Lekha Books

A+ A A-

அவளின் சுயசரிதை - Page 4

Avalin Suyasarithai

தாய் - தந்தையிடம் நான் வீட்டைவிட்டு வெளியேறிக் கொள்கிறேன் என்று சொன்னேன். அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தங்களுடைய ஒரே மகளுக்காக சமுதாயத்தின் எதிர்ப்பை மீறுவதென்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

அவமான நெருப்பில் போட்டுப் பொசுக்குவது - அதுதான் சமுதாய எதிர்ப்புகளை மீறுபவர்களுக்கு சமுதாயம் தரும் தண்டனை. மக்கள் எங்களைப்பற்றி பல வகையான குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள். என்னுடைய கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்குத் தந்தை - என் சொந்த தந்தைதான் என்றும், அதனால் தான் அவர் என்னை ஒதுக்கித் தள்ளாமல் இருக்கிறார் என்றும் சமுதாயப் பிசாசுகள் பேசின. அது போதாதா? இதைவிட பயங்கரமான வேறு எந்த ஒரு தண்டனையை சமுதாயம் எங்களுக்குத் தர வேண்டும்?

நாங்கள் இந்த அவமானங்களையெல்லாம் மிகவும் அமைதியாகப் பொறுத்துக்கொண்டோம். என் தந்தையும், தாயும் என்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவே இல்லை. என் தாய் சில வேளைகளில் தான் மட்டும் அமர்ந்து கண்ணீர் சிந்திக்கொண்டிருப்பாள். நான் அருகில் சென்றவுடன் என் தாய் கவலையை மனதிற்குள்ளேயே அடக்கிக்கொள்வாள். என் தந்தையின் நிலைமையை நினைத்துப் பார்க்கும்போது, நான் நடுங்கிப்போய் விடுவேன். மக்கள் அவரை மிகுந்த வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் அவருக்கு கேட்கிற மாதிரி ‘மகளின் காதலன்’ என்று அழைப்பதற்குக்கூட தயங்கவில்லை. என் தந்தை அவை எல்லாவற்றையும் மிகவும் அமைதியாகத் தாங்கிக் கொண்டார். ஒருநாள் என் தந்தை என்னை அருகில் அழைத்து கேட்டார் : “மகளே, அது யாரென்று சொல்லு.”

நான் கண்ணீருடன் கூறினேன் : “அப்பா ! அது யாரென்று கூறுவதற்கு என்னால் முடியவில்லை. எந்த சூழ்நிலை வந்தாலும், என் கர்ப்பத்திலிருக்கும் குழந்தையுடன் என்னை நெருப்பில் போட்டு எரித்தாலும் நான் அதைச் சொல்லமாட்டேன்.”

அதற்குப்பிறகு என் தந்தை எதுவும் கேட்கவில்லை. நான் முழு கர்ப்பிணியாக ஆனேன். ஒரு இரவு வேளையில் யாருடைய உதவியும் இல்லாமலேயே நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தேன்.

இரவின் இரண்டாவது ஜாமம் முடிந்தது. தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை எடுத்துக்கொண்டு நான் வீட்டைவிட்டு வெளியேறினேன். நிர்மலமான வானத்தில் காட்சியளித்த நட்சத்திரங்கள், என் கையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கள்ளங்கபடமற்ற முகத்தைப் பார்த்து கண்களைச் சிமிட்டிக் கொண்டிருந்தன. என்னுடைய ‘அவமானச் சுமையை’ அதன் சொந்தக்காரரின் கையில் ஒப்படைப்பதற்காக நான் அங்கு சென்றேன்.

அவர் அங்கு காத்திருந்தார். நான் குழந்தையை அவரிடம் நீட்டினேன். முதல் குழந்தையை முதன் முதலாக அதன் தந்தையின் கையில் கொடுக்கும்போது, தாய்க்கு உண்டாகக்கூடிய சந்தோஷத்தையும், அதை தாயின் கைகளிலிருந்து வாங்கும்போது தந்தைக்கு ஏற்படக்கூடிய சந்தோஷத்தையும் அனுபவித்து மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.

இரு கைகளையும் நீட்டி அவர் குழந்தையை வாங்கி, ஆர்வத்துடன் முத்தமிட்டு, மெதுவாக அதை மார்புடன் சேர்த்து வைத்துக்கொண்டார். அவர் அதன் முகத்தைச் சற்று பார்க்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உண்டானது. பதிவிரதைகளான பெண்களுக்கு பொதுவாகவே உண்டாகக்கூடிய ஒரு ஆசை அது. அவருக்கும் அப்படிப்பட்ட ஒரு ஆசை உண்டாகாமல் இல்லை. ஆண்களுக்கு பொதுவாகவே ஏற்படக்கூடிய சந்தேகம் அது.

அவர் சொன்னார் : “என் பாக்கெட்டில் ‘லைட்’ இருக்கிறது.”

நான் ‘எலெக்ட்ரிக் லைட்’டை எடுத்து எரியச் செய்தேன். அவர் குழந்தையின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அவர் அதை தொடர்ந்து முத்தமிட்டார். அந்தக் கண்களில் ஆனந்தக்கண்ணீர் நிறைந்தது.

குழந்தை கண்விழித்து அழ ஆரம்பித்தது. நான் வேகமாக அதை வாங்கிப் பால் கொடுத்தேன். அவர் தழுதழுத்த குரலில் சொன்னார் : “ரதீ என் செல்லக் குழந்தையை பத்திரமா பார்த்துக்கணும்.”

மூன்று வருடங்கள் கடந்தோடிவிட்டன. அவர் ஒரு பி.ஏ.க்காரராக ஆனார். நான் கர்ப்பிணியாகவும் ஆனேன்.

ரவி... அதுதான் என் முதல் மகனின் பெயர். அவனுக்கு இப்போது மூன்று வயதாகிவிட்டது. இவ்வளவு நாட்களாக நான் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கு அவனை அனுமதிக்கவில்லை. சமுதாயக் கட்டுப்பாட்டின் காரணமாக என்னுடைய எந்தப் பாவமும் செய்யாத குழந்தை கேலிப் பொருளாக ஆக்கப்படும் என்ற விஷயம் எனக்குத் தெரியும்.

ஒருநாள் எங்களுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு ஏழைப்பெண் எங்கள் வீட்டிற்கு வந்தாள். அவளுடன் ஒரு குழந்தையும் இருந்தது. ரவியும் அவனும் சேர்ந்து பலா இலைகளை விரித்து, மண்ணையும் கல்லையும் பரிமாறி ஒரு விருந்து நடத்தினார்கள். அன்றிலிருந்து அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார்கள். படிப்படியாக  விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, வேறு இரண்டு பிள்ளைகளும் அந்தக் கூட்டத்தில் வந்து சேர்ந்தார்கள்.

சிங்க மாதத்தில் திருவோணம் நெருங்கியது. ஒருநாள் மாலை வேளையில் நான் சிந்தனையில் மூழ்கியவாறு திண்ணையில் அமர்ந்திருந்தேன். ரவி, மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து சற்று தூரத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அங்கிருந்த சிறுவர்களில் ஒருவன் கையில் ஒரு ரப்பர் பந்து இருந்தது.

ரவி கூறினான் : “நாம் எல்லாரும் சேர்ந்து விளையாடுவோம்.”

அவன் சொன்னான் : “என் அப்பா நான் விளையாடுவதற்குத்தான் பந்தையே வாங்கி வந்தார்.”

ரவி உடினடியாக அதற்கு பதில் சொன்னான் : “என் அப்பா எனக்கு பந்து வாங்கித் தருவார்.”

‘ரவியின் எதிராளி விழுந்து விழுந்து சிரித்து கொண்டே சொன்னான் : “பந்து வாங்கித் தருவதற்கு உனக்கு அப்பா இருக்கிறாரா?”

எல்லாரும் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்கள். என் குழந்தையின் முகம் வெளிறிப்போய்விட்டது. அழுதவாறு அவன் வின்னை நோக்கி ஓடி வந்தான். “அம்மா! என் அப்பா எங்கே?” அவன் கேட்டான்.

நான் எதுவும் கூறவில்லை. என் இதயம் பயங்கரமாக வேதனைகொண்டது. என் குழந்தையின் கள்ளங்கபடமற்ற முகம் கண்ணீரில் மூழ்கிப்போனது. அதற்குப் பிறகும் அவன் கேட்டான்: “சொல்லு, அம்மா! எனக்கு அப்பா இருக்கிறாரா?”

“இருக்கிறார்.” அதற்குமேல் எதுவும் கூறுவதற்கு என்னால் முடியவில்லை.

போதும் - அவனுக்கு அவ்வளவு தெரிந்தால் போதும்... அவனுடைய முகம் பிரகாசமாக ஆனது. நான் அவனைப் பிடித்து மடியில் அமரவைத்து நெற்றியில் கண்ணீரைச் சிந்தினேன். அவன் கேட்டான்: “அம்மா, நீ ஏன் அழணும்? அப்பா எங்கே போயிட்டாரு?”

நன் பதில் கூறிவில்லை. அவன் தொடர்ந்து கேட்டான் : “அப்பா எப்போ வருவார் அம்மா?”

நான் அவனை சமாதானப்படுத்தினேன் : “மகனே, உன் அப்பா நாளைக்கு வருவார்.”

அவன் ஆர்வத்துடன் கேட்டான் : “எனக்கு பந்து கொண்டுவருவாரா?”

“ம்...”

அவன் திருப்தியாகிவிட்டான்.

 

+Novels

சபதம்

சபதம்

March 10, 2012

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel