Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நிர்வாண நிஜம் - Page 11

வித்யாசாகரை அறிமுகப்படுத்திய இயக்குநர் தெருக்களில் அலைந்தார்!

சுரா

முருகானந்தம்- ராம்கி, ரம்யாகிருஷ்ணன் இணைந்து நடித்த 'புதிய சரித்திரம்' என்ற படத்தின் இயக்குனர் இவர். அந்தப் படத்தின் அலுவலகம் சாலிகிராமம் கலைஞர் கருணாநிதி சாலையில் இருந்தது. என்னை அந்தப் படத்திற்கு மக்கள் தொடர்பாளராகப் பணியாற்ற வேண்டும் என்று முருகானந்தம் அழைத்திருந்தார். இது நடந்தது அனேகமாக 1991 ஆம் ஆண்டுவாக்கில் நான் அப்போதுதான் முருகானந்தத்தை நேரில் பார்க்கிறேன்.

குள்ளமான தோற்றம்- பருமனான உடம்பு- வயது அப்போது சுமார் நாற்பது இருக்கும்- இலேசாக நரை விழுந்த முடி- நிர்மலமான சிரிப்பு- இதுதான் முருகானந்தம். அடையாறு திரைப்படக் கல்லூரியில் இயக்குனர் பயிற்சி பெற்றவர் அவர்.

காரைக்குடி பக்கம் ஏதோ ஒரு ஊரைச் சேர்ந்த முருகானந்தத்திற்கு திருமணம் ஆகிவிட்டிருந்தது. மனைவி, குழந்தைகள் எல்லோரையும் ஊரில் விட்டுவிட்டு, படவுலகில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்று சென்னையைத் தேடி வந்த அவருக்கு பலவித போராட்டங்களுக்குப் பிறகு அந்தப் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ராபர்ட்- ராஜசேகர் இரட்டையர்களில் ஒருவரான ராபர்ட் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். ராபர்ட்டும் முருகானந்தமும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒன்றாக திரைப்படக் கல்லூரியில் படித்தவர்கள்.

படத்திற்காகப் போடப்பட்ட அலுவலகத்திலேயே முருகானந்தம் தங்கிக் கொண்டிருந்தார். படப்பிடிப்பிற்குத் தேவைப்படும் பணத்திற்காக ராபர்ட் இங்கும் அங்கும் கையில் ப்ரீஃப்கேஸை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருப்பார். அலுவலகத்தின் ஒரு அறையில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டு குமுதத்தையோ, ஆனந்த விகடனையோ படித்துக் கொண்டிருப்பார் முருகானந்தம். இப்போது படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் எழில் அப்படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். எந்தவித டென்ஷனும் இல்லாமல் நிதானமாக எந்தக் காரியத்தையும் செய்து கொண்டிருக்கும் முருகானந்தத்தை நான் வியப்புடன் பார்த்து ரசிப்பேன். வானமே தலை மேல் வந்து விழுந்தால் கூட, முருகானந்தம் கொஞ்சம் கூட அதிர்ச்சி அடையமாட்டார். அதுதான் அவரின் இயற்கை குணம்.

ராம்கி சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சி ஒன்றை தி.நகர் வடக்கு போக் சாலையில் புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த ஒரு காம்ப்ளெக்ஸில் படமாக்கினார்கள். உள்ளே படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க, வெளியே ஜாலியாக நின்று புகை பிடித்துக் கொண்டிருந்தார் முருகானந்தம். ''என்னங்க... ஷூட்டிங் உள்ளே நடந்துக்கிட்டு இருக்கு. படத்தோட டைரக்டரான நீங்க இங்கே நின்னுக்கிட்டு இருக்கீங்க!'' என்று நான் கேட்க, அவர் ''எனக்கு அங்கே என்ன வேலை? எல்லாத்தையும் ராபர்ட்டே பார்த்துக்குறான். என் ஃபிரண்ட்தானே அவன்! அவனே எல்லாத்தையும் செய்யட்டும்னு விட்டுட்டேன்!'' என்றார்- எந்தவித பதட்டமும் இல்லாமல் நிதானமான குரலில்.

''மனைவியையும், குழந்தைகளையும் ஊர்ல விட்டுட்டு, நீங்க மட்டும் ஏன் இங்கே இருக்கீங்க? அவர்களையும் இங்கே அழைச்சிட்டு வந்துரலாமே! ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிட்டு இருக்குறதைவிட, வீட்ல சாப்பிட்டுக்கிட்டு நிம்மதியா இருக்கலாமே!'' என்றேன். அதற்கு முருகானந்தம், ''நானும் அதை யோசிக்காம இல்ல சார்... ஆனா, இப்ப சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்துக்கிட்டு இருக்கோம். இப்பவே படம் ஆரம்பிச்சு ஒரு வருடத்துக்கு மேல ஆகுது. ராபர்ட்தான் வெளியே இருந்து ஃபைனான்ஸ் வாங்கி படத்துல போட்டிருக்கான். இப்ப குடும்பத்தை இங்கே கொண்டுவர்றதா இருந்தா வீடு பார்க்கணும். வீட்டுக்கு அட்வான்ஸ், வாடகைன்னு ஏகப்பட்ட பிரச்சினை. குழந்தைகளைப் படிக்க வைக்கணும். அவங்களுக்கு ஃபீஸ், துணிமணின்னு ஏகப்பட்ட பணம் தேவைப்படும். இந்தப் படம் முடியிற வரை இந்த விஷயங்களை நம்மால கவனிக்க முடியாது. இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணிட்டு, அதுக்குப் பிறகுதான் மனைவி, குழந்தைகளை மெட்ராஸுக்கு கொண்டு வரணும்னு நினைக்கிறேன்'' என்றார்.

'புதிய சரித்திரம்' படம் முடிவடைந்து பலவித சிரமங்களுக்குப் பிறகு திரைக்கு வந்தது. 'டைரக்ஷன்' என்று முருகானந்தத்தின் பெயரும், 'டைரக்ஷன் மேற்பார்வை' என்று ராபர்ட்டின் பெயரும் படத்தின் டைட்டில் கார்டில் வந்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இப்போது மிகவும் பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் வித்யாசாகர் அந்தப் படத்தில்தான் முதல் முறையாக இசையமைப்பாளராக அறிமுகமானார். படம் சுமாராகத்தான் ஓடியது. ராபர்ட் வெளியே படத்திற்காக நிறைய பணம் வாங்கியிருந்தார் (யூகி சேதுவின் தந்தை ஜி.கோபாலகிருஷ்ணன் மூலமாக). படம் திரைக்கு வந்ததே தன்னைப் பொறுத்தவரை ஒரு சாதனைதான் என்று நிம்மதியானார் முருகானந்தம். ஆனால், ராபர்ட்டோ பல லட்சங்களுக்குக் கடனாளியாகி மனநிம்மதியில்லாமல் அலைந்து கொண்டிருந்தார்.

முருகானந்தம் அடுத்த படத்தைத் தயாரிக்க ஆள் கிடைக்காதா என்று சல்லடை போட்டு தமிழகமெங்கும் அலைந்து கொண்டிருந்தார். அவ்வப்போது ஏதாவதொரு சாலையில் முருகானந்தத்தை நான் பார்ப்பேன். எதிரே கையில் ஒரு டைரியை வைத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருப்பார். 'புதிய சரித்திரம்' திரைக்கு வந்தவுடன், அந்தப் படத்திற்காகப் போடப்பட்டிருந்த அலுவலகம் காலி செய்யப்பட்டுவிட்டதால், முருகானந்தம் வேறு எங்கோ அறை எடுத்தோ, அல்லது சொந்தக்காரர்கள் வீட்டிலோ தங்கியிருந்தார். எங்கு வைத்துப் பார்த்தாலும், 'ஒரு பார்ட்டிக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். அனேகமாக சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்திடும். எல்லாம் ஃபைனல் ஆயிடுச்சுன்னா, வேலைகளை ஆரம்பிச்சிட வேண்டியதுதான். கூடிய சீக்கிரம் உங்களை நான் தொடர்பு கொள்கிறேன்'' என்பார்.

'புதிய சரித்திரம்' திரைக்கு வந்து பல மாதங்களுக்குப் பிறகு, திடீரென்று ஒரு நாள் எனக்கு முருகானந்தத்திடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 'சாலிகிராமத்துல ஆபீஸ் போட்டாச்சு. சரத்குமாரை வச்சு படம் பண்றதா இருக்கு. இது விஷயமா நான் அவரைப் பார்த்து பேசுறதுக்கு ஏற்பாடுகள் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீங்க நாளைக்கு அலுவலகத்துக்கு வாங்க. மீதி விஷயங்களை அங்கே பேசிக்கலாம்'' என்றார் முருகானந்தம்.

மறுநாள் அந்த அலுவலகத்திற்குப் போனேன். அலுவலகம் பெரிதாக, புதியதாக, பந்தாவாக இருந்தது. முருகானந்தத்தின் பேச்சிலிருந்து அவர் பல மாதங்களாகக் கஷ்டப்பட்டு அந்த படத் தயாரிப்பாளர்களைப் பிடித்திருக்கிறார் என்பது தெரிந்தது. இவர் படத்தை இயக்க திட்டமிட்டிருந்த நேரத்தில் சரத்குமார் மிகவும் பிஸியாக இருந்தார். அவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருந்தன. இருந்தாலும், தயாரிப்பாளர்கள் சரத்குமார்தான் வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். கதை என்ன என்று கேட்டேன். முருகானந்தம் சொன்னார். கதை நன்றாகவே இருந்தது. சரத்குமாருக்கு முற்றிலும் மாறுபட்ட பாத்திரம். ''சரத்தை எப்படியும் கஷ்டப்பட்டு பிடிங்க. கதை நல்லா இருக்கு. அவரோட கேரக்டரும் மிகவும் வித்தியாசமா இருக்கு. ஆனா, விஷயம் என்னன்னா... இந்த வருட கடைசி வரை அவர் நிறைய படங்களை நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார். உங்களுக்கு எப்படி அவரோட டேட்ஸ் கிடைக்கும் என்பதுதான் தெரியல. இருந்தாலும் முயற்சி பண்ணிப் பாருங்க'' என்றேன் நான். அங்கேதான் அவருக்கு சோதனை காத்திருந்தது.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version