Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

ஆர்டினரி - Page 2

ordinary

ஆசிரியர் வேணு மாஸ்டரின் மகள் கல்யாணி என்றாலும், அவருக்கு இன்னொரு மகளும் இருக்கிறாள். அவள் அவருடைய வளர்ப்பு மகள். அவருக்குப் பிறந்தவள் அல்ல. அவருடைய நண்பரின் மகள். நண்பர் மரணமடைய, அந்தப் பெண் அன்னாவை அவரே வளர்க்க வேண்டிய நிலை. அன்னாவை பெண் கேட்டு வருகிறார் ஜோஸ் என்ற ஆசிரியர். அந்த இளைஞர் மிகவும் நல்லவர். எனினும், அதற்கு மறுத்து விடுகிறார் வேணு மாஸ்டர். தன்னுடைய சொந்த மகன் தேவனுக்கு அவளைத் திருமணம் செய்து வைக்க தான் எப்போதோ நிச்சயம் செய்து விட்டதாக கூறுகிறார் அவர். ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார் ஜோஸ் மாஸ்டர்.

எங்கோ தூரத்திலிருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு திரும்பி வரப் போகும் தேவனுக்காக அந்த முழு குடும்பமும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறது.

இப்போது இரவிக்கு அந்தப் பேருந்துப் பயணம் நன்கு பழகி விட்டது. ‘கவி’யும், அந்த கிராமத்து மக்களும்தான்…

இதற்கிடையில் பேருந்தில் பயணம் செய்யும் ஒரு பயணியிடம், போலீஸ்காரர் ஒருவர் தன் அதிகாரத்தைக் காட்ட, அவரை துணிச்சலுடன் கேள்வி கேட்கிறான் இரவி. ‘எனக்கும் சட்டம் தெரியும். நீங்களும் அரசாங்க ஊழியர்தான். நானும் அரசாங்க ஊழியர்தான். நீங்களும் காக்கிச் சட்டை போட்டிருக்கிறீர்கள். நானும் காக்கிச் சட்டை போட்டிருக்கிறேன்’ என்கிறான். அவனின் அச்சமற்ற வார்த்தைகளைக் கேட்டு, அங்கிருந்து கிளம்பி விடுகிறார் போலீஸ்காரர்.

நாட்கள் நகர்கின்றன. ஒருநாள் பனி மூடிய மலைப் பாதையில் மேல் நோக்கி, பேருந்து முனகிக் கொண்டே வளைந்து வளைந்து பயணிக்க, ஒரு இடத்தில் அது நின்று விடுகிறது. காரணம் – பேருந்தின் டயர் ‘பங்க்சர்’ ஆகியிருக்கிறது. பயணிகள் அந்த வழியே வரும் ஜீப்களிலும், வேன்களிலும் (கேரளத்தில் அது சர்வ சாதாரணமாக நடக்கக் கூடிய காட்சி) ஏறி, ‘கவி’யை நோக்கி புறப்படுகிறார்கள்.

இரவியும், ஓட்டுனர் சுகுவும் பேருந்திற்கு முன்னால் இருட்டு நேரத்தில் மலைப் பாதையில் அமர்ந்திருக்கிறார்கள். ரிப்பேர் செய்ய வருகிறார் ஆசான் என்ற சலீம்குமார். டயரின் பங்க்சரைச் சரி பண்ணுவதற்கு முன்னர் அவர் தனக்குள் மதுவை ஊற்றிக் கொள்கிறார். அதற்குப் பிறகுதான் வேலையே நடக்கிறது. வேலை முடிந்ததும் சரியாகி, கிளம்பி விடுகிறார்.

ஓட்டுனர் சுகு முழு போதையில் இருக்கிறான். வண்டியை அவன் ஓட்ட வேண்டாம் என்று கூறிய இரவி, ஓட்டுனரின் இருக்கையில் தான் அமர்ந்து பேருந்தை ஓட்டுகிறான். பயணிகள் இருக்கையொன்றில் அமரும் சுகு சந்தோஷமாக உரையாடிக் கொண்டு வருகிறான்.

திடீரென்று ஒரு இடத்தில் அதிர்ச்சியடைந்து பேருந்தை நிறுத்துகிறான் இரவி. பேருந்திற்கு முன்னால் அடிபட்ட நிலையில் ஒரு இளைஞன்…. நிலை குலைந்து இரவியும், சுகுவும் பேருந்தை விட்டு கீழே வருகிறார்கள். அடிபட்டுக் கிடக்கும் அந்த இளைஞனைத் தூக்கிக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறார்கள். அப்போது அந்த வழியாக ஒரு ஜீப் மேல் நோக்கி வருகிறது. அந்த ஜீப் ஓட்டுனரிடம் விஷயத்தைக் கூற, அருகிலிருக்கும் மருத்துவமனையில் உடனடியாக கொண்டு போய் சேர்ப்பதாக அவன் கூறி, அந்த இளைஞனின் உடலை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு கிளம்புகிறான்.

இரவியும் சுகுவும் பின்னர் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அங்கு விசாரிக்க, அப்படி எந்த இளைஞனும் அடிபட்ட நிலையில் கொண்டு வரப்படவில்லை என்று அங்கு கூறுகிறார்கள். அந்த மருத்துவமனையில் மட்டுமல்ல- சுற்றியுள்ள எந்த மருத்துவமனையிலும் அந்த இளைஞன் சேர்க்கப்படவில்லை. அப்படியென்றால், அந்த அடிப்பட்ட இளைஞன் என்ன ஆனான்?

அடுத்த நாள் அந்த இளைஞனின் உடல் இறந்த நிலையில் ஒரு குட்டையில் மிதக்கிறது. இறந்தவன் வேணு மாஸ்டரின் மகன் தேவன்.

ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்ற ஓட்டுனர் யார்? அவன் ஏன் தேவனை மருத்துவமனையில் சேர்க்கவில்லை? அவனைக் கொலை செய்து, குட்டையில் ஏன் வீசி எறிய வேண்டும்? இப்போது அந்த ஓட்டுனர் எங்கே இருக்கிறான்?

இந்த கேள்விகள் ஒரு பக்கம் குடைந்து கொண்டிருக்க, வேறொரு பிரச்னையில் இருக்கிறார்கள் இரவியும், சுகுவும். அடிபட்டு பேருந்துக்கு முன்னால் கிடந்த தேவனின் தோல் பை, இப்போது இரவியிடம் இருக்கிறது. அதைத் திறந்து பார்த்தால்… அன்னா அவனுக்கு எழுதிய காதல் உணர்வு கொண்ட கடிதங்களின் குவியல்… அந்த பையை எப்படி பிறரின் கண்களில் படாமல் தொடர்ந்து பாதுகாப்பது?

போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று உண்மையைக் கூறலாம் என்றால்… அதிலும் பிரச்னை… பேருந்தை ஓட்டியவன் சுகு அல்ல, இரவி… கண்டக்டர் எதற்கு பேருந்தை ஓட்ட வேண்டும்? ஓட்டுனர் மதுவின் போதையில் இருந்தான் என்பது தெரிந்தால், அவனுடைய வேலையே பறி போய் விடாதா?

என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில், ஒரு இரவு வேளையில் மங்கலான வெளிச்சத்தில் தேவனின் தோல் பைக்குள் இருந்த அந்த கடிதங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் இரவி. அப்போது அவனைத் தேடி வருகிறாள் கல்யாணி.

அவள் கண்களில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக, இரவி அந்த கடிதங்களை மறைக்கிறான். கல்யாணி அவற்றைப் பறிக்க முயல, கோபமடைந்த இரவி அவளை கன்னத்தில் அடித்து விடுகிறான். அந்த போராட்டத்தில் அந்த கடிதங்கள் சிதறி காற்றில் பறக்கின்றன.

இப்போது-

வெளியே நின்று கொண்டிருப்பது அன்னா. அவள் கீழே சிதறிக் கிடக்கும் கடிதங்களைப் பார்க்கிறாள். அனைத்தும் அவள் தேவனுக்கு எழுதிய கடிதங்கள். அந்த கடிதங்கள் இரவியிடம் எப்படி வந்தன? அறைக்குள் வந்து பார்க்கிறாள். உள்ளே – தேவனின் தோல் பை. அது எப்படி அங்கே வந்தது?

ஊருக்கே விஷயம் தெரிகிறது. ஊரே கூடுகிறது. போலீஸ்காரர் வருகிறார். ரவி முன்பு மோதிய அதே போலீஸ்காரர்தான். ‘நீயும் அணிந்திருப்பது காக்கிச் சட்டை. நானும் அணிந்திருப்பது காக்கி சட்டையா?’ என்று அவனைப் பார்த்து கிண்டலாக கேட்கும் அவர், அவனைக் கைது செய்கிறார்.

உண்மையில் நடந்தது என்ன?

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version