Lekha Books

A+ A A-

முழுமையற்ற சிலை - Page 3

சதுர்த்திக்கு மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும்போது, பாபாவிற்கு அந்த நினைவு வந்தது. அவர் பதைபதைப்பு அடைந்தார். இன்னும் வேலையைச் சரியாக ஆரம்பிக்கவே இல்லை. மூன்று நாட்களே இருந்தன! இதற்கிடையில் முழுமையான அளவைக் கொண்ட ஒரு சிலையை உருவாக்க வேண்டும். ஆனால், பரவாயில்லை. இரவும், பகலும் வேலை செய்வதாக இருந்தால், இயலும்.

உணவும் தூக்கமும் இல்லாமல் பாபா வேலை செய்தார். தன்னுடைய மொத்த சக்தியையும் முழுமையான முயற்சி என்ற நெருப்பு குண்டத்தில் பயன்படுத்தும் ஒரு கலைஞனின் இறுதி முயற்சியாக அது இருந்தது.

மினிக்கு முன்னால் அவருடைய கவனம் பல வேளைகளிலும் சிதறி விடும். உண்ணாமலும் உறங்காமலும் இருக்கலாம். ஆனால், மினியைப் பார்த்து விட்டு, எப்படி பார்க்காததைப் போல நடிக்க முடியும்? பெரியவருக்கு பெரிய அளவில் மனவேதனையைத் தரக் கூடிய விஷயமாக அது இருந்தது. எனினும், அவர் தன்னுடைய பணியை நிறுத்தி வைக்கவில்லை.

மறுநாளும் மினி களி மண்ணை வைத்து சிலையை உருவாக்கும் பாபாவின் அருகில் போய் அமர்ந்திருந்தாள். ஆனால், அவள் மேலே ஏறவோ, தாடியைப் பிடித்து இழுக்கவோ செய்யவில்லை. கவலையின் நிழல் பதிந்த முகத்தைக் குனிய வைத்துக் கொண்டு தூரத்தில் நிற்க மட்டும் செய்தாள். ஒன்றிரண்டு முறைகள் பாபா தலையை உயர்த்திப் பார்த்தார். ஆனால், அதிக நேரம் அப்படியே நின்று கொண்டிருக்கவில்லை. சிலையை முழுமை செய்ய வேண்டுமே!

சதுர்த்திக்கு முந்தைய நாள் சாயங்காலம் கணபதி சிலை தயாராகி விட்டது. பாபாவின் இதயத்தில் நிம்மதியும் முழுமையான திருப்தியும் வழிந்து ஒழுகின. இனி சாயம் பூசும் வேலை மட்டும் பாக்கி இருந்தது. அதையும் செய்து முடித்து விட்டால், வேலை முழுமையாக முடிந்து விடும். அதற்கு அதிக நேரம் எதுவும் தேவையில்லை. சில மணி நேரங்கள் மட்டும் போதும்.

பாபாவிற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். அவருக்கு ஒரு வெறுமை தோன்றியது. அந்த நினைவு தடுத்து வைக்கப்பட்ட நீர், அணைக்கட்டின் மதகை உயர்த்தும்போது, வேகமாக பாய்ந்து ஓடுவதைப் போல, அதன் முழு பலத்துடன் காணப்பட்டது. மினி! அவள் எங்கு போனாள்? அன்று முழுவதும் பாபா அவளைப் பார்க்கவில்லை. அப்போது மட்டும்தான் பாபாவிற்கு அந்த ஞாபகம் உண்டானது. நினைக்க... நினைக்க பாபாவிற்கு தலையைச் சுற்றுவதைப் போல தோன்றியது.

பொறுமையை இழந்த அந்த கிழவர் மினியை அங்கு எல்லா இடங்களிலும் தேடினார். சாயங்கால நேரம். பொதுவாக அந்த நேரத்தில்தான் அவள் பாபாவிடம் மிகவும் அதிகமாக குறும்புத்தனங்களைக் காட்டுவாள். ஆனால், பாபா அங்கு எந்த இடத்திலும் மினியைப் பார்க்கவில்லை.

அந்த நாளின் மாலை வேளையில் வாடி விழப் போகும் மலரைப் போல மினி, அறைக்குள் மயங்கி கிடந்தாள். அந்த காட்சியைப் பார்த்ததும், பாபாவின் சரீரம் முழுவதும் குளிர்ந்து மரத்துப் போனது. அந்தக் குழந்தையின் அருகில் அவளுடைய தந்தையும், தாயும் இல்லை. இருவரும் வெளியே வேலைக்குச் சென்றிருந்தார்கள்.

வெளிறிய முகத்தை படுக்கையில் அழுத்தி வைத்தவாறு அவள் படுத்திருந்தாள். அருகில் சென்று அவளுடைய நெற்றியை மெதுவாக வருடியவாறு பாபா அழைத்தார்:

‘மினீ.... மினீ.... இதோ... உன்னுடைய பாபா... நீ பார்க்க வேண்டாமா?’

அந்தச் சிறிய குழந்தையின் நெற்றி சூடாக இருந்தது. அவள் கண்களைத் திறந்து பார்த்தாள் – சிறிது நேரத்திற்கு மட்டும். பாபாவை அவள் பார்த்தாளோ என்னவோ? எனினும், அவளுடைய கண்களில் சந்தோஷத்தின் ஒரு வானவில் நொடி நேரத்திற்கு பிரகாசமாக தோன்றியது. அவளுடைய சிறிய அளவில் விரிந்திருந்த உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்திருந்தது. அவள் ஏதோ கனவு காண்பதைப் போல பாபாவிற்குத் தோன்றியது.

காய்ச்சலின் ஆரம்பமாக இருந்தது.

இரவில் விளக்குடன் சிலைக்கு முன்னால் சாயத்தை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாலும், பாபாவால் பணியைத் தொடர முடியவில்லை. கண்களுக்குள் இருட்டு நுழைவதைப் போல இருந்தது. நிமிடங்கள் கடந்து செல்லச் செல்ல, மினியைப் பற்றிய நினைப்பு அதிகமாகிக் கொண்டு வந்தது. வழக்கம்போல தன்னுடைய கொஞ்சுதலுக்காக அவள் வந்தபோது, எந்த அளவிற்கு கொடூரமாக தான் நடந்து கொண்டோம் என்பதை நினைத்துப் பார்த்த நிமிடத்தில் பாபாவின் தலையிலிருந்து பாதம் வரை வியர்த்தது. காய்ச்சலின் ஆரம்பத்தில் அவள் அவரைத் தேடி வந்திருக்க வேண்டும். அவளுடைய ஆசைகள்...

பாபாவின் கையிலிருந்து பாத்திரம் கீழே விழுந்து, சாயம் தரையில் கொட்டியது. அந்த சிலையின் பார்வையே அவருக்கு தாங்கிக் கொள்ள இயலாத ஒன்றாகப் பட்டது. பார்க்கப் பார்க்க அதற்கு எதிராக ஒரு வெறுப்புணர்வு பாபாவின் இதயத்தில் எழ ஆரம்பித்தது. அது இல்லாமற் போயிருந்தால், மினிக்கு நோய் பாதித்திருக்காது. அவருக்கு அப்படித்தான் தோன்றியது. சவுக்காரின் புகழையும், பணப் பெருமையையும்தான் அந்த கணபதி சிலைகளில் அவர் பார்த்தார். ப்ளேக் நோயாலோ, காலராவாலோ பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடமிருந்து அதிர்ச்சியடைந்து விலகுவதைப் போல, பாபா வெறுப்புடன் அந்தச் சிலைக்கு முன்னாலிருந்து எழுந்து நடந்தார்.

வாழ்க்கையில் முதல் முறையாக யாரின் மீதாவது பாபா அன்பு வைத்தார் என்றால், அது மினியின் மீதுதான். அதற்கு முன்பு அன்பின் சக்தியை அவர் உணர்ந்திருக்கிறார் – ஃபிடிலின் மீதும், சாயத்தின் மீதும், களி மண்ணின் மீதும்தான் அது இருந்தது என்பது மட்டும்தான் உண்மை. தன்னைப் போல இருக்கும் ஒரு மனித ஆன்மாவின் மீது இதயம் திறந்து அன்பு செலுத்த பாபாவிற்கு மிகவும் தாமதமாகத்தான் முடிந்தது.

அன்று இரவு பாபா மினிக்கு அருகில் தூக்கத்தை ஒதுக்கி வைத்து விட்டு அமர்ந்து, நீண்ட நேரம் தன்னுடைய பழைய ஃபிடிலை மீட்டினார். பிணக் கட்டிலை அலங்கரிக்கும் இறுதி ஆடையைப் போல, அந்த அறையை மூடிக் கொண்டிருந்த பேரமைதியில், கம்பியிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்த சோக ரசம் கொண்ட சப்தம் கரைந்து இணைந்தது. ஆனால், பாபா தாமதமாகி விட்டார். மினி அவை எதையும் கேட்கவில்லை. காய்ச்சலின் கடுமையால் அந்த குழந்தை வாய்க்கு வந்ததையெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தாள்.

குற்றவுணர்வு கிழவரை அந்த அறைக்குள்ளிருந்து வெளியேற்றியது. நடுங்கிக் கொண்டிருக்கும் கால்களுடன் அவர் வெளியேறி நடந்தார். எங்கே போகிறோம் என்பதைப் பற்றி அவருக்கே எந்தவொரு வடிவமும் இல்லாமலிருந்தது.

சவுக்காரால் பங்கு பெற முடியாமற் போய் விட்டாலும், சதுர்த்தி மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தன்னை உருவாக்கியவர் மீண்டும் வர மாட்டாரா என்பதை எதிர்பார்த்தவாறு, முழுமையற்ற அந்த சிலை சிறிது காலம் அனாதையாக அங்கேயே கிடந்தது.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel