Lekha Books

A+ A A-

அவளின் சுயசரிதை - Page 3

Avalin Suyasarithai

எனக்கு பதினாறு வயது முடிந்தது. என்னை அப்பளம் விற்பதற்கு அனுப்பக்கூடாது என்று என் தந்தையும் தாயும் முடிவு செய்தார்கள். எனக்கு கவலை உண்டாகிவிட்டது. தாய், தந்தையின் தீர்மானத்திற்கு எதிராக செயல்படுவதற்கு எனக்கு தைரியமில்லை. வீட்டிற்குள்ளேயே நான் அமைதியற்ற மனதுடன் இருந்துகொண்டிருந்தேன். சில நேரங்களில் படிகளைப் பார்த்துக்கொண்டு நான் வாசலிலேயே நின்று கொண்டிருப்பேன். சில வேளைகளில் படிகள் இருக்கும் பகுதியைப் போய் பார்த்துவிட்டு வேகமாகத் திரும்பி வருவேன்.

இரண்டு மூன்று நாட்கள் இப்படியே கடந்தன. எங்களுடைய வீட்டின் வடக்குப்பக்கம் இருக்கும் வீட்டைச் சேர்ந்த மாதவன் திருவனந்தபுரத்தில்தான் படிக்கிறான். கிறிஸ்துமஸ் விடுமுறையில் அவன் வீட்டிற்கு வந்திருக்கிறான் என்ற தகவலை நான் தெரிந்துகொண்டேன். அப்படியென்றால் அவரும் வந்திருப்பார். ஹா! கொஞ்சம் பார்க்க வேண்டும் என்று...

விடுமுறை முடிந்தது. மாதவன் திரும்பிச் சென்று விட்டான். ஆமாம்... அவரும் திரும்பச் சென்றிருப்பார்- நான் ஒருமுறைகூட பார்க்காமலேயே! என்னை ஒருமுறை கூட பார்க்காமல்! என்னை அவர் மறந்துவிட்டார் என்று எனக்குத் தோன்றியது. நானும் மறப்பதற்கு முயற்சி செய்தேன். நான் மறக்க முயற்சி செய்யச் செய்ய, அவரைப் பற்றிய என்னுடைய நினைவு அதிகரித்துக்கொண்டே வந்தது.

இப்படியே கோடைகாலமும் வந்து சேர்ந்தது. தேர்வு முடிந்து மாதவன் திருவனந்தபுரத்திலிருந்து வீட்டிற்கு வந்தான். என்னுடைய அமைதியற்ற நிலைமை மேலும் தீவிரமானது. படிகள் இருக்கும் பகுதியைப் பார்த்துக்கொண்டு நான் மட்டும் தனியாக அமர்ந்திருப்பேன். கற்பனையில் அவரைப் பார்ப்பது எனக்கு நிம்மதியைத் தந்தது. என்னிடம் அன்றொரு நாள் அப்பளம் கேட்டதையும், சக்கரத்தை (நாணயத்தை) என் கையில்தான் தருவேன் என்று பிடிவாதம் பிடித்ததையும், சாளரத்தின் வழியாக இரும்புக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு புன்னகை தவழும் அதரங்களுடன் என்னைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்ததையும், திருவனந்தபுரம் போவதற்கு என்னிடம் விடைபெற்றதையும், எனக்கு ஓணப் பரிசு தந்ததையும், நான் மாலையைக் கழுத்தில் அணிவித்ததையும் - இப்படி சந்தோஷம் எழச்செய்யும் காட்சிகள் ஒவ்வொன்றையும் நான் என்னுடைய மனத்திரையில் கண்டுகொண்டிருப்பேன். சில வேளைகளில் அந்த மோதிரத்தை எடுத்து விரலில் அணிந்துகொண்டு யாருமே இல்லாத இடத்தில் போய் உட்காருவேன். சில நேரங்களில் என்னைப் பார்ப்பதற்காக அவர் படிகளை தாண்டி வருகிறார் என்பதைப்போல, எனக்குத் தோன்றும். சில வேளைகளில் அவர் பின்னால் நின்றுகொண்டு என்னை அழைக்கிறார் என்பதைப்போல தோன்றும்.

நான் தனிமைச் சூழலை மிகவும் அதிகமாக விரும்பினேன். என்னுடைய அந்த சிறிய வீட்டின் தெற்குப் பகுதியிலிருந்த ஒரு வயலின் ஓரத்தில், ஒரு சிறிய புதரும் ஒரு பெரிய புளியமரமும் இருந்தன. மாலை வேளையில் நான் அந்த புதரின் மறைவில் போய் அமர்ந்திருப்பது வழக்கமான விஷயமாக இருந்தது. அவரைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி சந்தோஷப்படுவதற்கு எந்தவித பாதிப்புமில்லாத ஒரு பொருத்தமான இடமாக அது இருந்தது. ஒரு மாலைவேளையில் நான் அங்கு சென்று வயலைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். நேரம் சாய்ந்தும், நான் அதே இடத்திலேயே உட்கார்ந்திருந்தேன். நான் அவரைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை.

“ரதீ!” நான் கனவில் இருப்பதைப்போல சற்று திடுக்கிட்டுப் பார்த்தேன். அதோ... அவர் அங்கு... அந்த வயலில் என்னையே பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறார்! முதலில் நான் நம்பவில்லை. அவர் அதற்குப் பிறகும் அழைத்தார்: “ரதீ!”

நான் வேகமாக எழுந்தேன். அவர் எனக்கருகில் வந்தார். மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில் எங்களுடைய முகங்கள் ஒன்றையொன்று பார்த்தன. நாங்கள் எதுவும் பேசவில்லை. நாங்கள் என்ன பேசுவது! எங்களுடைய இதயங்கள் அவற்றின் மௌன மொழியில் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தன.

அவர் மேலும் அருகில் வந்தார். நான் அந்த முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். அவர் கைகளை என்னை நோக்கி நீட்டினார் - அவருடைய மூச்சுக் காற்று என் முகத்தைத் தொட்டது. அதற்குப் பிறகு எனக்கு எதுவுமே தெரியாது.

ஒரு வருடம் கடந்தோடியது. நான் கர்ப்பிணியாக ஆனேன். ஆச்சாரமாக இருக்கக்கூடிய பிராமண ஜாதியில் ஒரு விதவை கர்ப்பிணியாக ஆவது! அவளுக்கும் அவளுடைய குடும்பத்திற்கும் அதைவிட ஒரு ஆபத்து உண்டாக முடியுமா? வீட்டிற்குள்ளும், வீட்டிற்கு வெளியேயும் தப்பிப்பதற்கு அவளுக்கு வழியே இல்லை.

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற விஷயத்தை என் தாயும் தந்தையும் தெரிந்துகொண்டார்கள். என் தாய் நெஞ்சில் அடித்துக்கொண்டு கூப்பாடு போட்டாள். என் தந்தை எதுவும் பேசவில்லை. என் தாயை சமாதானப் படுத்தவோ, என்னை பார்த்து கோபப்படவோ... எதுவுமே செய்யவில்லை. நெருப்பு மலையைப்போல அவருடைய மனம் உருகிக்கொண்டிருந்தது. என்னை விலக்காக்கி, வீட்டிற்கு வெளியே விரட்டிவிடுவது - அது ஒன்றுதான் என் தந்தைக்கும் தாய்க்கும் உள்ள தப்பிக்கும் வழி. குடும்பதிலிருந்து ஒதுக்கப்பட்டு, சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டு தெருவில் அலைவதற்கு நான் தயாராக இருந்தேன். நான் யாருடைய ஈர்ப்பிற்கும் அடிபணிந்து போகவில்லை. யாருடைய வஞ்சனைச் செயலிலும் சிக்கிக்கொள்ளவில்லை. என்னுடைய கர்ப்பத்தில் இருக்கக்கூடிய குழந்தை என்னுடைய காதல் செடியில் காய்த்த விளைவு. அந்த விஷயத்தில் நான் பெருமைப்பட்டுக் கொண்டேன்.

என்னை வீட்டைவிட்டு வெளியேற்றவில்லையென்றால், நானும் என்னுடைய தாய், தந்தையும் சமுதாயத்திலிருந்து விரட்டப்படுவோம். அதுதான் ஜாதியின் ஆச்சாரம்! அதுதான் சமுதாய நீதி!

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் தந்தை யார் என்று என் தாய் என்னிடம் கேட்டாள். நான் சொல்லவில்லை. என் தாய் வற்புறுத்தினாள். வற்புறுத்தல் தாங்க முடியாத அளவிற்கு வந்தபோது நான் சொன்னேன் : “அது யாரென்று நான் சொல்லமாட்டேன். அது யாரென்று அறிந்து யாருக்கும் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. தவறு செய்தது நான்தான். என்னை தண்டித்தால் போதும்.”

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற செய்தி காட்டுத் தீயைப்போல பரவியது. கேட்டவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டார்கள். ‘வீட்டிலும் வெளியிலும்’ எனக்கு கிடைக்கப்போகும் தண்டனையைப் பற்றி பலரும் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் பரிதாபப்பட்டு, எனக்குக் கிடைக்கப்போகும் தண்டனையைக் குறைப்பதற்கு முயற்சி செய்தார்கள். சிலர் என்னுடைய தாய் - தந்தையிடம் கவலையை வெளிப்படுத்தினார்கள். என்னுடைய ரகசிய காதலன் யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு மட்டும் எல்லாருக்கும் ஒரே மாதிரி விருப்பம் இருந்தது.

எங்களுடைய ஜாதியைச் சேர்ந்த சில வயதான பெண்கள் என்னைப் பார்ப்பதற்காக வந்தார்கள். என்னுடைய கர்ப்ப நிலையைப் பார்ப்பதற்காக அவர்கள் வந்தார்கள்.  சமுதாய ஆன்மிகவாதிகளும், பெரியவர்களும் சேர்ந்து பேசினார்கள். என்னை சமுதாயத்திலிருந்து விலக்கி வைப்பதென்று அவர்கள் ஒரே மனதுடன் தீர்மானித்தார்கள். இரண்டே இரண்டு தீர்மானங்கள் மட்டுமே. ஒன்று - என்னை வீட்டைவிட்டு வெளியே போகும்படி கூறிவிட்டு, வீட்டைச் சுத்தப்படுத்துவது, இல்லாவிட்டால் - என்னைப்போலவே என் தந்தையையும் தாயையும் வீட்டைவிட்டு வெளியேறும்படி கூறுவது. ‘கல்லைப் பிளக்கக்கூடிய உத்தரவாக’ இருந்தது அது!

 

+Novels

சபதம்

சபதம்

March 10, 2012

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel