Lekha Books

A+ A A-

அவளின் சுயசரிதை - Page 2

Avalin Suyasarithai

நான் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தேன். அருகில் செல்வதற்கு எனக்குத் தயக்கம்.... அசுத்தமாகி விடுவோமோ என்றொரு பதைபதைப்பு ! அது மட்டுமல்ல; அதைத் தொடர்ந்து ஏதோ ஒரு இது... அசுத்தமானாலும் பரவாயில்லை. அந்த புன்சிரிப்புதான் என்னை கவலைகொள்ளச் செய்தது. நான் சொன்னேன்: “அங்கே வைத்தால் போதும். நான் எடுத்துக்கொள்வேன்.”

அவர் மிடுக்கு நிறைந்த குரலில் சொன்னார் : “அப்படின்னா உன்னுடைய அப்பளத்தை எடுத்துக்கொண்டு போ.”

அவர் உள்ளே செல்வதற்கு முயன்றார். நான் கூச்சத்துடன் வேகமாக அருகில் சென்று கையை நீட்டினேன். என் கையில் சக்கரத்தை தந்துவிட்டு, அவர் என்னைப் பார்த்து புன்னகைத்தார். நான் சக்கரத்தைக் கையில் வாங்கிக்கொண்டு ஒரு ஓட்டம் எடுத்தேன். எல்லா நாட்களிலும் அங்கு அப்பளம் வாங்குவதில்லை. ஆனால், அடுத்த நாள் நான் அப்பளத்துடன் அந்த வீட்டின் படிகளுக்கு முன்னால் போனபோது, அந்த வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்றொரு ஆசை உண்டானது. மறைந்துள்ள அந்தப் பார்வையும் அந்த புன்னகையும்! அதை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்றொரு ஆர்வம் உண்டானது. என்ன காரணத்தைக் கூறிக்கொண்டு அங்கு செல்வது? என்னுடைய விருப்பத்தை அடக்கி வைத்துக்கொண்டு நான் நடக்க முயன்றபோது, உள்ளே ஒரு இருமல் சத்தம் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். அந்த இளைஞன் என்னைப் பார்த்து புன்னகைத்தவாறு முன்னறையில் நின்றுகொண்டிருந்தார். நானும் சற்று சிரித்தேன். ஆனால், அங்கு நிற்பதற்கோ உள்ளே நுழைவதற்கோ எனக்கு தைரியம் வரவில்லை. இன்னொரு முறை அந்த முகத்தை தைரியமாகப் பார்த்துவிட்டு, மேலும் ஒரு முறை புன்னகைத்துவிட்டு, நான் அங்கிருந்து ஓடிவிட்டேன்.

அதற்குப்பிறகு தினமும் நான் அந்த வகையில் பார்ப்பதும், பார்க்கும்போது சிரிப்பதும் எங்களுடைய வழக்கமாக இருந்தது. சிரிப்போமே தவிர, நாங்கள் எதுவும் பேசிக்கொள்வதில்லை.

இரண்டு மூன்று வாரங்கள் கடந்த பிறகு, ஒருநாள் அப்பளத்தைக் கையில் வைத்துக்கொண்டு நான் அந்த வீட்டிற்கு முன்னால் போய்க்கொண்டிருந்தேன். அந்த இளைஞன் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு அங்கே நின்றிருந்தார். அன்று என்னைப் பார்த்தபோது, அவன் சிரிக்கவில்லை. முகத்தில் ஏதோ ஒரு உணர்ச்சி வேறுபாடு இருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. நான் அருகில் செல்லவில்லை. சற்று தள்ளி நின்றுகொண்டிருந்தேன். அவர் என்னை அழைத்தார் : “ரதீ, இங்கே பக்கத்தில் வா.”

நான் அருகில் சென்றேன். எனக்கு இதற்கு முன்வு அறிமுகமில்லாத ஒரு வெளிப்பாடு முகத்தில் தோன்றியது. “நான் திருவனந்தபுரத்திற்குச் செல்கிறேன்.” அந்த குரலிலும் ஒரு மாற்றம் தெரிந்தது. அவர் தொடர்ந்து சொன்னார். “அடுத்த வாரம் கல்லூரி திறக்கிறார்கள். நான் இன்றே போகிறேன்.”

நான் பதில் கூறவில்லை. பதில் கூற வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. அவர் தொடர்ந்து சொன்னார்: “நான் போய்விட்டால்... ரதி, அதற்குப் பிறகு உன்னுடைய அப்பளத்தைச் சாப்பிட முடியாதே!”

நான் சிரமப்பட்டு இப்படி கேட்டேன்: “கொண்டு போவதற்கு கொஞ்சம் அப்பளம் தரட்டுமா?”

“வேண்டாம் ரதி. நீ என்னை மறக்காமல் இருந்தால் போதும்.”

நான் கேட்டேன் : “என்னை மறந்துவிடுவீர்களா?”

“இல்லை...” அசாதாரணமான உறுதியுடன் அவர் சொன்னார் : “ரதி, நான் ஓணத்திற்கு வரும்போது, உனக்கு பரிசு தருகிறேன்.” அவர் உள்ளே சென்றார். நான் அப்பளம் விற்பதற்காகச் சென்றேன்.

கிருஷ்ணன் - அதுதான் அவருடைய பெயர். திருவனந்தபுரத்திற்குச் சென்ற பிறகும், நான் சாணாரின் வீட்டிற்கு அப்பளம் விற்பதற்குப் போவதுண்டு. ஆனால், அங்கு ஏதோ ஒரு குறை உள்ளதைப்போல- இதயம் இல்லாத சரீரத்தைப்போல - நிலவு இல்லாத இரவைப் போல எனக்கு தோன்றியது.

இப்படியே சில மாதங்கள் கடந்தோடின. ஓணம் நெருங்கியது. உத்ராடத் திருநாளன்று நான் அப்பளம் விற்பதற்காகச் சென்றபோது, அவர் அந்த வீட்டில் வாசற்படியில் நின்றுகொண்டிருந்தார்! இதயத்தைக் குளிரச் செய்யும் புன்னகையுடன் நான் அவரைப் பார்த்தேன். அவர் கேட்டார் : “ரதி, நீ என்னை மறந்து விட்டாயா?”

அன்று முதன்முறையாக நான் கால் பெருவிரலால் தரையில் வரைந்துகொண்டே கேட்டேன் : “என்னை நினைத்தீர்களா?”

நானும் ‘மறக்கவில்லை...’ என்று சொல்ல முயன்றபோது... இல்லை - நான் அதைக் கூறவில்லை. ஈரமான கண்களுடன் நான் அவரை வெறுமனே பார்க்க மட்டும் செய்தேன்.

அவர் என்னை நோக்கி கையை நீட்டினார் : “இதோ ரதி, உனக்கு ஓணம் பண்டிகைக்கான பரிசு.”

நான் கையை நீட்டினேன். பட்டுத்துணித் துண்டில் சுற்றப்பட்ட ஒரு பொருளை என் கையில் தந்துவிட்டு அவர் சொன்னார் : “இதை யாரிடமும் காட்டாதே.”

வீட்டிற்குச் சென்றபிறகு யாருக்கும் தெரியாமல் நான் அவிழ்த்துப் பார்த்தேன். ஒரு சிறிய தங்க மோதிரம்! என்னுடைய மோதிர விரலுக்கு சரியாக அளவு எடுத்ததைப்போல கனகச்சிதமாக இருந்த ஒரு மோதிரம்! அதில் எனக்குத் தெரியாத மொழியில் என்னவோ எழுதப்பட்டிருந்தது. அதை என் மோதிர விரலில் அணிந்து பார்த்தேன். திடீரென்று எனக்கு வெட்கம் வந்தது. அந்த நிமிடமே அதைக் கழற்றி பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன்.

இரவில் என் தந்தையும் தாயும் தூங்கிக்கொண்டிருக்கும் போது, நான் அதை எடுத்து விரலில் அணிவேன். மோதிரம் அணிந்த கையை மார்பின் அருகில் வைத்துக்கொண்டு, அதே நிலையில் சிறிது நேரம் படுத்திருப்பேன். தூங்குவதற்கு முன்பு அதைக் கழற்றி பாதுகாப்பாக வைக்கவும் செய்வேன்.

ஓண நாளன்று நான் காலையில் எழுந்தேன். கொஞ்சம் முல்லை மலர்களைச் சேகரித்து மாலை தயார் செய்தேன். யாரும் பார்க்காத மாதிரி சலவை செய்து வைத்திருந்த பாவாடையையும் ரவிக்கையையும் எடுத்து அணிந்தேன். மாலையை எடுத்துக்கொண்டு போக முயன்றபோது, தலைமுடியைச் சற்று அழகாக வாரவேண்டுமென்று எனக்கு தோன்றியது. யாருக்கும் தெரியாமல் அதைச் செய்தேன். ஒரு குங்குமப் பொட்டையும் வைத்தேன். தொடர்ந்து படியைக் கடந்து ஒரு ஓட்டம்!

வீட்டின் வாசலில் அவர் நின்றுகொண்டிருந்தார். இலையில் சுற்றப்பட்டிருந்த அந்த மலர் மாலையை நான் அவரிடம் நீட்டினேன். அப்போது அதை அப்படித் தரக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. நான் பொட்டலத்தை அவிழ்த்து மாலையை எடுத்தேன். கையை உயர்த்தினேன். அவர் சிறிது குனிந்தார். மாலையை அவருடைய கழுத்தில் அணிவித்துவிட்டு நான் சொன்னேன்: “இது என்னுடைய பரிசு.”

அவர் என்னைப் பிடிப்பதற்காக கையை நீட்டினார். நான் அப்பால் விலகி-, அங்கிருந்து ஓடி மறைந்தேன்.

 

+Novels

சபதம்

சபதம்

March 10, 2012

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel