Lekha Books

A+ A A-

ஆற்றைக் கடந்து மரங்களுக்கு மத்தியில்... - Page 3

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்து கிடைத்த சந்தர்ப்பமாயிற்றே! நண்பனின் கவிதையைப் பற்றி உரையாற்றுவதற்கு... நான் ஒரு முக்கால் மணி நேரமாவது உரையாற்றியிருப்பேன். ஆனால், எல்லாம் முடிந்து, நேரம் அதிகமானபோதுதான் எனக்கே புரிந்தது... ரமேஷனைப் பற்றியோ ரமேஷனின் கவிதையைப் பற்றியோ நான் எதுவுமே என்னுடைய உரையில் கூறவேயில்லை. நான் கூறியது முழுவதும் கவிதையைப் பற்றியும், இலக்கியத்தைப் பற்றியும்தான். ஆனால், ரமேஷனின் கவிதையைப் பற்றி...

அதைப் புரிந்து கொண்டபோது எனக்கு உண்டான வருத்தம்... எனக்கு என்ன நடந்ததென்பதைப் பற்றியல்ல... ரமேஷன் என்ன நினைப்பான் என்பதைப் பற்றித்தான். ஆனால், ரமேஷன் எதுவுமே கூறவில்லை. எந்தவொரு வகையிலும் வெறுப்பை வெளிப்படுத்தவில்லை. எனினும், என்னுடைய கவலை, என்னுடைய வருத்தம்...”

அவர் நிறுத்தியவுடன், டாக்டர் கூறினார்:

“எனக்குப் புரிகிறது.”

அவ்வாறு கூறிய டாக்டர் சிந்தனையில் மூழ்கியவாறு அமர்ந்திருந்தார்.  அவருடைய முகம் முழுவதும் அன்பும் இரக்கமும் நிறைந்திருந்தன.

அப்போது திடீரென்று டாக்டரிடம் அவர் கேட்டார்:

“டாக்டர், நீங்கள் ‘ஆரோக்கிய நிகேதனம்’ என்ற நூலை வாசித்திருக்கிறீர்களா? மிகவும் புகழ்பெற்ற ஒரு...”

டாக்டர் சொன்னார்:

“வாசிக்கவில்லை. ஆனால், கேள்விப்பட்டிருக்கிறேன். நாடியைப் பிடித்து மரணத்தைப் பற்றிக் கூறும் ஒரு டாக்டரின் கதைதானே?”

அவர் அப்போது கோபத்துடன் கூறினார்:

“டாக்டரல்ல... வைத்தியர்... வைத்தியத்தில் கைதேர்ந்த மனிதர்... ஜீவன் மஸாய்... சரியாகக் கூறுவதாக இருந்தால், தன் வந்திரியின்...”

டாக்டர் எதுவுமே பேசாமலிருக்க, அவர் தொடர்ந்து கூறினார்:

“ஜீவன் மஸாய் கூறியிருக்கிறார்- நோய்கள் எதிர்ப்பு சக்தி கொண்டவை. அவை எப்போதும் நம்முடையே இருந்து கொண்டிருக்கின்றன. நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்தவாறு... நம்முடைய முடிவை எதிர்பார்த்துக் கொண்டு... ஒருமுறை கால் தவறிவிட்டால், இந்த எதிர்ப்பு சக்திகள் தனியாகவோ அனைத்தும் சேர்ந்ததோ தாவி விழும். சில நேரங்களில் நம்மை முழுமையாகவே அடிமைப்படுத்திவிடும். இல்லாவிட்டால்... அவை மீண்டும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கும்...”

அவர் நிறுத்தினார்.

டாக்டருக்குப் பின்னாலிருந்த சாளரத்தின் வழியாக வானத்தில் பரவியிருந்த மேகங்கள் தெரிந்தன. மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. மேகங்களைப் பார்த்துக் கொண்டே அவர் தனக்குத்தானே சொல்லிக் கொள்வதைப்போல கூறினார்.

“நோய்களிலிருந்து சில நேரங்களில் தப்பித்துவிடலாம். ஆனால், இறுதியாக வரக்கூடிய அந்த ஆக்கிரமிப்பு இருக்கிறதே! மரணம்... அதிலிருந்து?”

டாக்டர் சிந்தனையில் மூழ்கியிருந்தார். அவர் மெதுவான குரலில் சொன்னார்.

“இப்போது அப்படியெதுவும் நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லையே!”

அவர் எதுவும் கூறாமல், எதையோ நினைத்துக் கொண்டு புன்னகைக்க முயற்சித்தார்.

இது... இந்த முறை வந்தபோது முதலில் நிகழ்ந்த உரையாடல்...

அறையில் இப்போது அவரும் மேனேஜரும் மட்டுமே இருந்தார்கள்.

அவர் அங்குள்ள கணக்குகள் முழுவதையும் சரிசெய்து விட்டிருந்தார். உடல் நலத்தையும் திரும்பப் பெற்றிருந்தார்.

இனி திரும்பிச் செல்லும் பயணம்...

அவரைப் பின்பற்றி காரை நோக்கிச் செல்லும்போது மேனேஜர் கூறினார்:

“கொஞ்ச நாட்களாகவே ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. முற்றிலும் தனிப்பட்டது. கேட்டால், கோபப்பட கூடாது.”

அவர் சொன்னார்:

“சொல்லுங்க...”

மேனேஜர் தயங்கிக் கொண்டே சொன்னார்:

“நீங்கள் பல நேரங்களிலும் சொல்லக்கூடிய அந்த புத்தகம் இருக்கிறதே! ஹேமிங்வே எழுதியது... அதில் அந்த காயம்பட்ட கர்னல்...”

மேனேஜர் முழுமை செய்வதற்கு முன்பே, சிரித்துக் கொண்டே அவர் சொன்னார்:

“புரிகிறது... அந்த கர்னல் நான்தானா என்று கேட்கிறீர்களா? இல்லை... நான் இல்லை...”

அப்போது மானேஜர் மீண்டும் கேட்டார்:

“அந்த இளவரசி...?”

அவர் மேனேஜரை வெறுமனே பார்த்தாரே தவிர, எதுவும் கூறவில்லை. இந்த முறை அவருடைய முகத்தில் சிரிப்பில்லை.

இதற்கு முன்பு தெரிந்திராத பாதைகளின் வழியாக கார் நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அளவிற்கு ஓட்டுநர் வேகமாக ஓட்டவில்லை. எனினும் அவர் சொன்னார்: “அவசரமில்லை... மெதுவாகப் போனால் போதும்...”

பின்னிருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த அவருக்கு அருகில், அவருடைய ப்ரீஃப்கேஸும் இருந்தது. அவருடைய பெரிய பெட்டி காரின் டிக்கியில் இருந்தது. பிறகு... அவர் ப்ரீஃப்கேஸை மடியில் எடுத்து வைத்துத் திறந்தார். ஏதாவது தனிப்பட்ட ஒரு நோக்கத்துடன் அவர் அந்த செயலைச் செய்யவில்லை. வெறுமனே... ஒரு நிமிடம்... ஏதோ சிந்தனையில் மூழ்கியவாறு...

ப்ரீஃப்கேஸில் குறிப்பாகக் கூறுமளவிற்கு எதுவுமில்லை. ஆனாலும், எதுவுமே இல்லையென்றும் கூறமுடியாது. அவருடைய சில பழைய தாள்கள், சில பழைய கடிதங்கள், முன்பு எப்போதோ எழுதி முழுமை செய்ய முடியாமல் அப்படியே வைத்துவிட்ட ஒரு கதை, இப்படி...

அவருக்கு நேரத்தைப் பற்றி எந்தவொரு உணர்வுமில்லை.

எப்போதோ ஓட்டுநர் கூறினார்.

“கோழிக்கோடு வந்துவிட்டது. ஏதாவது சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு...”

அவர் சொன்னார்:

“வேண்டாம். எனக்கு எதுவும் வேண்டாம். கொஞ்சம்கூட பசியில்லை. ஆனால், களைப்பு இருக்கிறது. ஆனால்... பரவாயில்லை. நீங்கள் எங்காவது ஒரு நல்ல ஹோட்டலுக்கு முன்னால் நிறுத்தி சாப்பிட்டுவிட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன்.”

ஓட்டுநர் சென்ற வேகத்திலேயே திரும்பி வந்தார். “என்ன... எதுவும் சாப்பிடவில்லையா?” என்று கேட்டதற்கு, “நான் ஒரு தேநீர் பருகினேன். அது போதும்” என்று அவர் சொன்னார்.

பயணம் மீண்டும் ஆரம்பித்தவுடன் அவர் ஓட்டுநரிடம் கூறினார்: “நாம் ‘திருநெல்லி’ வழியே போகலாம். இன்று அங்கு தங்கிவிட்டு, பிறகு...”

ஓட்டுநர் கேட்டார்:

“திருநெல்லி...?”

ஓட்டநர் அப்படியொரு ஊரைப் பற்றி கேள்விப்பட்டதேயில்லை. பிறகு... புறப்படும்போதோ பயணத்தின்போதோ அப்படியொரு இடத்திற்குப் போவதைப்பற்றி அவர் எதுவுமே கூறவில்லை. மேனேஜரும் கூறவில்லை. அதனால் ஓட்டுநரின் குரலில் ஆச்சரியம் நிறைந்திருந்தது.

அவர் ஓட்டுநரிடம் கூறினார்:

“திருநெல்லி புகழ்பெற்ற ஒரு கோவில் இருக்கும் இடம். இறந்து போனவர்களின் ஆன்மாக்களுக்கு சாந்தி கிடைக்க பிண்டம் வைக்கும் இடம். அங்கு காடும் நதியும் இருக்கின்றன. பிறகு வழி... யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நானும் இதுவரை அங்கு சென்றதில்லை...”

ஓட்டுநர் வழியைத் தெரிந்து கொள்வதற்காகச் சென்றபோது, அவர் தனக்குத்தானே கூறிக் கொண்டார்:

‘இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு மட்டும் சாந்தி கிடைத்தால் போதுமா? உயிருடன் இருப்பவர்களுக்கும் வேண்டாமா? உயிருடன் இருப்பவர்களுக்காகவும் பிண்டம் வைக்கக் கூடாதா?’

பிறகு... நீண்ட நேரத்திற்குப் பிறகு, இருட்டைக் கிழித்துக் கொண்டு வண்டி உயரத்தை நோக்கி ஏற ஆரம்பித்தபோது, அவர் பின்னிருக்கையில் கண்களை மூடிக் கொண்டு படுத்திருந்தார். ஆனால், அவர் அப்போதும் உறங்கவில்லை. அவர் கனவு கண்டு கொண்டிருந்தார். அவருடைய கனவில் அவர் எந்தச் சமயத்திலும் பார்த்திராத திருநெல்லியில், இடைவெளியின்றி இருக்கும் காடுகளையும் நதியையும் தவிர, ஒரு காலத்தில் அவரை ஆழமாகக் காதலித்த ஒரு இளம் பெண்ணும் இருந்தாள்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel