்க பாலஸ்தீனத்தின் காஸாவிலேயே படமாக்கப்பட்டது.

யாஹ்யா என்ற 12 வயது சிறுவன், ராஸ்மியா என்ற 11 வயது சிறுமி, அமிரா என்ற 14 வயது சிறுமி - இவர்கள் மூவரும் போரால் பாதிக்கப்பட்டவர்கள். தாங்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டோம் என்பதையும், அதன் மூலம் தாங்கள் எவ்வளவு பெரிய இழப்பிற்கு ஆளாகியிருக்கிறோம் என்பதையும் கண்ணீர் மல்க அவர்கள் கூறுகிறார்கள். போரின் கொடூரமான காட்சிகளுக்கு மத்தியில் இவர்கள் மூவரின் வாக்கு மூலங்கள், படத்தைப் பார்ப்போர் தெரிந்து கொள்வதற்காக வழங்கப்படுகின்றன.

கேமராவிற்கு முன்னால் மூன்று பேரும் தனித்தனியாக நின்று தங்களின் அவல கதையை கூறுகிறார்கள். அவர்களின் கண்ணீர் கதைகளை நமக்குக் காட்டுவதுதான் 'Tears of Gaza' படத்தின் நோக்கம்.

முதலில் 12 வயது சிறுவனான யாஹ்யா என்ன கூறுகிறான் என்று பார்ப்போம்.

'போரில் என் தந்தை கொல்லப்பட்டபோது, இந்த முழு உலகத்தையே இழந்து விட்டதைப் போல நான் உணர்ந்தேன். என்னுடைய சகோதரர்கள், சகோதரிகள் எல்லோரையும் போரில் நான் இழந்து விட்டேன். உலகத்தில் நான் மட்டுமே தனியாக விடப்பட்ட உணர்வு எனக்கு உண்டானது.

என் தந்தை இறந்தவுடன், எங்களின் வாழ்க்கையில் உள்ள அனைத்தையுமே நாங்கள் இழந்து விட்டோம் என்ற எண்ணம்தான் எங்களுக்கு உண்டானது. நான் என் தந்தையை இழந்த பிறகு, ஒவ்வொரு நான் இரவிலும் நான் வாய் விட்டு அழுவேன். ஒவ்வொரு முறை நினைக்கும்போதும், எனக்கு அழுகை வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக- இரவு நேரங்களில் அவரை நினைக்கும் போது, அழுகை தானாகவே வந்து விடும். நான் திடீரென்று தூக்கத்திலிருந்து கண் விழித்து, அழ ஆரம்பிப்பேன். என் தந்தை உயிருடன் வரக் கூடாதா என்று அப்போது நினைப்பேன்.

நான் ஒரு டாக்டராக வர வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதன் மூலம் இஸ்ரேலியர்களால் பாதிக்கப்பட்டு, காயமடைந்த மக்களுக்கு நான் சிகிச்சை செய்ய முடியும். யாருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு நான் சிகிச்சை செய்யலாம், மருந்துகள் தரலாம், அறுவை சிகிச்சை செய்யலாம். குண்டடி பட்டவர்கள், அதனால் காயமடைந்தவர்கள் ஆகியோருக்கு நான் டாக்டராக வந்து உதவ விரும்புகிறேன்.'

இந்த வார்த்தைகளை கேமராவிற்கு முன்பு நின்று கூறும் யாஹ்யா தன் தந்தையைப் பற்றியும், அவரின் மரணத்தைப் பற்றியும், அவரை நினைக்கும்போது அழுகை வருவதையும் கூறும்போது, தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் அவன் தேம்பித் தேம்பி அழுகிறான். அவன் மனம் உடைந்து அழுவதைப் பார்க்கும்போது, படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம் கண்களிலும் கட்டாயம் கண்ணீர் அரும்பும்.

இப்போது போரின் கொடூரத்தால், பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமியான ராஸ்மியாவின் குரல்.

'போரின் கொடுமையிலிருந்து பாதுகாப்பு தேடி நாங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சொந்தமான பள்ளிக் கூடத்தில் தஞ்சம் புகுந்தோம். ஆனால், அங்கும் இஸ்ரேலியர்கள் குண்டு போட்டார்கள். நாங்கள் இரவு முழுவதும் அங்கேயே இருந்தோம். அப்போதுதான் எங்களுக்கு அந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. எங்களுடைய மாமா, போரில் கொல்லப்பட்டு விட்டார் என்பதே அது. இரவு வேளையில் என் தாத்தா, என் மாமாவை அழைத்து, பருகுவதற்கு நீர் கொண்டு வரும்படி கூறியிருக்கிறார். அவர் தன் இரு மகன்களுடன் வெளியே சென்றிருக்கிறார். அவர்கள் எல்லோருமே போரில் கொல்லப்பட்டு விட்டனர்.

வாழ்க்கை என்பது உண்மையிலேயே சிரமங்கள் நிறைந்தது... உண்மையிலேயே...'

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel