Lekha Books

A+ A A-

சிங்கிடி முங்கன் - Page 6

singdi mungan

சில நாட்களிலேயே ஏகப்பட்ட பெட்டிகள் சகிதமாக அப்துல் ரசாக் வந்தான். குழந்தையை வாரி எடுத்து முத்தமிட்டான்.

குழந்தையையே வைத்த கண் எடுக்காது பார்த்தான். தான் நினைத்த மாதிரி ஒரு குழந்தை பிறந்தது குறித்து அவனுக்கு ஏக சந்தோஷம். ஆயிஷா பீபியை அருகில் அழைத்துக் கன்னத்தில் முத்தம் பதித்தான்.

கரியாத்தன் வந்து மகிழ்ச்சியுடன் தேநீரும் பலகாரமும் சாப்பிட்டு முடித்து டண்ஹில் புகைத்துக் கொண்டிருந்தான். அப்போது அப்துல் ரசாக் சொன்னான்:

"நாளைக்கே மகனோட துலாபார நிகழ்ச்சியை நடத்திட வேண்டியதுதான். மீனும் கள்ளும் நாளைக்கு வாங்குவோம். ஒரு பெரிய தராசு வாங்கணும். கரியாத்தா, நீ நாளைக்குக் காலையிலே இங்க வரணும். வந்த உடனே மார்க்கெட்டுக்குப் போனா நல்ல மீன் கிடைக்கும்.''

"காலையிலே சீக்கிரம் வர்றேன்.'' கரியாத்தன் புறப்பட்டான்.

அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு எல்லாம் தயாராக இருந்தன. பெரிய ஒரு பாத்திரம் நிறைய துடித்துக் கொண்டிருந்த மீன்கள், ஒரு பெரிய பானை நிறையக் கள்ளு, ஒரு பெரிய தராசு. குழந்தையைக் குளிப்பாட்டி புத்தாடை அணிவித்து கைகள், கால்கள், இடுப்பு, கழுத்து எல்லா இடங்களிலும் தங்க நகைகள் அணிவித்தார்கள். ஆயிஷா பீபியும் புறப்படத் தயாராக இருந்தாள். அப்துல் ரசாக்கும் புத்தாடை அணிந்திருந்தான். கரியாத்தனையும் அழைத்துக் கொண்டு எல்லாரும் கோவிலை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில் எந்த விதப் பிரச்சினையும் உண்டாகவில்லை. எல்லாம் நல்லவிதத்திலேயே முடிந்தன.

அவர்கள் கோவிலை அடைந்தார்கள்.

ஆயிஷா பீபியும் குழந்தையும் அப்துல் ரசாக்கும் உள்ளே நுழைந்தார்கள். ஆயிஷா பீபி குழந்தையைத் தூக்கிச் சிங்கிடி முங்கனின் பாதத்தில் வைத்துக் காண்பித்தாள். பிறகு குழந்தைக்கு முத்தம் தந்தாள். அப்போது ஆயிஷா பீபியின் மனதிற்குள் ஒரு ஆசை உதித்தது. என்ன ஆசை? சிங்கிடி முங்கனைத் தொட்டுப் பார்க்க வேண்டும். நடக்குமா?

தன் ஆசையை அப்துல் ரசாக்கிடம் சொன்னாள் ஆயிஷா பீபி. அப்துல் ரசாக் மனைவியின் ஆசையை கரியாத்தனிடம் கூறினான். கரியாத்தன் கோவிலின் உத்திரத்தில் தராசைத் தொங்கவிட்டு கட்டிக் கொண்டிருந்தான். அப்துல் ரசாக் சொன்னதைக் கேட்டுக் கரியாத்தன் சொன்னான்: "சிங்கிடி முங்கன் ஒரு உக்கிர மூர்த்தி. முன்கோபி. சுயம்பு. பெண்கள் அவனைத் தொடக்கூடாது. தொட்டால் எரிஞ்சு சாம்பலாயிடுவாங்க... பத்தினி என்று தன்னை தைரியமா சொல்லிக்கிற பொம்பள மட்டும் சிங்கிடி முங்கனைத் தொடலாம்.''

இதைக் கேட்டதும் ஆயிஷா பீபி கண்களில் நீர் மல்க கணவனைப் பார்த்தாள். ஆயிஷா பீபிக்கு சிங்கிடி முங்கனைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆசை.

தொட்டால் கருகிச் சாம்பலாகிவிடுவாளா? ஆயிஷா பீபி வலது கையை நீட்டி, நடுங்கியவாறு சிங்கிடி முங்கனைத் தொட்டாள். ஒன்றுமே நடக்கவில்லை. ஆயிஷா பீபி பதிவிரதைதான்! உண்மையிலேயே திகில் நிறைந்த நிமிடங்கள்தாம் அவை!

ஆயிஷா பீபியும் அப்துல் ரசாக்கும் சேர்ந்து பிரார்த்தித்தார்கள்.

"ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

தொடர்ந்து குழந்தையை தராசின் ஒரு தட்டில் வைத்துப் பிடித்துக் கொண்டார்கள். மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாயிற்றே இது! இதைத்தான் துலாபார நிகழ்ச்சி என்று கூறுவார்கள். கரியாத்தன் அடுத்த தட்டில் மீன்களை வைத்தான். சமமாக அல்ல. மீன் இருந்த தட்டு கீழே இறங்கி இருந்தது. மங்களம்!

எப்படியோ- மகத்தான அந்த நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது.

மீன்களைப் பாத்திரத்தில் போட்டு கரியாத்தன் கோவிலுக்கு உள்ளே சென்று, அதை பக்தியுடன் சிங்கிடி முங்கனின் பாதங்களில் வைத்தான். அருகில் கள்ளு நிரம்பிய பானையையும் வைத்தான். மூன்று பேரும் சேர்ந்து உரத்த குரலில் அழைத்தார்கள்:

"ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

எல்லாம் சுபம். எல்லாம் மங்களம். எல்லாம் நன்றாகவே நடந்து முடிந்தன.

கரியாத்தன் கோவில் வாசல் கதவை அடைத்தான். ஆனந்தத்துடன் அவர்கள் காரின் அருகே சென்றார்கள். காரில் ஏறிய அப்துல் ரசாக் சொன்னான்:

"கரியாத்தா, ஒரு ஆண் யானையை வாங்கி சிங்கிடி முங்கன் கோவில்ல இருக்க வச்சா எப்படி இருக்கும்?''

அருமையான விஷயம்தான். கோவிலில் யானையைக் கொண்டு வந்து நிறுத்துவது என்பது சாதாரண ஒரு விஷயமா என்ன? ஆண் யானைகளைக் கோவிலில் கொண்டு வந்து நிறுத்தும் பாக்கியவான்கள் உண்மையிலேயே பெரியவர்கள்தாம். சந்தேகமே இல்லை.

முப்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் அருமையான ஒரு ஆண் யானை கிடைக்கும்.

"ஆனால், யானையைப் பாக்குறதுன்றது அவ்வளவு இலேசுப்பட்ட விஷயம் இல்ல.'' கரியாத்தன் சொன்னான்: "அது நெனச்சா ஆளுங்களை சரமாரியாக் கொல்லும். யானைப் பாகர்களைக் குத்தி கொல்றதுன்றது யானைகளுக்கு ஒரு புண்ணிய காரியம்போல. ஒவ்வொரு நாளும் அதுக்குத் தீனி போட்டுக்கிட்டு இருக்கணும். குளிப்பாட்டணும். யானையை வளர்க்கிறதுனால என்ன பிரயோஜனம்? அதுக்கு பதிலா நல்ல ஒரு கறவை மாட்டை வாங்கி நடையில கட்டினா, பாலாவது கிடைக்கும். சிங்கிடி முங்கனுக்குப் பாலாபிஷேகம் பண்ணியது மாதிரியும் இருக்கும்.''

"அப்படியே செஞ்சிடுவோம்.'' அப்துல் ரசாக் சொன்னான்.

"ஆயிஷாவோட ஒரு விருப்பம் இருக்கு. அதை நாம செஞ்சே ஆகணும். கோவில் சிதிலமாகிப் போய், மோசமான நிலையில் இருக்குல்ல? உடனடியா கோவிலைப் புதுப்பிக்கணும். நல்ல மரத்தை வச்சு மேல் தளம் அமைச்சு கற்களை வச்சு சுவர்கள் கட்டி, மேலே ஓடு போட்டு வெள்ளை அடிக்கணும். திண்ணைக்கு சிமெண்ட் போடணும். உள் பகுதியைச் சுத்தமா வைச்சிருக்கணும். சிங்கிடி முங்கனை நல்ல ஒரு சிமெண்ட் பீடத்தின்மேல் வைக்கணும். கோவிலுக்கு இன்னும் பளபளப்பு ஏத்தணும். மின்சார விளக்குகள் அமைக்கணும். அப்படின்னாத்தான் கோவிலோட உள்பகுதியும் சரி, வெளிப்புறமும் சரி- ஒளிமயமா இருக்கும்.''

"ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

"ஒரு தச்சனை வரவழைச்சு இவ்வளவும் செய்ய என்ன செலவாகும்னு பார்க்கணும். நான் போய் வந்தபிறகு வேலைகளை ஆரம்பிச்சா போதும். நாளைக்குக் காலையில கரியாத்தா, நீ வீட்டுக்கு வா. உனக்கு கொடுக்கிறதுக்குன்னு சில பொருட்கள் கொண்டு வந்திருக்கேன். நாளைக்குக் காலையில உனக்கு வீட்லதான் சாப்பாடு. சரி... நாங்க புறப்படறோம்.''

ஆயிஷா பீபியும் அப்துல் ரசாக்கும் கரியாத்தனும் கூறினார்கள்:

"ஹர ஹர சிங்கிடி முங்கன்!''

கார் புறப்பட்டது. வீட்டை நோக்கி அவர்கள் புறப்பட்டார்கள்.

பாக்யவான்! பாக்யவதி! பாக்ய குழந்தை!

கரியாத்தன் திரும்பவும் கோவிலுக்கு மெதுவாக நடந்தான். நாளை அப்துல் ரசாக் என்ன தருவான்? எது கிடைத்தாலும் சரிதான்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

ஒட்டகம்

ஒட்டகம்

February 23, 2012

அக்கா

அக்கா

November 10, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel