Lekha Books

A+ A A-

நிலவு

nilavu

மேடம் ஜூலி ரூபெர் தன்னுடைய தங்கை ஹென் ரீட்டா லெத்தோரேயை எதிர்பார்த்து நின்றிருந்தாள். அவள் சமீபத்தில் தான் தன்னுடைய சுவிட்சர்லாண்ட் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வந்தாள்.

சுமார் ஐந்து வாரங்களுக்கு முன்புதான் லெத்தோரேயின் குடும்பம் அங்கிருந்து கிளம்பியது. சிவாதோஸில் உள்ள தன்னுடைய எஸ்டேட் சம்பந்தப்பட்ட சில விஷயங்களுக்காகத் தன் கணவரை அங்கு தனியாக விட்டுவிட்டு, சில நாட்கள் தன் சகோதரியுடன் இருக்கலாம் என்பதற்காக ஹென் ரீட்டா பாரீஸுக்கு வந்திருந்தாள்.

மாலை நேர ஒளியின் நிழல்கள் இருட்டைப் பரவவிட்டிருக்கும் அந்த அறையின் வெளிச்சத்தில் அமர்ந்து எந்தவித ஈடுபாடும் இல்லாமல் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த ரூபெர், ஏதோ சத்தம் கேட்கவே தலையை உயர்த்திப் பார்த்தாள்.

அதன் தொடர்ச்சியாக யாரோ வாசல் கதவைத் தட்டுவதை அவள் கேட்டாள். சிறிதும் தாமதிக்காமல் அவளுடைய தங்கை ஒரு பயணக்கோலத்துடன் அங்கு வந்து நின்றாள். மரியாதை நிமித்தமான எந்தவொரு அலங்கார வார்த்தைகளும் இல்லாமல் அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். ஒரு நிமிட நேரம் அதிலிருந்து விடுபட்டிருந்த அவர்கள் மீண்டும் இறுகிய அணைப்பில் ஈடுபட்டனர். பிறகு அவர்கள் தங்களின் நலத்தைப் பற்றியும், வேறு விஷயங்களைப் பற்றியும் பேச முற்பட்டனர். குடும்பங்களைப் பற்றிய விசேஷங்களைப் பேசினார். நூற்றுக்கணக்கான சிறுசிறு விஷயங்களைப் பற்றியும் ஆராய்ந்தனர். பேச்சுக்கிடையே வார்த்தைகள் முனை மழுங்கிக் கீழே விழுந்து கொண்டிருந்தன. இதற்கிடையில் ஹென் ரீட்டா தன்னுடைய தொப்பியையும் தலையில் அணிந்திருந்த ஆடையையும் கழற்றி வைத்தாள்.

அப்போது நன்கு இருட்டிவிட்டிருந்தது. மேடம் ரூபெர் ஒரு விளக்கைக் கொண்டு வரும்படி வீட்டிற்குள் அழைத்துச் சொன்னாள். விளக்கு வந்து சேர்ந்தபோது, ரூபெர் தன் சகோதரியின் முகத்தையும் உடலையும் மீண்டும் ஒருமுறை தெளிவாக ஆராய்ந்துவிட்டு, அவளைத் திரும்பவும் இறுக அணைக்க முயன்றாள். ஆனால், ரூபெர் தன் சகோதரியின் உருவத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். திகைப்படைந்து பின்வாங்கினாள். மேடம் லெத்தோரேயின் பின் கழுத்தின் இருபக்கங்களிலும் வெண்மையான தலைமுடிகள் தெரிந்தன. அவளின் எஞ்சியிருந்த தலைமுடிகள் அனைத்தும் அழகான கருப்பு நிறத்தில் இருந்தன. பின் கழுத்தின் இரண்டு பக்கங்களிலுமிருந்து கொத்தாக வெண்மை நிற முடிகள் வெள்ளி நீர்வீழ்ச்சியைப்போல, நீண்டு கருப்பு முடிகளுடன் சங்கமமாயின. அவள் சுவிட்சர்லாண்டிற்குச் சென்ற பிறகுதான், அவளிடம் இந்த மாறுதல் உண்டாகியிருந்தது.

கண்களை சிறிதும் அகற்றாமல் மேடம் ரூபென் தன் சகோதரியையே உற்றுப் பார்த்தாள். தன் சகோதரிக்கு ஏதோ பெரிய ஆபத்து நடந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்பதற்கு இடையில், அவளின் கன்னங்கள் வழியாகக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவள் கேட்டாள்:

“உனக்கு என்ன ஆச்சு ஹென் ரீட்டா?”

கவலை நிறைந்த புன்சிரிப்புடன், ஒரு இதய நோயாளியின் வெளிறிய புன்னகையுடன் அவள் சொன்னாள்:

ஒண்ணுமில்ல. நான் உறுதியா சொல்றேன். சரி.. ஏன் நீ என் வெண்மைநிறத் தலைமுடியையே வெறித்துப் பார்த்துக்கிட்டு இருக்கே?”

ஆனால், மேடம் ரூபெர் திடீரென்று அவளுடைய தோளைப் பிடித்து எதையோ தேடுவதைப்போல, அவளையே பார்த்துக் கொண்டு திரும்பவும் கேட்டாள்:

“உனக்கு என்ன ஆச்சு? சொல்லு... உனக்கு என்ன ஆச்சு? என்னிடம் பொய் சொன்னால், அந்த நிமிடமே நான் அதைக் கண்டுபிடிச்சிடுவேன்.”

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். முகம் வெளிறிப்போய், தலை சுற்றிக் கீழேவிழ இருந்த ஹென் ரீட்டாவின் குழி விழுந்த கண்களின் ஓரங்களில் இரண்டு துளி கண்ணீர் நின்றிருந்தது.

அவளுடைய தங்கை அக்காவைக் கேட்டாள்:

“உனக்கு என்ன ஆச்சு? உன் பிரச்சினை என்ன? என்கிட்ட சொல்லு.”

அப்போது தாழ்ந்த குரலில் அக்கா சொன்னாள்:

“எனக்கு... எனக்கு ஒரு காதலர் இருக்கிறார்.”

தன் தங்கையின் தோளில் தலையை வைத்து அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

சிறிது மன அமைதி கிடைத்தவுடன், அவளுடைய பெருமூச்சுகளுக்குத் தளர்ச்சி உண்டானபோது, தன் மனதில் இருந்த விஷயத்தை வெளியில் எடுத்து வீசி எறியலாம் என்பதைப்போல, தன் கவலையைத் தன்மீது அன்பு வைத்திருக்கும் இன்னொரு இதயத்திற்கு கை மாற்றிவிடலாம் என்பதைப்போல அவள் எல்லாவற்றையும் மனம் திறந்து கூற ஆரம்பித்தாள்.

தொடர்ந்து அக்காவும் தங்கையும் தங்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு அந்த அறையின் இடது மூலையில் போடப்பட்டிருந்த ஸோஃபாவில் சாய்ந்தார்கள். தங்கை, அக்காவைத் தன்னுடைய இதயத்தின்மீது சேர்த்து வைத்தவாறு, அவள் கூறுவதை மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“இந்த விஷயத்தில் யாருக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனால், எனக்கு என்னையே புரிந்துகொள்ள முடியல. அன்னையில இருந்து எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு எனக்குத் தோணுது. தங்கச்சி, நீ மிகவும் கவனமா இருக்கணும். மிகவும் எச்சரிக்கையா இருக்கணும். சில நிமிடங்களில் நம்முடைய பலவீனங்களை நாம் அடையாளம் தெரிஞ்சிக்கணும். நாம் எவ்வளவு வேகமாக அவற்றுக்குக் கீழ்படிகிறோம்! நம்முடைய மனதிற்குள் சிந்தனைக் குழப்பங்களின் பாதிப்புகள் யாருக்கும் தெரியாமல் நுழைந்துவிடுகின்றன. கைகள் மலர ஏங்குகின்றன. காதல் உணர்வு தோன்றுகிறது. அணைக்கும் நிமிடங்கள் வருகின்றன.

என் கணவரை உனக்கு தெரியும். அவரை நான் எந்த அளவிற்குக் காதலித்தேன் என்பதும் உனக்கு தெரியும். அவர் மிகவும் மனப்பக்குவம் கொண்டவராகவும் விழிப்புணர்வுடன் இருப்பவராகவும் இருந்தார். ஆனால், ஒரு பெண் மனதின் ரகசியத்தை அவரால் புரிந்துகொள்ள முடியல. அவர் எப்போதும் நல்லவராகவே இருப்பவர். அவரின் முகத்தில் எப்போதும் புன்சிரிப்பு இருந்துகொண்டே இருக்கும். எல்லா நேரங்களிலும் இரக்க குணம் உள்ள மனிதராக அவர் இருந்தார். அவர் மிகவும் பலமாகத் தன் கைகளால் என்னை இறுக்கினால் என்ன, என்னை இறுக கட்டிப்பிடித்து அணைத்தால் என்ன, இரண்டு ஆன்மாக்களை ஒன்று சேர்க்கிற இனிய முத்தங்களை எனக்கு தந்தால் என்ன- என்றெல்லாம் நினைப்பேன். ஒரு வார காலம் என்னை விட்டு அவர் விலகி இருக்கும்போது என்மீது அவருக்கு ஈடுபாடு தோன்றாதா, என்னைக் கொஞ்ச வேண்டும் என்ற ஆசை அவருக்குள் உண்டாகாதா என்று நான் ஏங்கியிருக்கிறேன்.

இவையெல்லாம் சாதாரண விஷயங்கள் இல்லையா? ஆனால், நம்மைப்போன்ற பெண்கள் படைக்கப்பட்டிருப்பது அப்படித்தான். அதிலிருந்து நாம் எப்படி விடுதலை பெற முடியும்?

அப்போதும் அவரை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஒருமுறைகூட என் மனதில் தோன்றியது இல்லை. ஆனால், காதலின் ஆரவாரம் இல்லாமல், எந்தவித காரணமும் இல்லாமல், எதுவுமே இல்லாமல் லூஸன் ஏரிக்கு மேலே, ஒரு இரவு நேரத்தில் நிலவு உதித்தது என்ற ஒரே ஒரு காரணத்தால் அது நடந்தது.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel