Lekha Books

A+ A A-

முழுமையற்ற சிலை - Page 2

அது சற்று காரம் அதிகம்தான். பாபாவின் கண்களில் நீர் நிறைவதைப் பார்த்தபோது, அப்படி கூறியிருக்க வேண்டியதில்லை என்று அந்த செல்வந்தருக்குத் தோன்றியது. ஒரே நொடியில் பழைய காலங்களைப் பற்றிய நினைவு பாபாவின் மனதில் தோன்றி மறைந்திருக்க வேண்டும்.

பல வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது அது. அங்கிருந்த தெருக்களின் வழியாக கலையின் காதலனாக இருந்தாலும், வாழ்க்கையின் மீது வெறுப்பு தோன்றியிருந்த எங்கிருந்தோ வந்திருந்த ஒரு இளைஞன் அலைந்து திரிந்து கொண்டிருந்தான். சவுக்கார் தன்னுடைய மிகப் பெரிய மாளிகையைக் கட்டிக் கொண்டிருந்த காலமது. அந்த கலைஞனுக்கு சவுக்கார் உதவினார். ஆனால், அது வெறுமனே அல்ல. அந்த மாளிகையை ஒரு கனவு இல்லத்தைப் போல அழகாக ஆக்கியது அந்த கலைஞனின் கைத் திறமைதான். அவனுடைய மனமும் கையும் ஒன்று சேர்ந்து இயங்கியதன் விளைவுதான் அங்கிருந்த ஒவ்வொரு ஓவியமும்...

ஆட்கள் விசாரித்தார்கள் – இந்த புதுமை எண்ணம் கொண்ட கலைஞன் எங்கிருந்து வந்தான்? ஊர்? ஜாதி? யாருக்கும் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. மாளிகை முழுமையானது. அந்த கலைஞனுக்கு கூலியும் கிடைத்தது. ஆனால், போவதற்கு அவனுக்கு ஒரு இடம் இல்லாமலிருந்தது.

அப்போதும் அவனைக் காப்பாற்றுவதற்கு சவுக்கார்தான் முன் வந்தார். தனக்குச் சொந்தமாக இருந்த ஒரு குடிலில் தன்னுடைய தோட்டக்காரனுடன் சேர்ந்து தங்கிக் கொள்வதற்கு சவுக்கார் அவனை அனுமதித்தார். கஷ்டம் இல்லாத விஷயம். அப்படிப்பட்ட ஒரு கலைஞனை தனக்குக் கீழே இருக்க வைப்பதில் பெருமைப்படவும் செய்யலாம். ஆனால், அவையெல்லாம் சவுக்கார் சம்பந்தப்பட்ட விஷயங்கள். இரு கரைகளையும் பார்க்க முடியாத அளவிற்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த கலைஞன் அவை எதையும் சிந்திக்கவேயில்லை.

அந்த தோட்டக்காரன் மரணத்தைத் தழுவினான். அவனுடைய மகனுக்கு வேலை கிடைத்தது. அவன் திருமணம் செய்து கொண்டான். ஒரு குழந்தையின் தந்தையாக ஆனான். அப்போதும் அவன் அவர்களுடன்தான் இருந்தான்.

பழைய கதை. எனினும், பாபா அதை மறக்கவில்லை. சிறிதும் மறக்கவும் முடியாது. நினைவுகளின் ஒரு வெள்ளப் பெருக்கு அந்த கிழவரின் மனதில் ஓடிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.

நன்றி?

அந்த வார்த்தை ஒரு ஊசியைப் போல அவருடைய இதயத்திற்குள் நுழைந்தது. அதை பாபாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்ணீருடன் அவர் சவுக்காருக்குப் புரிய வைத்தார். தான் உயிருடன் இருந்தால், சதுர்த்தி நாளுக்கு முன்பு சிலையை உருவாக்கிக் கொடுப்பதுதான்! பயமுறுத்தும் ஒரு வாக்குமூலம்! சவுக்காருக்கு திருப்தி உண்டானது.

அந்த செயலில் ஈடுபட்ட பிறகு, அதுவரை அனுபவித்திராத சில தொந்தரவுகளை பாபா சந்திக்க வேண்டியதிருந்தது. கை முன்பைப் போல ஒத்துழைக்கவில்லை. இடைவெளியால் உண்டான குறைபாடு! அவற்றையெல்லாம் வேண்டாம் என்று நிறுத்தி இரண்டு மூன்று வருடங்கள் ஆகி விட்டனவே! அப்படியென்றால், அப்படித்தான் இருக்கும். பிறகு... முதுமையால் உண்டான சோர்வு. ஆனால், அதை பொறுத்துக் கொள்ளலாம். உடலை மட்டுமே பாதிக்கக் கூடிய விஷயங்கள்தாமே அவை! மனதையும் சேர்த்து பாதித்து விட்டால்.... சோர்வு, ஒரு சுமையாக ஆகி விடும்!

மினிதான் அந்தச் சுமையாக இருந்தாள். யாரையும் கூறி புரிய வைக்கலாம். யாரையும் தடுத்து நிறுத்தலாம். யாரிடமும் எதையும் மறுக்கலாம். ஆனால், அவளிடம் மட்டும அது எதுவும் நடக்காது. பாபா தன்னுடைய விளையாட்டுத் தோழன் என்று மினி மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.

அந்த வயதான மனிதர் களி மண்ணைக் குழைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவள் ஓடிவந்து, தன்னுடைய பாபாவின் மீது விழுந்தாள். கழுத்தில் கையைப் போட்டு, அந்த வெள்ளைத் தாடியைப் பிடித்து இழுப்பதில்தான் அவளுக்கு சுவாரசியம் இருந்தது. பாபா தடுமாறினார். அவளைத் தொட்டால், அவள் மீது அழுக்கு படியும். அதனால் அந்த கிழவர் சற்று விலகி, கோபமாக இருப்பதைப் போல வேண்டுமென்றே காட்டியவாறு கூறினார்:

‘ச்சீ.... விடு... விடு.... குறும்புக்காரி...!’

மினி தன்னுடைய நண்பனை விட்டு விலகி, தூரத்தில் நின்றாள். இல்லை... அவள் இனிமேல் பாபாவுடன் பேச மாட்டாள். அவளுக்கும் கோபப்பட தெரியும். முகத்தை ‘உம்’ என்று வைத்தவாறு, அவள் அங்கேயே நின்றிருந்தாள்.

அந்த நின்று கொண்டிருக்கும் செயலைப் பார்க்காதது போல காட்டிக் கொள்வதற்கு பாபாவால் முடியவில்லை. அவர் கைகளைக் கழுவி விட்டு, அவளுக்கு முன்னால் போய் சேற்றில் முழங்காலிட்டு நின்றார். ‘யானை’ விளையாட்டு விளையாடுவதற்காக. தன் மீது ஏறி சவாரி செய்வதற்கு பாபா அவளை அழைத்தார்.

அவள் அசையவில்லை.

அந்த கோபத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பாபா சற்று சிரமப்பட வேண்டியதிருந்தது. அதுவும் ஒரு ஒப்பந்தத்தின் மீது, பாபா அவளுக்கு ஒரு பொம்மையைத் தயார் பண்ணி தர வேண்டும். ஒரு மறுப்பும் கூறாமல், பாபா அவளுடைய விருப்பத்தை நிறைவேற்றித் தந்தார். முழுமையான ஒரு பொம்மை அல்ல அது. எனினும், மினிக்கு அது புரிந்தது.

அடர்த்தியான சிவப்பு நிறத்தில் கருப்பு நிற புள்ளிகளுடன் இருந்த பாவாடையும், மஞ்சள் நிற இரவிக்கையும் அணிந்த, ஏழு வயது மட்டுமே உள்ள அந்த பட்டாம் பூச்சி, தான் உருவாக்கித் தந்த விளையாட்டு பொம்மையை வைத்துக் கொண்டு அங்கு சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருப்பதை பாபா சாயங்கால வெயிலில் ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். அந்த கிழவரின் மனதில் சவுக்காரும் விநாயக சதுர்த்தியும் கணபதி சிலையும் அப்போது இல்லை.

ஒரு நிமிட நேரம் அவர் சிந்தனையில் மூழ்கி நின்றிருந்தார். வாழ்க்கையின் அந்திப் பொழுதில் ஓய்வு தேடிக் கொண்டிருக்கும் தனக்கும், வாழ்க்கை என்றால் என்னவென்று இன்னும் புரிந்து கொண்டிராத அந்த இளம் குழந்தைக்குமிடையே உள்ள உறவு என்ன என்பதைப் பற்றி.... அன்பு நிறைந்த உறவுதான்... ஆனால், எப்படிப்பட்ட அன்பு? தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற கவலை நிறைந்த சிந்தனையில் உண்டான அன்பா? அவர் தொடர்ந்து சிந்திக்கவில்லை.

இனம் புரியாத ஒரு உறவு அது – பாபாவும், மினியும்? அவர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்கிறார்கள், புரிந்து கொள்கிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள்! பாபா இல்லையென்றால், மினி இல்லை. மினி இல்லையென்றால், பாபாவும். பல வேளைகளில் மாலியே ஆச்சரியப்பட்டிருக்கிறான் – அவர்கள் இருவரும் இந்த அளவிற்கு தீவிரமாக எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று. ஏழு வயது கொண்ட மினியும் எழுபது முடியப் போகும் பாபாவும்!

நாட்கள் கடந்து சென்றன. விநாயக சதுர்த்தி, கணபதி சிலை ஆகியவற்றைப் பற்றி பாபா திரும்பவும் மறந்து விட்டார்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel