Lekha Books

A+ A A-

வனராணி - Page 3

vanarani

எவ்வளவோ நிமிடங்கள், ஒவ்வொரு வருடத்தின் கனத்துடன் கடந்து சென்றன. நிலவு மறைய ஆரம்பித்திருந்தது. அவள் திரும்பி வருவதை எதிர்பார்த்துக் கொண்டு, நான் அதே இடத்தில் மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக நின்றிருந்திருக்க வேண்டும். திடீரென்று செடிகள் அடர்ந்திருந்த அந்த புதர்களுக்குள் மீண்டும் அந்த வெளிச்சம் தென்பட்டது. சிறிது நேரம் சென்றதும், அவள் அந்தக் கூடையுடன் எனக்கு அருகிலேயே கடந்து சென்றாள். எனக்கு ஒரு புதிய தைரியம் வந்து சேர்ந்திருப்பதைப்போல தோன்றியது. நான் அந்த செடிகள் அடர்ந்த புதருக்கு அருகில் சென்றேன். கையிலிருந்த டார்ச் விளக்கை எரியச் செய்தேன். நான் செடிகள் பலவற்றையும் கடந்து சென்றேன். அங்கு சுற்றிலும் பார்த்ததில் ஒரு பெரிய பாறையைத் தவிர, வேறு எதுவும் இல்லை. அந்தப் பாறையைத் தள்ளிப் பார்த்தபோது, அது அசைவதைத் தெரிந்து கொண்டேன். அதை இழுத்துப் பார்த்தபோது, அங்கு ஒரு குகையின் வாசல் தெரிந்தது. நான் அந்தக் குகைக்குள் நுழைந்தேன். சிறிது தூரம் நடந்தேன். பத்து அடிகள் கடந்ததும், அதற்குப் பிறகு இன்னொரு குகை தெரிந்தது. அதற்குள் நுழைந்து டார்ச் விளக்கை எரியச் செய்தபோது, நான் பார்த்த காட்சி...''

குறுப்பு எங்களுடைய முகத்தையே பார்த்தவாறு கைகளால் சைகை செய்து ஒரு பீடி வேண்டுமென்று கேட்டார். மிஸ்டர் பாஸ்கரன் இரண்டு பீடிகளைக் கொடுத்தார். மிஸ்டர் நம்பியார் ஒரு சிகரெட்டைத் தந்தார். சிகரெட்டையும் ஒரு பீடியையும் பாக்கெட்டிற்குள் போட்டவாறு, ஒரு பீடியைப் புகைத்துக் கொண்டே குறுப்பு தொடர்ந்து சொன்னார்: "நான் பார்த்தது என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒரு மனிதனின் மிகவும் பயங்கரமான முகம்!''

நாங்கள் எல்லாரும் உடனடியாக மூச்சை இழுத்துக் கொண்டே சிரித்துவிட்டோம். "முகம் மட்டுமா?'' என்று மிஸ்டர் நம்பியார் ஆர்வத்துடன் கேட்டார்.

"முகம் மட்டும் ஒரு மனிதனுக்குச் சொந்தமானதாக இல்லை... பார்த்தபோது அப்படித்தான் தோன்றியது. அதற்குக் கீழே இருந்த பகுதியைப் பார்த்தபோதுதான் அது ஒரு மனிதப் பிறவிதான் என்பதையே நான் உணர்ந்தேன். அந்த அளவிற்கு அவலட்சணமான ஒரு முகம் எந்தவொரு மிருகத்திற்கும் இருக்காது. மொத்தத்தில் முகம் ஒரு கரும்பாறைத் துண்டைப்போல இருந்தது. அதில் கண்கள் எங்கே இருக்கின்றன, மூக்கு எங்கே இருக்கிறது என்பதை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. நெற்றியின் வலது பகுதியிலும் கன்னத்திலும் உதடுகளிலும் புகைபடிந்த மாமிசத்தை ஒட்டி வைத்திருப்பதைப்போல தோன்றியது. இடையில் இங்குமங்குமாக சொறி பிடித்ததைப்போல சில அடையாளங்கள் இருந்தன. இடது பக்கக் கன்னத்தின் கீழ் பகுதியும் தாடை எலும்பும் மட்டும் சற்று மினுமினுப்புடன் இருந்தன. அது முகத்தின் பயங்கரத் தன்மையை மேலும் அதிகப்படுத்தியது. அந்த மனிதனின் மற்ற உறுப்புகளுக்கும் உடலுக்கும் எந்தவொரு பாதிப்பும் உண்டாகியிருக்கவில்லை என்பது மட்டுமல்ல- அவை மிகவும் அழகு நிறைந்தவையாக இருந்தன. கடைந்தெடுத்த சந்தனக் கட்டையைப்போல அந்த உடல் இருந்தது.

அந்த மனிதன் தனக்கு முன்னால் இருந்த கிண்ணத்திலிருந்து எதையே மூழ்கிக் குடித்துக் கொண்டிருந்தார்.

என் டார்ச் விளக்கின் வெளிச்சம் முகத்தில் விழுந்ததும், அறைக்குள் என்னவோ நடக்காத ஒன்று நடக்கிறது என்பதைப்போல அவர் தன் தலையை உயர்த்தி கவனிப்பதைப்போல இருந்தது. தொடர்ந்து மெதுவான குரலில் "தாலா" என்று அழைத்தார்.

மனிதக் குரல்தான்! எனக்கு நிம்மதியாக இருந்தது. நான் அவருக்கு அருகில் நடந்து சென்று சொன்னேன்: "நான் தாலா அல்ல.''

என்னுடைய குரலைக் கேட்டதும் அவருடைய நடவடிக்கையைப் பார்க்க வேண்டுமே! கையில் இருந்த கரண்டி கீழே விழுந்தது. உடல் ஒரு சிலையைப்போல அசைவே இல்லாமல் ஆனது. அந்தப் பார்வை தெரியாத கண்கள் என்னைப் பார்ப்பதற்குத் துடித்துக் கொண்டிருந்தன.

நான் சாந்தமான குரலில் சொன்னேன்: "நீங்கள் பயப்பட வேண்டாம். நான் இங்கு வழிதவறி வந்துவிட்ட ஒரு மனிதன்...''

அவர் நிம்மதியான ஒரு பெருமூச்சைவிட்டுக் கொண்டே சொன்னார்: "நீங்கள் இந்த குகைக்குள் எப்படி வந்தீர்கள்? அய்யோ... தாலா பார்த்துவிட்டால்...!'' அவர் தன்னுடைய இரண்டு கைகளையும் தலையில் வைத்தார்.

நான் கேட்டேன்: "நீங்கள் யார்?''

அவர் அமைதியாக இருந்தார்.

நான் சொன்னேன்: "உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எந்தவொரு எண்ணமும் எனக்கு இல்லை. உங்களுடைய வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே எனக்கு இருக்கிறது.''

எங்களுக்கிடையே நிறைய உரையாடல்கள் நடைபெற்றன. அவருக்கு என்மீது நம்பிக்கை உண்டானது. அங்கு பார்த்ததையும் கேட்பதையும் யாரிடமும் கூற மாட்டேன் என்று "பிறளிமலை முத்தப்பன்" மீது சத்தியம் செய்து கூறினால், தன்னுடைய வரலாற்றைக் கூறுவதாக அவர் ஒப்புக் கொண்டார். இறுதியில் நான் பிறளிமலை முத்தப்பன்மீது சத்தியம் பண்ணிக் கூறியதும், அவர் தன்னுடைய கதையைக் கூற ஆரம்பித்தார்.

"நான் ஒரு வட்டக் காட்டுக்காரன். இந்தக் குகைக்குள் வந்து பதினான்கு வருடங்கள் ஆகிவிட்டன. நான் ஒரு ஆணின் குரலைக் கேட்டு பதினான்கு வருடங்களுக்கும் மேலாக ஆகிவிட்டது.

ஒரு காலத்தில் நரிமலைத் தோட்டத்தின் உரிமையாளரும் இந்த பகுதியிலேயே மிகவும் செல்வாக்கு பெற்றவருமான "அன்பு" என்ற பெயரைப் பெற்றிருந்த மிகப்பெரிய மனிதரின் யானைக்காரனாக என் தந்தை இருந்தார். என் தந்தைக்கு உதவி செய்வதற்காக நானும் அவ்வப்போது இங்கு அவருடன் வந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு பதினெட்டு வயதுகளே ஆகியிருந்தன. சொந்த ஊரிலிருந்து பயிற்சி பெற்றுத் திரும்பி வந்திருந்த காலம் அது.

அன்புவின் மருமகள் தாலாவிற்கு அப்போது என்னுடைய வயதுதான். அவள் மிகவும் கர்வம் கொண்டவள் என்றும் மோசமானவள் என்றும் நான் கேள்விப்பட்டிருந்தேன். அன்புவிற்கு தன்னுடைய மருமகளின்மீது பெரிய அளவில் பாசமும் மதிப்பும் இருந்தன. இளம் வயதில் இருக்கும்போதே, வீட்டின் பொறுப்புக்களையும் நரிமலைத் தோட்டத்தின் பொறுப்பையும் அவர் அவளிடம் ஒப்படைத்தார்.

நான் தாலாவை அப்போது பார்த்திருந்தாலும், அவள் என்னைப் பார்த்ததே இல்லை.

இதற்கிடையில் மலையிலிருந்து வந்த ஒரு பெரிய நரி இந்தப் பகுதியில் பல அட்டகாசங்களையும் செய்து கொண்டிருந்தது. யாராலும் அவனைத் துப்பாக்கியால் சுட முடியவில்லை. பட்டப்பகல் வேளையில் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து எந்தவொரு கூச்சலும் இல்லாமல் கால் நடைகளையும், சிலநேரங்களில் மனிதர்களின் குழந்தைகளையும் அவன் தூக்கிக் கொண்டு போய்விடுவான். அவனால் மிகப் பெரிய பிரச்சினை உண்டானது. ஒரு நாள் அவனைப் பிடிப்பதற்காக அன்புவின் தலைமையில் பெரிய ஒரு நரி வேட்டை நடத்தப்பட்டது. மலையின்

பல பகுதிகளில் தேடிப் பார்த்தும், நரியின் ஒரு உரோமம் கூட கண்களில் படவில்லை என்பதுதான் உண்மை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel