Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

தி ஒயிட் பலூன்

The White Balloon

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

தி ஒயிட் பலூன் - The White Balloon

(ஈரானிய திரைப்படம்)

'தி ஒயிட் பலூன் '- 1995ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஈரானிய திரைப்படம். பாரசீக மொழியில் எடுக்கப்பட்ட இப்படம் 85 நிமிடங்கள் ஓடக் கூடியது.

இப்படத்தின் இயக்குநர் Jafar Panahi. அவர் இயக்கிய முதல் படமிது. படத்திற்கு திரைக்கதை எழுதியவர் புகழ் பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குநரான Abbas Kiarostami. அப்பாஸ் இயக்கிய 'Through the Olive Trees' என்ற படத்தில் அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஜாஃபர் பனாஹி.

பல சர்வதேச பட விழாக்களிலும் கலந்து கொண்டு ஏராளமான விருதுகளைப் பெற்ற படம் இது. அதில் குறிப்பிடத்தக்கது 1995ஆம் ஆண்டில் நடைபெற்ற Cannes Film Festivalஇல் பெற்ற விருது, உலகமெங்கும் உள்ள பத்திரிகைகளால் தலையில் வைத்து கொண்டாடப்பட்ட இப்படத்தை புகழ் பெற்ற 'The Guardian' பத்திரிகை 'உலக அளவில் 50 சிறந்த குடும்பக் கதை கொண்ட படங்களைப் பட்டியல் போட்டால், அதில் இந்தப் படமும் ஒன்று' என்று எழுதியதிலிருந்தே இப்படத்தின் சிறப்பை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஏழு வயது உள்ள ஒரு சிறுமியை மைய கதாபாத்திரமாக வைத்து ஜாஃபர் பனாஹி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு குழந்தை நட்சத்திரத்தை வைத்து படத்தை இயக்கிய துணிச்சலான செயலுக்காகவே அவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

'தி ஒயிட் பலூன்' படத்தின் கதை இதுதான்:

ஈரானின் புது வருடம் பிறப்பதற்கு (மார்ச் 21) இன்னும் ஒன்றரை மணி நேரமே இருக்கிறது. படம் அந்த இரவு வேளையில்தான் ஆரம்பமாகிறது.

ஏழு வயது கொண்ட சிறுமியான Raziehவும், அவளுடைய தாயும் டெஹ்ரான் நகரத்தின் மார்க்கெட்டில் வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடை வீதியில் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது, ஒரு கடையில் கண்ணாடி ஜாடிகளில் நீந்திக் கொண்டிருக்கும் Gold fishகளைப் பார்க்கிறாள் ரஸியே. அவர்களின் வீட்டில் வளர்ப்பு மீன்கள் தொட்டியில் இருக்கின்றன. ஆனால், அவை மிகவும் மெலிந்து போன நிலையில் இருக்கின்றன. அதனால், ஜாடியில் இருக்கும் அழகான தங்க மீன் ஒன்று தனக்கு வேண்டும் என்று தன்னுடைய தாயை நச்சரிக்கிறாள் ரஸியே. ஆனால், அதை வாங்கித் தருவதற்கு அவளுடைய அன்னை தயாராக இல்லை. அவள் மறுத்து விடுகிறாள்.

ரஸியேவும், அவளுடைய தாயும் வீட்டை நோக்கி நடக்கிறார்கள். வரும் வழியில் ஒரு திறந்த வெளியில் இரண்டு பாம்பு வித்தை காட்டும் மனிதர்கள் பாம்பை வைத்து வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதை சுற்றிலும் நின்று நிறைய ஆட்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்குவதற்காக பல பொய்களையும் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர் அந்த இரு மனிதர்களும். அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு விரும்புகிறாள் ரஸியே. 'இந்த மாதிரி இடங்களிலெல்லாம் நீ நிற்கக் கூடாது' என்று கண்டிப்பான குரலில் கூறி, தன் மகளை வலிய அழைத்துக் கொண்டு செல்கிறாள் ரஸியேவின் அன்னை.

இருவரும் வீட்டிற்கு வருகிறார்கள். தான் கேட்ட தங்க மீனை வாங்கித் தரவில்லையே என்ற ஏமாற்றத்தில் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறாள் ரஸியே. வீட்டிற்கு வந்த பிறகும் 'எனக்கு அந்த தங்க மீன் வேண்டும்' என்று இடைவிடாமல் தன் தாயை நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள் ரஸியே.

அப்போது அவளுடைய அண்ணன் அலி அவர்களுடைய தந்தைக்காக கடையிலிருந்து சோப் ஒன்றை வாங்கிக் கொண்டு வருகிறான். அவர்களுடைய தந்தை இப்போது நமக்கு காட்டப்படுகிறார். அவர் எந்தவித சுறுசுறுப்பும் இல்லாத, சோம்பேறித்தனமான மனிதர் என்பது அவரைப் பார்க்கும்போதே நமக்கு புரிந்து விடுகிறது. யாரிடமும் அதிகம் பேசிக் கொள்ளாமல், அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர் என்பதும் தெரிகிறது. குடும்பத்திற்கு அவ்வப்போது அமைதியற்ற சூழ்நிலையை உண்டாக்கக் கூடியவர் என்பதும் தெரிகிறது. அலியைப் பார்த்ததும் 'நான் சோப்பா வாங்கி வரச் சொன்னேன்? ஷாம்பு அல்லவா வாங்கிக் கொண்டு வரச் சொன்னேன்?' என்று கூறியவாறு சோப்பை அலியின் மீது வீசி எறிகிறார். தன் விதியை நொந்து கொண்டே, மீண்டும் ஷாம்பு வாங்குவதற்காக வெளியேறிச் செல்கிறான் அலி.

அவன் திரும்பி வந்தவுடன், தங்க மீன் வாங்கும் விஷயத்தில் தன் தாயிடம் எப்படியாவது கூறி உதவும்படி தன் அண்ணனிடம் கெஞ்சி கேட்டுக் கொள்கிறாள் ரஸியே. அதற்கு லஞ்சமாக அவனுக்கு ஒரு பலூனைத் தருவதாக அவள் கூறுகிறாள். '100 tomans கொடுத்தால், தங்க மீனை வாங்கி விடலாம்' என்கிறாள் அவள். அதற்கு அலி 'உனக்கு என்ன பைத்தியமா? அந்த 100 டொமான்களை வைத்து நான் இரண்டு திரைப்படங்களைப் பார்த்து விடுவேன்' என்று கூறுகிறான்.

இறுதியில் ரஸியேவின் விருப்பம் நிறைவேறுகிறது. அவளுடைய தாய் வீட்டில் இறுதியாக இருந்த 500 டொமான் நோட்டு ஒன்றை எடுத்து, ரஸியேவின் கையில் தருகிறாள். '100 டொமான்களுக்கு தங்க மீன் வாங்கி விட்டு, மீதி பணத்தைப் பத்திரமாக வீட்டிற்குக் கொண்டு வா' என்று கூறி, தன் மகள் ரஸியேவை அவள் அனுப்பி வைக்கிறாள்.

ரஸியேவிற்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு சுதந்திரப் பறவையின் உற்சாகம் அவளுக்கு உண்டாகிறது. ஒரு கண்ணாடி ஜாடியைக் கையில் எடுத்துக் கொண்டு, வீட்டை விட்டு அவள் வெளியேறி நடக்கிறாள். அந்த கண்ணாடி ஜாடிக்குள் அவளின் தாய் தந்த அந்த 500 டொமான் நோட்டு இருக்கிறது. ஜாடிக்கு மூடி இல்லை. அதை கையில் வைத்துக் கொண்டு, தங்க மீனைச் சீக்கிரம் வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் வேகமாக நடந்து செல்கிறாள் ரஸியே.

வழியில் அந்த பாம்பு விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்போதும் ஏராளமான ஆட்கள் சுற்றிலும் நின்று அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரஸியே அந்தக் கூட்டத்திற்கு முன்னால் போய் நிற்கிறாள். அவளையும், அவளுடைய கையிலிருக்கும் கண்ணாடி ஜாடிக்குள் இருக்கும் பணத்தையும் பார்க்கிறான் பாம்பு வித்தை காட்டும் மனிதன். அவனின் குறி அந்தப் பணத்தின் மீதே இருக்கிறது. அந்தச் சிறுமியிடமிருந்து எப்படியும் அந்த பணத்தை அபகரித்தே ஆவது என்ற நோக்கத்துடன் இருக்கிறான் அவன். பல கில்லாடி வேலைகளெல்லாம் செய்து, அந்த பணத்தைச் சிறுமியிடமிருந்து அபகரித்தும் விடுகிறான். பணம் தன் கையை விட்டுப் போன பிறகுதான், சுய உணர்விற்கு வருகிறாள் சிறுமி.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version