Lekha Books

A+ A A-

பழம்

Pazham

‘‘பழத்தைப் பார்க்குறப்போ உங்களுக்கு என்ன தோணுது ? - அவர் கேட்டார். நாங்கள் அவரின் காரை விட்டு இறங்கி மலைச் சரிவில் சாலையோரத்தில் இருந்த கருங்கல்லின் மேல் போய் உட்கார்ந்தோம். கார் மலைச்சரிவில் சாலையோரத்தில் இருந்த அந்த ஒரே கடையின் அருகில் வந்ததும், காரை நிறுத்திவிட்டு அவர் வெளியே இறங்கிச் சென்று கடையில் இருந்து பத்து, பன்னிரெண்டு மைசூர் பூவன்பழங்களை வாங்கிக் கொண்டு வந்து, அவற்றில் இரண்டு பழங்களை டிரைவர் கையில் கொடுத்துவிட்டு என்னையும் உடன் அழைத்துக் கொண்டு போய் சாலையோரத்தில் இருந்த கருங்கல்லில் அமர்ந்தார். பழம் எங்களுக்கு முன்னால் ஒரு தாளில் சுற்றப்பட்டு இருந்தது. நான் சொன்னேன் :

‘‘தெய்வத்தின் ஒரு அற்புதமான படைப்பு பழம். உலகத்துல உள்ள உயிரினங்கள் சாப்பிடுறதுக்குன்னே படைக்கப்பட்ட பழத்தைப் பற்றி கேட்பதற்குக் காரணம் ?-’’

‘‘காரணம் இருக்கு’’ - அவர் சொன்னா: ‘‘உங்களுக்கு எப்பாவாவது தற்கொலை செய்யணும்னு தோணியிருக்கா ?’’

நான் சொன்னேன்.

‘‘தோணியிருக்கு. மன நோயாளியாக அதாவது பைத்தியக்காரனாக நான் சானிட்டோரியத்தில் படுத்துக் கிடக்குறேன். இரவு நேரம். என் பக்கத்துல யாருமே இல்ல. மனசோட சம நிலை தவறிடுச்சு. ஒரு குண்டூசி அளவுக்குத்தான் சுய நினைவு இருந்துச்சு. அப்போ எனக்கு தற்கொலை செய்யணும்போல இருந்துச்சு. ஒரு கயிறை எடுத்து வெளியே இருந்த பலாமரத்தின் கிளையில் கட்டி தொங்கிச் சாகுறது நல்லதுன்னு மனசுல பட்டது. தற்கொலை எண்ணம் வந்த உடனே உடம்பெங்கும் ஒரு பரபரப்பு. அந்த எண்ணம் அதிகமான அதே நேரத்துல சுய நினைவும் எழும்ப ஆரம்பிச்சது. நான் வைத்தியரைக் கூப்பிட்டு விவரத்தைச் சொன்னேன். வைத்தியர் மருந்து கொண்டு வந்து என் கண்கள்ல தடவினார். அப்போ பயங்கர எரிச்சல் உண்டாச்சு. அதற்குப் பிறகு அப்படியொரு எண்ணமே மனசுல உண்டாகல. ஆராக்கியக் குறைவுதான் தற்கொலைக்கான காரணம்னு மனசுல படுது !’’

‘‘எப்பவும் சரியா இருக்கும்னு சொல்ல முடியாது. அது இருக்கட்டும். நீங்க எந்த குறையும் இல்லாத மனிதர்களைப் பார்த்திருக்கீங்களா, அதாவது பிரச்சினையே இல்லாதவர்கள்...’’

‘‘ஏன், நீங்களே இருக்கீங்களே !’’

‘‘என்னைப் பற்றி அப்படிச் சொல்ல முடியுமா என்ன ? என்ன இருந்தாலும் என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ?’’

உதவும் மனம் கொண்டவர். இரக்க சிந்தனை உள்ளவர். தர்ம பிரபு, ஜாதியும், மதமும் பார்க்காமல் யாருக்கும் உதவக் கூடியவர். எம்.ஏ.பி.எல். படித்திருக்கிறார். நீதிபதி, இரண்டு குழந்தைகள், மகன் வக்கீல், மகள் டாக்டர். இவருக்கு வயது எழுபது இருக்கும். உடல் ஆரோக்கியத்தைக் கொண்டவர். மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நான் சொன்னேன்.

‘‘உங்களைப் பற்றி கொஞ்சம் தெரியும் !’’

‘‘என் இளமைக்காலம் எப்படி இருந்திருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க ?’’

நாங்க பழத்தைச் சாப்பிட்டோம். மாலை நேரம் கொஞ்சம் கொஞ்சமாக கடந்து கொண்டிருந்தது. கடையில் விளக்கு கொளுத்தினார்கள். ஆகாயத்தில் நட்சத்திரங்கள் கண் சிமிட்ட ஆரம்பித்தன.

நான் சொன்னேன் :

‘‘உங்களோட இளமைக் காலத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது !’’

அவர் சொன்னார் :

‘‘நான் சொல்றேன். நேரம் போய்க்கிட்டே இருக்கு. நான் இப்போ சொல்லப் போறது அம்பது அம்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவம். நான் அப்போ ஆங்கிலப் பள்ளிக் கூடத்துல படிச்சிக்கிட்டு இருந்தேன். அப்போ எனக்கு பதினஞ்சு வயது இருக்கும்னு நினைக்கிறேன். நான் படிச்சிட்டு இருந்தது ஐந்தாவது ஃபாரம்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

மகாலட்சுமி

March 22, 2013,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கௌரி

கௌரி

January 30, 2013

சரசு

சரசு

March 9, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel