நிலவு - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6451
கணவரும் நானும் ஒன்று சேர்ந்து பயணித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அவருடைய உணர்ச்சியற்ற தன்மை என்னுடைய ஆர்வத்தைக் குறைத்தது.
என்னுடைய காவிய உணர்ச்சியை அது ஊதி அணைத்தது. சூரியன் உதயமாகும்போது, மலைப்பாதைகள் வழியாக நாங்கள் கீழ்நோக்கி இறங்கினப்போ, அந்த நான்கு குதிரைகளும் மிகவும் சுறுசுறுப்புடன் எங்களைக் கடந்துபோனபோது, காலை நேரத்திற்கென்றே இயல்பாக இருக்கும் மஞ்சள் நிறத்துடன் கிராமப்புறமும் மரங்களும் அருவிகளும் எங்களின் கண்களுக்கு முன்னால் கண்விழித்தன. சந்தோஷத்துடன் என் கைகளைச் சேர்த்தவாறு நான் அவரிடம் சொன்னேன், ‘அன்பானவரே, என்ன அழகான காட்சி! நீங்கள் இப்போ என்னை ஒருமுறை முத்தமிடுங்கள்’ என்று. மெல்லிய ஒரு புன்சிரிப்புடன் அவர் சொன்னார்: ‘உனக்கு இயற்கை பிடித்திருக்கிறது என்பதற்காக நாம் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொள்ள வேண்டும் என்று இல்லை.’
அந்த வார்த்தைகள் என் இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அழகான காட்சிகளைப் பார்க்குறப்போ, காதலர்கள் அசாதாரணமான வகையில் காதல் வயப்படுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
உண்மையாக சொல்லப்போனால், எனக்குள் நுரைத்துக்கொண்டு எழுந்த கவிதையை வெளியே வராமல் அவர் தடுத்தார். நான் அதை எப்படி விளக்கிக் கூறுவேன்? நிறைந்திருக்கும் காற்று மேலே ஏறாதபடி அடைக்கப்பட்டிருக்கும் ஒரு கொதிகலைனைப்போல ஆகிவிட்டேன் நான்.
ஒரு மாலை நேரத்தில் (ஹோட்டல் தெ ஃப்ளூலனில் நாங்கள் நான்கு நாட்கள் தங்கியிருந்தோம்) ராபர்ட்டிற்கு எப்போதும் வரக்கூடிய அந்த கடுமையான தலைவலி வந்தது. அவர் அன்று சீக்கிரமே படுத்துவிட்டார். நான் மட்டும் தனியாக ஏரியின் கரைவழியே நடந்தேன்.
நாம் மோகினிக் கதைகளில் படித்திருக்கக்கூடிய ஒரு இரவாக இருந்தது அது. வானத்தில் பவுர்ணமி நிலவு... மஞ்சள் நிறத்தில் தலையை உயர்த்திக் கொண்டு நின்றிருக்கும் மலைகள் வெள்ளிக் கிரீடங்களைப்போல இருந்தன. ஏரியில் ஒளிர்ந்து கொண்டிருந்த ஏராளமான அலைகள் முன்னோக்கி வந்து திரும்பிக் கொண்டிருந்தன. நம்முடைய மனதிற்குள் ஒரு புதிய அனுபவம். அந்த நிமிடங்கள் நம்முடையத் துடிப்பிற்கு வேகத்தை அதிகரிக்கின்றன. எவ்வளவு விரைவாக அது அடிக்கிறது! அந்த உணர்ச்சிகளுக்குத்தான் எத்தனை சக்தி!
நான் அந்தப் புல்வெளியில் உட்கார்ந்து ஏரியைப் பார்த்தேன். என்ன பிரகாசம்! என்ன அழகு! அசாதாரணமான ஏதோ ஒன்று எனக்குள் நுழைந்தது. புரிந்துகொள்ள முடியாத காதலின், காமத்தின் ஆசை எனக்குள் மலர்ந்தது. வெறுப்பைத் தரும் என்னுடைய வாழ்க்கைமீது உண்டான கவலை என் மனமெங்கும் நிறைந்தது. என்ன! அந்த நிலவின் வெளிச்சத்தில், அந்த ஏரியின் கரையில் ஒரு ஆணின் கைகளுக்குள் அடங்கி இருக்க சிறிதும் முடியாத விதியா எனக்கு? உணர்ச்சிமயமான அணைப்பின் நிமிடங்களுக்காக கடவுள் படைத்தார். அந்த பனி விழுந்துகொண்டிருந்த அழகான இரவுகளில், ஒருமுறைகூட
என்னுடைய உதடுகள் ஒரு ஆணுடைய உதடுகளின் உஷ்ணத்தை அனுபவிக்க முடியாதா என்ன? நிலவு ஒளி உண்டாக்கிய நிழல்கள் நிறைந்த அந்த கோடைகால இரவில் தகித்துக்கொண்டிருந்த காதலை அனுபவிக்க எனக்கு அதிர்ஷ்டம் இல்லையா என்ன?
சிந்திக்கும் ஆற்றலை முற்றிலுமாக இழந்துவிட்டதைப் போல நான் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன். ஏதோ ஒரு ஆணின் அசைவு எனக்குப் பின்னால் கேட்டது. ஒரு ஆண் என்னையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார். நான் திரும்பிப் பார்த்தப்போ, என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர், எனக்கு நேராகவே நடந்து வந்தார்.
“மேடம், நீங்க அழறீங்களா?”
தன் தாயுடன் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு இளம் வக்கீல்தான் அவர். முன்பு பல நேரங்களில் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்திருக்கிறோம். அவருடைய கண்களை பல நேரங்களில் என்னைப் பின் தொடர்ந்திருக்கின்றன.
என்ன பதில் சொல்வது என்றோ, அந்த சூழ்நிலையை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்றோ தெரியாமல் நான் குழப்பத்தில் இருந்தேன். நான் நல்ல உடல்நலத்துடன் இல்லை என்பதை நான் அவரிடம் சொன்னேன்.
அவர் என்னுடன் சேர்ந்து நடந்தார். மிகவும் இயல்பாகவும் ஈடுபாட்டுடனும் நாங்கள் பார்த்த காட்சிகளைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தார். நான் அனுபவித்த அந்தக் காட்சிகள் ஒவ்வொன்றையும் அவர் தன் வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தினார். நான் புரிந்து கொண்டிருந்ததைவிட மிகவும் அழகாக அவர் அவற்றைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தப்போ, எனக்குள் ஒரு ஆவேசமே உண்டாகிவிட்டது. திடீரென்று அவர் ஆல்ஃப்ரட் தெ முஷெயின் சில கவிதைகளைக் கூறினார். இனம் புரியாத உணர்ச்சிகளால் நெஞ்சு அடைப்பதைப்போல் எனக்கு இருந்தது. அந்த அழகான மலைகளும் ஏரியும் நிலவும் வார்த்தைகளால் கூற முடியாத அளவிற்கு அழகான விஷயங்களைப் பற்றி என் செவிகளுக்குள் பாடுவதைப் போல நான் உணர்ந்தேன்.
என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. எப்படி என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஒரு காம வேள்வியில் என்பதைப்போல அது நடந்துவிட்டது.
மறுநாள் காலையில் அவர் புறப்படும் வரையில் நான் அவரைப் பார்க்கவேயில்லை.
அவர் தன் அடையாள அட்டையை என்னிடம் தந்தார்.”
தன்னுடைய தங்கையின் கைகளில் விழுந்து அக்கா தேம்பித் தேம்பி அழுதாள். பிறகு அது பெரிய அழுகையாக மாறியது. தங்கை ஆறுதல் கூறும் மனமுதிர்ச்சியுடன் இப்படிச் சொன்னாள்:
“இங்க பாரு அக்கா. பல நேரங்களில் நாம காதலிக்கிறது ஆணை அல்ல; காதலைத்தான். அந்த இரவு நேரத்தில் உன்னுடைய உண்மையான காதலன் - அந்த நிலவுதான்.”
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,